ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -21 இதழ் -9,10 ரௌத்ர வருஷம் ஐப்பசி- கார்த்திகை1
அக்டோபர்- நவம்பர் - 1980


காளிதாஸனும் அதிதி ஸத்காரமும்

"மகாகவி" என்றாலே காளிதாஸ மகாகவி நினைவுக்கு வருகிறான். வேதங்களும் சாஸ்திரங்களும் சொல்பவைகளை தன்னுடைய காவ்யங்களின் வாயிலாக சாதித்துக் காட்டியவன் காளிதாஸ மகாகவி. व्यवहारविदॆ என்ற காவ்யப்ரயோஜனம் இவனுடைய காவ்யங்களைப் பார்த்துதான் சொல்லியிருக்கவேண்டும்.

கடந்த ஸரஸ்வதீ பூஜை, விஜயதசமீ இருதினங்களிலும் காளிதாஸ மகாகவியின் ஜயந்தி சென்னை ஸம்ஸ்கிருத ஸேவா ஸமிதியினரால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நம்முன்னோர்களின் ஸம்ப்ரதாயங்களுக்கும் சாஸ்த்ர அடிபடையை சுட்டிக்காட்டும் காளிதாஸன், ஸம்ப்ரதாயங்களிலிருந்து வழுவாது வியக்கத்தக்க முறையில் தன் காவ்யங்களை அமைத்திருக்கிறான். ஸ்திரிகளை முன் நிருத்தி சுபகாரியங்களைச் செய்வது வழக்கம். प्रायॆण गृहिणीनॆत्राः என்று காளிதாஸனின் வாக்கு.
அதை அவ்வாறே அவனுடைய ஜயந்தியைக் கொண்டாடுவதிலும் அநுசரித்தனர் ஸம்ஸ்கிருத ஸேவா ஸமிதியினர். முதல் நாள் விழாவிற்கு தலைமை தாங்கியவர் பேச்சாளர்கள் எல்லாருமே ஸ்த்ரீகள். விழாவின் இரண்டாம் நாள் ஆதிதம்பதிகளான பார்வதி பரமேச்வரர்களின் விவாஹம் பற்றிய சொற்பொழிவை ஆற்றிய பேச்சாளர் ஹிமவான் ஈசனை வரவேற்கும் கட்டத்தை அழகாக விளக்கினார். அதாவது அதிதிஸத்காரத்தின் முதற்படி நினைவுக்கு வருகிறது.

இதைக் கூறக் கேட்கும் போது சில ஆண்டுகளுக்கு முன்பு கேட்டக் கருத்து நினைவுக்கு வருகிறது.

சாந்தஸ்வபாவம் கொண்டவரும், நிறைகுடமுமான கூடலி சிருங்கேரி பீடாதிபதிகளாக இருந்த ஸ்வாமிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை விஜயம் செய்த பொழுது ஒரு தினம் சொற்பொழிவில் "காளிதாஸனின் சாகுந்தலம்" அதிதிஸத்காரத்தை வலியுறுத்தும் நூலாகும் என்று கூறினார். ஆம்! ஒரு நூலின் ஆரம்பத்திலும் நடுவிலும், முடிவிலும் எந்த ஒரு விஷயம் வலியுறுத்தப்படுகிறதோ அதுதான் அந்த நூலின் தாத்பர்யம் என்பது சாஸ்த்ர மரியாதையை ஒட்டின தெளிவு. ஸ்வாமிகள் கூறியது போல, காளிதாஸ கவியின் சாகுந்தலத்தில், இந்த அதிதிஸத்காரம் முற்றிலும் நன்றாக இடம் பெறுகிறது.

கண்வமகரிஷியின் ஆச்ரமத்துக்கு வருகை தரும் துஷ்யந்த மன்னனுக்கு அதிதிஸத்காரம் நன்கு நடக்கின்றது. அரசனின் நினைப்பில் திளைத்து அதிதியாக வந்த துர்வாஸருக்கு செய்ய வேண்டிய ஆதித்யம் குறைபடுகிறது. மனைவியின் பிரிவினால் பரிதவிக்கும் நிலையிலும் மன்னன் தன்னைக் காண வந்த முனிசிஷ்யர்களுக்கு அதிதிஸத்காரம் செய்யத் தவறவில்லை. முடிவில் இந்த்ரஸாரதியுடன் மரீசியின் ஆச்ரமத்துக்குச் சென்ற துஷ்யந்தனுக்கு அதிதிஸத்காரம் நன்றாகவே ஏற்படுகின்றது. ஆகவே இந்நூல் இக்கருத்தைக் கொண்டது என்றால் அதுசரியே.

"अतिथॆरातिथ्यमसि" என்று அதிதிஸத்காரத்தைக் குறிப்பிட்டு வேதம் இதை என்றும் செயல் முறையில் கடைபிடிக்க வேண்டியது என்று அறிவுருத்துகிறது. (अतिथयश्चस्वाध्याय प्रवचनॆ च) காட்டில் இராமபிரானுக்கு குஹன், சபரீ இவர்கள் அளித்த ஆதித்யம் வாஸுதேவனுக்கு அக்ரூரர் செய்த அதிதிஸத்காரம், குசேலனுக்கு வாஸுதேவன் அளித்த ஆதித்யம், தர்மர் வியாஸருக்கு அளித்த ஆதித்யம் இவை எல்லாம் அதிதிஸத்காரத்தின் பெறுமைக்குச் சான்று. ராமாயணம், பாரதம் ஆகியவைகளை தன் காவ்யங்களுக்கு ஆதாரம் ஆக்கிக் கொண்டவர் காளிதாஸர். ஆகவே, தன் படைப்புகளில் அதிதிஸத்காரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க காளிதாஸன் தவறவில்லை. க்ஷத்திரிய குலத்தின்பால் வெறுப்பைபாராட்டும் பரசுராமனை வெற்றி கொள்ள தசரதரின் அதிதிஸத்காரம் ராமருக்கு பயனளித்தது. என்று சித்திரிகிறார் ரகு வம்சத்தில். ’ஸதி’யின் பதியைத் திரும்பப்பெறும் முயற்சி அதிதிஸத்காரத்தில்தான் ஆரம்பமாகிறது. இமயமலைச்சாரலில் (தன் கிருஹத்தில்) தவம் செய்ய வந்த ஈசனை ஆதிதியம் செய்து ஆராதிக்கிறாள் ஆதி பராசக்தி. தான் தவம் புரியும் தருவாயில் அதிதியாக வந்த (अर्ध्र्यमर्ध्र्यमिति वादिनं नृपम्) ஆண்டவனை அதிதிஸத்காரத்தினால் ஆட்கொள்ளுகிறாள் அன்னை பார்வதி. கடைசியில் அது அவளுக்கு வெற்றியை அளித்தது.

மேகஸந்தேசத்தில் மேகத்தை வரவேற்று "நீ போகும் வழி நெடுக உனக்கு வரவேற்பு" இருக்கும் என்று கூறும் காளிதாஸன் அங்கும் ஆதிதியத்தைச் சுட்டுகிறான். தன்னுடைய கொடையினால் நலிந்த ரகுமன்னன் கௌத்ஸருக்கு அதிதிஸத்காரம் செய்யச் சளைக்கவில்லை. குருசிஷ்ய நிலையிலும் ஆதிதியம் பரிமளித்தது. வஸிஷ்டர் தனது ஆச்ரமத்தில் ராஜதம்பதிகளை வரவேற்கும் பொழுது அப்யாகதரான அதாவது தன்னை நாடிவந்த விச்வாமித்ரருக்கு ஆதித்யத்தோடுதான் ராமனை அளிக்கிறான் தசரதன். இவ்வாறு மகாகவி காளிதாஸனின் நூல்களில் சாகுந்தல மட்டிலுமன்றி மற்றவைகளிலும் அதிதிஸத்காரம் முக்ய இடம் பெறுகிறது. நம்முடைய கலாசாரத்தில் அதிதிஸத்காரம் என்பது ஒப்பற்ற ஸ்தனத்தைப் பெற்றுள்ளது. மநுஷ்யயக்ஞம் என்பதாக அன்றாட கடைமைகளில் ஒன்றாக விதிக்கப்பட்டுள்ளது. நாடிவந்த அதிதிக்கு ஸத்காரம் அளிக்காவிடில் அதனால் பெரும் துன்பம் விளையும். யமனுக்கு விருந்தாளியாகச் சென்ற நசிகேதஸ், யமன் அங்கு இல்லாமையினால் மூன்று தினங்கள் ஸத்காரமின்றி இருந்ததின் காரணமாக யமன் தன்னைக் குற்றவாளியாகக் காண்கிறான். அந்த பாபத்திலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள மோக்ஷ வித்தையையும் யமன் நசிகேசஸ்ஸுக்கு உபதேசிக்கிறான்.

என்னே அதிதியின் பெறுமை!

अज्ञातकुलनामानं अन्यदॆशादुपागतम् ||
क्षुधार्तं पांसुकीणीङ्घ्रिं अतिथिं तं विदुर्बुधाः ||
ऎवंविधं समायातं अतिथिं यॊ न पूजयत् |
तस्य पुण्यानि सर्वाणि ह्रत्वा यात्यतिथिंर्ध्रुवम् ||
तस्मात् सर्वात्मना भक्ता पूजयॆदतिथिं बुधः |
अतिथौ पूजितॆ विष्णुः पूजितः स्यान्न संशयः ||

~~~~~~~

Home Page