வைகல் பூங்கழி

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஆறாம் பத்து

வைகல் பூங்கழி

ஆழ்வார் தம் நிலையைக் கூறுமாறு, திருவண்வண்டூர் என்னும் திவ்யதேசத்து எம்பெருமானிடம் குருகு, நாரை, கொக்கு, குயில், AO முதலியவற்றைத் தூது விடுதல். ஆழ்வாராகிய தலைவி எம்பிரானாகிய தலைவனிடம் தூது விடுதல்போல் இப்பகுதி அமைந்துள்ளது.

தலைவி பறவைகளைத் தூதுவிடல்

கலி நிலைத்துறை

குருகுகளே!என் காதலை எம்பிரானிடம் சொல்லுங்கள்

3227. வைகல்பூங் கழிவாய் வந்து

மேயும் குருகினங்காள்,

செய்கொள் செந்நெ லுயர்திரு

வண்வண் டூருறையும்,

கைகொள் சக்கரத் தென்கனி

வாய்பெரு மானைக்கண்டு,

கைகள் கூப்பிச் சொல்லீர்

வினையாட்டியேன் காதன்மையே. 1

கருநாராய்!என்னைப்பற்றி எம்பிரானிடம் கூறுக

3228. காதல் மென்பெடை யோடுடன்

மேயும் கருநாராய்,

வேத வேள்வி யலிமுழங்

கும்தண் டிருவண்வண்டூர்,

நாதன் ஞாலமெல் லாமுண்ட

நம்பெரு மானைக்கண்டு,

பாதம் கைதொழுது பணியீ

ரடியேன் திறமே. 2

புள்ளினங்காள்!என் துன்பத்தைச் சொல்லுங்கள்

3229. திறங்க ளாகியெங் கும்செய்க

ளூடுழல் புள்ளினங்காள்,

சிறந்த செல்வம் மல்கு

திருவண்வண் டூருறையும்,

கறங்கு சக்கரக் கைக்கனி

வாய்ப்பெரு மானைக்கண்டு,

இறங்கி நீர்பொழுது பணியீ

ரடியே னிடரே. 3

அன்னங்காள்! 'உருகுகின்றாள் ஒருத்தி'என்று கூறுங்கள்

3230. இடரில் போகம் மூழ்கி

யிணைந்தாடும் மடவன்னங்காள்,

விடலில் வேத வொலிமுழங்

கும்தண் திருவண்வண்டூர்,

கடலில் மேனிப் பிரான்கண்

ணனைநெடு மாலைக்கண்டு,

'உடலம் நைந்தொருத் தியுரு கும்'

என் றுணர்த்துமினே. 4

அன்னங்காள்!அடியேனுக்கும் பரிந்துரையுங்கள்

3231. உணர்த்த லூட லுணர்ந்துடன்

மேயும் மடவன்னங்காள்,

திணர்த்த வண்டல்கள் மேல்சங்கு

சேரும் திருவண்வண்டூர்,

புணர்த்த பூந்தண் டுழாய்முடி

நம்பெரு மானைக்கண்டு,

புணர்த்த கையினரா யடியே

னுக்கும் போற்றுமினே. 5

குயில்காள்!என் மையல் தீர ஒரு வார்த்தை சொல்லுங்கள்

3232. போற்றி யானிரந் தேன்புன்னை

மேலுறை பூங்குயில்காள்,

சேற்றில் வாளை துள்ளும்

திருவண்வண் டூருறையும்,

ஆற்ற லாழியங் கையம

ரர்பெரு மானைக்கண்டு,

மாற்றங் கொண்டரு ளீர்மையல்

தீர்வ தொருவண்ணமே. 6

கிளியே!எம்பெருமானிடம் எனக்காக ஒன்று உரை

3233. ஒருவண் ணம்சென்று புக்கெனக்

கொன்றுரை யண்கிளியே,

செருவொண் பூம்பொழில் சூழ்செக்கர்

வேலைத் திருவண்வண்டூர்,

கருவண்ணம் செய்யவாய் செய்யகண்

செய்யகை செய்யகால்,

செருவொண் சக்கரம் சங்கடை

யாளம் திருந்தக்கண்டே. 7

நாகணவாய்ப் பறவையே!பிரானிடம் எம்பொருட்டு உரை

3234. திருந்தக் கண்டெனக் கொன்றுரை

யாயண் சிறுபூவாய்,

செருந்தி ஞாழல் மகிழ்புன்னை

சூழ்தண் டிருவண்வண்டூர்,

பெருந்தண் தாமரைக் கண்பெரு

நீண்முடி நால்தடந்தோள்,

கருந்திண் மாமுகில் போல்திரு

மேனி யடிகளையே. 8

அன்னங்காள்!கண்ணனிடம் என்னைப்ற்றிக் கூறுமின்

3235. அடிகள் கைதொழு தலர்மேல்

அசையும் அன்னங்காள்,

விடிவை சங்கொலிக் கும்திரு

வண்வண் டூருறையும்,

கடிய மாயன்தன் னைக்கண்ண

னைநெடு மாலைக்கண்டு,

கொடிய வல்வினை யேன்திறம்

கூறுமின் வேறுகொண்டே. 9

வண்டினங்காள்!யான் இருத்தலைப் பிரானிடம் கூறுமின்

3236. வேறு கொண்டும்மை யானிரந்

தேன்வெறி வண்டினங்காள்,

தேறு நீர்ப்பம் பைவட

பாலைத் திருவண்வண்டூர்,

மாறில் போரரக் கன்மதிள்

நீறெழச் செற்றுகந்த,

ஏறு சேவக னார்க்கென்னை

யுமுளள் என் மின்களே. 10

இவற்றைப் பாடுக:மன்மதம்போல் விளங்கலாம்

3237. மின்கொள் சேர்புரி நூல்குற

ளாயகல் ஞாலம்கொண்ட,

வன்கள் வனடி மேல்குரு

கூர்ச்சட கோபன்சொன்ன,

பண்கொள் ஆயிரத் துள்ளிவை

பத்தும் திருவண்வண்டூர்க்கு,

இன்கொள் பாடல் வல்லார்

மதனர்மின் னிடையவர்க்கே. 11

நேரிசை வெண்பா

மாறன் திருவடிகளையே வணங்குங்கள்

'வைகல்திரு வண்வண்டூர் வைகும் இராமனுக்கு,என்

செய்கைதனைப் புள்ளினங்காள்!செப்பும்'எனக் - கைகழிந்த

காதலுடன் தூதுவிடுங் காரிமா றன்கழலே,

மேதினியீர்!நீர்வணங்கு மின். (51)

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is பிறந்தவாறும்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  மின்னிடை மடவார்
Next