இன்பம் பயக்க

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஏழாம் பத்து

இன்பம் பயக்க

'ஆழ்வீர்!என் அருளைக் கொண்டு நீர் தடுமாற்றம் அடையவேண்டாம்.

திருவாறன்விளை என்ற திவ்யதேசத்தில் நான் (உபய) நாச்சிமார்களோடு இருந்துகொண்டு, உமது வாயினால் பாடும் திருவாய்மொழியைக் கேட்க விரும்புகிறேன். அங்கு வந்து திருவாய்மொழி பாடி ஒருவாறு சமாதானம் அடையும்' என்றான் பகவான். அவ்வாறே ஆழ்வார் செய்யப்பார்க்கிறார் இத்திருவாய்மொழியில்.

திருவாறன்விளையில் அடிமை செய்ய நினைத்தல்

3436. இன்பம் பயக்க எழில்மலர்

மாதரும் தானும்இவ் வேழுலகை,

இன்பம் பயக்க இனிதுடன்

வீற்றிருந் தாள்கின்ற எங்கள்பிரான்,

அன்புற் றமர்ந்துறை கின்ற

அணிபொழில் சூழ்திரு வாறன்விளை,

அன்புற் றமர்ந்து வலம்செய்து

கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ!

திருவாறன்விளையை வலம் வருவேனோ?

3437. ஆகுங்கொல் ஐயமொன் றின்றி

அகலிடம் முற்றவும், ஈரடியே

ஆகும் பரிசு நிமிர்ந்த

திருக்குறள் அப்பன் அமர்ந்துறையும்,

மாகம் திகழ்கொடி மாடங்கள்

நீடும் மதிள்திரு வாறன்விளை,

மாகந்த நீர்கொண்டு தூவி

வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ

நாள்தோறும் திருவாறன்விளையைத் தொழவேண்டும்

3438. கூடுங்கொல் வைகலும் கோவிந்த

னைமது சூதனைக் கோளரியை,

ஆடும் பறவை மிசைக்கண்டு

கைதொழு தன்றி யவனுறையும்,

பாடும் பெரும்புகழ் நான்மறை

வேள்வியைந் தாறங்கம் பன்னினர்வாழ்,

நீடு பொழில்திரு வாறன்

விளைதொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே!

திருவாறன்விளைக் கண்ணனையே நினைப்பேனோ?

3439. வாய்க்குங்கொல் நிச்சலும எப்பொழு

தும்மனத்து ஈங்கு நினைக்கப்பெற,

வாய்க்கும் கரும்பும் பெருஞ்செந்

நெலும்வயல் சூழ்திரு வாறன்விளை,

வாய்க்கும் பெரும்புகழ் மூவுல

கீசன் வடமது ரைப்பிறந்த,

வாய்க்கும் மணிநிறக் கண்ணபி

ரான்றன் மலரடிப் போதுகளே.

திருவாறன்விளையைப் பாடினால் தீவினை கெடும்

3440. மலரடிப் போதுகள் என்னெஞ்சத்

தெப்பொழு துமிருத் திவணங்க,

பலரடி யார்முன் பருளிய

பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்,

மலரில் மணிநெடு மாடங்கள்

நீடு மதிள்திரு வாறன்விளை,

உலகம் மலிபுகழ் பாடநம்

மேல்வினை ஒன்றும்நில் லாகெடுமே.

தொண்டர்காள் திருவாறன்விளையைத் தொழுமின்

3441. ஒன்றும்நில் லாகெடும் முற்றவும்

தீவினை யுள்ளித் தொழுமின்தொண்டீர்,

அன்றங் கமர்வென் றுருப்பிணி

நங்கை யணிநெடுந் தோள்புணர்ந்தான்.

என்றுமெப் போதுமென் னெஞ்சம்

துதிப்பவுள் ளேயிருக் கின்றபிரான்,

நின்ற அணிதிரு வாறன்

விளையென்னும் நீணக ரமதுவே.

திருவாறன்விளைக் கண்ணனே எனக்குச் சரண்

3442. நீணக ரமது வேமலர்ச்

சோலைகள் சூழ்திரு வாறன்விளை,

நீணக ரத்துறை கின்றபி

ரான்நெடு மால்கண்ணன் விண்ணவர் கோன்,

வாண புரம்புக்கு முக்கட்பி

ரானைத் தொலையவெம் போர்கள்செய்து,

வாணனை யாயிரந் தோள்துணித்

தான்சரண் அன்றிமற் றொன்றிலமே.

திருவாறன்விளையை வலம் வருக - தீவினை தீரும்

3443. 'அன்றிமற் றொன்றிலம் நின்சர

ணே!'என் றகலிரும் பொய்கையின்வாய்,

நின்றுதன் நீள்கழ லேத்திய

ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தபிரான்,

சென்றங் கினிதுறை கின்ற

செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை,

ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ?

தீவினை யுள்ளத்தின் சார்வல்லவே.

திருவாறந்விளையை வலம் வரவே சிந்திக்கிறேன்

3444. தீவினை யுள்ளத்தின் சார்வ்வல

வாகித் தெளிவிசும் பேறலுற்றல்,

நாவினுள் ளுமுள்ளத் துள்ளும்

அமைந்த தொழிலினுள் ளும்நவின்று,

யாவரும் வந்து வணங்கும்

பொழில்திரு வாறன் விளையதனை,

மேவி வலஞ்செய்து கைதொழக்

கூடுங்கொல் என்னுமென் சிந்தனையே.

திருவாறன்விளையை நினைத்தால் வேறு நினைவே வராது

3445. சிந்தைமற் றொன்றின் திறத்ததல்

லாத்தன்மை தேவபி ரானறியும்,

சிந்தையி னால்செய்வ தானறி

யாதன மாயங்கள் ஒன்றுமில்லை,

சிந்தையி னால்சொல்லி னால்செய்கை

யால்நிலத் தேவர் குழுவணங்கும்

சிந்தை மகிழ்திரு வாறன்

விளையுறை தீர்த்தனுக் கற்றபின்னே.

இவற்றைப் படித்தால் தேவர்களும் போற்றுவர்

3446. தீர்த்தனுக் கற்றபின் மற்றோர்

சரணில்லை யென்றெண்ணி, தீர்த்தனுக்கே

தீர்த்த மனத்தன னாகிச்

செழுங்குரு கூர்ச்சட கோபன்சொன்ன,

தீர்த்தங்க ளாயிரத் துள்ளிவை

பத்தும்வல் லார்களை, தேவர்வைகல்

தீர்த்தங்க ளேயென்று பூசித்து

நல்கி யுரைப்பர்தம் தேவியர்க்கே.

நேரிசை வெண்பா

மாறன் திருவடிகளே யாவர்க்கும் தெய்வம்

இன்பக் கவிபாடு வித்தோனை யிந்திரையோடு,

அன்புற்று வாழ்திருவாறன்விளையில், - துன்பமறக்

கண்டடிமை செய்யக் கருதியமா றன்கழலே.

திண்டிறலோர் யாவர்க்குந் தேவு.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is என்றைக்கும்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  தேவிமாராவார்
Next