குணப்படித் தொழில் தேர்வு நடைமுறையில் இல்லை : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

“சரி, வேதமும் கிருஷ்ண பரமாத்மாவும் ஜாதி தர்மத்தைச் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும். அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது பக்ஷபாதமாகத்தான் இருக்கிறது. அவரவர், குணப்படி, மனோபாவப்படி தொழிலைத் தேர்ந்தெடுத்து நடத்துவதற்குத்தான் வசதி செய்து தரவேண்டுமே தவிர, ஜாதிப்படி செய்ய வேண்டும் என்று வைக்கக்கூடாது. இந்த வித்தியாஸத்தைத் தொலைத்துவிட வேண்டும்” என்று சொல்லலாம்.

இருக்கட்டும். இந்த குணம், மனோபாவம் என்பதற்கும் நவீன ‘ஸெட்-அப்’ பில் ஒருத்தர் எடுத்துக் கொள்ளும் தொழிலுக்கு என்ன சம்பந்தம்? நன்றாக யோசித்துப் பார்த்தால் இது இந்த காலத்தில் வேண்டுமென்றே மிகைப்படுத்திச் சொல்கிற விஷயமாகத்தான் இருக்கிறது. இந்தக் காலத்தில் எல்லோருக்கும் ரொம்ப ஸ்வதந்திரம் வேண்டியிருக்கிறது. எல்லோருக்கும் தாங்கள் பெரியவர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் தங்கள் தங்கள் மனோபாவத்தை மதிக்க வேண்டும் என்கிறார்கள். அது ஸமூகத்திற்கு உதவுகிற நல்ல மனோபாவமா, கெட்டதனால் நல்லதாக்கிக் கொள்ளவேண்டுமே, அதற்காக ஓரிடத்தில் ஸ்வதந்திரத்தை விட்டுக் கொடுத்துக் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே என்பதை எல்லாம் நினைக்காமல் எல்லோரும் எல்லாவற்றுக்கும் ஸ்வதந்திரம் கேட்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

மனோபாவம் அல்லது குணத்துக்கும் தற்காலத்தில் ஒருத்தன் விரும்பும் வேலைக்கும் எந்த அளவுக்கு ஸம்பந்தம் இருக்கிறது என்று பார்த்தால் நூற்றுக்கு தொண்ணூறு சம்பந்தமேயில்லை! ரொம்பக் கொஞ்சம் பேர் விஷயத்தில்தான் குணத்துக்கும் தொழிலுக்குமிடையே சம்பந்தமிருக்கும். ரொம்பவும் வைராக்ய குணமுள்ளவன் எந்த வேலையிலும் ஒட்டாமலிருப்பான். துருதுருவென்று ப்ளான் போட்டு யோஜனை பண்ணுகிற ஸ்வபாவமுள்ளவனுக்கு மெஷின் மாதிரி வேலை செய்வதான தொழில்கள் பிடிக்காமலிருக்கும். ஆர்மிக்கு [தரைப்படைக்கு] த்தான் போவது, நேவிக்கு [கடற்படைக்கு] த்தான் போவது என்று சில பேருக்கு ஒரே ஆர்வம் இருக்கும். இன்னும் சிலபேர் கழுத்தைப் பிடித்துத் தள்ளினாலும் ஸைதன்யத்தில் சேருவதில்லை என்று இருப்பார்கள். எழுதுவது, பாடுவது, சித்திரம் போடுவது என்கிறவற்றில் ஆசை உள்ளவர்கள் வேறு எந்த வேலையிலும் பிடிமானம் வைக்க மாட்டார்கள்.

இப்போது நான் சொன்ன இத்தனை பேரும்-அதாவது தங்கள் இயற்கை மனோபாவப்படிதான் தொழில் பண்ணுவது என்று இருக்கிற அத்தனை பேரும்- மொத்தமுள்ள ஜன சமூகத்தில் கால்வாசிகூட இருக்கமாட்டார்கள். பத்து பெர்ஸென்ட் (சதவிகிதம்) கூட இருக்க மாட்டார்கள்.

இங்கே என்னை ஒரு மடத்துக்குள் உட்கார்த்தி வைத்திருக்கிறது என்றாலும் என்னிடம் எல்லா தினுசு ஜனங்களும் வந்து அவரவர் பிரார்த்தனையை, ஆசையைச் சொல்லிவிட்டுத்தானே போகிறார்கள்? இதிலிருந்து எனக்கு தெரிவது, விசேஷமாக ஒருத்தனும் தொழிலைக் குணத்தோடு சம்பந்தப்படுத்தவில்லை என்பதுதான். ஒரு அப்பாக்காரர் வருகிறார். “பையனுக்கு எஞ்சினியர் காலேஜிலும் மனுப்போட்டிருக்கிறது. பி.காமும் போட்டிருக்கிறது. எஞ்சினியரிங் கிடைக்காவிட்டால் பி.காம் சேர்த்தாக வேண்டும். எஞ்சினியரிங்கே கிடைத்துவிட்டால் சிலாக்கியம். அநுக்ரஹ‌ம் பண்ணவேண்டும்” என்கிறார். பி.காம் படித்தால் படிக்கிற ‘ஆடிட்’ வேலைக்கும், எஞ்சினியரிங் படித்து சர்வே, கிர்வே பண்ணுவதற்கும் கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கிறதோ? ஆனால் இந்தப் பையன் இந்த இரண்டுக்கும் தயாராக இருக்கிறான். இன்னொரு பையன் வருகிறான். “இன்ட‌ர்மீடியட் ரொம்ப ‘ஹை’ யாகப் பாஸ் பண்ணிவிட்டேன். மெடிகல் காலேஜில் சேரலாமா, எம்.ஏ. படித்துவிட்டு ஐ.ஏ.எஸ். எழுதலாமா என்று தெரியவில்லை” என்கிறான். வைத்தியத் தொழிலுக்கும் கலெக்டர் வேலைக்கும் என்ன சம்பந்தம்? குணத்தை வைத்து தொழில் என்றால் மெடிக்கல் காலேஜுக்குப் போகிறவன் எப்படி எம்.ஏ. ஐப் பற்றி நினைப்பான்?

ஒருத்தர் வக்கீலாக இருக்கிறார். அல்லது இண்டஸ்ட்ரி [தொழிற்சாலை] வைத்திருக்கிறார். அப்புறம் ஏதோ ஒரு கட்சியில் சேர்ந்து மந்திரியாகி விடுகிறார். மந்திரியாகி இருக்கிறவர்களில் வக்கீலாக இருந்தவர், அதிகாரியாக இருந்தவர், ப்ரொஃபஸராக இருந்தவர், டாக்டராக இருந்தவர் என்று பல தொழில்களில் இருந்தவர்களைப் பார்க்கிறோம். மந்திரித் தொழிலுக்கு எந்த குணங்கள் இருக்க வேண்டுமோ அது எப்படி இந்தத் தொழில்களுக்கும் வேண்டும் என்று சொல்ல முடியும்?

இப்படி பெரிய லெவலில்தான் என்று இல்லை. “ஸினிமாக் கொட்டகையில் டிக்கட் கொடுத்துக் கொண்டிருந்தேன். இப்போது மிலிட்டரியில் சேர்ந்திருக்கிறேன், ஆசீர்வாதம் வேண்டும்” என்று ஒருத்தன் வருகிறான். ஹோட்டல் சர்வராக இருந்து பெட்டிக்கடை வைத்திருக்கிறேன்” என்று இன்னொருத்தன் வருகிறான். இந்த இரண்டு தினுஸான வேலைகளுக்கு என்ன சமபந்தம்?

இன்னொன்று கூடச் சொல்லலாம். இப்போது ராஜாங்கமும் அபேத வாத‌த்தை [ஸோஷலிஸத்தை] முக்கியமாகச் சொல்வதாகத்தான் ஆகிவிட்டது. அவனுக்கும் ஸ்வபாவப்படியும், படிப்பு முதலான தகுதிப்படியும்தான் வேலை தரவேண்டுமேயன்றி ஜாதிப்படி இல்லை என்பதும்தான் சர்க்காரின் கருத்தும். ஆனால் இவர்களே பெரிய உத்தியோகத்திற்காகப் பரீக்ஷை வைக்கிறபோது, ஒரு பரீக்ஷையை எழுதினவர்களில்தான் சில பேரை ஐ.ஏ.எஸ் என்று செலக்ட் செய்கிறார்கள். சில பேரை போலிசுக்கு அனுப்பி விடுகிறார்கள். கலெக்டர் வேலைக்கும், போலீஸ் ஸூப்பிரன்டு வேலைக்கும் மனோபாவ ரீதியில் பார்த்தால் என்ன சம்பந்தம்? டெக்னிகல் ஸப்ஜெட்டாக இல்லாத வரையில் ஒரு டிப்பார்ட்மென்ட்காரர்களை சம்பந்தமே இல்லாத வேறே டிபார்ட்மென்ட்களுக்கு மாற்றுகிறார்கள்.

குணம், மனோபாவம் என்று பார்த்தால் அவற்றுக்கு ஆதரவாகச் சொல்ல இங்கெல்லாம் ஒன்றுமெயில்லை.

ஆகவே பெரும்பாலும் ஜனங்கள் தங்கள் குணத்தைப் பார்த்து அதற்கு அநுஸரணையான தொழிலாக ஒன்றை எடுத்துக் கொள்ளவே இல்லை. தங்களுக்கு பிடித்த தொழில் கிடைக்காவிட்டாலும், கிடைத்த தொழிலுக்கு எப்படியோ ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்கிறார்கள்.

பொதுவாக எதிலே ஜாஸ்தி பணம் கிடைக்குமோ, அஸெள‌கர்யம் குறைவோ, அந்தத் தொழிலுக்குத்தான் எல்லோரும் ஆசைப்பட்டு போட்டி போடுகிறார்களே யொழிய, குணம், மனோபாவம், அது இது என்பதெல்லாம் அநேகமாகப் புரளிதான். ஜாஸ்தி வருமானமும் குறைச்சல் சிரமமும் உள்ள தொழிலுக்குப் போவேன் என்பதே ஸ்வதர்மம் என்றால் பரிஹாஸத்துக்கு இடமல்லவா?

குணத்தைக் கொண்டு காரியத்தை தேர்ந்தெடுத்துக் கொள்வது என்று நவீனர்கள் சொல்வது வெற்றுச் சவுடாலாகத்தான் நிற்கிறது. நம்முடைய பூர்விகர்கள் கச்சிதம் பண்ணிக் கொடுத்திருக்கும் ஏற்பாட்டிலோ கார்யமே ஒருத்தனுக்கு இயற்கையாகவும் பாரம்பரியமாகவும் உண்டான குணத்தை அவனுடைய ஆத்மாபிவிருத்திக்கும், வெளிலோகத்தின் க்ஷேமத்திற்கும் ஏற்றபடி ஒரு ஒழுங்கில் ரூபப்படுத்திற்று. காயத்ரி அநுஷ்டானம், கத்தியைச் சுழற்றுவது [சுற்றுவது], Knack [நுணுக்கம்] தெரிந்து வியாபாரம் பேசுவது, மெய்வருந்த உழைப்பது என்ற நாலு விதமான கார்யங்களே அததற்கான ப்ரஜையின் குணத்தை அந்தந்த துறையில் நன்றாகப் பிரகாசித்துத் தன்னையும் சுத்தி செய்து கொண்டு, ஸமுதாயத்தின் ஒட்டுமொத்த க்ஷேமத்திற்கும் உதவும்படியாக ரூபப்படுத்தியது. காயத்ரி அநுஷ்டானக்காரனும் எப்படி மெய்யை வருத்திக் கொண்டானென்று அப்புறம் சொல்கிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is பிறப்பாலேயே குணமும் தொழிலும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  அதிக ஸெளகர்யம் கூடாது
Next