ஸம வாய்ப்பு விஷயம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

குணம், மனப்பான்மை வைத்துத் தொழில் என்பது வெறும் புரளி என்கிற மாதிரியே தான் equality of opportunity [எல்லோருக்கும் ஸமமான வாய்ப்பு] இருக்க வேண்டும் என்பதும். இது நடைமுறை சாத்தியமே இல்லை. திருஷ்டாந்தமாக மெடிகல் ஸீட், எஞ்சினியரிங் ஸீட் இவ்வளவு தான் என்று நிர்ணயம் பண்ணிவிடுகிறார்கள். இதெல்லாவற்றையும்விட மிகக் குறைவாகத்தான் அடாமிக் ஸயின்ஸ் [அணு விஞ்ஞானம்] மற்றும் அநேக புதுப்புது specialised subject-களில் அட்மிஷனை நிர்ணயிக்கிறார்கள். இவற்றுக்கு ஒரே மாதிரி தகுதியுள்ள புத்திஸாலிகள் போட்டியிடும் போதே அவர்களின் அநேகரை ஸெல‌க்ட் பண்ணாமல், மற்றவர்களைத்தான் பண்ணுகிறார்கள். அப்படிப் பண்ணுவதுதான் நடைமுறை ஸாத்யம். பெரிய அதிகாரப் பதவிக்குப் பரீக்ஷை வைக்கிற போதும் இப்படியேதான் ஒரே க்வாலிஃபிகேஷன் உள்ளவர்களிலேயே பலரை நிறுத்தும்படியாகிறது. வைத்யம் பண்ணவும், புது விஞ்ஞான விஷயங்களில் ஆராய்ச்சி பண்ணித் தெரிந்து கொள்ளவும் ஆசைப்படுகிற எல்லோருக்கும் அதாவது அதற்கான நல்ல தகுதி பெற்ற எல்லோருக்கும் சான்ஸ் கொடுக்கத்தான் வேண்டும் என்று வாதம் பண்ணினால் அது சரியாயிருக்குமா? இந்த தேசத்துக்கு இத்தனை டாக்டர் இருந்தால் போதும், ஸ்பெஷலிஸ்ட் இருந்தால் போதும், ஸயன்டிஸ்ட்களும் அதிகாரிகளும் இவ்வளவு போதும் என்பதால் ஒரு அளவோடு நிறுத்திக் கொண்டு, தகுதியுள்ள மற்ற எல்லாரையும் தள்ளும்படியாகிறது என்பதை எல்லாருமே ஒப்புக் கொண்டு பேசாமலிருக்கிறோம். இதே போலத்தான் தேவ சக்திகளை லோகத்துக்கு அநுகூலம் பண்ணித்தர ஜனங்களில் இத்தனை சதவிகிதம் மட்டும் கர்மாநுஷ்டானம் பண்ணினால் போதும்; பாரம்பரியமாக வந்திருக்கிற இவர்கள் போதும், இதற்கு மேல் அவசியமில்லை, அப்படி செய்தால் மற்றவர்கள் செய்ய வேண்டிய காரியங்கள் கெட்டுப் போகும் என்று வர்ண விபாகம் பண்ணி வைத்திருக்கிறது. ஃப்ரெஞ்ச் ரெவல்யூஷன் [பிரான்சுப் புரட்சி] கொண்டு வந்துவிட்ட அநேக அபேதவாதங்களை சாஸ்திர விஷயத்தில் பொருத்த வேண்டுமென்று, யோசிக்காமல் கோஷம் போடுகிறோம் – அவை நம் லௌகிக லெவலிலேயே ஸாத்யமில்லை என்பதைப் பார்த்தும் புரிந்து கொள்ளாமலே!

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is ஒரு பெரிய தப்பிப்ராயம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  ஐக்கிய சக்தி
Next