ஆயுர்வேதமும் மத ஆசரணையும் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஆயுர்வேதம் என்று மெடிகல் ஸயன்ஸாகத் தனியே ஒன்றைப் பார்க்கும்போது அதற்கு இவ்வளவு தெய்வ ஸம்பந்தம் கிடையாது. ஆனாலும் அல்லோபதி (இங்கிலீஷ் வைத்தியமுறை) , யுனானி மாதிரி அடியோடு தெய்வ ஸம்பந்தமே இல்லாமலும் இல்லை. நாஸ்திகனுக்கு வைத்யம் பண்ணவேண்டாம் என்று இந்த சாஸ்திரத்தில் சொல்லியிருப்பதே அதற்கு ஒரு proof.

ஈச்வர த்யானத்தோடுதான், குறிப்பாக, பகவான் மஹாவிஷ்ணு அம்ருத கலசத்தைப் பாற்கடலிலிருந்து கொண்டு வந்தபோது எடுத்த தன்வந்திரி என்ற அவதாரத்தை ஆராதித்துத்தான் ஆயுர்வேதம் அப்யஸிப்பது வழக்கம்.

அதோடுகூட நம் மத சாஸ்திரங்களுக்கு மிகப் பெரும்பாலும் விரோதமில்லாமலே இருக்கிற வைத்ய முறை ஆயுர்வேதந்தான். இங்கிலீஷ் மருந்துகள், சிகித்ஸை முறை முதலியவற்றில் சாஸ்திரம் ஒப்புக்கொள்ளாத அநாசாரங்கள் ஏகப்பட்டவையாக வந்து சேரும். ஆயுர்வேதத்தில் இப்படி இல்லை. பூண்டு, கீண்டு மாதிரி ஏதோ ஒன்றிரண்டு தவிர அநாசார வஸ்துகள் பெரும்பாலும் ஆயுர்வேதத்தில் கலப்பதில்லை. இவற்றுக்கும் பிற்பாடு பிராயசித்தம், புண்யாஹவாசனம் சொல்லிப் பரிஹாரம் வைத்திருக்கிறது. ஆஸ்திகர்கள் இங்கிலீஷ் வைத்யத்துக்கு கூடியமட்டும் போகாமலிருப்பதுதான் சிலாக்யம். ஆயுர்வேதம் உடம்பில் பிடிக்க நாள் பிடிக்கிறது, இங்கிலீஷ் மருந்தானால் உடனே ரிஸல்ட் தெரிகிறது என்கிறார்கள். நாளானாலும் மூலம் வரைக்கும் போய் ரோகத்தைப் போக்குவது ஆயுர்வேதம்; இங்கிலீஷ் வைத்யம் இப்படி இல்லை என்றும் விஷயம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். அநேகமாக தற்கால சாந்தியாகவே அல்லோபதி ஸரிப்படுத்துகிறது என்கிறார்கள். அதோடு இங்கிலீஷ் மருந்திலே ஒன்றை ஸரி செய்து கொள்ளப் போவதில், அது ஸரியானாலும், after-effect , side-effect என்றெல்லாம் வேறு பல உபத்ரவங்கள் உண்டாவது போல ஆயுர்வேதத்தில் உண்டாவதில்லை. வைத்தியம் ஆரம்பிக்கும்போது சில உபாதைகளைக் கிளறி விட்டாலும் அது நீண்டகாலக் கோளாறாகிவிட்டால் சீக்கிரத்திலேயே தணிந்து போய்விடும்.

வேத சாஸ்திரங்களுக்கு ஒத்துப் போவதாகவே நம்முடைய வைத்ய சாஸ்திரம் இருக்க வேண்டுமென்பது முக்யம். உடம்பைக் காப்பாற்றிக் கொள்வது முக்யம் என்பதற்காக வேத சாஸ்திர விருத்தமாக (விரோதமாக)ப் போகக்கூடாது. ஏனென்றால் இப்படி விருத்தமாகப் போனால் அதுதான் நாஸ்திக்யம்*1. நாஸ்திகனுக்குத்தான் வைத்யமே பண்ணக்கூடாதே!

ஸமய சாஸ்திரமும் ஆயுர்வேத சாஸ்திரமும் மிகப் பெரும்பாலும் ஒத்துப் போகின்றவையாகும். ஸமய சாஸ்திரம் முக்யமாக மநுஷ்யனின் மூன்று குணங்களான ஸத்வ, ரஜோ, தமோ குணங்களில் எதுவும் ஏறிப் போகாமல் ஒன்றையொன்று ஈடுகட்டிக் கொண்டு ‘ந்யூட்ரலைஸ்’ பண்ணி மனஸை ஆடாமல் ஸமநிலைப்படுத்துவதற்காகத் தான் ஏற்பட்டது. ‘ஸாங்க்யம்’ என்னும் தர்சனத்தில் (தர்சனம் என்றால், சுருக்கமாக, ஆத்ம சாஸ்த்ரம் என்று வைத்துக்கொள்ளுங்கள்) இதைப்பற்றி விரிவாகச் சொல்லியிருப்பது அடிப்படையில் வைதிக தர்மத்துக்கும் ஏற்புடையதுதான். க்ருஷ்ண பரமாத்மா கீதையில் இந்த முக்குணங்களைப் பற்றிப் பல அத்யாயங்களில் சொல்லியிருக்கிறார். ஸாங்க்யமும் யோகமும் கைகோத்துக் கொண்டு போகிற தர்சனங்களாதலால் யோக சாஸ்திரத்திலும் த்ரி குணங்களுக்கு ‘இம்பார்டன்ஸ்’ கொடுத்திருக்கிறது. இப்படி ஆத்ம வித்தைக்கு வேதோக்தமாக இருக்கிற ஸத்வ-ரஜோ-தமோ குண ‘பாலன்ஸிங்’கேதான் (ஸமநிலைப்படுத்துவதேதான்) நம்முடைய வைத்ய சாஸ்த்ரத்தில் கப-வாத-பித்த தாதுக்களின் ‘பாலன்ஸிங்’காக ஆகிறது!

ப்ரக்ருதி, மாயை, அவித்யை என்றெல்லாம் சொல்கிற ஜீவ-ஜகத் கோளாறுகளுக்கெல்லாம் முக்குணம் தான் காரணமாதலால் இதுகளை பாலன்ஸ் பண்ணி மனஸை ஸம நிலைக்குக் கொண்டு வந்துவிட்டால் எல்லாம் சாந்தமாக அடங்கிப் போகும் என்று வேதாந்தம் சொல்கிறதென்றால், அதையே ஆயுர்வேதம், ‘சரீரக் கோளாறுக்கெல்லாம் கப-வாத-பித்தம் என்று மூன்று தாதுக்கள்தான் காரணம். இவற்றை ஒன்றுக்கொன்று ஈடுகட்டிவிட்டால் சரீரம் ஸெளக்யமாயிருக்கும்’ என்கிறது. சித்தத்தை வைத்து வேதாந்தம் பேசுவதையே சரீரத்துக்குப் பொருத்தி ஆயுர்வேதம் பேசுகிறது. பிரகிருதியிலுள்ள இத்தனை ஆயிரம் க்ருத்ரிமத்துக்கும் மூலம் மூணே குணங்களில் அடங்கிவிடுகிறது என்கிறாற்போலவே சரீரத்துக்கு வருகிற இத்தனை ஆயிரம் நோய் நொடிகளுக்கும் மூலம் மூன்று தாதுக்கள்தான் என்று ஆயுர்வேதம் நிர்ணயம் பண்ணிவிடுகிறது.

கபம் என்பது உங்களுக்குத் தெரியும். சளி, க்ஷயம், ப்ளூரிஸி, நிமோனியா எல்லாம் அதனால் வருவதுதான். முக்யமாக ச்வாஸ கோசத்தைப் பற்றியது இது. ஆனால் ரக்த ரூபத்தில் சரீரம் முழுதும் வியாபிப்பது. வாதம் என்றாலும் வாயு என்றாலும் ஒன்றேதான். காற்று என்று அர்த்தம். பிடிப்பு, எலும்புகளில் வலி, முடக்கு, உடம்பு கனத்துப் போகிறது ஆகியவை எல்லாம் இதிலிருந்து உண்டாகிறவை. ரூமேடிஸம், ஆர்த்ரைடிஸ், அது, இது என்று ஏதேதோ பேர் சொல்கிற வியாதிகளுக்கு வாதம்தான் காரணம். காற்று என்றவுடன் மூச்சு, அதனால் ச்வாஸ கோச ஸம்பந்தம் என்று தோன்றிவிடலாமாயினும், சரீரம் பூராவுமே நாடி சலனத்தில் வாயுவின் வியாப்தி (பரவுதல்) தான் ஏற்படுவதால் இதுவும் தேஹம் முழுவதையும் குறித்த தாதுதான். பித்தம் என்பது பித்த நீரை முக்கியமாகவும், ஜீர்ணத்தில் சுரக்கிற எல்லா நீர்களையுமே பித்த நீர் பாதிப்பதால் அவை அனைத்தையும் பற்றியதாகவும் கருதப்படுகிறது. அதனால் இது ஜீர்ண உறுப்புகளோடு நின்றுவிடுவது என்று அர்த்தமில்லை. ஜீர்ணித்த அன்ன ஸாரம் ரத்தமாகத்தானே ஆகி சரீரம் பூராவும் ஓடுகிறது? அதனால் பித்தத்தினால் ஏற்படுகிற கோளாறுகளும் தேஹம் முழுவதையும் பாதிப்பதுதான். நாடி பார்த்தே மூன்றில் எந்த தாதுவின் கோளாறு என்று கண்டுபிடித்து ஸரி செய்ய ஆயுர்வேதம் வழி சொல்கிறது.

நமக்குக் குறிப்பாக சரீரத்தின் ஒவ்வொரு பாகத்தில் மட்டுமே இந்த ஒவ்வொரு தாதுவும் ஸம்பந்தப்படுவதாக தோன்றினாலும், இவை வாஸ்தவத்தில் தேஹம் முழுதிலும் வியாபித்திருப்பதால் தான் ஹ்ருதயம், மூளை, கண், காது, மூக்கு, வாய் உள்பட எந்தக் கோளாறானாலும் முதலில் தாது பார்த்தே ஆயுர்வேதத்தில் ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கிறார்கள்.

நம்முடை வைத்ய சாஸ்திரம், வேதாந்த சாஸ்திரம் எல்லாம் வெளி நாடுகளுக்குப் பரவியபோது இதையே க்ரீஸ் முதலான தேசங்களில் நாலு தாதுக்களாக நாலு humour -கள் என்று ஆக்கினார்கள். முக்குணம், மூன்று தாது என்பதோடு பஞ்ச பூதக் கொள்கையையும் சேர்த்து அவர்கள் நாலு ஹ்யூமர் என்று வைத்துக் கொண்டார்கள். ஸுக்ஷ்ம அநுபவமுள்ளவர்களுக்கே புரியக்கூடிய ஆகாச பூதத்தை அவர்கள் விட்டு விட்டு மற்ற நாலு பூதங்களை மட்டும் எடுத்துக் கொண்டார்கள். நாலு ஹ்யூமர்களாக சரீரத்திலுள்ள தாதுக்களே ஒருவனின் குணத்தை நிர்ணயம் பண்ணுவதாகவும் அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். phlegm – கபம், choler – பித்தம், melancholy -இதுவும் இன்னொரு தினுஸான பித்தம்தான், blood – அதாவது ரத்தம் என்பவை நாலு ஹ்யூமர்கள். ரத்த சுத்திகரிப்பு ச்வாஸத்தாலேயே நடப்பதால் ரத்தத்தை ‘வாதம்’என்று வைத்துக் கொள்ளலாம். இவற்றைக் குணங்களோடு பொருத்தி ஒருத்தனுக்கு ‘ஃப்ளெம்’ (கபம்) ஜாஸ்தியிருக்கிறபோது அவன் எல்லாவற்றிலும் அசட்டையாக, மந்தமாக அடங்கியிருப்பானென்றும் (இதை ‘ஸத்வம்’ மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம்) , ‘காலர்’அதிகமானால் ரொம்பக் கோபிஷ்டனாயிருப்பானென்றும் (இதுதான் ரஜோகுணம்) ‘மெலங்கலி’ அதிகமானால் அழுமூஞ்சியாக, சிந்தா க்ராந்தனாக இருப்பானென்றும் (இதைத் தமஸில் ஒருவிதம் எனலாம்), ப்ளட் ஜாஸ்தியானாலும் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டவனாயிருப்பானென்றும் (இதுவும் ரஜஸ்தான்) அவர்கள் வைத்துக் கொண்டார்கள்*2.

முக்குணம், மூன்று தாது என்பதில் நம்முடைய புராதனமான வைத்ய சாஸ்திரம் வைதிக சாஸ்திரத்தோடு ஒத்துப் போகிறதென்று சொல்லிக் கொண்டிருந்தேன். இப்படியேதான் தர்ம சாஸ்த்ரோக்தமான பஞ்ச கவ்யமே வைத்ய சாஸ்த்ரோக்தமாகவும் விதிக்கப்பட்டிருக்கிறது. பாப பரிஹாரத்துக்காக தர்ம சாஸ்த்ரம் பசுவின் பால், தயிர், நெய், சாணம், மூத்ரம் ஆகிய ஐந்தையும் சேர்த்த பஞ்ச கவ்யத்தை உட்கொள்ளச் சொல்கிறது. அதையே வியாதிக்குப் பின் பலஹீன ஸ்திதியில் புதிதாக நோய்க் கிருமிகள் தாக்காதபடித் தடுப்பதற்காக வைத்ய சாஸ்திரத்திலும் சாப்பிடச் சொல்லியிருக்கிறது.

நம்முடைய வைதிக சாஸ்திரங்களில் பாபம் – புண்ணியம் என்று சொல்லியிருக்கிற இப்படிப்பட்ட பலவற்றையே ஆயுர்வேதத்தில் ஹிதம்-அஹிதம், அதாவது சரீரத்துக்கு நல்லது செய்வது-கெட்டது செய்வது என்பதாகச் சொல்லியிருக்கும். ஆசாரம் புண்யத்திலும் அநாசாரம் பாபத்திலும் சேர்ப்பதல்லவா? அதனால் நம்முடைய வைத்ய சாஸ்திரத்தில் பெரும்பாலும் அநாசாரம் அஹிதமானதாகத் தள்ளப்பட்டுத்தானிருக்கும். இதனால்தான், தவிர்க்க முடியாமல் அல்லோபதிக்குத்தான் போகவேண்டுமென்று இருந்தாலொழிய மற்ற உடம்புகளுக்கு ஆயுர்வேதப் பிரகாரமே நம்முடைய தர்மாசாரங்களில் நம்பிக்கையுள்ளவர்கள் சிகித்ஸை செய்துகொள்ள வேண்டுமென்கிறேன். காட் லிவர், லிவர் எக்ஸ்ட்ராக்ட் என்று எடுத்ததெற்கெல்லாம் அநாசாரத்துக்குப் போக வேண்டாமென்கிறேன்.


*1 நாஸ்திகம் என்பது இறைவனை நம்பாமை என்பதைவிட வேத தர்ம முறைகளை நம்பாமை என்பதே எனும் விஷயம் குறித்து “தெய்வத்தின் குரல்” இரண்டாம் பகுதியில் “வேதம்” என்ற உரையில் “வேதமும் தமிழ்நாடும்” என்னும் உட்பிரிவில் பார்க்க.

*2 இந்தப் பாரா பெரும்பாலும் அடியார் ஒருவர் மொழிந்ததை ஸ்ரீசரணர்கள் பிறருக்கு எடுத்துரைத்ததாகும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is மணி, மந்திரம், ஒளஷதம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  சஸ்த்ர சிகித்ஸை
Next