ஆயுர்வேதத்தில் இதர ஸயன்ஸ்கள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

மினரல் தாதுக்களைக் கலந்தும் மருந்து செய்வதால் ‘கெமிஸ்ட்ரி’ என்ற ரஸாயன சாஸ்த்ரமும் நம் வைத்ய சாஸ்திரத்தில் வந்து விடுகிறது. ‘கெமிஸ்ட்ரி’ மட்டுமில்லை – இன்னம் ஏழெட்டு ஸயன்களும் Medical Science என்ற இது ஒன்றிலேயே அடங்கி விடுகிறதைப் பார்த்தால் ஆச்சர்யமாயிருக்கும். மூலிகைகளின் நேச்சரை தெரிந்து கொண்டே மருந்து பண்ண வேண்டும் என்பதால் தாவர தத்வ சாஸ்திரமான Botany -யையும் நன்றாகத் தெரிந்து சொல்லியிருக்கிறார்கள். மருந்துகளின் இன்னொரு மூலச் சரக்கான ரஸ வர்க்கங்களை பற்றி அறியப் போவதிலும் ரஸாயனம் (கெமிஸ்ட்ரி) வந்துவிடுகிறது. என்ன மருந்து கொடுக்க வேண்டும், அதில் என்ன ஸாமான்கள் சேர்க்க வேண்டும் என்று தெரிந்தால் போதுமா? இது செலுத்தப்படுகிற தேஹத்தின் அமைப்பைப் பற்றி நன்றாகத் தெரியவேண்டுமல்லவா? நோயாளியின் தேஹ தத்வத்தைத் தெரிந்து கொள்ளாமல் சிகித்ஸை எப்படி? இவ்வாறு Physiology -யும் சாஸ்திரத்தில் வந்து விட்டது. Veterinary என்கிற பிராணி வைத்தியமும் புராதனமாகவே நம்மிடமுண்டு. வீட்டுக்கு வீடு பசு, வியவஸாயத்துக்கு எருது, ஸைன்யத்தில் ரத கஜ துரகம் என்பதில் ஆனை குதிரை – இப்படிப் பல மிருகங்களை ஆரோக்யமாக காப்பாற்ற வேண்டியதை முன்னிட்டு ப்ராணி தத்வ சாஸ்திரமான Zoology -யையும் நம் பூர்விகர்கள் ஆயுர் வேதத்திலேயே சேர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். எந்த ஸத்யத்தையும் துளைத்துக்கொண்டு பார்க்கிற அதீந்திரிய சக்தியால் ரிஷிகள் இந்த எல்லா ஸயன்ஸ்களையும் தெரிந்து கொண்டு ஆயுர்வேதம் முதலான சாஸ்திரங்களில் தெரிவித்திருக்கிறார்கள். கருணை மிகுந்த ரிஷிகள், பிராணிகளுக்கு மட்டுமில்லாமல், மரம் செடி கொடிகளுக்கு வருகிற நோய்களைக் கூடப் போக்க வேண்டுமென்று “வ்ருக்ஷாயுர் வேதம்” என்றே ஒரு சாஸ்திரம் செய்திருக்கிறார்கள். சரக்குகளை இன்ன விகிதத்தில் கலக்கணும், ஒவ்வொன்றும் இன்ன எடை இருக்கணும், நோயாளி இன்ன அளவு அதைச் சாப்பிடணும் என்று துல்யமாய் கணிப்பதில் கணிதமும் வந்துவிடுகிறது. இப்படி, பௌதிக சாஸ்திரம் என்கிற Physics -ஐத் தவிர பாக்கி முக்கியமான ஸயன்ஸ்களையெல்லாம் ஆயுர்வேதம் ஒன்றிலேயே அகப்படும்படியாகக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். வேறு சாஸ்திரங்களிலும் தனியாகவும் ஃபிஸிக்ஸையும் அலசி ஆராய்ந்து கொடுத்திருக்கிறார்கள். ஸர் P.C.ரே என்பவர் நம்முடைய பிராசீன சாஸ்திரங்களில் நவீன ஸயன்ஸ்கள் எல்லாவற்றுக்கும் மூலம் இருக்கிறதென்று ஆராய்ச்சி செய்து நிரூபித்திருக்கிறார். வெள்ளைக்காரர்களே ஒப்புக் கொள்கிறபடி குறைந்த பக்ஷம் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முற்பட்ட சரகம், ஸுச்ருதம் முதலிய க்ரந்தங்களில், ‘இந்த இருநூறு, முன்னூறு வருஷங்களில் நாங்கள் கண்டுபிடிக்கிறதற்கு முந்தி எவருக்குமே இந்த உண்மைகள் தெரிந்திருக்கவில்லை’என்று அவர்கள் சொல்லிக் கொள்ளும் நவீன ஸயன்ஸ்களெல்லாம் அடங்கியிருக்கின்றன.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is சஸ்த்ர சிகித்ஸை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  பத்தியம்
Next