காஞ்சீபுரத்தில் வரதராஜா ‘பேரருளாளப் பெருமாள்’ என்று விசேஷமாக, விளங்கிக்கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி ப்ரஸித்தமாக இருசொல்லலங்கார ஹாஸ்யத் துணுக்கு இருக்கிறது.
“கஞ்சி வரதப்பா!” என்று காஞ்சீபுர வரதராஜாவை நினைத்து, வியாதியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஒருத்தர் வாய்விட்டு அரற்றினாராம்.
பக்கத்திலே ஒரு சாப்பாட்டு ராமன் இருந்தான். அவனுக்குக் கொஞ்ச நாளாக ஜ்வரம். டாக்டர், ‘சாதம் சாப்பிடக்கூடாது. கஞ்சி வேண்டுமானால் கொஞ்சம் குடிக்கலாம்’ என்று கண்டிப்புப் பண்ணியிருந்தார். “கஞ்சி எப்போ வரும்? எப்போ வரும்?” என்று அவன் தவித்துக் கொண்டிருந்தான்.
அதனாலே, பக்கத்திலே இருந்தவர், “கஞ்சி வரதப்பா” என்று சொன்னதை, “கஞ்சி வருகிறது அப்பா” என்று அவர் சொல்லுகிறாரென்று நினைத்து விட்டான். ஆள் யாரும் வரக்காணோமே என்பதால், “எங்கே வரதப்பா?” என்றானாம்!