ஒரே நிறைவுக்குப் பல மார்க்கங்கள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இப்படி தீக்ஷையில் பல விதம். தீக்ஷையினால் சிஷ்யனைச் செலுத்துகிற மார்க்கங்களும் பல விதம். கடைசியில் போய் சேருகிற இடம் ஒன்றேயானாலும், ஆரம்பத்தில் தீக்ஷையால் தூண்டிவிடுகிற போது — ‘இனிஷியேட்’ பண்ணுகிறபோது — பல மார்க்கங்களில் பல குருமார்கள் செலுத்துகிறார்கள். ஒரே குருவேகூட வெவ்வேறு சிஷ்யர்களை வெவ்வேறு மார்க்கங்களில் இனிஷியேட் பண்ணுவதுமுண்டு. ஆனால் ஆசார்யர் என்றால் அவர் ஒரு ஸிஸ்டத்தில்தான் பண்ணுவார். ஒரு குரு ஒரே [சிஷ்யனுக்குக்கூட அவனுடைய மனோவ்ருத்தியை [மனப்போக்கை]ப் பொருத்தும், ஸாதனையில் அவனுடைய அபிவ்ருத்தியைப் பொருத்தும் வேறு வேறு காலங்களில் வெவ்வேறு மார்க்கங்களில் தீக்ஷை கொடுத்துக் கொண்டே போகலாம்.

இப்படி மந்த்ர சாஸ்திரம், தந்த்ர சாஸ்திரம், யோக சாஸ்திரம், த்வைத-அத்வைத சாஸ்திரங்கள் என்று பலவற்றில் தீக்ஷை தருகிற குருமார்கள் இருக்கிறார்கள். தாயுமானவர் இப்படி எல்லா குருவாகவும் இருந்ததாக தம்முடைய ஒரே குருவைச் சொல்லி முடிவாக, “மூலன்மரபில் வரு மௌனகுருவே!” என்று முடிக்கிறார். ‘திருமந்திரம்’ செய்த திருமூலர் அந்த நூலில் எல்லா மார்க்கத்தையுந்தான் சொல்லி யோக–ஞானங்களில் முடிக்கிறார். அவரிலிருந்து ஆரம்பித்தது ஒரு குரு பரம்பரை. அவர்களில் திருச்சிராப்பள்ளியில் மடம் ஏற்படுத்திக் கொண்ட ஸாரமா முனிவர் ஒருவர். இந்த மடத்தில் பட்டத்துக்கு வந்தவர்களில் ஒருவரான மௌன குரு ஸ்வாமிகள் என்பவர்தான் தாயுமானவருக்கு குரு. தாயுமானவர் காலம் பதினேழாம் நூற்றாண்டு. (மௌன குரு ஸ்வாமிகளுக்குப் பிறகு அந்த மடம் தர்மபுர ஆதீனத்தின் பராமரிப்பில் வந்துவிட்டது.)

தாயுமானவர் இங்கே தம்முடைய நேர் குருவான மௌன குருவைச் சொன்னாலும், அவர் சொல்வது மற்ற எல்லா மார்க்கமும் மௌனத்தில்தான் கொண்டுவிடுகிறது என்று சொல்லி, இப்படி மௌன உபதேசத்தாலேயே பரம அத்வைதத்தை அநுக்ரஹிக்கும் தக்ஷிணாமூர்த்தியை ஸ்தோத்திரிக்கிறாற்போலவும் த்வனிக்கிறது. இவரே “சிரகிரி விளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே, சின்மயானந்த குருவே” என்றும் நிறையப் பாடி வைத்திருக்கிறார்.

அந்த மௌனந்தான் நம்முடைய நிஜமான இயல்பு. ஆனால் அதைத்தான், நம்முடைய நிஜமான நம்மையேதான், நாம் இழந்து, மறந்துவிட்டு, இல்லாத அவஸ்தைகளிலெல்லாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம். இதை மாயை என்கிறார்கள். மாயைதான் அம்பாள் என்கிறார்கள். அந்த அம்பாளே மாயையைப் போக்கடிக்க ஞானாம்பிகையாகவும் வருகிறாள். குருவாக வந்து ஞானத்தைப் புகட்டுகிறாள். தாயாரே குருவாகி ஞானப்பாலை ஊட்டுகிறாள். அவள் எல்லாவற்றிலும் தினுஸு தினுஸாகப் பண்ணிப் பார்த்து ஸந்தோஷிக்கிறாள். பக்ஷி என்றால் பல தினுஸு. மிருகங்களில் பல தினுஸு. புஷ்பம் என்று எடுத்துக் கொண்டால் அதில் முடிவே இல்லாமல் எத்தனை கலர் வகை, வாஸனை வகை, எத்தனைவிதமான ‘ஷேப்’? இப்படியே மநுஷ்ய மனஸிலும் விசித்ர விசித்ரமாக எத்தனையோ ரகம். அது ஒவ்வொன்றுக்கும் ‘ஸூட்’ ஆகிறதற்காகத்தான் ஞானகுரு ஆசாரியர்களிலும் பலவிதமானவர்களை, பலவித ஸம்பிரதாயங்களைக் காட்டுபவர்களாக வைத்திருக்கிறாள். எத்தனை பேச்சு, வாதம், எழுத்து, க்ரியைகள் உண்டோ அத்தனையும் உள்ள குருவிலிருந்து மௌனகுரு வரையில் பல வகையாகக் காட்டுகிறாள். ஆனால் உள்ளே இத்தனை பேரும் ஒரே குருத்வத்தைதான் உடையவர்களாக இருப்பார்கள். ஸத்யம் ஒன்றாகத்தானே இருக்க முடியும்?


Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is அம்பிகை அருளும் தீ¬க்ஷகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  குரு-ஆசார்ய அபேதம்
Next