சொன்ன வண்ணம் செய்தது ! : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

பக்தர், யோகி ஆனாலும் ஆழ்வாருக்கும் சுத்தமான ப்ரேமையினாலே இரண்டு பாசங்கள் மட்டும் இருந்தன போலிருக்கிறது! சிஷ்யன் கணிகண்ணனை விட்டுப் பிரிய முடியாத பாசம் அவருக்கு இருந்தது. அதேபோல அந்த ஆலய மூர்த்தியாக அர்ச்சாவதாரத்திலிருந்த1 புஜங்க சயனப் பெருமாளிடமும் அவருக்கு அலாதியான பாசமிருந்தது.

அதனால் கணிகண்ணனின் பின்னோடேயே அவரும் புறப்பட்டுவிட்டார். அவன் அவரைக் கூப்பிடவில்லை. ‘தான் எங்கேயாவது காடு, மலை என்று போய்விடலாம்; குருவையும் அங்கேயெல்லாம் இழுக்கடித்து ச்ரமப்படுத்த வேண்டாம்; இங்கேயே அவர் பாட்டுக்குப் பெருமாள் ஸந்நிதியில் இருந்து கொண்டிருக்கட்டும்; அவர் எங்கேயிருந்தாலும் நாம் எங்கேயிருந்தாலும் அவருடைய அருள் நம்மைக் கட்டிக் காக்கும்; சரீர ரீதியில் எங்கேயிருந்தாலும் நம்முடைய ஹ்ருதயத்தில் அவர் எப்போதும் இருந்து கொண்டுதானிருப்பார்’ – என்ற தெளிவோடு கணிகண்ணன் புறப்பட்டுவிட்டான்.

ஆனாலும் அவருக்கு அப்படி இருக்கமுடியவில்லை. ஸ்வயநலம் கலக்காத வாத்ஸல்யங்களில் இருக்கிற அழகு உலகத்துக்குத் தெரியவேண்டுமென்பதற்காக மிகவும் பெரியவர்கள்கூட பந்த பாசமிருக்கிறதுபோல இருப்பதுண்டு. அநேக கதை புராணங்களில் இப்படிப் பார்க்கிறோம்.

கணிகண்ணனின் பின்னோடேயே புறப்பட்ட ஆழ்வார், அந்த மாதிரியே பாசத்துடன் பெருமாளும் தன் பின்னாடி தொடர்ந்து வருவாரென்று நினைத்துக்கொண்டு ஆலயத்தில் இருக்கப்பட்ட தம்முடைய அபிமான மூர்த்தியைப் பார்த்தார்.

ஆனால் ஸ்வாமி லீலா விநோதனல்லவா? அதனால் அவன் பாட்டுக்கு நிம்மதியாக சேஷ பர்யங்கத்தில் படுத்துக் கொண்டே இருந்தான்.

அப்போதுதான் இந்தக் கதை ஆரம்பத்தில் நான் சொன்னாற்போல சிஷ்யனுக்காக குருவானவர் ஸ்வாதீனத்துடன் ஸ்வாமிக்கே ஆர்டர் போட்டார்.

தான் பரம பாகவதன், இந்த அர்ச்சையிடமே அபிமானம் வைத்தவன், ஆனபடியால் தன்னை பகவான் பின் தொடர்ந்து வரவேண்டும் என்று தற்பெருமையாக ஆழ்வார் ஆர்டர் போடவில்லை. பின்னே என்ன போட்டார்?

கணிகண்ணன் போகின்றான்…

தான் போவதைச் சொல்லிக்கொள்ளவில்லை. சிஷ்யன் போகிறானே, ஊரைவிட்டுக் கிளம்பிவிட்டானே, அதையே சொல்கிறார். “குழந்தை ஊரைவிட்டு, மனஸு வெறுத்துப் போகிறது. அதன்கூடவே நீ ஸதாகாலமும் இருந்து ரக்ஷிக்க வேண்டாமா?”

ஆழ்வார் ஸதாவும் தன்னை ரக்ஷிக்கிறார், ரக்ஷிப்பாரென்ற உறுதி கணிகண்ணனுக்கு இருந்தாலும் அவர் தாம் ரக்ஷிப்பதாக நினைக்கவில்லை. வெளியிலே தடபுடலாக பகவானுக்கு உத்தரவு போட்டாலும், உள்ளுக்குள்ளே ரக்ஷணமெல்லாம் அவனால்தான் நடக்கிறது. தாம் ஒன்றுமே இல்லை என்ற எளிமையோடுதான் இருந்திருக்கிறார்! அதனால்தான் கணிகண்ணன் போகிறபோது பேசாமல் படுத்துக்கொண்டிருக்கிற ஸ்வாமியிடம் இப்படிக் கேட்கிறார்

“குழந்தையோடு நீயும் போகாமல் ஜம்மென்று பாம்பு மெத்தையில் படுத்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம், ஓய்? இப்படி நீள நெடுகப் படுத்துக்கிடக்காதீர்! இது கொஞ்சங்கூட நன்றாயில்லை” (என்கிறார்) .

” கணிகண்ணன் போகின்றான் , காமரு பூங்கச்சி
மணிவண்ணா ! நீ கிடக்க வேண்டா ! “

“இப்படிப் படுத்துக்கொண்டு கிடக்காதே. நான் தைரியமாக, துணிச்சலோடு உள்ளது உள்ளபடி சொல்கிறவன்; ஸத்யத்தின் சிவப்பேறிய நாக்கோடு உள்ளது உள்ளபடி பாடுகிற கவி.”

துணிவொன்றிச் செந்நாப் புலவோன் யான்

என்று சொல்லிக்கொள்கிறார். “நான் பயப்படாமல் வாய் சிவக்க ஸத்யத்தையே பாடுபவன்” என்று சொல்வதிலேயே “நீ பொறுப்பில்லாமல் படுத்துக் கொண்டிருந்தால் அதை உள்ளபடி உலகத்துக்குத் தமுக்குப் போட்டு விடுவேன்!” என்று எச்சரிக்கிற மாதிரி பாட்டு போகிறது.

கணிகண்ணன் போகின்றான் , காமரு பூங்கச்சி
மணிவண்ணா ! நீ கிடக்க வேண்டா ! துணிவொன்றிச்
செந்நாப் புலவோன் யான் சொல்கின்றேன் …

“குழந்தை போகிறான். மனசு தாளாமல் நானும் போகிறேன். நீ மட்டும் ஸுகமாகப் படுத்துக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? [குரலை உயர்த்தி] கிளம்பு, வாரிச் சுருட்டிக்கொண்டு, பெரிசாக சேஷ பர்யங்கம் விரித்துக் கொண்டிருக்கிறாயே, அதைச் சுருட்டிக்கொண்டு நீயும் எங்களோடு புறப்படு.

நீயும் உன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் !

— அழுத்தமான ஆர்டராகவே போடுகிறார்!

கணிகண்ணன் போகின்றான், காமரு பூங்கச்சி
மணிவண்ணா ! நீ கிடக்க வேண்டா ! – துணிவொன்றிச்
செந்நாப் புலவோன்யான் செல்கின்றேன், நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் “.

பகவான் சயனித்துக் கொண்டிருக்கிறபோது ஆதிசேஷன் அவருக்குப் படுக்கை. அவரே எங்கேயாவது போகிறாரென்றால் அப்போது அவன் அவருக்கு ஆயிரம் தலையாலும் குடைபிடித்துக்கொண்டு போவான்.

சென்றால் குடையாம்2.

க்ருஷ்ணாவதாரம் ஆனவுடன் வஸுதேவர் குழந்தையை மழை வெள்ளத்தில் தூக்கிக்கொண்டு போகும்போது ஆதிசேஷனேதான் குடை பிடித்தான்.

ஆர்டர் போடுகிறபோதும் ஸ்வாமியிடம் ஆழ்வாரின் கரிசனம் குறையவில்லை. ‘பாம்பு மெத்தையிலிருந்து இறங்கி நீ வா’ என்று மட்டும்சொல்லாமல், ‘ஸ்வாமிக்கு வெயில் படாமல், மழை படாமல் குடை வேண்டுமே’ என்ற கரிசனத்தில் சேஷசயனத்தையும் சுருட்டிக் கூட எடுத்துக்கொண்டே புறப்படச் சொல்கிறார்!

ஆர்டர் போட்டாரோ இல்லையோ, பெருமாளும் அப்படியே பண்ணிவிட்டார்! அதற்குமேல் விளையாட்டுப் பார்த்து பக்தர் மனஸ் வருத்தப்படும்படி பண்ணக் கூடாதென்று, அவர் சொன்னபடியே வாரிச் சுருட்டிக் கொண்டு கணிகண்ணனோடும் ஆழ்வாரோடும் தானும் புறப்பட்டுவிட்டார்!

‘சொன்ன வண்ணம் செய்தது’ இதோடு முடியவில்லை.

மூன்று பேரும் அப்படியே புறப்பட்டு நாலு, அஞ்சு மைல் போகிறதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. மநுஷ்யர்கள் மாதிரியே விளையாடணும் என்று பகவானுக்கு இருந்ததால், “ராத்ரி ஆயிடுத்து. அதனால், இனிமேலே பிரயாணம் பண்ண வேண்டாம். இங்கேயே ராத் தங்கிவிட்டு கார்த்தாலே கிளம்பலாம்” என்று சொன்னான். பகவான் தான் சொன்னானோ, ஆழ்வார்தான் சொன்னாரோ? அவனே இவர் சொன்னவண்ணம் செய்பவனாகத்தானே இருந்தான்?

ஆகக்கூடி, பாலாற்றங்கரையிலே குளுகுளு என்று காற்று வீசுகிற இடத்திலே மூன்று பேரும் ராப்பொழுதை சொஸ்தமாகக் கழித்தார்கள்.

இதற்குள்ளே – கோவிலைவிட்டுப் பெருமாள் புறப்பட்ட அந்த நிமிஷத்திலிருந்தே – காஞ்சீபுரத்தில் என்ன ஆச்சு என்றால், ஒரேயடியாக அலக்ஷ்மி (அமங்களம்) வந்து கப்பிக் கொண்டுவிட்டது. பகவான் ஊரைவிட்டுப் போய்விட்டானென்றால் அவனுடைய வக்ஷஸ்தலத்திலேயே வாஸம் பண்ணிக்கொண்டிருக்கும் லக்ஷ்மியும்தானே கூடப் போய் விடுவாள்? அதனால் “நகரேஷு காஞ்சி” என்று ப்ரஸித்தி பெற்ற ராஜதானியிலே லக்ஷ்மீகரமே போய் மூதேவி வந்து மூடிக்கொண்டு விட்டது. ஒரே இருட்டு! ஒரு இடத்திலேயாவது தீபமே ஏற்றிக் கொள்ளவில்லை! தேவாலயங்களிலும் தீபமில்லாமல் பூஜையெல்லாம் நின்று போயிற்று. எல்லார் மனஸிலேயும் வேறே ஒரேயடியாக இருள் கப்பிக்கொண்டு விட்டது. இனம் தெரியாமல் ஒரே துக்கம், ஒரே திகில்.

எல்லாரும் போய் ராஜாவிடம் முறையிட்டார்கள்.

அவனுக்கும் ஒரே வியாகுலம், பய ப்ராந்தியாகத்தான் இருந்தது. பெருமாள் ஊரைவிட்டுப் போனதில்தான் இப்படி உத்பாதமாக ஆகிவிட்டது என்று புரிந்தது. “இதோ போய் அவர் காலில் விழுந்து ப்ரார்த்தித்துக்கொண்டு அவரை மறுபடி அழைத்துக்கொண்டு வருகிறேன்” என்று புறப்பட்டான்.

இருட்டிலே ராஜாவைக் காபந்து பண்ணி ஊரெல்லைக்கு அழைத்து வருவதற்குள் பொழுது விடிந்துவிட்டது.

பாலாற்றங்கரையில் பகவான் ஆழ்வாரோடும் கணிகண்ணனோடும் தங்கியிருந்த இடத்துக்கு ராஜா மறுநாள் காலம்பற வந்து சேர்ந்தான்.

அப்போதும் அவனுக்குக் கணிகண்ணனிடம் தான் தப்பாக நடந்துகொண்டு நகர ப்ரஷ்டம் பண்ணினதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று தோன்றவில்லை. நேரே பெருமாளிடம், – அவர் அர்ச்சையாக இருந்தாரோ, சல (நடமாடும்) மூர்த்தியாக இருந்தாரோ, ஏதோ ஒன்று; அவரிடமே போய் – நெடுஞ்சாண்கிடையாக நமஸ்காரம் பண்ணினான். “பெருமாள் இல்லாமல் ஆலயம் சூன்யமானது போலவே ஊர் முழுக்கவும் சூனியமானமாதிரி ஆகிவிட்டது. எல்லா ஜனங்கள் மனசும் சூன்யமாகிவிட்டது. என்ன அபசாரம் நடந்திருந்தாலும் க்ஷமித்து பகவான் மறுபடியும் காஞ்சிக்கு எழுந்தருளணும்” என்று வேண்டிக்கொண்டான்.

ஸ்வாமியோ, “நானாக ஸங்கல்பித்துக்கொண்டு அங்கே விட்டுப் புறப்படவில்லை. ஆழ்வார் சொன்னார். அவர் சொன்னபடி செய்யணுமென்றே கூட வந்துவிட்டேன். அவரே மறுபடி சொன்னாரன்னியில் நான் இங்கேயிருந்து திரும்புவதற்கில்லை!” என்று சொல்லிவிட்டார்.

அர்ச்சா மூர்த்தியாகவே அவர் இருந்திருந்தால் இப்படி அசரீரியாகத் தெரிவித்தாரென்று வைத்துக் கொள்ளலாம். வேறே வழியில்லாமல் ராஜா ஆழ்வார் காலில் விழுந்து வேண்டிக்கொண்டான்.

அவரானால், “பெருமாளை விட்டு என்னாலே இருக்க முடியாது. அதனாலே அவரை மாத்திரம் உன்னோடு போகச் சொல்லிவிட்டு நான் இங்கேயே இருப்பது என்பது நடக்காத கார்யம்” என்று மறுத்துச் சொல்லிவிட்டார்.

“தாங்களும்தான் திரும்ப வாருங்கள். நான் அதற்குத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று ராஜா வேண்டிக்கொண்டான்.

அதற்கு அவரும் பெருமாள் சொன்ன மாதிரியே பதில் சொன்னார். “நானாக உத்தேசம் பண்ணி இங்கே வந்திருந்தால் நானாகவே மறுபடி திரும்பலாம். ஆனால் நானும் தானாகப் புறப்பட்டுவிடவில்லை. கணிகண்ணனுக்கு நீ ஆக்ஞை பண்ணினதாலும், நீ நடந்துகொண்ட விதத்தில் அவனுக்கே உன் ஊரில் இருக்கப் பிடிக்காததாலும் அவன் புறப்பட்டான். அவனை விட்டுப் பிரிந்திருக்க முடியாமலே நானும் பின்னோடே கிளம்பினேன். ஆனாதினாலே என் காலில் விழுகிறதற்குப் பதில் அவன் காலில் போய் விழு. பண்ணினது தப்பு என்று க்ஷமாபனம் பண்ணிக்கொண்டு திரும்பி வரணுமென்று அவனிடம் ப்ரார்த்தித்துக் கொள்ளு. அவன் ஸம்மதித்தால் நானும் திரும்புகிறேன், பெருமாளையும் திரும்பச் சொல்கிறேன்” என்று முடிவாகச் சொல்லிவிட்டார்.

அப்புறம் என்ன பண்ணிக்கொள்கிறது?

ராஜா போய் கணிகண்ணன் காலில் விழுந்தான்.

சிஷ்யனுக்காக குரு முதலில் த்ரிபுவன சக்கரவர்த்தியான பகவானையே வாரிச் சுருட்டிக்கொண்டு கோவிலை விட்டு விட்டு வரப் பண்ணினார். இப்போது அந்தப் பையன் காலில் பல்லவ சக்ரவர்த்தி விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும்படிச் செய்கிறார்!

ராஜா வேண்டிக்கொண்டவுடனே, ஸ்வபாவத்தில் இளகின மனசு படைத்த கணிகண்ணன் காஞ்சீபுரத்துக்கு திரும்பவும் புறப்பட்டான்.

அவன் பின்னோடே ஆழ்வார், ஆழ்வார் பின்னோடே அவர் சொன்னபடியெல்லாம் செய்கிற பெருமாள் – என்று எல்லோருமாக ராஜதானிக்கு வந்து சேர்ந்தார்கள்.

பெருமாள், ஆழ்வார், கணிகண்ணன் ஆகிய மூன்று பேரும் ராத்ரி முழுவதும் பாலாற்றங்கரையில் தங்கிய அந்த இடத்திற்கு ஓரிரவிருக்கை (ஓர் இரவு இருக்கை) என்றே பெயர் ஏற்பட்டது. அந்தப் பெயர் சிதைந்து சிதைந்துதான் இப்போது ஓரிக்கை என்று வழங்குகிறது.

மூன்றுபேரும் காஞ்சீபுரத்திற்குத் திரும்பியதும் அலக்ஷ்மியெல்லாம் நீங்கி நகரம் பழையபடி சோபை பெற்றது. ஜனங்களின் மனஸிலிருந்த பீதி துக்கம் எல்லாமும் போய் ஸந்துஷ்டி நிறைந்தது.

பகவான் கோவிலுக்குத் திரும்பின அப்புறமும் சுருட்டிப் பிடித்துக்கொண்டு வந்த சேஷ பர்யங்கத்தை விரித்துப் படுத்துக் கொள்ளாமலே நின்று கொண்டிருந்தான். “பாயைச் சுருட்டிக்கொண்டு புறப்படு” என்று உத்தரவு போட்டவர் “படு” என்று மாற்றி உத்தரவு போடும்வரையில் தானாக எப்படிப் படுப்பது என்றுதான் நின்றுகொண்டேயிருந்தான்! பக்தர்கள் வார்த்தைக்கு பகவான் அப்படிக் கட்டுப்படுகிறான்! “பக்த பராதீனன்” என்று அவனைச் சொல்வது அதனால்தான்.

இப்படி, பரம பத நாதனாக இருக்கப்பட்டவன் தன் வார்த்தைக்குக் காத்துக் கொண்டிருக்கிறானென்று பார்த்தவுடன் ஆழ்வாருக்கு நெஞ்சு உருகிவிட்டது. முன்னே பாடின பாட்டின் வார்த்தைகளையே துளித்துளி மாற்றி, ஆனால் அர்த்தம் அடியோடு மாறும்படியாக, பாடினார்.

இப்போதும், “உன்னைவிட்டுப் பிரிந்திருக்க முடியாத நான்தான் திரும்பி வந்துவிட்டேனே! இன்னமும் ஏன் யோசிக்கிறாய்? உன் சேஷ பர்யங்கத்தை விரித்துக்கொண்டு படுத்துக்கொள்” என்று சொல்லாமல், “கணிகண்ணன்தான் திரும்பி வந்துவிட்டானே!” என்று சிஷ்யனைப் பெருமைப்படுத்தி, அவனிருக்கிற இடம் எதுவானாலும் அங்கே அவனை ரக்ஷிப்பதற்காக பகவானும் கூட இருக்கணும் என்று த்வனிக்கும்படியாக ஆரம்பித்தார்.

கணிகண்ணன் போக்கொழிந்தான்

“போக்கு ஒழிந்தான்”: இந்த ஊரைவிட்டு ப்ரயாணம் பண்ணுவதில்லை. என்று இங்கேயே தங்கிவிட்டான்.

முன்னே “கணிகண்ணன் போகின்றான்” என்று ஆரம்பித்துப் பாடியவர் இப்போது அதையே கொஞ்சம் மாற்றி – அர்த்தத்திலே ரொம்ப மாறுபட்டாலும், வார்த்தையிலே ஸ்வல்பமாகவே மாற்றிப் பாடிக்கொண்டு போய், “நீயுமுன்றன் பைந்தாகப் பாய் விரித்துக்கொள்” என்று முடித்தார். முன்னே, ‘சுருட்டிக் கொள்’ என்று சொன்னதை மாற்றி ‘விரித்துக்கொள்’ என்று முடித்து விட்டார். அதே வெண்பா மீட்டர். பெரும்பாலான வார்த்தைகள் ஒன்றேதான். ஆனாலும் அப்போது “பாயைச் சுருட்டிண்டு கிளம்பு” என்றவர் இப்போது அதற்கு நேர் எதிராக “பாயை விரிச்சுண்டு படுத்துக்கோ” என்று பகவானிடம் சொன்னார்.

கணிகண்ணன் போக்கொழிந்தான், காமரு பூங்கச்சி
மணிவண்ணா ! நீ கிடக்க வேண்டும் !- துணிவொன்றிச்
செந்நாப் புலவோன் யான் செலவொழிந்தேன், நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் விரித்துக்கொள்.

முன்னே, “நீ கிடக்க வேண்டா” – ” இப்படிப் படுத்துண்டு கிடக்காதே” என்றவர், இப்போது “நீ கிடக்கவேண்டும்” என்கிறார். “நன்னா உன் கிடந்த திருக்கோலத்திலேயே சயனம் பண்ணிக்கோப்பா!”

முன்னே, “யான் செல்கின்றேன்” என்றவர் இப்போது “யான் செலவொழிந்தேன்” என்கிறார். கணிகண்ணன் போக்கொழிந்ததால் இவரும் செலவொழிந்துவிட்டார். ‘செலவு’ என்றால் செல்வது. ‘வரவு செலவு’ என்று ரூபாயைச் சொல்லும்போது மட்டும் இந்த வார்த்தையைச் சொல்கிறோம். “ரொம்ப செலவாகிறது” என்றால் கையைவிட்டு ரொம்ப ரூபாய் சென்று விடுகிறது, போய்விடுகிறது என்று அர்த்தம்.

“கணிகண்ணனும் போக்கொழிந்தாச்சு, நானும் செலவொழிந்தாச்சு. இனிமேலே இங்கேதான் இருக்கப் போகிறோம். இப்போது ஊருக்கு நேர்ந்த உத்பாதத்தைப் பார்த்துவிட்டதால் இனிமேலே ராஜாவோ, ஜனங்களோ யாரும் நாங்கள் இந்த ஊரை விட்டுப் போகிற மாதிரிச் செய்யமாட்டார்கள். அதனால் இங்கேயே இருந்துகொண்டிருப்போம். ஆகையினால் நீயும் இனிமேல் உன் சேஷ பர்யங்கத்தை விரித்துக்கொண்டு நிம்மதியாகப் படுத்துக் கொள்ளலாம். ஐயோ பாவம்! உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. பெருமாளாகப் பட்ட நீ இந்த சின்ன ஆள் என்ன சொல்லுவேனோ, பண்ணுவேனோ என்றா சயனத்தைச் சுருட்டி வைத்துக்கொண்ட கையோடேயே இன்னமும் நின்று கொண்டிருக்கிறாய்? அதை விரித்துக் கொள்ளப்பா!

பைந்நாகப் பாய் விரித்துக் கொள்!

இப்படி அவர் வாய்ப்படச் சொன்ன அப்புறந்தான் ஸ்வாமி மறுபடி ஆதிசேஷனை மெத்தையாகப் போட்டுக் கொண்டு படுத்துக் கொண்டார்.

அவர்தான் காஞ்சீபுரத்தின் அநேக தேவாலயங்களில் ஒன்றில் இருக்கிற யதோக்தகாரி, சொன்ன வண்ணம் செய்த பெருமாள்.

காஞ்சீபுரத்தில் பச்சை வண்ணப் பெருமாள், பவள வண்ணப் பெருமாள் என்றெல்லாமும் பகவான் இருக்கிறார். இவரோ, சொன்ன வண்ணம் செய்த பெருமாள்!

எதற்குக் கதை சொன்னேனென்றால்: சிஷ்யன் அவனே பகவானிடம் போக வேண்டுமென்றில்லை; அவன் குருவினிடத்தில் பூர்ண பக்தி விச்வாஸம் வைத்துவிட்டால் அவர் பகவானையே அவன் கிட்டே போகப் பண்ணி விடுவார்; அவன் போகிற இடமெல்லாம் பின்னோடேயே பகவானும் போய் ரக்ஷிக்கும்படியாகப் பண்ணிவிடுவார். சிஷ்யனுக்காக குரு ஆர்டர் போட்டுவிட்டால் பகவானே “நில்” என்றால் நிற்பான், “ஓடு” என்றால் ஓடுவான், “படு” என்று அவராகச் சொன்னால்தான் படுப்பான்.

இதைத் தெரிந்து வைத்துக்கொண்டுதான் சில பேர் குருவே போதும், தனியாக ஒரு ஈச்வரன் வேண்டாம் என்றிருந்தது.


1 அர்ச்சை என்றால் விக்ரஹம். ராம க்ருஷ்ணாதியராக அவதரித்து ஸஞ்சாரம்செய்த இறைவனே ஸஞ்சரிக்காமல் ஓரிடத்தில் இருந்து கொண்டு அருள்வதற்காக அர்ச்சையாக அவதரிக்கிறான் என்பது ஆன்றோர் கருத்து.

2 பொய்கையாழ்வாரின் திருவந்தாதி, 53.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is கணிகண்ணன்:அருள் நெஞ்சும் அஞ்சாநெஞ்சும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ஈஸ்வரனையும் வருவித்துத் தரும் குரு
Next