சித்ர கவிதை : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

மைஸூர் ராஜ்யத்தில் சாமராஜநகரில் ராம சாஸ்த்ரி என்று கவி இருந்தார். அவர் ராவணனுக்கும் ஸீதைக்கும் நடந்த ஸம்பாஷணை ரூபத்தில் ஒரு சின்ன காவ்யம் செய்திருக்கிறார். “ஸீதா – ராவண ஸம்வாதம்” என்று அதற்குப் பேர். பேரில் ‘ஸீதா’ என்று முதலில் சொல்லியிருந்தாலும் அவள் ஸம்பாஷிப்பது ரொம்பக் குறைவு. ராவணன்தான் நிறையப் பேசுவது. அதோடு ராவணன்தான் ஒவ்வொரு விஷயமாக எடுத்துக்கொண்டு முதலில் பேசுவான். அப்புறந் தான் ஸீதை அவன் சொன்னதை அப்படியே நிராகரித்து ரத்னச் சுருக்கமாக பதில் கொடுப்பாள். ஒவ்வொரு ச்லோகத்திலும் இப்படி முதல் மூன்று வரி ராவணனின் பேச்சாக, கூற்றாக இருக்கும். நாலாம் வரி மட்டுமே ஸீதை சொன்னதாக இருக்கும். ஆனாலும் தெய்விகமான பாத்ரங்களுக்கே அக்ரஸ்தானம் (முதலிடம்) தரவேண்டும் என்ற முறைப்படி அவள் பெயரை முதலில் வைத்து “ஸீதாராவண ஸம்வாதம்” என்று புஸ்தகத்துக்குத் தலைப்புக் கொடுத்திருக்கிறது. “ஸீதா ராவண ஸம்வாத ஜரீ” என்று ஒரு “ஜரீ” சேர்த்துச் சொல்வார்கள். ‘ஜரீ’ என்றால் அருவி. ச்லோகங்கள் அருவி போல – சொற்பொழிவு என்று சொல்கிறார்களே, அதுபோல – பெருகி வருவதால் காவ்யத்துக்கு ‘ஜரீ’ என்று அடைமொழி.

ப்ரதி ச்லோகத்திலும் முதல் மூன்று வரியில் ராவணன் ஒன்று, தன்னைப் பற்றி ‘ஓஹோ ‘என்று உசத்தி ப்ரகடனம் பண்ணிக்கொள்வான்; அல்லது ராமரை மட்டந்தட்டி ஏதாவது சொல்வான்.

நாலாம் வரியில் ஸீதை அப்படியே நிராகரணம் செய்துவிடுவாள் என்றேனே, அவள் சொல்கிற அந்த வாக்யத்தில்தான் இந்தக் காவ்யத்தின் தனிச் சிறப்பே இருக்கிறது. கவியின் ஸாமர்த்யம் அந்த ஈற்றடியில் தான் இருக்கிறது.

ராவணன் ஒன்று சொல்ல, ஸீதைபாட்டுக்கு அதை ஆக்ஷேபித்து வேறே என்னவோ தன் வசனமாகச் சொல்லமாட்டாள். கவி இதை அந்த மாதிரி பண்ணவில்லை. பின்னே அவள் என்ன பண்ணுவாள், சொல்லுவாள்? ராவணனைப் பார்த்து, “நீ சொன்ன வார்த்தைகளிலிருந்தே ஒரு குறிப்பிட்ட எழுத்தை எடுத்துவிடு; அல்லது அவற்றோடு ஒரு குறிப்பிட்ட எழுத்தைச் சேர்த்துவிடு; இல்லாவிட்டால் ஒரு எழுத்துக்குப் பதில் இன்னொன்றைப் போட்டுக்கொள், இப்படிப் பார்த்தாயானால் அதுதான் என் பதில்” என்று சொல்லுவாள். இம்மாதிரிப் பண்ணிப் பார்த்தால் ராவணன் சொன்னதன் அர்த்தம் அப்படியே மாறிப்போய்விடும்! அவன் தன்னை உசத்திச் சொல்லிக்கொண்டது, ஸீதை ஏற்படுத்திய ஒரே எழுத்து வித்யாஸத்தினால், அப்படியே மாறிப்போய், அவன் எவ்வளவு நீசன் என்று காட்டுவதாக ஆகிவிடும்; அதே போல ராமரை அவன் மட்டந்தட்டிச் சொன்னதும் மாறி அவருடைய உயர்வைச் சொல்லும் புகழ்மொழியாகிவிடும்.*

உதாரணம் காட்டினால்தான் புரியும்: “எனக்கு ரொம்ப புத்தி ஜாஸ்தி” என்று ஒருத்தன் சொல்கிறான். இன்னொருத்தன், “ஜா-வுக்குப் பதில் ‘நா’ போட்டுக்கோ!” என்று கிண்டல் பண்ணுகிறான். என்ன ஆகும்? “புத்தி நாஸ்தி” என்றாகிவிடுமல்லவா? ஒரு எழுத்துக்குப் பதில் இன்னொன்றைப் போடுவதில் அர்த்தம் அடியோடு மாறிவிடுவதற்கு இது எடுத்துக்காட்டு.

‘ராம’ என்ற பெயரில் வரும் ரா-ம என்ற இரண்டு எழுத்துக்கள்தான் முறையே அஷ்டாக்ஷர, பஞ்சாக்ஷரங்களுக்கு ஜீவனான அக்ஷரங்கள் என்று காட்டுவதற்கு ஒன்று சொல்வார்கள். “அந்த இரண்டு மந்த்ரங்களிலிருந்து ரா-ம என்ற எழுத்துக்களை எடுத்துவிட்டுப் பாருங்கள். அர்த்தத்தின் ஜீவனே போயிருக்கும்” என்பார்கள். “ஓம் நமோ நாராயணாய” விலிருந்து ‘ரா’ வை எடுத்துவிட்டால், “ஓம் நமோ நாயணாய” தானே? ‘நாயணாய’ என்றால் ‘மார்க்கமில்லாதவனுக்கு’ என்று அர்த்தம். (“நாயநாய”என்பது தான் சரியான வார்த்தையானாலும் தமாஷில் கொஞ்சம் வித்யாஸமாக – ‘நா’ வுக்குப் பதில் ‘ணா’ – வரலாம்.) அஷ்டாக்ஷரத்தில், ‘நாராயணனுக்கு நமஸ்காரம்’ என்றிருப்பதே விபரீதமாக மாறி, ‘வழி தெரியாதவனுக்கு நமஸ்காரம்’ என்றாகிவிடும்! பஞ்சாக்ஷரத்தில் ‘ம’ வை எடுத்துவிட்டால் (‘நம: சிவாய’ என்பது) ‘நசிவாய’ என்றாகிவிடும். ‘சிவனுக்கு இல்லை’ என்ற விபரீத அர்த்தம் ஏற்பட்டுவிடும்! இவை ஒரு எழுத்தை எடுப்பதால் அர்த்தம் மாறுவதற்கு த்ருஷ்டாந்தம்.

ரங்கஸ்வாமி என்று ஒருத்தன். ‘ரங்கு’ என்று கூப்பிடுவது. “உன் பேருக்கு முன்னாடி ஒரு ‘கு’ சேர்த்துக்கோ” என்றால்? (சிரிக்கிறார்.) ஒரு எழுத்தைச் சேர்ப்பதால் அர்த்த விபரீதம்!

ஒரு எழுத்தை எடுத்துவிடுவது, omit பண்ணுவது, ச்யாவிதாக்ஷரம் எனப்படும். ஒரு எழுத்தைச் சேர்ப்பது, add பண்ணுவது அதி-தத்தாக்ஷரம், ஒரு எழுத்துக்குப் பதில் இன்னொன்று என்று substitute செய்வது ப்ரதி – தத்தாக்ஷரம் எனப்படும்.

இப்படி ரத்னச் சுருக்கமாக ஒரு மாறுதலைச் சொல்லியே ஸீதை, ராவணனைத் தானே தன் முகத்தில் கரி தீற்றிக்கொள்ளச் செய்வதாக “ஸீதா ராவண ஸம்வாத”த்தில் ஒவ்வொரு ச்லோகமும் இருக்கிறது. நான் காட்டிய உதாஹரணங்களில் ஒரே ஒரு வார்த்தையில் தான் மாறுதல் பண்ணினோம். ஆனால் அந்தப் புஸ்தகத்திலோ ஒவ்வொரு ச்லோகத்திலும் ஒரு எழுத்து எத்தனை தடவை வந்தாலும் அத்தனையிலும் அதை மாற்றி வார்த்தை ஜாலம் செய்திருக்கிறது. கஷ்டமான கார்யம். பாஷையில் விசேஷ command இருந்தால்தான் அப்படிச் செய்ய முடியும். இப்படி 50 ச்லோகம் செய்திருக்கிறார்.

நூறு பண்ணவேண்டும் என்று ஆரம்பித்தார்; ச்ரமப்பட்டு 50 பண்ணி, அதற்குமேல் முடியவில்லை என்று விட்டு விட்டார்; அப்புறம் அவருடைய சிஷ்யர் மேலும் 50 பண்ணி சதகமாகப் பூர்த்தி செய்தார் – என்று சொல்கிறார்கள்.

எழுத்துக்களில் விளையாட்டுப் பண்ணி எழுதும் இப்படிப்பட்ட ச்லோகங்களை ‘வர்ண சித்ரக்ருதி’ என்பார்கள். புத்திக்கு நிறைய வேலை வைத்து விநோதமாக, சிக்கலாக புதிராகப் பண்ணும் கவிதைகளுக்கு ‘சித்ர கவி’ என்று பெயர். சித்ரகவியிலேயே இரண்டு main division. வார்த்தை ஜாலமில்லாமல் அர்த்த ஜாலம் செய்து, ஆழ்ந்து யோசித்தாலே பொருள் புரியும்படி கவிதை செய்தால் அதற்கு ‘அர்த்த சித்ரம்’ என்று பெயர். இப்படியில்லாமல் சப்த ஜாலம் நிறைய இருக்கும்படி – பொருளணியாயின்றிச் சொல்லணியாகச் – செய்தால் அதற்கு ‘சப்த சித்ரம்’ என்று பெயர். பொருளணியில் ஸப்-டிவிஷன்தான் எழுத்தை மாற்றி விசித்ரம் செய்யும் ‘வர்ண சித்ரம்’.


* ஒரு ச்லோகத்திலுள்ள ராவண வசனத்திலிருந்து ‘த’ என்ற எழுத்தை அது வருகிற இடங்களிலெல்லாம் எடுத்துவிட்டால் பொருள் முற்றிலும் மாறிவிடுவதற்கு உதாஹரணம், “தெய்வத்தின் குரல்” மூன்றாம் பகுதியில் ” கவி சாதுர்யம்” என்ற உரையில் “ஓர் எழுத்தை எடுப்பதில் அர்த்த வினோதம்” என்ற பிரிவில் விரிவாக காண்க.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is பிறையுடன் விளையாடிய பிள்ளையார்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  'மங்கள'ஸ்லோகம்
Next