தேசியச் செல்வம் கோ ஸம்ரக்ஷணை பற்றிச் சொல்லும்போது பசு மடங்கள் என்ற கோசாலை நிறைய வைத்துப் போஷிக்கும் நம் பக்கத்து நகரத்தாருக்கும் பிஞ்ஜராபோல் என்ற

தேசியச் செல்வம்

கோ ஸம்ரக்ஷணை பற்றிச் சொல்லும்போது பசு மடங்கள் என்ற கோசாலை நிறைய வைத்துப் போஷிக்கும் நம் பக்கத்து நகரத்தாருக்கும் பிஞ்ஜராபோல் என்று வைத்து நடத்துகிற வடக்கத்திக்காரர்களுக்கும் நன்றி சொல்ல மறக்கக்கூடாது. பழையநாளில் கோவின் வயிற்றுக்கு யதேஷ்டமாகப் போடவே மேய்ச்சல் பூமிகளைப் பராமரித்தார்கள். ‘டவுன் லைஃப்’ என்பது வந்து விட்டதில் எங்கே பார்த்தாலும் தோட்டமா, துரவா, வயலா இல்லாமல் கட்டிடங்களும் ஆஃபீஸ்களுமாகி விட்டன. இந்த உத்பாதத்தில் மநுஷ்யனுக்கு அத்யாவச்யமான ப்ராணவாயுவுக்கே குறைபாடு வந்துவிட்டது என்று இப்போதிப்போதுதான் அரசாங்கத்தார் கொஞ்சம் கண்ணை முழித்துக்கொண்டு அங்கங்கே காலியிடங்கள், பார்க்குகள், விளையாட்டு மைதானங்கள் இருக்கப் பண்ணுவதில் கொஞ்சம் முனைப்புக் காட்டி வருகிறார்கள். நகரவாஸிகளுக்கு இவற்றையே lungs – ச்வாஸகோசம் – என்று சொல்கிறார்கள். அந்த ’லங்க்’ஸுடனேயே கோவின் வயிற்றுக்கும் இடம் தந்து அங்கங்கே மேய்ச்சல் பூமிகளும் ஏற்படுத்த வேண்டும்.

பசுவை தேசீயச் செல்வம் என்றே சொல்ல வேண்டும். பால் வற்றின பின்பும் அது செல்வந்தான். பால் வற்றினாலும் அது ஆயுஸ் உள்ளவரையில் சாணம் கொடுத்துக்கொண்டுதானே இருக்கிறது? அந்தச் சாணம் எருவாகப் பிரயோஜனப்படுகிறது. இப்போது புதிதாக ‘கோபர் காஸ்’ என்று அதிலிருந்தே எரிவாயுவும் எடுக்கிறார்கள்.

ஆனால் கோ ஸம்ரக்ஷணம் – பசுவின் பராமரிப்பு – என்பது பொருளாதார முறையில் வரவுக்கும் செலவுக்கும் ஸரியாக ஈடுகட்டுகிறதா, லாபம் கிடைக்கிறதா என்றெல்லாம் பார்த்து மட்டும் நடக்கவேண்டிய வியாபார காரியமல்ல. முன்னேயே சொன்ன இந்த லௌகிகத்தோடு மட்டும் கோ நின்றுவிடாமல் தெய்விக, வைதிக ஸம்பந்தமுள்ளதாகவுமிருக்கிறது. லௌகிகத்தை விடவும் இந்தப் பெருமைதான் அதற்கு முக்யமானது. ஆகையால் தாயைப் பராமரிப்பது போலவும் தெய்வத்தாயைப் பூஜிப்பது போலவும் கோ ஸம்ரக்ஷணத்தை நாம் நினைக்க வேண்டும்.

கோவின் மூலம் நாம் லௌகிகமாகப் பயன் பெறுவதை மட்டுமே கருத்தில் கொண்டு, அப்படிப்பட்ட பயனைக் கொடுக்க அதற்குச் சக்தி இல்லாமல் போகும்போது அடிமாட்டுக்காக விற்பதாக நடப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.