‘ஸுப்ரஹ்மண்யர்’ என்றால் வைதிக தெய்வம் “ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே, நமஸ்தே”: ”ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிக்கு மறுபடி மறுபடி நமஸ்கார

ஸுப்ரஹ்மண்யர்’ என்றால் வைதிக தெய்வம்

“ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே, நமஸ்தே”:

”ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிக்கு மறுபடி மறுபடி நமஸ்காரம்” என்று எல்லோருக்கும் புரியும். மங்களமாக ‘ஸ்ரீ’ என்று ஆரம்பித்து ஒன்றுக்கு இரண்டாக ‘நமஸ்தே’ சொல்லியிருக்கிறார். ஒரு தடவைக்கு மேல் சொல்லி விட்டால் அனந்தம் தடவை சொல்லிவிட்டதாக அர்த்தம். முக்யமான ஒரு விஷயத்தை அழுத்தமாகச் சொல்வதென்றால் இப்படி டூப்ளிகேட் பண்ணுவது வழக்கம். ‘போற்றி, போற்றி’ என்பது அப்படித்தான். ‘ஜய ஜய சங்கர’ என்கிறோம். ப்ரஹ்மஸுத்ரம்கூட ஒரே வாக்யத்தை இரண்டு தடவை திருப்பித்தான் முடிகிறது.

“நமஸ்தே நமஸ்தே” – “தே” – உனக்கு; ”நம:” – நமஸ்காரம். ‘நம: தே’ என்பது ’நமஸ்தே’ என்றாகும். “தே” – உனக்கு. “ஸுப்ரஹ்மண்யாய” – ஸுப்ரஹ்மண்யனுக்கு. பாட்டு முழுக்க ‘க்கு’ போட்டுக்கொண்டு நாலாம் வேற்றுமையிலேயே போகிறது.

ஸுப்ரஹ்மண்யனான உனக்கு நமஸ்காரம். அனந்த கோடி நமஸ்காரம்.

ஸுப்ரஹ்மண்யன் என்றால்? நல்ல ப்ரஹ்மண்யன். தேர்ந்த ப்ரஹ்மண்யன். ப்ரஹ்மண்யன் என்றால்?

‘ப்ரஹ்மம்’ என்றால் ஸத்யமான பரமாத்ம ஸ்வரூபம் என்று மாத்ரமே அர்த்தம் பண்ணிக்கொள்கிறோம். ‘ப்ரஹ்ம’ பதத்துக்கு இன்னொரு முக்யமான அர்த்தம் ‘வேதம்’ என்பது. வேதத்துக்கு ‘ப்ரஹ்ம’ என்று ஒரு பெயர். அதனால்தான் வேத மந்திரத்தில் ஒரு குழந்தைக்கு தீக்ஷை கொடுப்பதான உபநயனத்தை ‘ப்ரஹ்மோபதேசம்’ என்பது. வேதம் கற்றுக் கொள்வதாலேயே அந்தக் குழந்தை ‘ப்ரஹ்மசாரி’ ஆகிறான். ‘ப்ரஹ்ம யஜ்ஞம்’ என்கிற மாதிரியான பல இடங்களிலும் ‘ப்ரஹ்ம’ என்றால் வேதம் என்றே அர்த்தம். வேதத்தை அநுஸரிப்பது, அநுஷ்டிப்பது – அதாவது வைதிகம் என்பதுதான் ப்ரஹ்மண்யம். அதை முக்கியமாகக் கொண்டவர்களே ப்ராஹ்மணர்கள். வேதங்களின் பரம தாத்பர்யமான ப்ரஹ்மமாகிற பரமாத்ம ஸ்வரூபமாகவே இருப்பதால் ஸுப்ரஹ்மண்யராக இருக்கப்பட்ட மூர்த்தி வைதிகத்தின் விசேஷ தெய்வமாக வைதிகர்களின் விசேஷ தெய்வமாக இருப்பதாலும் ஸுப்ரஹ்மண்யராகிறார்.

வேதத்துக்கு முக்கியமென்ன? அக்னி உபாஸனை. ஸுப்ரஹ்மண்யர்தானே அக்னி ஸ்வரூபமாயிருப்பவர்? பரமேச்வரனின் நேத்ராக்னிப் பொறி ஆறு சேர்ந்துதானே அவராக ஆனது? அதனால் அவர் வேத தேவராக இருப்பவர். வேதம் படிப்பதும் சொல்லிக் கொடுப்பதுமே தொழிலாயுள்ள ப்ராஹமணர்களின் தெய்வமாயிருப்பவர் ஸுப்ரஹ்மண்யர்.

ஆசார்யாளும் ‘ஸுப்ரஹ்மண்ய புஜங்க’த்தில், “மஹீதேவ தேவம், மஹாதேவ பாவம், மஹாதேவ பாலம்” என்று சொல்லியிருக்கிறார். ‘மஹீதேவர்’ என்றால் ‘ப்ராஹமணர்’. ‘மஹீதேவ தேவர்’ என்றால் ப்ராஹ்மணர்களின் தெய்வம் என்று அர்த்தம்.

தமிழிலுள்ள பக்தி நூல்களில் ரொம்பவும் புராதனமான ‘திருமுருகாற்றுப்படை’யிலும் இப்படியே தான் சொல்லியிருக்கிறது. ஷண்முகனின் ஆறு முகங்களில் ஒவ்வொன்றும் ஒருவிதமான அநுக்ரஹம் செய்வதாக நக்கீரர் சொல்லிக்கொண்டு போகும்போது

                ஒரு முகம்

      மந்திர விதியின் மரபுளி வழாஅது

      அந்தணர் வேள்வியோர்க்கும்மே

என்று சொல்லியிருக்கிறார். திருவேரகம் என்கிற ஸ்வாமிமலையை வர்ணிக்கிற இடத்திலும் அங்கே நல்ல ப்ரஹ்மசர்ய அநுஷ்டானமுள்ள ப்ராஹமணர்கள் முத்தீ வளர்த்து யஜ்ஞாதிகள் செய்து ஸுப்ரஹ்மண்ய மந்திர ஜபமும் பூஜையும் செய்வதையே சொல்லியிருக்கிறார்.

யஜ்ஞ கர்மத்தில் பங்கு கொண்டு செய்கிற ப்ராஹ்மணர்களுக்கு ரித்விக் என்று பெயர். பதினாறு வகையான ரித்விக்குகளில் ஒருவருக்குப் பேர் ‘ஸுப்ரஹ்மண்ய’ என்பது.

‘ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி’ என்பதே குமாரஸ்வாமிக்கு ப்ரஸித்த நாமாவாக இருப்பதிலிருந்தே அவர் வேதத்துக்கும் வைதிகத்துக்கும் அதிதேவதை என்று நிச்சயமாகிறது.