சுவடிகள், நூலகங்கள் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

முன்னெல்லாம் வீட்டுக்கு வீடு நிறைய ஓலைச்சுவடிகள் இருக்கும். இதிஹாஸ புராணங்களும் ஸ்தல புராணங்களும் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் அவற்றில் இருக்கும். சுவடி பழுதாக ஆரம்பித்தால் மறுபடி புது ஓலைகளில் அவற்றை எழுத்தாணியால் ‘காப்பி’ பண்ணுவார்கள். பழுதான சுவடிகளை ஒரு பக்கம் சேர்த்து வைப்பார்கள். இப்படிச் சேர்ந்ததை எல்லாம் ‘பதினெட்டாம் பேர்’ அன்றைக்குக் காவேரியிலோ வேறு புண்ய தீர்த்தங்களிலோ யதோக்தமாகக் கொண்டு போய்ப் போட்டு விடுவார்கள்.

ஆடிமாதம் பதினெட்டாம் தேதி காவேரிக்கு விசேஷ தினம். அச்சமயத்தில் காவேரியில் புது வெள்ளம் வரும். ‘பதினெட்டாம் பெருக்கு’ என்பதைத்தான் ‘பதினெட்டாம் பேர்’ என்று சொல்கிறோம்.

கை ஒடிய இப்படி எழுத்தாணியால் ஓலை நறுக்குகளில் எழுதி எழுதி, எழுதினதைக் காப்பி பண்ணி நம் முன்னோர் நம் தாத்தா காலம் வரைக்கும் கொண்டுவந்து கொடுத்ததைப் பிற்பாடு காப்பி எடுக்காமலே காவேரியில் போட்டு விட்டு அதற்கும் சேர்ந்து “ஸ்நானம்” பண்ணிவிட்டார்கள். இதனால் இப்போதே அநேக புராணங்கள் மறுபடி நமக்குக் கிடைக்குமா என்ற ரீதியில் நஷ்டமாகி விட்டன. புராணங்கள் மட்டுமில்லை. இதர சாஸ்திரச் சுவடிகளும்தான்! சேகரிக்க முடிந்த சுவடிகளையெல்லாம் எத்தனையோ சிரமப்பட்டு அலைந்து திரிந்து சேகரித்து சில லைப்ரரிகளில் சேர்த்து வைத்திருக்கிறது. தஞ்சாவூர் ஸரஸ்வதி மஹால் லைப்ரரி, மெட்றாஸில் ஓரியன்டல் மானுஸ்க்ரிப்ட்ஸ் லைப்ரரி, அடையாறு லைப்ரரி, இவற்றில் இப்படி நிறையச் சுவடிகளைச் சேர்த்து வைத்திருக்கிறது. அடையாற்றிலே தியாஸாஃபிகல் ஸொஸைடிகாரர்கள் இதிலே செய்திருக்கிற பணி ரொம்பவும் உயர்ந்தது.

தஞ்சாவூர் ஸரஸ்வதி மஹாலிலும் இப்படியே சரபோஜி முதலான ராஜாக்கள் அரும்பாடுபட்டு ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்து வைத்தார்கள்.

ஏடு என்றால் நடுவிலே நரம்பும் அதற்கு இரண்டு பக்கம் இலையுமாக இருக்கிறதில் ஒரு பக்கம் என்று அர்த்தம். வாழையிலையை இப்படிக் குறுக்காகப் பிளந்து ஒவ்வொரு பாதியையும் ஏடு என்கிறோம். பனை மட்டையில் இருக்கிறதை இப்படியே நடு நரம்பை எடுத்து விட்டு ஒவ்வொரு பக்கத்தையும் எடுத்து ஏடு என்பதுதான் ஏட்டுச்சுவடி. அது தான் நீண்ட நாளானாலும் பழுத்துப் போகாத, பழுதாகாத nature -ன் paper (இயற்கையின் காகிதம்..) !அதில் எழுத்தாணியை வைத்துக் கொண்டு செதுக்கி எழுத வேண்டும். ஞானசம்பந்தரின் தேவார ஏடு வைகையை எதிர்த்துக் கொண்டு கரையேறிய இடம் இன்றைக்கும் பாண்டிய நாட்டில் திருவேடகம் (திரு ஏடு அகம்) என்ற ஸ்தலமாக விளங்குகிறது. அங்கே ஈச்வரனுக்குப் ‘பத்ரிகா பரமேச்வரர்’ என்று பெயர். இப்போது ‘பேப்பர்’ என்றால் காகிதம் என்பது ஒரு அர்த்தம்; “மாகஸின்” (ஸஞ்சிகை) என்றும் அர்த்தம். “மாகஸின்” என்பதை “பத்திரிகை” என்கிறோம். நேச்சரின் பேப்பரான இயற்கை பத்திரிகை கரையேறின ஊரில் ஸ்வாமியே ‘பத்திரிகா பரமேச்வரன்’ என்று ஜர்னலிஸ்ட் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்! ‘பத்ரம்’, ‘பத்ரிக’ என்றாலும் இலை என்றே அர்த்தம். இலையிலிருந்து வந்தது தானே ஏடு? அதனால் ஏட்டுக்குப் பத்திரிகை என்று பெயர். இது தான் அந்த நாள் காகிதமாக இருந்ததால் கடிதாசும் இதிலேதான் எழுதுவார்கள். அதனால் கடிதாசுக்குப் ‘பத்ரம்’ என்றே பேர் வந்து விட்டது. இதெல்லாம் இருக்கட்டும்.

ஸரஸ்வதி மஹாலைப் பற்றிச் சொன்னேன். இதைப் பற்றி ஸ்வாரஸ்யமான ஒரு விஷயம் நினைவு வருகிறது.

பழைய காலத்தில் வெளிதேசத்திலிருந்து படையெடுக்கிறவர்கள் ஒரு தேசத்திற்கு விளைவிக்கிற மிகப் பெரிய ஹானி, அந்த தேசத்தின் லைப்ரரியைக் கொளுத்தி விடுவதுதான் என்று வைத்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் ஒரு தேசத்தின் பொருளாதாரத்துக்கு கஜானா எப்படியோ அப்படி அதன் அறிவுக்குக் கஜானாவாக இருந்தது இந்த லைப்ரரிதான். கலாசார கஜானா என்று சொல்லலாம். இப்போது போல் அப்போது பிரன்டிங் பிரஸ் இல்லாததால் பல பிரதிகள் கிடையாது. சில நூல்களில் ஒரே பிரதிதான் இருக்கும். இப்படிப்பட்ட சுவடிகள் கொண்ட லைப்ரரியைக் கொளுத்தி விட்டால் அது அந்த தேசத்தின் கஜானாவைக் கொள்ளையடிப்பதற்கு மேலே, அந்த தேசத்தின் பெண்களை மானபங்கபடுத்துவதற்கு மேலே என்று இதர தேசத்தார் நினைத்தார்கள். எதிரி தேசத்து அறிவுச் செல்வங்களான புஸ்தகங்களைக் கொளுத்துவது, அவர்களுடைய கோயில்களை இடிப்பது, அந்த தேசத்து ஸ்திரீகளை மானபங்கப்படுத்துவது முதலானவற்றுக்கு நம்முடைய ராஜநீதி சாஸ்திரங்களில் இடமே கிடையாது என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்ளவேண்டும். ஜைனம் போன்ற ஒரு எதிராளி மதத்தைச் சேர்ந்த அமரஸிம்ஹன் மாதிரியானவர்கள் ஹிந்து சமயாசாரியர்களிடம் வாதத்தில் தோற்றவுடன் தாங்களாகவே தங்கள் சுவடிகளை நெருப்பிலே போட்டாலும் நம் ஆசாரியாளைப் போன்றவர்கள், “கூடாது, கூடாது! எந்த தத்வத்தைச் சேர்ந்ததானாலும் சரி; ஒரு புஸ்தகத்தை இல்லாமல் பண்ணக்கூடாது” என்று எதிராளியின் கையைப் பிடித்துத் தடுத்திருக்கிறார்கள்.

இதர தேசத்தவர்களுக்கோ பண்பாட்டில் சிறந்த இன்னொரு ராஜ்யத்தைப் பிடிக்கிறபோது அங்கேயுள்ள லைப்ரரியை கொளுத்துவது பெரிய சொக்கப்பானை போன்ற உத்ஸாஹ விளையாட்டு! ‘அறிவுச் செல்வம் எல்லாருக்கும் பொது; எதிரியுடைய ஊரைச் சேர்ந்ததானாலும் அதை நாமும் எடுத்துக் கொண்டு பயனடையலாம்’ என்ற விவேகமில்லாமல், தங்களைவிட அறிவாளிகளாக உள்ள சத்ருக்களின் புஸ்தகங்களை பஸ்மம் பண்ணி அவர்களை வயிறெரியச் செய்ய வேண்டும் என்று நினைத்து இப்படிப்பட்ட பெரிய அக்ரமத்தைச் செய்தார்கள். இப்படித்தான் ஈஜிப்டில் [எகிப்தில்] அலெக்ஸான்ட்ரியா என்ற இடத்தில் அலெக்ஸான்டர் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட அநேகத் துறைகளில் உயர்ந்த புஸ்தகங்களைக் கொண்ட லைப்ரரியையும்; டர்க்கியில் (துருக்கியில்) இஸ்டான்புல் என்று இப்போது சொல்லப்படுகிற கான்ஸ்டான்டிநோபிளில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் ஆகியவர்கள் பல காலமாகப் பேணி வளர்த்த லைப்ரரியையும் பதினைந்து – பதினாறாம் நூற்றாண்டில் துருக்கர்கள் படை எடுத்தபோது இருந்த இடம் தெரியாமல் கொளுத்திவிட்டார்கள். பழைய சங்க நூல்களை ஸமுத்திரம் கொண்டு போய்விட்டது என்கிற மாதிரி இயற்கை உத்பாதமாக இல்லாமல், சத்துருக்களின் பண்பாட்டுக் குறைவால் அந்த தேசங்களில் பழைய அறிவு நூல்களில் பல வீணாகி விட்டன.

இங்கே நம் தக்ஷிண தேசத்திலும் கர்நாடிக் நவாப் முதலியவர்கள் கை ஓங்கித் தமிழ்நாடு முழுவதிலும் துருக்க சைன்யம் பரவினபோது தஞ்சாவூர் ஸரஸ்வதி மஹாலுக்கு ஆபத்து வந்துவிட்டது. அதைக் கொளுத்திவிட்டால் தஞ்சாவூர் பெரிய கோவிலை இடிப்பதற்கு ஸமானம் என்று ரொம்ப ஆவலாக சத்ருக்கள் வந்தார்கள். அப்போது டபீர் பந்த் என்ற மஹாராஷ்டிர பிராம்மணர் தஞ்சாவூர் ராஜாவுக்கு (சிவாஜி வம்சத்தவருக்கு) மந்திரியாக இருந்தார். அவருக்கு ஸமயோசிதமாக ஒரு யுக்தி தோன்றிற்று. லைப்ரரியைக் கொளுத்த வேண்டும் என்று வந்தவர்களிடம், “இதிலே எங்கள் ஹிந்து புஸ்தகங்கள் மட்டும் இல்லை. குரான் பிரதிகளும் வைத்திருக்கிறோம்” என்றார். உடனே, வந்தவர்கள் “குரான் இருக்கிறதா? அப்படியானால் கொளுத்த மாட்டோம்” என்று நமஸ்காரம் பண்ணிவிட்டுப் போய்விட்டார்கள்.

அப்புறம் இங்கிலீஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் எல்லோரும் வந்தார்கள். அவர்களுக்கு எதிலும் ஆராய்ச்சி புத்தி ஜாஸ்தி. இன்னொரு தேசத்து விஷயமானாலும் கொளுத்துவது என்று இல்லாமல், அதனால் தாங்கள் பிரயோஜனம் அடைய முடியுமா என்று பார்ப்பார்கள். ஜெர்மன் தேசத்தவர்களும் கலாசார ஆராய்ச்சி , மொழி ஆராய்ச்சிக்காக வந்து நம் நாட்டுச் சுவடிகளை எல்லாம் தேடித் தேடிப் பார்த்தார்கள். இதனால் நமக்கே பல புது சாஸ்திரங்களை இந்த அந்நிய தேசத்தவர்கள்தான் தேடிப் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அதற்காக நாம் நன்றி தெரிவிக்கவேண்டும். குறிப்பாக மெக்கென்ஸி என்பவர் ஸர்வேயர்-ஜெனரலாக இருந்தபோது ஊர் ஊராகப் போய் கிடைக்கக்கூடிய ஸகல ஏட்டுச்சுவடிகளையும் கலெக்ட் பண்ணி, அப்போது இதற்காக சர்க்காரின் டிபார்மென்ட் இல்லாவிட்டாலுங்கூட, அங்கங்கே படிக்கத் தெரிந்தவர்களைக் கொண்டு படிக்கப் பண்ணி, எல்லாவற்றையும் ரிகார்டாக preserve பண்ணி வைத்ததைச் சொல்ல வேண்டும். மெக்கென்ஸியின் ஆள் கும்பகோணத்தில் நம் மடத்துக்குக்கூட வந்து விவரங்கள் சேகரித்துக் கொண்டு போயிருக்கிறான்.

ஸரஸ்வதி மஹால் முதலிய இடங்களில் இருந்த ஸயன்ஸ், குறிப்பாக தநுர்வேதம், ஸம்பந்தமான நம் பழைய சுவடிகளை மேல் நாட்டுக்காரர்கள் எடுத்துக் கொண்டே போய்விட்டார்கள் என்று சொல்கிறார்கள். இப்படி எடுத்துக் கொண்டு போய்தான் ஹிட்லர் சில தினுஸான குண்டுகள், ப்ளேன்கள் முதலியன செய்தான் என்கிறார்கள்.

இருந்தாலும் இன்னமும் போஜராஜாவின் ‘ஸமாராங்கண ஸூத்ரம்’ போன்ற நம்மிடமே உள்ள சுவடிகளிலிருந்து மந்திர பூர்வமான அஸ்திரங்கள் மட்டுமின்றி, scientific [விஞ்ஞான பூர்வமான] ஆயுதங்களான சஸ்திரங்களும் நம் தேசத்தில் நீண்ட காலத்துக்கு முன்பே இருந்திருப்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. வராஹமிஹிரரின் ‘ப்ருஹத் ஸம்ஹிதை’ மாதிரியான ‘டைஜஸ்டுகள்’ நம் நாட்டின் அநேகத் துறை சாஸ்திரங்களையும் ஸயன்ஸ்களையும் சேர்த்துக் கொடுத்திருக்கின்றன.

சாஸ்திரங்கள், மற்ற வித்யையகள், நம்முடைய மருத்துவம், விஞ்ஞானம் எல்லவாற்றுக்கும் பழைய சுவடிகள் இருக்கின்றன. புராணங்களும் இவற்றில் இருக்கின்றன. இவைகளில் ஸ்தல புராணங்கள் மற்றவற்றை விடவும் ரொம்ப நஷ்டப்பட்டிருக்கின்றன. எஞ்சியதை நாம் காப்பாற்ற வேண்டும். தேடித் தேடிப் புதுசாகக் கிடைப்பதைச் சேகரம் செய்ய வேண்டும்.

* * *

வேதம் சொல்லும் பரமாத்ம தத்வத்தையும் தர்மங்களையும் நன்னெறிகளையும் ஒழுக்கங்களையும் ஸகல ஜனங்களுக்கும் விளக்கிச் சொல்லி ரஸிக்கும்படியான கதைகளைச் சொல்லி அவர்கள் அவற்றைப் பற்றியொழுகும்படிச் செய்திருப்பது புராணத்தின் சக்தியினால்தான். ஹ்ருதயத்தைத் தொடும் விதத்தில் உபதேசம் பண்ணுபவை அவை. நம்முடைய ஜனங்களின் தொன்றுதொட்டு வந்த நற்பண்புகளுக்கு முதுகெலும்பு புராணம்தான். ஆகையால் இப்போது அதனிடம் நமக்கு இருக்கும் அசட்டை மனப்பான்மையை மாற்றிக் கொண்டு, அதை ஒரு செல்வமாகக் காப்பாற்றுவோம். பல புராணங்களையும் ஒன்று சேர்த்து ஒப்பிட்டு ஆராய்ச்சிகள் செய்வோம்; இதனால் நாம் பயனடைந்து லோகத்துக்கும் பயனைத் தருவோம்.