வேள்வியின் தாத்பரியம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

நம் மதத்தில் மட்டும் ஏன் யக்ஞம் இருக்கிறது என்று ஆலோசிக்கிற போது, இவ்வுலகில் மனிதர்களாகிய நம்முடைய ஜீவனரீதியைக் கவனிப்போம். ஒரு ஊரில் ஒரு ஸாமான் அதிகமாக விளைந்தால், அதை அந்த ஸாமான் விளையாத ஊருக்கு அனுப்பி, நம் ஊரில் விளையாததும் அந்த ஊரில் விளைவதுமான மற்றொரு ஸாமானை வாங்கிக் கொள்கிறோம். தச்சன், கொல்லன் முதலியவர்கள் நமக்காகச் சில காரியங்களைச் செய்கிறார்கள் ; நாம் அவர்களுடைய காலக்ஷேபத்திற்கு வேண்டியவைகளைக் கொடுக்கிறோம். பசுக்களுக்குப் புல் போடுகிறோம் ; அவை நமக்குப் பால் கொடுக்கின்றன. நாம் ராஜாங்கத்தினருக்கு வரி கொடுக்கிறோம். அவர்கள் நமக்குத் தீங்கு வராமல் காவல் கட்டுச் செய்கிறார்கள். இப்படி உலக முழுவதுமே பரிவர்த்தனை க்ரமத்தில் (exchange) நடந்து வருகிறது. இப்படியே நாம் லோகாந்தரங்களுடன் சில பரிவர்த்தனை செய்து கொண்டிருக்கிறோம். இஞ்ஜினியர் முதலியவர்கள், பெய்த மழை நீரை ஒழுங்காகப் பிரித்து ஆறு முதலியவைகளில் பாயும்படி விடுவார்களே யொழிய, மழை பெய்யும்படிச் செய்ய அவர்களால் முடியாது. மழை பெய்ய வேண்டுமானால், நாம் சில ஸாமான்களைத் தேவலோகத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த பரஸ்பர பரிவர்த்தனையே கீதையில் சொல்லியிருக்கிறது.

தேவான் பாவயதாநேந தே தேவா பாவயந்து வ: |

பரஸ்பரம் பாவயந்த ச்ரேய: பரம் அவாப்ஸ்யத ||

இதன் அர்த்தம்: “யாகத்தைக் கொண்டு நீங்கள் தேவர்களைத் திருப்தி செய்து வையுங்கள். அந்த தேவர்கள் மழை முதலியவற்றால் உங்களுக்கு க்ஷேமத்தைச் செய்யட்டும்; இப்படியே நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு, மேலான க்ஷேமத்தை அடையுங்கள்.”

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is தேவகாரியமும் பித்ரு காரியமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  ஜீவஹிம்ஸை செய்யலாமா ?
Next