பிரம்ம ஸூத்ரம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஒவ்வொரு ஸித்தாந்தந்துக்கும் ஸூத்ரம், பாஷ்யம், வார்த்திகம் என்ற மூன்று உண்டு என்று சொன்னேன். இப்போது நம் தேசத்திலிருக்கப்பட்ட சங்கரர், ராமாநுஜர், மத்வர், ஸ்ரீகண்டர் (சைவ சம்பிரதாய ஆசாரியர்) முதலியவர்களின் ஸித்தாந்தங்களுக்கெல்லாம் வேதாந்த மதங்கள் என்றே பொதுப்பெயர். இந்த ஆசார்யர்கள் எல்லோருமே உபநிஷத்துக்களில் தங்கள் தங்கள் கொள்கையைத்தான் சொல்லியிருக்கிறது என்று ஆதாரம் காட்டுகிறார்கள். உபநிஷத்துக்களில் பத்தை முக்கியமாக எடுத்து அவற்றுக்குத் தங்கள் ஸித்தாந்தப் பிரகாரம் பாஷ்யம் பண்ணியிருக்கிறார்கள் * . அதனால் வேதாந்த மதத்துக்கு ஸூத்ரத்தின் ஸ்தானத்தில் உபநிஷத்துக்களையே சொல்ல வேண்டும். “ஸ்தானத்தில்”தான்; வாஸ்தவமாக உபநிஷத்துக்கள் ஸூத்ர ரூபத்தில் இல்லை.

ஸூத்ரம் என்றால் எப்படியிருக்க வேண்டும்? ரொம்ப ரொம்பச் சுருக்கமாகத் தத்வங்களைச் சொல்லிக் கொண்டே போக வேண்டும். மினிமம் (அதம பக்ஷமான) வார்த்தைகளில் சொல்லிக் கொண்டு போகிறதை (aphorism-என்பதை)த் தான் ஸூத்திரம் என்பது. இந்த definition படி, உபநிஷத்துக்களை நேராக ஸூத்திரம் என்று சொல்லமுடியாது. ஆனாலும் வேதாந்த ஸம்பிரதாயங்கள் எல்லாவற்றுக்கும் ஆதார நூலாக (basic text -ஆக) ஒரு அசல் ஸூத்ர புஸ்தகமும் இருக்கிறது. அதுதான் ‘ப்ரஹ்ம ஸூத்ரம்’ என்பது.

ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு ஒவ்வொரு ஸம்பிரதாயத்தை ஒட்டியும் பாஷ்யம் உண்டு. இந்த பிரம்ம ஸூத்ரம் என்பது என்னவென்றால், உபநிஷத்துக்களில் சொல்லியிருக்கிற தத்வங்களின் ஸாரத்தை ரத்தினச் சுருக்கமாக ஸூத்ர ரூபத்தில் வியாஸ மஹரிஷி எடுத்துச் சொல்லியிருப்பதுதான்.

பதரி என்னும் இலந்தை மரத்தடியில் இருந்ததால், வியாசருக்கு பாதராயணர் என்றும் ஒரு பேர் உண்டு. அதனால், இதற்கு பாதராயண ஸூத்ரம் என்ற பெயரும் இருக்கிறது.

ஜீவன் யார்? அவன் வாழ்கிற ஜகத் என்பது என்ன? இதற்கெல்லாம் காரணமான ஸத்ய தத்துவம் என்ன?- என்கிற மூன்று விஷயங்களை முக்கியமாக விசாரிக்கும் வேதாந்த ஸம்பிரதாயங்களுக்கெல்லாம் ஆதார நூலாக பிரம்ம ஸூத்ரம் இருக்கிறது.

ஆனால் அதுவும் வியாஸரின் சொந்த அபிப்ராயங்களைச் சொல்வதல்ல. ஏற்கெனவே இருந்த வேதாந்த சாஸ்திரமான உபநிஷத்துக்களின் அர்த்தத்தை விசாரித்து வியாஸர் பண்ணினதுதான் அது. வேதத்தின் பிற்பகுதியில் வரும் உபநிஷத்தை ஆராய்வதால், “உத்தர மீமாம்ஸை” என்று அதற்குப் பேர்.

அதில் ஐந்நூற்றுச் சொச்சம் (555) ஸூத்ரங்கள் இருக்கின்றன. அந்தப் புஸ்தகம் நாலு அத்யாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அத்யாயமும் நாலு பாகங்களாக இருக்கிறது. மொத்தம் எல்லாவற்றிலும் சேர்ந்து, ‘அதிகரணம்’ என்கிற சுமார் இருநூறு (191) ஸெக்ஷன்கள் இருக்கின்றன.

ஸந்நியாஸ லக்ஷ்யத்தை முடிவாகச் சொல்வதால் “பிக்ஷூ ஸூத்ரம்” என்றும், சரீரத்துக்குள் இருக்கிற ஆத்மாவைப் பற்றி விசாரிப்பதால் “சாரீரகம்” என்றும் பிரம்ம ஸூத்ரத்துக்குப் பெயர்கள் உண்டு.

ஸூத்ரம் என்றால் கயிறு என்று ஒரு அர்த்தம். மங்கள ஸூத்ரம் என்று தாலிக்கயிற்றைச் சொல்கிறோம் அல்லவா? இந்த அர்த்தத்தை வைத்து ஆசார்யாள் தம்முடைய பாஷ்யத்தில் (I.1.2) சிலேடையாகச் சொல்கிறார்:

வேதாந்த வாக்ய குஸும க்ரதனார்த்தத்வாத் ஸூத்ராணாம்

வேதம் என்ற விருக்ஷத்தில் பூத்த உபநிஷத் புஷ்பங்கள் உதிரி உதிரியாக இருந்தால் நாம் எப்படி அதை மாலையாகப் போட்டுக்கொள்ள முடியும்? அதற்காக உபநிஷத் புஷ்பங்களையெல்லாம் ஒன்றாகத் தொடுத்துத் தருகிற கயிறாக இந்த பிரம்ம ஸூத்ரம் இருக்கிறது என்று ஆசார்யாள் சொல்கிறார். இன்றைக்கு ஹிந்து மதம் என்ற பெயரில் உள்ள எல்லா ஸம்பிரதாயங்களுக்கும், ஸித்தாந்தங்களுக்கும், ஆதாரமான ஸூத்ரம் பிரம்ம ஸூத்ரம் என்றால், அந்த பிரம்ம ஸூத்ரத்திற்கு ஆதாரமாக இருப்பது உபநிஷத்துக்கள்தான். இதனால் தான் வைதிக மதங்களை எல்லாமே “ஒளபநிஷத மதங்கள்” என்று சொல்கிற வழக்கமும் இருக்கிறது.

“Vedanta, Vedanta” என்று மேல்நாட்டு அறிவாளிகள் கொண்டாடுவது உபநிஷத்துக்களைத்தான். இஹலோகத்தின் அல்ப விஷயங்களை விட்டுக் கொஞ்சம் வைராக்யமாக, ஞானமாக யாராவது ஏதாவது சொன்னாலும், “என்னடா வேதாந்தம் பேசுகிறாய்?” என்றுதான் பொது வழக்கில் கேட்கிறோம்! அப்படியாக, ஞானத்தைப் பூரணமாக வைத்து இந்த உபநிஷத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

வேதத்தின் முடிவு என்கிற மாதிரியே வேதத்தை ஒரு புருஷனாகச் சொன்னால், அந்த வேத புருஷனுக்கு சிரஸாக இருப்பது உபநிஷத்துக்களே என்ற அர்த்தத்தில், அதற்கு ‘ச்ருதி சிரஸ்’ என்றும் பெயர் இருக்கிறது. ‘சு(ரு)தி முடி’ என்றும், ‘மறை முடி’ என்றும் தமிழில் பெயர் இருக்கிறது.


* ராமானுஜர் நேராக உபநிஷத் பாஷ்யம் செய்யாவிடினும், அவற்றின் கருத்துக்களைத் தெரிவிப்பதாக நூல்கள் எழுதியுள்ளார். அவரது கொள்கை வழியில் பிற்காலத்தே ரங்கராமானுஜர் என்பவர் நேர் பாஷ்யம் எழுதியுள்ளார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is உபநிஷதங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  வேதமும் வேதாந்தமும் முரணானவையா ?
Next