பிராம்மணரல்லாதார் விஷயம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

பிராம்மணன் தவிர மற்றவர்கள் பரிசுத்தியாக வேண்டாமா? அவர்களுக்கு இந்தக் கர்மாநுஷ்டானம் அத்யயனம், இவை இல்லையே என்றால், அவரவருக்கும் அவரவர் செய்கின்ற தொழிலே சித்தசுத்தியைத் தருகிறது. எந்த ஜாதியானாலும், தங்களுக்கு ஏற்பட்ட கர்மாவை (தொழிலை)ச் செய்து அதை ஈச்வரார்ப்பணம் பண்ணினால் ஸித்தி அடைந்து விடுகிறார்கள். இந்த விஷயத்தை பகவான் கீதையில் (XVIII.46) தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

ஸ்வகர்மணா தம் அப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மானவ:|

யுத்தம் செய்வது, காவல் காப்பது முதலான தொழில் ஒருத்தனுக்கு ஏற்பட்டிருக்கிறது. இன்னொருவன் வியாபாரம் செய்கிறான், பசுவை ரக்ஷிக்கிறான். வேறொருவன் இந்த நாளில் தொழிலாளர்கள் என்று சொல்கிற labour force ஆக இருக்கிறான். பிராம்மணன் சமூகத்துக்காகச் செய்ய வேண்டிய தொழில் என்ன?

இந்த லோக ரீதியில் மற்றவர்கள் தொழில் செய்கிறார்கள். ஆனால் நம்முடைய பரமாத்மாவின் அநுக்ரஹந்தானே எல்லாவற்றுக்கும் முக்யமாக வேண்டியிருக்கிறது? அதை ஸகல ஜாதியாருக்கும் ஸம்பாதித்துக் கொடுப்பதற்கான காரியங்களே பிராம்மணனுக்கு ஏற்பட்டவை. பரமாத்மாவோடுகூட, முன்னமே சொன்னபடி அவரது அதிகாரிகளைப் போல இருக்கிற தேவர்களை ஸகல ஜீவ ஜந்துக்களிடமும் பிரீதி உள்ளவர்களாகப் பண்ணவேண்டியதும் பிராம்மணின் தொழிலைச் சேர்ந்தது. அவன் அத்யயனம் பண்ணும் மந்திரங்கள், அவன் புரிகிற கர்மாநுஷ்டானங்கள் எல்லாமே ஸகல ஜாதியாரின் க்ஷேமத்தை உத்தேசித்தவைதான். இந்த லோகத்தின் லெவலை மீறிய சக்திகளோடு இவனுக்குக் காரியம் இருப்பதால், இவன் மற்றவர்களைவிட அதிக நியமங்கள், விரதங்களோடு இருந்து மந்திர சக்தியை ஸம்பாதித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மற்றவர்களுக்கு இவ்வளவு வேண்டாம். அவர்களுக்காகவும் சேர்த்து இவனுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று புரிந்து கொண்டால் இவனுக்கு மட்டும் ஸ்பெஷலாக வைத்திருக்கிறது என்ற தப்பபிப்ராயம் உண்டாகாது.

இந்தக் காரியம் தவிர, லோகரீதியிலேயே இவன்தான் எல்லா வித்யைகளையும், சாஸ்திரங்களையும், மற்ற எல்லார் செய்கிற தொழில் முறைகளையும் நன்றாகப் படித்து, அவரவர்க்கும் உரிய தொழிலை அவரவர்களுக்குச் சொல்லி கொடுக்க வேண்டும். Teaching (கற்றுக் கொடுப்பதே) இவன் தொழில். மற்ற தொழில்களை இவனே செய்யாமல், அவற்றைப் பற்றிய நூல்களைப் பயில மட்டும் செய்து, அததற்கு உரியவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதோடு நிற்கவேண்டும். மற்றவர்களின் சரீரத்தைக் காப்பாற்றுகிற காவல் காரியம், வியாபாரம், உடலுழைப்பு முதலியவற்றைவிட, அவர்களுடைய தொழில் முறை, வாழ்க்கை நெறி இவற்றையே காப்பாற்றிக் கொடுப்பதன் மூலம், அவர்களுடைய மனஸையும், அறிவையும் ரக்ஷித்துக் கொடுப்பதான இந்தத் தொழில் ரொம்பவும் பொறுப்பு வாய்ந்த்ததாக இருக்கிறது. இந்தப் பொறுப்பை ஆற்றுகிறவன் நல்ல சித்த பரிபக்குவம் வாய்ந்தவனாக இருந்தாலன்றி இவன் செய்கிற காரியம் பலன் தராது. மனஸிலும், அறிவிலும் இவன் உயர்ந்த தூய்மையை அடைந்திருந்தால்தான் இவன் பிறரை அவற்றில் உயர்த்திவிட முடியும். அதே சமயத்தில், இவனுக்குத்தான் மற்றவர்களுக்கு இல்லாத பிரதிபந்தகம் (handicap) ஒன்றும் இருக்கிறது. புத்தியால் காரியம் செய்கிறோம் என்பதால் இவன் மற்றவர்களைவிடத் தனக்கு உயர்வு இருப்பதாக நினைத்து விட்டால், அது பெரிய பிரதிபந்தகமாகிவிடும். இம்மாதிரிக் காரணங்களால், இவனைத்தான் ரொம்பவும் பரிசுத்தப்படுத்த வேண்டியிருக்கிறது. நிரம்பவும் அஹம்பாவம் உண்டாக்கக்கூடிய ஹேதுக்கள் இருந்தும், இவனைக் கொஞ்சங்கூட அஹம்பாவமே இல்லாதவனாகப் பண்ண வேண்டியிருக்கிறது. அதனால்தான், இவனை நாற்பது ஸம்ஸ்காரங்களால் நன்றாக வறுத்தெடுத்து சக்கையாகப் பிழிந்து சுத்தமாக்க வேண்டும் என்று வைத்திருப்பது.

மந்திரங்கள் பலிதம் ஆகவேண்டுமானால் கடும் நியமங்களை அநுஷ்டித்தால்தான் முடியும். தேள்கடி மந்திரம் மாதிரி ஒன்றை ஜபித்து விஷத்தை இறக்குகிறவர்களை இன்றைக்கும் பார்க்கிறோம். அவர்களைக் கேட்டால் நியமம் தப்பினால் தங்களுடைய ஜபம் பலிக்கிறதில்லை என்கிறார்கள். இன்ன வேளையில்தான் ஜபம் பண்ணலாம், இன்ன வேளையில் கூடாது, வாரத்தில் இந்த நாளில் கூடாது, தூபம் காட்ட வேண்டும், பலி போட வேண்டும் என்று ஒவ்வொரு மந்திரத்துக்கும் ஒவ்வொரு விதி இருக்கிறது. விதி தப்பினால் பலனில்லாமல் போய்விடுகிறது என்கிறார்கள். கிரஹண காலத்தில் ஜபித்தால் நல்ல வீர்யம் ஸித்திக்கிறது என்கிறார்கள். இவ்விதமாக மந்திரம் பலன் தருவதற்கும், ஒரு வேத வித்து ஆத்மசுத்தி பெறுவதற்கும் ஆதாரமான விஷயங்கள் அத்தனையும் ஒரு சாகைக்குள் வந்து விடும்படியாக வைத்திருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is வேதமும் தமிழ்நாடும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  சாகைகளின் பிரிவினையும் வழக்கில் உள்ளவையும்
Next