ஸம்ஸ்கிருதம் சர்வதேச மொழி : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஸம்ஸ்கிருதம் அத்தனை மநுஷ்யர்களுக்குமான பாஷை. அது ஸர்வதேச பாஷை. அதுவே தேவ பாஷையும் ஆகும். தேவர்களுக்கு ‘கீர்வாணர்’ என்று பெயர். அதனால் ஸம்ஸ்கிருதத்துக்கு ‘கைர்வாணீ’ என்ற பெயரும் இருக்கிறது. ‘தேவ பாஷை’என்று அதைத் தமிழ்க் கவிதைக்குச் சக்கரவர்த்தி ஸ்தானத்திற்கு வைக்கப்பட்ட கம்பரும் சொல்கிறார்: “தேவ பாடையில் இக்கதை செய்தவர்” என்கிறார்.

ஸம்ஸ்கிருதம் நாம தைவீ வாக்

என்று தண்டி காவ்யாதர்சத்தில் சொல்கிறார்.

தேவர்கள் வாக்கு – தைவீ வாக்.

நம் எல்லோருக்கும் தேவர்கள் பொதுதான். அதனால், ஸம்ஸ்கிருதமும் நம் எல்லோருக்கும் வேண்டியதுதான்.

அவ்யக்தம் எனப்படுகிற ஸ்பஷ்டமற்ற ‘அக்ஷரங்களே இல்லாத பாஷை அது. இங்கிலீஷில் word என்கிறபோது ‘வே (ர்) ட்’என்று எழுதுவதா ‘வோ(ர்) ட்’ என்று எழுதவதா என்று தெரியவில்லை. வியக்தமான ஏ-காரம், வியக்தமான ஓ-காரம் இரண்டுமில்லாத ஒரு சப்தமாக அது இருக்கிறது. ஸம்ஸ்கிருதத்தில் இப்படிப்பட்ட ஒலிகள் இல்லை. Word என்பதை ‘வேர்ட்’ என்று ர்-ஐ வியக்தமாகச் சொன்னாலும் தப்பாக இருக்கிறது; அதற்காக ‘ர’ காரமே இல்லாமல் ‘வேட்’ என்றாலும் சரியாயில்லை; துளித்துளி ர-சப்தத்தைத் தொட்டுக்கொண்டு ட்-டுக்குப் போக வேண்டியிருக்கிறது. இம்மாதிரி அவ்யக்த சப்தங்கள் ஸம்ஸ்கிருதத்தில் இல்லை.

அதேபோல், தாது இல்லாத பதம் என்பதே இல்லாத பாஷையாகவும் ஸம்ஸ்கிருதமே இருக்கிறது. எந்த ஒரு பதத்தை எடுத்துக் கொண்டாலும், அதை அக்ஷர அக்ஷரமாகப் பிரித்து அர்த்தம் சொல்ல முடிகிறது. காதுக்கும் மங்களமாகவும், கம்பீரமாகவும் இருக்கிறது. அதைச் சிலபேருக்கு மட்டுமானது என்று குறுக்கி த்வேஷம் பாராட்டுவது சரியே இல்லை.

ஏதோ சத்தம் போட்டு அதன் மூலம் விஷயத்தைத் தெரிவிப்பது என்றில்லாமல், சப்தங்களை நன்றாக ஸம்ஸ்காரம் பண்ணி (அதாவது சுத்தப்படுத்தி) அப்புறம் பதம், வாக்கியம் முதலானதுகளையும், பெயர்ச்சொல், வினைச்சொல் முதலான parts of speech -களையும் அலசி அலசி வரையறைப்படுத்தி ஸம்ஸ்காரம் செய்திருப்பதாலேயே இதற்கு ‘ஸம்ஸ்க்ருதம்’ என்ற பேர் ஏற்பட்டது. சிக்ஷா சாஸ்திரமும், அதைவிட முக்யமாக வியாகரணமும் இப்படிப் பட்ட ஸம்ஸ்காரங்களைச் செய்கின்றனவை ஆகும்.

அந்த பாஷையைப் பேசினால் அதுவே மநுஷ்யனுக்கும் ஸம்ஸ்காரத்தைச் செய்கிறது. தேவ பாஷையிலிருந்து உண்டானதால் திவ்ய சக்திகளின் அநுக்கிரஹத்தைப் பெறும் படியாகச் செய்கிறது. ஸம்ஸ்கிருத சப்தங்கள் உத்தமமான நாடி சலனங்களால் நல்லது செய்வதோடு nervous system -ஐ [நரம்பு மண்டலத்தை] க்கூட வலுவாக்கி, ஆரோக்யம் தருகிறது என்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is வடமொழி வியாகரணமும் தமிழிலக்கணமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  மொழி ஆராய்ச்சியும் சமய சாஸ்திரமும்
Next