சில சிறிய வித்யாஸங்கள் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

வேதத்தின் அக்ஷர சுத்தத்தைப் பற்றி இத்தனை சொன்னேன். நான் சொன்னதற்கு அநுஸரணையாகவே ஆஸேது ஹிமாசலம் [ராமேச்வரத்திலிருந்து இமயமலைவரை] அத்தனை இடங்களிலும், ஒருத்தருக்கொருத்தர் தொடர்பேயில்லாமல், புஸ்தகமுமில்லாமல், வாய்மொழியாகவே வேதத்தைப் பாடம் பண்ணி வந்துள்ள போதிலும் எல்லாப் பாடங்களும் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது சதவிகிதம் அக்ஷர வித்யாஸமில்லாமல் ஒன்றாகவே இருக்கிறது.

அப்படியானால், இந்த பாக்கி ஒரு சதவிகிதத்தில் வித்யாஸம் இருக்கிறதா என்றால் இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள ஒவ்வொரு சாகைக்கும் இடையில் இம்மாதிரித் துளித்துளி அக்ஷர வித்யாஸம் இருக்கத்தான் செய்கிறது.

இப்படி இருக்கலாமா? ஒரு அக்ஷரம் தப்பினால்கூட விபரீத பலனாகும் என்று சொல்லிவிட்டு, ஒரே மந்திரமானது வெவ்வேறே சாகைகளில் வெவ்வேறே பிரதேசங்களில் வரும்போது அதில் ஒரு பெர்ஸென்ட் அக்ஷர வித்யாஸம் ஏற்படுகிறது என்றால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே! மூலரூபம் ஒன்றுதான் என்றால், அதில் ஒரு பெர்ஸென்ட் வித்யாஸத்தோடு இன்னொன்று வந்தால் கூட, அது பலன் தராதுதானே? அல்லது விபரீத பலன்தானே தரும்?

இப்படிக் கேள்வி கேட்டால் பதில் இருக்கிறது. ஒரு மருந்துக்குப் பதில் இன்னொன்றை மாற்றிச் சாப்பிட்டால் விபரீதம் என்ற மாதிரி, அக்ஷரத்தை மாற்றினால் தப்புத்தான். ஆனால் மருந்தை மாற்றக்கூடாது என்பது வியாதிஸ்தனுக்குச் சொன்னதுதான். அவனாக மருந்தை மாற்றிவிடக்கூடாது. ஆனால் டாக்டர் மாற்றலாம் அல்லவா? ஒரே வியாதிக்குப் பல மருந்துகள் இருக்கின்றன. அப்போது இதைச் சாப்பிடலாம், அல்லது இன்னொன்றைச் சாப்பிடலாம் என்று டாக்டரே ‘பிரிஸ்க்ரைப்’ பண்ணினால் அதில் தப்பில்லை தானே? ஒரே வியாதி இரண்டு பேருக்கு வந்திருக்கிறபோது, அவர்களின் தேகவாகிலே இருக்கிற வித்யாஸத்தை அநுசரித்து, ஒரே மருந்திலேயே கொஞ்சம் கொஞ்சம் சரக்குகளை மாற்றி, டாக்டர் கொடுக்கலாம் அல்லவா?

இம்மாதிரிதான், ஒன்றுக்கொன்று விபரீதமான பலன் உண்டாக்குகிற அக்ஷரங்களாக இல்லாமல், ஒரே மாதிரியான பலனை உண்டாக்குகிற அக்ஷரங்களை ரிஷிகள் பல சாகைகளுக்கிடையிலே மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த சாகையை அத்யயனம் செய்ய அதிகாரிகளாக யார் பிறப்பார்களோ அவர்களுக்கு இந்த அக்ஷர மாற்றங்கள் க்ஷேமத்தை உண்டு பண்ணும் என்பதால் இப்படிச் செய்திருக்கிறார்கள். இவற்றைப் பற்றிய விதிகள் பிராதிசாக்யத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றன.

அக்ஷரங்களுக்குள்ளே மாறுபாடு என்றால் பெரிய வித்யாஸம் இல்லை. அக்ஷரங்கள் ஸம்பந்தாஸம்பந்தமில்லாமல் மாறிவிடாது. பெரும்பாலும் ஒரே மாதிரியாக ஒலிக்கிற சப்தங்களே ஒன்றுக்குப் பதில் இன்னொன்று வரும். அவ்வளவுதான். ரொம்பவும் கிட்டக் கிட்ட இருக்கிற அக்ஷரங்களில் ஒன்றுக்குப் பதில் இன்னொன்று வரும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is சுதேச-விதேச மொழிகளும், லிபிகளும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  வேத சப்தமும் பிரதேச மொழிச் சிறப்பும்
Next