ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – முக்ய ஆதாரம் : சங்கர மடங்களிடையே ஒரே கருத்து : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஆசார்யாளின் காலம் கி.மு. 500-ஐ ஒட்டியது என்பதற்கு ஒரு முக்யமான ஆதாரம் இந்த (காஞ்சி) மடம், த்வாரகை மடம், புரி மடம் ஆகிய ஆசார்யாளின் மூன்று ஸ்தாபனங்களிலும் அந்தப் ‘பீரிய’டையே சொல்வதுதான்.

அறிஞர் என்று வெள்ளைக்காரர்களிடமும் பெயர் வாங்கிய ஸர் ஸுப்ரஹ்மன்ய ஐயர் ரொம்ப வருஷம் முந்தி “தியாஸஃபிஸ்ட்” பத்திரிகையில் த்வாரகா மட ரிகார்டுகளை முக்யமாகக் காட்டியே, ஆசார்யாள் கி.மு. 6-5 நூற்றாண்டுதான் என்று எழுதியிருந்தார். அன்னி பெஸன்ட் உள்பட தியாஸாஃபிகல் ஸொஸைடியினர் எல்லாரும் அந்தக் காலத்தையே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். த்வாரகா மடத்துக்காரர்கள் தங்களுக்கு ஆதரவாக, இந்த்ரனின் அம்சம் என்று சொன்னேனே, அந்த ஸுதன்வா என்ற ராஜா நம்முடைய ஆசார்யாளுக்கு ‘அட்ரஸ்’ பண்ணியதாக ஒரு தாம்ர பத்ர சாஸனம் (செப்பேடு) கூடத் தங்களிடம் இருப்பதாகச் சொல்லி அதன் வாசகத்தை முன்னே சொன்ன “விமர்சா” புஸ்தகத்தில் ‘பப்ளிஷ்’ பண்ணியிருந்தார்கள்1.

புரி ஜகந்நாதத்தில் ஆசார்யாள் ஸ்தாபித்த கோவர்தன மடத்தினரும் அவர் காலம் கி.மு. 6-5 நூற்றாண்டு என்றே சொல்கிறார்கள். அவர்கள் இன்று வரை2 140-க்கு மேல் வரிசையாகத் தங்கள் மடத்து ஸ்வாமிகளின் லிஸ்ட் வைத்திருக்கிறார்கள்.

அங்கே ஏன் காஞ்சியிலும் த்வாரகையிலும் இருப்பதைப் போலக் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ஸ்வாமிகளைச் சொல்லியிருக்கிறது என்று கேள்வி வரும். காரணம் இது தான்: மற்ற மடங்களில் பால ப்ரஹ்மசாரிகளே பீடாதிபத்யம் பெற்றுவிடுவதாக இருக்க புரி மடத்தில் மத்யம வயஸுக்கு மேற்பட்டவர்கள்தான் ஸ்வாமிகளாகிறார்கள். அதனால் அவர்கள் பட்டத்தில் இருக்கும் ‘பீரியட்’ மற்ற மடங்களில் இருப்பதைவிட சராசரியில் ரொம்பவும் குறைவாக இருக்கிறது. இதனாலேயே அங்கே குரு பரம்பரை எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

பத்ரிநாதத்தில் ஆசார்யாள் ஸ்தாபித்த மடத்திற்கு ஜ்யோதிர் மடம் என்று பேர். அந்த மடத்தினர் “மடாநுசாஸனம்” என்பதாக (1946-ல்) ஒரு ப்ரசுரம் வெளியிட்டிருக்கிறார்கள். அதிலும் ஆசார்யாள் அவதாரம் கி.மு. 509 என்றே கண்டிருக்கிறது.

தக்ஷிணத்தில் ஒன்று (காஞ்சி) , கிழக்கு ஸமுத்ர எல்லையில் ஒன்று (புரி ஜகந்நாதம்) , மேற்கு ஸமுத்ர எல்லையில் ஒன்று (த்வாரகை) , வடக்கே ஹிமாசல எல்லையில் ஒன்று (பத்ரிநாதம்) என்று ஒன்றுக்கொன்று ஸுமார் ஆயிரம் மைல் தள்ளியுள்ள நான்கு சங்கர மடங்களிலும் அவர்களது மூல புருஷரின் காலம் கிறிஸ்து சகாப்தத்திற்கு ஐந்நூறு வருஷம் முன்னால் என்று ஏகோபித்துச் சொல்லி இருப்பதைக் கவனிக்க வேண்டும். ‘நம்முடைய ஆசார்ய பீடங்கள் ஒருமுகமாகச் சொல்வது நம்பகமில்லாதது. ஓரியண்டலிஸ்ட்களின் ரிஸர்ச்தான் ஸத்ய ப்ரமாணமானது என்று சொல்லலாமா?’ என்று அவரவரும் ஆலோசித்துப் பார்க்க வேண்டியது.

கி.மு. 44 என்று கர்நாடக தேசத்திலுள்ள அபிப்ராயம் கூட கி.பி. 788-ஐவிட கி.மு. 509க்குத்தான் கிட்டத்தில் இருப்பது. அப்படியிருக்கும்போது அதற்கும் (கி.மு. 44க்கும்) எண்ணூறு வருஷம் தள்ளி வெள்ளைக்காரர்கள் நிர்ணயம் பண்ணியதுதான் ஸரி என்று ஒரே தீர்மானமான முடிவு கட்டி விடலாமா?

இந்த மடங்களில் ஒன்றிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கும் நான் இதற்கு மேலே சொல்வது அழகாகாது. இவ்வளவு சொன்னதுகூட ஜாஸ்தியோ என்றால், மடம்-நீங்கள்-மடத்துச் சிஷ்யர்கள், எல்லாம் ஒரே குடும்பம்தான் என்ற பாத்யதையால் சொன்னேன்!


1 ‘விமர்சா’ வெளியானது 1872-ல், புரி மடத்தின் “க்ரந்த மாலா”வில் நான்காவது வெளியிடான “யதி தண்டைச்வர்ய விதானம்” என்ற நூலிலும் ஸ்ரீ சங்கராவதாரம் கி.மு. 509-ல் என்றே கூறப்பட்டுள்ளது.

2 1963

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 23. த்வாரகா ஸ்ரீமடத்தின் சான்று
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  25. ஹாலன்-பூர்ணவர்மன்
Next