ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – பௌத்த-ஜைன நூல்களின் அத்தாட்சி : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஹிந்து மதப் புஸ்தகங்களில் சொல்லியிருப்பதை ஊர்ஜிதப்படுத்துவதாக பௌத்த – ஜைனர்களின் பழைய புஸ்தகங்களிலும் இருந்து விட்டால் அதற்கு ‘வால்யூ’ அதிகம்; நிச்சயமாக அந்த ஸமாசாரம் நிலை நாட்டப்பட்டுவிடுகிறது என்றே சொல்லலாம்.

ஆசார்யாள் கி.மு. 509-477 என்பதற்கு அந்த இரண்டு மதஸ்தர்களின் நூல்களிலும் ஆதாரமிருக்கிறதாகக் காட்டியிருக்கிறார்கள்.

‘நேபாள ராஜவம்சாவளி’ என்பது பௌத்தர்களிடமிருந்து கிடைத்திருப்பது. அதில் ஆசார்யாள் நேபாளத்துக்கு வந்ததாகவும் அப்போது வ்ருஷதேவ வர்மா என்பவன் ராஜாவாயிருந்ததாகவும் சொல்லியிருக்கிறது. இந்த வ்ருஷ தேவ வர்மாவின் காலத்தை ஸரியாகக் கலி 2600 (அதாவது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு) என்றே அதில் கொடுத்திருக்கிறது.

ஜைனப் புஸ்தகத்துக்கு வருகிறேன். மஹாவீரரின் சரித்ரத்தைப் பற்றி “ஜின விஜயம்” என்று புஸ்தகம் இருக்கிறது. காளிதாஸன் கால விஷயத்தின்போது குறிப்பிட்ட கோலாப்பூர் சாஸ்த்ரி அந்தப் புஸ்தகத்தை ஆராய்ந்து பார்த்தே பல தேதிகளை நிர்ணயம் பண்ணியிருக்கிறார். அதில் குமாரிலபட்டர், ஸுதன்வா, ஆசார்யாள் முதலியவர்களைச் சொல்லியிருக்கிறது. ஜைனப் புஸ்தகமானதால் திட்டியே சொல்லியிருக்கிறது! நிச்சயமாக அவர்களைப் புராதன கால புருஷர்களாகக் காட்ட வேண்டுமென்ற உத்தேசம் அந்தப் புஸ்தகாரருக்கு இருந்திருக்காது. ஆனாலும் அவர் காட்டுகிற தேதிகள் நாம் சொல்லும் கி.மு. பீரியடாகவே இருக்கிறதென்றால் அது நிஜம்தான் என்று ‘ப்ரூவ்’ ஆவதாகக் கொள்ளலாமல்லவா?

குமாரில பட்டர் பிறந்த நாளை ‘ஜின விஜய’த்தில் “ரிஷி-வாரஸ்-ததா-பூர்ணே மர்த்யாக்ஷௌ வாம-மேளநாத்” என்று ஸங்கேத ஸங்கியையையில் சொல்லியிருக்கிறது. ‘ஸப்தரிஷி’கள் என்பதால் ‘ரிஷி’ என்பது 7. ‘வார’மும் ஏழு நாட்களைக் குறிப்பதால் 7. ‘பூர்ணம்’ என்பது முழு வட்டமாக உள்ள ‘ஸைபர்’. ‘மர்த்யாக்ஷௌ’ என்றால் மநுஷர்களுக்கு உள்ள கண்களின் எண்ணிக்கையான 2. (தேவர்களுக்கு முக்கண், பன்னிரண்டு கண், ஆயிரம் கண் என்பது வரைகூடப் போவதால் ‘மநுஷக்கண்: மர்த்ய-அக்ஷம்’ என்று 2-ஐச் சொல்வது.) நான் சொன்ன நம்பர்களைச் சேர்த்துப் பார்த்தால் 7702. ‘வாமமேளனம்’ என்பது ‘திருப்பிப் போடுவது’. அப்படிப் போட்டால் 2077. ஜைனர்கள் ஒரு யுதிஷ்டிர சகத்தைப் பின்பற்றுவதாகவும், அது கலி 468-ல் ஆரம்பிப்பதாகவும் சொன்னேனல்லவா? இது ஜைனப் புஸ்தகம்தானே? அதனால் அந்த சகாப்தத்தின் 2077-ம் வருஷம்தான் குமாரிலபட்டர் ஜனனமாக இங்கே சொல்லியிருப்பது, அதாவது கலியின் 2545. இது கி.மு 557 ஆகிறது. ஆசார்யாள் கி.மு. 509 என்கிறோம். அப்படியானால் குமாரிலபட்டர் அவரைவிட 48 வயஸு பெரியவர் என்றாகிறது. ஆசார்யாள் யௌவனத்தில் குமாரிலரை ஸந்தித்தபோது அவர் வ்ருத்தராக இருந்தாரென்பதற்கு இது பொருத்தமாக இருக்கிறது. ஆசார்யாள் தம்முடைய பதினைந்தாம் வயஸில் அவரை ஸந்தித்தார் என்றுங்கூட அந்தப் புஸ்தகத்திலேயே இருக்கிறது! பதினாறு முடிந்தவுடன் ஸந்தித்ததை ஒரு வருஷம்தான் குறைத்துச் சொல்லியிருக்கிறது.

பச்சாத் பஞ்சதசே வர்ஷே சங்கரஸ்யாகதே ஸதி |
பட்டாசார்ய-குமாரஸ்ய தர்சநம் க்ருதவான் சிவ : ||

ஆசார்யாளைத் திட்டும் புஸ்தகத்திலும் “சிவ:” என்று அவருடைய அவதாரத்வத்தைச் சொல்லியிருப்பது விசேஷம்!

ஆசார்யாளின் ஸித்தி தினத்தையும் அதில் சொல்லியிருக்கிறது:

ரிஷிர்-பாணஸ்-ததா-பூமிர்-மர்த்யாக்ஷௌ வாம-மேளநாத் |
ஏகத்வேந லபேதாங்கஸ்-தாம்ராக்ஷஸ்-தத்ர வத்ஸர : ||

ரிஷி-7; பாணம்- (பஞ்சபாணம் என்பதால்) 5; பூமி- (ஒரு பூமி தானே உண்டு? அதனால்) 1 ; மர்த்யாக்ஷம் (மநுஷக்கண்) 2. அதாவது 7512. மாற்றிப் போட்டால் 2517. ஜைன யுதிஷ்டிர சகம் 2157. அதாவது கல்யப்தம் 2625. இதுதான் நாமும் சொல்லும் ஸித்தி காலம்! கி.மு. கணக்கில் 477.

ப்ரபவாதி வருஷங்களில் அதைத் “தாம்ராக்ஷம்” என்று குறிப்பிட்டிருக்கிறது. தாமிரம் ரக்த வர்ணமானது. அதனால் இது ரக்தாக்ஷி வருஷமென்றாகிறது. நாமும் அப்படித் தான் சொல்கிறோம்! ‘நந்தன’வில் பிறந்தவர் 32 வயஸில் விதேஹ முக்தி என்றால் அது ‘ரக்தாக்ஷி’யாய்த்தான் இருக்க வேண்டும்.

இப்படி, எல்லாம் ஒன்றுக்கொன்று ஸரியாகப் பொருந்தியிருக்கிறது.

ஆக, ஆசார்யாள் கி.மு. 509-ல் அவதரித்து 477-ல் ப்ரஹ்மீபாவம் அடைந்தாரென்று அவருடைய மடங்களில் சொல்வதற்கு ஹிந்து-ஜைன-பௌத்த புஸ்தகங்கள் பலவற்றின் ப்ரமாணம் இருக்கிறது. கர்ண பரம்பரையாகவும் தலைமுறை தலைமுறையாக இப்படி நம்பிக்கை தொடர்ந்து வந்திருக்கிறது. கி.பி. 788-820 என்றோ, வேறே விதமாகவோ சொல்கிற எந்தக் காலக் கணக்குக்கும் இத்தனை ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை1.


1 பம்பாயிலுள்ள வேதவ்யாச இதிஹாச ஸம்சோதன மந்திரத்தினர் ஓர் அறிஞர் குழுவினைக் கொண்டு “Study of Indian History and Culture” என்பதாக இந்திய சரித்திரத்தையும் கலாச்சாரத்தையும் ஆராய்ந்து பதினெட்டுப் பகுதிகள் கொண்ட நூல் வெளியிட்டு வருகின்றனர். அவர்களது கால நிர்ணயப்படி புத்தரின் காலம் கி.மு. 1885–1805. சந்த்ரகுப்த மௌர்யனின் ஆட்சி தொடங்கியது கி.மு. 1534. ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதரின் காலம் இங்கே கூறப்பட்டுள்ள கி.மு. 509-477 தான்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 25. ஹாலன்-பூர்ணவர்மன்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  அதிமேதைக் குழந்தை
Next