சலங்கொண்ட

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

மூன்றாம் பத்து

சலங்கொண்ட

திருவைகுந்த விண்ணகரம்

எம்பெருமான் ஸ்ரீவைகுண்டத்தில் எழுந்தருளியிருப்பது போல் இவ்விடத்தில் வீற்றிருந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கிறான். அதனால் இத்திருப்பதிக்கு வைகுந்த விண்ணகரம் என்று பெயர் ஏற்பட்டது. திருநாங்கூர்த் திவ்விய தேசங்களுள் இதுவும் ஒன்று.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மனமே! வைகுந்த விண்ணகரத்தை வணங்கு

1228. சலங்கொண்ட இரணியன

தகல்மார்வம் கீண்டு

தடங்கடலைக் கடைந்தமுதங்

கொண்டுகந்த காளை,

நலங்கொண்ட கருமுகில்போல்

திருமேனி யம்மான்

நாடோறும் மகிழ்ந்தினிது

மருவியுறை கோயில்,

சலங்கொண்டு மலர்சொரியும்

மல்லிகையண் செருந்தி

சண்பகங்கள் மணநாறும்

வண்பொழிலி னூடே,

வலங்கொண்டு கயலோடி

விளையாடு நாங்கூர்

வைகுந்த விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே! 1

நரசிங்கன் உறையும் இடம் வைகுந்த விண்ணகரம்

1229. திண்ணியதோ ரரியுருவாய்த்

திசையனைத்தும் நடுங்கத்

தேவரொடு தானவர்கள்

திசைப்ப,இர ணியனை

நண்ணியவன் மார்வகலத்

துகிர்மடுத்த நா தன்

நாடோறும் மகிழ்ந்தினிது

மருவியுறை கோயில்,

எண்ணில்மிகு பெருஞ்செல்வத்

தெழில்விளங்கு மறையும்

ஏழிசையும் கேள்விகளு

மியன்றபெருங் குணத்தோர்,

மண்ணில்மிகு மறையவர்கள்

மலிவெய்து நாங்கூர்

வைகுந்த விண்ணகரம்

வணங்குமட நெங்சே! 2

மூடமனமே! வைகுந்த விண்கரையே வணங்கு

1230. அண்டமுமிவ் வலைகடலு

மவனிகளு மெல்லாம்

அமுதுசெய்த திருவயிற்றன்

அரன்கொண்டு திரியும்,

முண்டமது நிறைத்தவன் கண்

சாபமது நீக்கும்

முதல்வனவன் மகிழ்ந்தினிது

மருவியுறை கோயில்,

எண்டிசையும் பெருஞ்செந்நெ

லிளந்தெங்கு கதலி

இலைக்கொடியண் குலைக்கமுகொ

டிகலிவளம் சொரிய

வண்டுபல விசைபாட

மயிலாலு நாங்கூர்

வைகுந்த விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே! 3

இராமன் தங்குமிடம் வைகுந்த விண்ணகரம்

1231. கலையிலங்கு மகலல்குல்

அரக்கர்குலக் கொடியைக்

காதொடுமூக் குடனரியக்

கதறியவ ளோடி,

தலையிலங்கை வைத்துமலை

யிலங்கைபுகச் செய்த

தடந்தோளன் மகிழ்ந்தினிது

மருவியுறை கோயில்,

சிலையிலங்கு மணிமாடத்

துச்சிமிசைச் சூலம்

செழுங்கொண்ட லகடிரியச்

சொரிந்தசெழு முத்தம்,

மலையிலங்கு மாளிகைமேல்

மலிவெய்து நாங்கூர்

வைகுந்த விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே! 4

இராவணனைக் கொன்றவன் கோயில் இதுதான்

1232. மின்னனைய நுண்மருங்குல்

மெல்லியற்கா யிலங்கை

வேந்தன்முடி யருபதும்தோ

ளிருபதும்போ யுதிர

தன்நிகரில் சிலைவளைத்தன்

றிலங்கைபொடி செய்த

தடந்தோளன் மகிழ்ந்தினிது

மருவியுறை கோயில்,

செந்நெலொடு செங்கமலம்

சேல்கயல்கள் வாளை

சேல்கழுநீ ரொடுமிடைந்து

கழனிதிகழ்ந் தெங்கும்,

மன்னுபுகழ் வேதியர்கள்

மலிசெய்து நாங்கூர்

வைகுந்த விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே! 5

கண்ணபிரான் உறையும் கோயில் இதுதான்

1233. பெண்மைமிகு வடிவுகொடு

வந்தவளைப் பெரிய

பேயினது உருவுகொடு

மாளவுயி ருண்டு

திண்மைமிகு மருதொடுநற்

சகடமிறுத் தருளும்

தேவனவன் மகிழ்ந்தினிது

மருவியுறை கோயில்,

உண்மைமிகு மறையடுநற்

கலைகள்நிறை பொறைகள்

உதவுகொடை யென்றிவற்றி

னொழிவில்லா, பெரிய

வண்மைமிகு மறையவர்கள்

மலிவெய்து நாங்கூர்

வைகுந்த விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே! 6

வெண்ணெயுண்ட கண்ணன் விரும்புமிடம் இது

1234. விளங்கனியை யிளங்கன்று

கொண்டுதிர வெறிந்து

வேல்நெடுங்க ணாய்ச்சியர்கள்

வைத்தயிர் வெண்ணெய்

உளங்குளிர அமுதுசெய்திவ்

வுலகுண்ட காளை

உகந்தினிது நாடோறும்

மருவியுறை கோயில்,

இளம்படிநற் கமுகுகுலைத்

தெங்குகொடிச் செந்நெல்

ஈன்கரும்பு கண்வளரக்

கால்தடவும் புனலால்,

வளங்கொண்ட பெருஞ்செல்வம்

வளருமணி நாங்கூர்

வைகுந்த விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே! 7

நரகாசுரனை அழித்தவன் மகிழ்ந்துறையும் இடம் இது

1235. ஆறாத சினத்தின்மிகு

நரகனுர மழித்த

அடலாழித் தடக்கையன்

அலர்மகட்கும் அரற்கும்,

கூறாகக் கொடுத்தருளும்

திருவுடம்பன்இமையோர்

குலமுதல்வன் மகிழ்ந்தினிது

மருவியுறை கோயில்,

மாறாத மலர்க்கமலம்

செங்கழுநீர் ததும்பி

மதுவெள்ள மொழுகவய

லுழவர்மடை யடைப்ப,

மாறாத பெருங்செல்வம்

வளருமணி நாங்கூர்

வைகுந்த விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே! 8

தேவர்கள் வணங்கும் வைகுந்த விண்ணகரை வணங்கு

1236. வங்கமலி தடங்கலுள்

வானவர்க ளோடு

மாமுனிவர் பலர்கூடி

மாமலர்கள் தூவி,

'எங்கள்தனி நாயகனே!

எமக்கருளாய்' என்னும்

ஈசனவன் மகிழ்ந்தினிது

மருவியுறை கோயில்,

செய்கயலும் வாளைகளும்

செந்நெலிடைக் குதிப்பச்

சேலுகளும் செழும்பணைசூழ்

வீதிதொறும் மிடைந்து,

மங்குல்மதி யகடுரிஞ்சு

மணிமாட நாங்கூர்

வைகுந்த விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே! 9

மண்ணும் விண்ணும் ஆள்வர்

1237. சங்குமலி தண்டுமுதல்

சக்கரமு னேந்தும்

தாமரைக்கண் நெடியபிரான்

றானமரும் கோயில்,

வங்கமலி கடலுலகில்

மலிவெய்து நாங்கூர்

வைகுந்த விண்ணகர்மேல்

வண்டறையும் பொழில்சூழ்,

மங்கையர்தம் தலைவன்மரு

வலர்தமுடல் துணிய

வாள்வீசும் பரகாலன்

கலிகன்றி சொன்ன,

சங்கமலி தமிழ்மாலை

பத்திவைவல் லார்கள்

தரணியடு விசும்பாளும்

தன்மைபெறு வாரே. 10

அடிவரவு: சலம் திண்ணியது அண்டமும் கலை மின் பெண்மை விளங்கனி ஆறாத வங்கம் சங்கு --- திருமடந்தை.


 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is நந்தா விளக்கு
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  திருமடந்தை
Next