கண்சோர

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஏழாம் பத்து

கண்சோர

திருச்சேறை

திருச்சேறையில் கோயில் கொண்டெழுந்தருளியிருப்பவர் சாரநாதப் பெருமாள். இது பஞ்சசார க்ஷேத்திரம். சாரநாதப் பெருமாளைத் தொழுது ஏத்துவார்களே மிகச் சிறந்தவர்கள் என்று இங்கே பாடுகிறார் ஆழ்வார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சாரநாதனைத் தொழுவாரே என் தலைவர்

1578. 'கண்சோர வெங்குருதி வந்திழிய

வெந்தழல்போல் கூந்த லாளை,

மண்சேர முலையுண்ட மாமதலாய்!

வானவர்தம் கோவே!'என்று,

விண்சேரும் இளந்திங்கள் அகடுரிஞ்சு

மணிமாட மல்கு, செல்வத்

தண்சேறை யெம்பெருமான் தாள்தொழுவார்

காண்மினென் தலைமே லாரே. 1

சாரநாதனைத் தொழுவாரே என் மனத்தில் உள்ளார்

1579. அம்புருவ வரிநெடுங்கண், அலர்மகளை

வரையகலத் தமர்ந்து, மல்லல்

கொம்புருவ விளங்கனிமே விளங்கன்று

கொண்டெறிந்த கூத்தர் போலாம்,

வம்பலரும் தண்சோலை வண்சேறை

வானுந்து கோயில் மேய,

எம்பெருமான் தாள்தொழுவா ரெப்பொழுதும்

என் மனத்தே யிருக்கின் றாரே. 2

சாரநாதன் அடியார்களே தேவர்களாவர்

1580. 'மீதோடி வாளெயிறு மின் னிலக

முன்விலகு முருவி னாளை,

காதோடு கொடிமூக்கன் றுடனறுத்த

கைத்தலத்தா!'என்று நின்று,

தாதோடு வண்டலம்பும் தண்சேறை

எம்பெருமான் தாளை யேத்தி,

போதோடு புனல்தூவும் புண்யியரே

விண்ணவரில் பொலிகின் றாரே. 3

சாரநாதன் பக்தர்களுடன்தான் இருப்பேன்

1581. 'தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை

வெஞ்சமத்துப் பொன்றி வீழ,

போராளும் சிலையதனால் பொருகணைகள்

போக்குவித்தாய்'என்று, நாளும்

தாராளும் வரைமார்பன் தண்சேறை

எம்பெருமா னும்ப ராளும்,

பேராளன் பேரோதும் பெரியோரை

ஒருகாலும் HKA லேனே. 4

சாரநாதன் அடியார்களே எனக்கு இனியவர்

1582. வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பின்

வல்லமணர் தமக்கு மல்லேன்,

முந்திச்சென் றரியுருவா யிரணியனை

முரணழித்த முதல்வர்க் கல்லால்,

சந்தப்பூ மலர்ச்சோலைத் தண்சேறை

எம்பெருமான் தாளை, நாளும்

சிந்திப்பார்க் கென்னுள்ளம் தேனூறி

எப்பொழுதும் தித்திக் கும்மே. 5

சாரநாதன் திருவடிகளே எனக்குத் துணை

1583. 'பண்டேன மாயுலகை யன் றிடந்த

பண்பாளா!'என்று நின்று,

தொண்டானேன் திருவடியே துணையல்லால்

துணையில்லேன் சொல்லு கின்றேன்,

வண்டேந்தும் மலர்ப்புறவில் வண்சேறை

எம்பெருமா னடியார் தம்மை,

கண்டேனுக் கிதுகாணீ ரென்நெஞ்சம்

கண்ணிணையும் களிக்கு மாறே. 6

சாரநாதன் அடியார்கட்கே என் அன்பு உரியது

1584. 'பைவிரியும் வரியரவில் படுகடலுள்

துயிலமர்ந்த பண்பா!'என்றும்,

'மைவிரியும் மணிவரைபோல் மாயவனே!'

என்றென்றும், வண்டார் நீலம்

செய்விரியும் தண்சேறை யெம்பெருமான்

திருவடியைச் சிந்தித் தேற்கு,என்

ஐயறிவும் கொண்டானுக் காளானார்க்

காளாமென் அன்பு தானே. 7

சாரநாதனின் அடியார்க்கடியார்க்குத் துன்பமே இல்லை

1585. உண்ணாது வெங்கூற்றம் ஓவாது

பாவங்கள் சேரா, மேலை

விண்ணோரும் மண்ணோரும் வந்திறைஞ்சும்

மென்தளிர்போ லடியி னானை,

பண்ணார வண்டியம்பும் பைம்பொழில்சூழ்

தண்சேறை யம்மான் றன்னை,

கண்ணாரக் கண்டுருகிக் கையாரத்

தொழுவாரைக் கருதுங் காலே. 8

சாரநாதன் பக்தர்கட்கே என் உள்ளம் உருகும்

1586. கள்ளத்தேன் பொய்யகத்தே னாதலால்

போதொருகால் கவலை யென்னும்,

வெள்ளத்தேற் கென்கொலோ விளைவயலுள்

கருநீலம், களைஞர் தாளால்

தள்ளத்தேன் மணநாறும் தண்சேறை

எம்பெருமான் தாளை,நாளும்

உள்ளத்தே வைப்பாருக் கிதுகாணீர்

என்னுள்ள முருகு மாறே. 9

யாவரும் சாரநாதப் பெருமானையே தொழுமின்

1587. பூமாண்சேர் சுருங்குழலார் போல்நடந்து

வயல்நின்ற பெடையோடு, அன்னம்

தேமாவின் இன்னிழலில் கண்டுயிலும்

தண்சேறை யம்மான் றன்னை,

வாமான்தேர்ப் பரகாலன் கலிகன்றி

ஒலிமாலை கொண்டு தொண்டீர்,

தூமண்சேர் பொன்னடிமேல் சூட்டுமின்நும்

துணைக்கையால் தொழுது நின்றே. 10

அடிவரவு:கண் அம்பு மீதோடி தேராளும் வந்தி பண்டு பைவிரி உண்ணாது கள்ளம் பூமாண் -- தந்தை.












 





 










 







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is சினவில்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  தந்தை காலில்
Next