தெள்ளியார் பலர்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

நாச்சியார் திருமொழி

தெள்ளியார் பலர்

மனக்கவலை கொண்டவர் தம் எண்ணம் நிறைவேறுமா என்று அறிவதற்குக் குறி பார்ப்பது வழக்கம். வட்டமாகக் கோடிட்டு அதனுள் பல சுழிகளைப் போடுவது. பிறகு அவற்றை எண்ணிப் பார்க்கும்போது இரட்டையாக இருந்தால் எண்ணம் நிறைவேறும்.

ஒற்றையாக இருந்தால் நிறைவேறாது. இவ்வாறு பார்ப்பதும் ஒரு குறி. ஓர் ஆயர்மகள் இவ்வாறு கோடிட்டு, 'கோவலன்வரில் கூடிடு கூடலே'என்று பகவானை அடைய வேண்டும் என்ற பேராவலோடு குறி பார்க்கிறாள். ஆண்டாளுக்கு இப்படியும் ஒரு அனுபவம்.

கூடலிழைத்தல்

கலி விருத்தம்

அழகர் வருவார் என்றால் கூடலே கூடு

534. தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்,

வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்,

பள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட,

கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே! 1

வாமனன் வந்து கூட்டுவார் என்றால் கூடலே கூடு

535. காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்,

வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமணன்,

ஒட்ட ராவந்தென் கைப்பற்றி, தன்னொடும்

கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே! 2

வசுதேவர் கோமகன்வரில் கூடலே கூடு

536. பூம கன்புகழ் வானவர் போற்றுதற்

காம கன்,அணி வாணுதல் தேவகி

மாம கன்,மிகு சீர்வசு தேவர்தம்,

கோம கன்வரில் கூடிடு கூடலே! 3

காளிங்க நர்த்தனம் செய்தவன் வருவான?

537. ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட,

பூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து,

வாய்த்த காளியன் மேல்நட மாடிய,

கூத்த னார்வரில் கூடிடு கூடலே! 4

மதயானை உதைத்தவன் என்னைக் கூடுவானா?

538. மாட மாளிகை சூழ்மது ரைப்பதி

நாடி, நந்தெரு வின்நட வேவந்திட்டு,

ஓடை மாமத யானை யுதைத்தவன்,

கூடு மாகில்நீ கூடிடு கூடலே! 5

மதுரை வேந்தன் வருவானா?

539. அற்ற வன்மரு தம்முறி யநடை

கற்ற வன்,கஞ் சனைவஞ் சனையினால்

செற்ற வன்,திக ழும்மது ரைப்பதி,

கொற்ற வன்வரில் கூடிடு கூடலே! 6

அசுரர்களைக் கொன்றவன்வரின் கூடலே கூடு

540. அன்றின் னாதன செய்சிசு பாலனும்,

நின்ற நீள்மரு தும்மெரு தும்புள்ளும்,

வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழ,முன்

கொன்ற வன்வரில் கூடிடு கூடலே! 7

துவராபதிக் காவலன் வருவானா?

541. ஆவ லன்புடை யார்தம் மனத்தன்றி

மேவ லன்,விரை சூழ்துவ ராபதிக்

காவ லன்,கன்று மேய்த்து விளையாடும்,

கோவ லன்வரில் கூடிடு கூடலே! 8

வாமனன் வரின் கூடலே கூடு

542. கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று,

பண்டு மாவலி தன்பெரு வேள்வியில்,

அண்ட மும்நில னும்அடி யன்றினால்,

கொண்ட வன்வரில் கூடிடு கூடலே! 9

அழகன் வருவான் எனில் கூடலே கூடு

543. பழகு நான்மறை யின்பொரு ளாய்,மதம்

ஒழுகு வாரண முய்ய வளித்த,எம்

அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்,

குழக னார்வரில் கூடிடு கூடலே! 10

பாவம் வராது

544. ஊடல் கூட லுணர்தல் புணர்தல் புணர்தலை,

நீடு நின்ற நிறைபுக ழாய்ச்சியர்,

கூட லைக்குழற் கோதைமுன் கூறிய,

பாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே. 11

அடிவரவு:தெள்ளியார் காட்டில் பூமகன் ஆய்ச்சி மாட அற்ற அன்று ஆவல் கொண்ட பழகு ஊடல் -- மன்னு.









 


 


 



Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is கோழியழைப்பதன்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  மன்னு பெரும்புகழ்
Next