இருளிரியச் சுடர்மணிகள்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீ:
குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த

பெருமாள் திருமொழி

இருளிரியச் சுடர்மணிகள்

பகவானை ஸேவிப்பதும் அவனோடு இருந்து அவனுக்குக் கைங்கர்யம் செய்வதும் மிகச் சிறந்த செயல்களாகும். அவ்வாறே அடியார்களைக் காண்பதும் அவர்களோடு வாழ்வதும் சிறந்த செயல்களாகும். 'காவிரியின் இடையில் திருவரங்கத்தில் திருவனந்தாழ்வான்மீது பள்ளி கொண்டிருக்கும் அழகிய மணவாளனை என்று ஸேவித்து மகிழ்வேனோ? அவனைக் கண்டு கண்கள் களிக்கும் நாள் எந்நாளோ? என் வாய் அவனை என்று வாழ்த்துமோ? என் தலை எப்போது அவனை வணங்குமோ? என் கைகள் மலரிட்டுத் தொழுதிடும் நாள் எந்நாளோ? அவனுடைய அடியார்களோடு கூடி மகிழ்வு எய்தும் நாள் எந்நாளோ?'என்று கூறி அந்நாள் கிட்டவேண்டும் என்கிறார் குலசேகராழ்வார்.

அழகிய மணவாளன் விஷயம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கண்கள் திருவரங்கனைக் கண்டு என்று களிக்குமோ!

647. இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி

இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த,

அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும்

அணிவிளக்கு முயர்வெள்ளை யணையை மேவி,

திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி

திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்,

கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என்

கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே! 1

பள்ளிகொண்டானை வாயார என்று வாழ்த்துவேனோ!

648. வாயோரீ ரைஞ்ஞூறு துதங்க ளார்ந்த

வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ,

வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல்

மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்,

காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக்

கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்

மாயோனை, மணத்தூணே பற்றி நின்றென்

வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே! 2

அரங்கனடியார்களோடு நெருங்கி வார்வேனோ!

649. எம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும்

எடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு,

எம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடும்

தொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற, செம்பொன்

அம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற

அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்,

அம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங்

கடியவரோ டென்றுகொலோ அணுகும் நாளே! 3

அரங்கனை அருச்சிக்கும் நாள் எந்நாளோ!

650. மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை

வண்ணனைஎன் கண்ணனை,வன் குன்ற மேந்தி

ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை

அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப்

பாவினை,அவ் வடமொழியைப் பற்றற் றார்கள்

பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்

கோவினை,நா வுறவழுத்தி என்றன் கைகள்

கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே! 4

மணிவண்ணனை வணங்கும் நாள் எந்நாளோ!

651. இணையில்லா வின்னிசையாழ் கெழுமி யின்பத்

தும்புருவும் நாரதனு மிறைஞ்சி யேத்த,

துணையில்லாத் தொன்மறைநூல் தோத்தி ரத்தால்

தொன்மலர்க்க ணயன்வணங்கி யோவாதேத்த,

மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ

மதிளரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்,

மணிவண்ண னம்மானைக் கண்டு கொண்டேன்

மலர்ச்சென்னி யென்றுகொலோ வணங்கும் நாளே! 5

என் மனம் உருகும் நாள் எந்நாளோ!

652. அளிமலர்மே லயனரனிந் திரனோடு ஏனை

அமரர்கள்தம் குழுவுமரம் பையரும் மற்றும்,

தெளிமதிசேர் முனிவர்கள்தம் குழுவு முந்தித்

திசைதிசையில் மலர்தூவிச் சென்று சேரும்,

களிமலர்சேர் பொழிலரங்கத் துரக மேறிக்

கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும்,

ஒளிமதிசேர் திருமுகமும் கண்டு கொண்டென்

உள்ளமிக என்றுகொலோ வுருகும் நாளே! 6

அரங்கனைக் கண்டு அகம்நெகிழ்தல் எந்நாளோ!

653. மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி

ஐம்புலன்க ளடக்கியிடர்ப் பாரத் துன்பம்

துறந்து,இருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத்

தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்டரான,

அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப் பொன்னி

அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்

நிறம்திகழும் மாயோனைக் கண்டென் கண்கள்

நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே! 7

அரவணையானைக் கண்டு இன்பக்கலவி எய்துவேனோ!

654. கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்

கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள்,

காலார்ந்த கதிக்கருட, னென்னும் வென்றிக்

கடும்பறவை யிவையனைத்தும் புறஞ்சூழ்காப்ப,

சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த

திருவரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்

மாலோனைக் கண்டின்பக் கலவி யெய்தி

வல்லினையே னென்றுகொலோ வாழும் நாளே! 8

திருவரங்கத்தில் துள்ளிப் புரளவேண்டும்

655. தூராத மனக்காதல் தொண்டர் தங்கள்

குழாம்குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி,

ஆராத மனக்களிப்போ டழுத கண்ணீர்

மழைசோர நினைந்துருகி யேத்தி,நாளும்

சீரார்ந்த முழவோசை பரவை காட்டும்

திருவரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்,

போராழி யம்மானைக் கண்டு துள்ளிப்

பூதலத்தி லென்றுகொலோ புரளும் நாளே! 9

அரங்கன் அடியார்களுடன் அமரும் நாள் என்று?

656. வன்பெருவா னகமுய்ய அமர ருய்ய

மண்ணுய்ய மண்ணுலகில் மனிச ருய்ய,

துன்பமிகு துயரகல அயர்வொன் றில்லாச்

சுகம்வளர அகமகிழுந் தொண்டர் வாழ,

அன்பொடுதென் திசைநோக்கிப் பள்ளி கொள்ளும்

அணியரங்கன் திருமுற்றத்து, அடியார் தங்கள்

இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும்

இசைந்துடனே யென்றுகொலோ விருக்கு நாளே! 10

நாரணன் அடிக்கீழ் நலமுற நண்ணுவர்

657. திடர்விளங்கு கரைப்பொன்னி நடுவு பாட்டுத்

திருவரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்,

கடல்விளங்கு கருமேனி யம்மான் றன்னைக்

கண்ணாரக் கண்டுகக்கும் காதல் தன்னால்,

குடைவிளங்கு விறல்தானைக் கொற்ற வொள்வாள்

கூடலோர்கோன் கொடைக்குலசே கரன்சொற் செய்த

நடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார்

நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே. 11

அடிவரவு: இருள் வாய் எம்மாண்பின் மாவினை இணை அளி மறம் கோல் தூராத வன்பெரு திடர் -- தேட்டரு.


 





 













 


 


 



Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is பட்டி மேய்ந்து
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  தேட்டருந்திறல்
Next