திருச்சந்த விருத்தம்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெருமாள் திருமொழி

ஸ்ரீ:
திருமழிசைப்பிரான் அருளிச்செய்த

திருச்சந்த விருத்தம்

தமிழ் மொழியிலுள்ள பாவினங்களுள் ஒன்றான விருத்தத்தினால் ஆகியது இப்பிரபந்தம். இனிய ஓசையையுடையது;அதனால் சந்த விருத்தம் எனப்பட்டது.

எம்பெருமானின் பெருமைகளை அநுபவித்து மகிழ்கிறவர் இவ்வாழ்வார். 'இவ்வுலகிலுள்ள மக்கள் பகவானை நினைக்காமல் இப்படித் துன்புறுகிறார்களே!துன்பம் நீக்கும் வழியாது?'என்று சிந்தித்தார். ராஜஸ தாமஸ நூல்களால் மனங்கலங்கி தேவதாந்தரங்களை நாடுவதுதான் துன்படையக் காரணம் என்று தெளிந்தார். ஸ்ரீமந்நாராயணனே பரதேவதை;தத்தவப் பொருள்'என்பதைவிளக்குவதற்காகவே இப்பிரபந்தத்தை அருளியுள்ளார். 'பர, வ்யூஹ, விபவ, அர்ச்சாவதாரங்களில் எம்பெருமான் காட்டிய பெருமைகளை வாசித்தும் கேட்டும், அவனையே வணங்கி வழிபட்டும் பொழுதுபோக்கும் பாக்கியத்தை எம்பெருமான் எனக்குக் கொடுத்திருக்கிறானே!என்னே கருணை!'என்று பகவானிடமிருந்து தாம் அடைந்த நற்பயன்களை இப்பிரபந்தத்தில் கூறி மகிழ்கிறார்.

தத்துவநிலை பரந்தாமனே எனல்

சந்தக் கலி விருத்தம்

நின்னை யார் நினைக்க வல்லர்?

752. பூநிலாய வைந்துமாய்ப்

புனற்கண்நின்ற நான்குமாய்,

தீநிலாய மூன்றுமாய்ச்

சிறந்தகா லிரண்டுமாய்,

மீநிலாய தொன்றுமாகி

வேறுவேறு தன்மையாய்,

நீநிலாய வண்ணநின்னை

யார்நினைக்க வலலரே? 1

ஆய மாயனே!நின்னை எப்படி நினைப்பது?

753. ஆறுமாறு மாறுமாய

ரைந்துமைந்து மைந்துமாய்,

ஏறுசீரி ரண்டுமூன்று

மேழுமாறு ஞானமாகி

வேறுவேறு ஞானமாகி

மெய்யினோடு பொய்யுமாய்,

ஊறொடோசை யாயவைந்து

மாயஆய மாயனே! 2

நின்னை யாவர் காண வல்லார்?

754. ஐந்துமைந்து மைந்துமாகி

யல்லவற்று ளாயுமாய்,

ஐந்துமூன்று மொன்றுமாகி

நின்றவாதி தேவனே,

ஐந்துமைந்து மைந்துமாகி

யந்தரத்த ணைந்துநின்று,

ஐந்துமைந்து மாயநின்னை

யாவதர்காண வல்லரே? 3

என் ஆவியுள் புகுந்தது ஏனோ?

755. மூன்றுமுப்ப தாறினோடொ

ரைந்துமைந்து மைந்துமாய்,

மூன்றுமூர்த்தி யாகிமூன்று

மூன்றுமூன்று மூன்றுமாய,

தோன்றுசோதி மூன்றுமாய்த்

துளக்கமில் விளக்கமாய்,

என்றெனாவி யுள்புகுந்த

தென்கொலோவெம் மீசனே! 4

பிரமனைப் பெற்றவன் c தானே!

756. நின்றியங்கு மொன்றலாவு

ருக்கடோறும் ஆவியாய்,

ஒன்றியுள்க லந்துநின்ற

நின்னதன்மை யின்னதென்று,

என்றும்யார்க்கு மெண்ணிறந்த

ஆதியாய்நின் னுந்திவாய்,

அன்றுநான்மு கற்பயந்த

வாதிதேவ னல்லையே? 5

ஐம்பூதங்களையும் காப்பவன் c தானே!

757. நாகமேந்து மேருவெற்பை

நாகமேந்து மண்ணினை,

நாகமேந்து மாகமாக

மாகமேந்து வார்புனல்,

மாகமேந்து மங்குல்தீயர்

வாயுவைந் தமைந்துகாத்து,

ஏகமேந்தி நின்றநீர்மை

நின்கணேயி யன்றதே. 6

முக்கண்ணனும் உன்னை உள்ளவாறு துதிக்க முடியாது

758. ஒன்றிரண்டு மூர்த்தியா

யுறக்கமோடு ணர்ச்சியாய்,

ஒன்றிரண்டு காலமாகி

வேலைஞால மாயினாய்,

ஒன்றிரண்டு தீயுமாகி

யாயனாய மாயனே,

ஒன்றிரண்டு கண்ணினானு

முன்னையேத்த வல்லனே? 7

ஆதிமூலம் c தான்

759. ஆதியான வானவர்க்கு

மண்டமாய வப்புறத்து,

ஆதியான வானவர்க்கு

மாதியான வாதிநீ,

ஆதியான வானவாண

ரந்தகாலம் நீயுரைத்தி,

ஆதியான காநின்னை

யாவர்காண வல்லரே? 8

யாவரும் வணங்கும் தன்மை உன்னிடம் உள்ளது

760. தாதுலாவு கொன்றைமாலை

துன்னுசெஞ்ச டைச்சிவன்,

நீதியால்வ ணங்குபாத

நின்மலா!நீ லாயசீர்,

வேதவாணர் கீதவேள்வி

நீதியான வேள்வியார்,

நீதியால் வணங்குகின்ற

நீர்மைநின்கண் நின்றதே. 9

இவ்வுலகம் உன்னிடமே அடங்குகிறது

761. தன்னுளேதி ரைத்தெழுதும்

தரங்கவெண்த டங்கடல்

தன்னுளேதி ரைத்தெழுந்

தடங்குகின்ற தன்மைபோல்,

நின்னுளேபி றந்திறந்து

நிற்பவும் திரிபவும்,

நின்னுளேய டங்குகின்ற

நீர்மைநின் கண் நின்றதே. 10

யாராலும் உன் குணங்களைச் சொல்ல முடியாது

762. சொல்லினால்தொ டர்ச்சிநீ

சொலப்படும்பொ ருளும்நீ,

சொல்லினால்சொ லப்படாது

தோன்றுகின்ற சோதிநீ,

சொல்லினால்ப டைக்கநீப

டைக்கவந்து தோன்றினார்,

சொல்லினால்சு ருங்கநின்கு

ணங்கள் சொல்ல வல்லரே? 11

நின் இருப்பிடத்தை நிணைக்கவல்லார் யார்?

763. உலகுதன்னை நீபடைத்தி

யுள்ளடுக்கி வைத்தி,மீண்-

டுலகுதன்னு ளேபிறத்தி

யோரிடத்தை யல்லையால்,

உலகுநின்னொ டொன்றிநிற்க

வேறுநிற்றி யாதலால்,

உலகில்நின்னை யுள்ளசூழல்

யாவருள்ள வல்லரே? 12.

உன் அருளினாலேயே உன்னை நினைக்கவேண்டும்

764. இன்னையென்று சொல்லலாவ

தில்லையாதும் இட்டிடைப்

பின்னைகேள்வ னென்பருன்பி

ணக்குணர்ந்த பெற்றியோர்

பின்னையாய கோலமோடு

பேருமூரு மாதியும்,

நின்னையார் நினைக்கவல்லர்

நீர்மையால்நி னைக்கிலே! 13

சாமவேத கீதன் c அல்லனோ!

765. தூய்மையோக மாயினாய்து

ழாயலங்கல் மாலையாய்,

ஆமையாகி யாழ்கடல்து

யின்றவாதி தேவ,நின்

நாமதேய மின்னதென்ன

வல்லமல்ல மாகிலும்,

சாமவேத கீதனாய

சக்ரபாணி யல்லையே? 14

சாரங்க பாணி நீதான்

766. அங்கமாறும் வேதநான்கு

மாகிநின்ற வற்றுளே,

தங்குகின்ற தன்மையாய்த

டங்கடல்ப ணத்தலை,

செங்கண்நாக ணைக்கிடந்த

செல்வமல்கு சீரினாய்,

சங்கவண்ண மன்னமேனி

சார்ங்கபாணி யல்லையே? 15

நின் பெருமை மலைகளினும் உயர்ந்தது

767. தலைக்கணத்து கள்குழம்பு

சாதிசோதி தோற்றமாய்,

நிலைக்கணங்கள் காணவந்து

நிற்றியேலும் நீடிருங்,

கலைக்கணங்கள் சொற்பொருள்க

ருத்தினால்நி னைக்கொணா,

மலைக்கணங்கள் போலுணர்த்தும்

மாட்சிந்ன்றன் மாட்சியே. 16

c எப்படிப் பல மூர்த்திகள் ஆனாய்?

768. ஏகமூர்த்தி மூன்றுமூர்த்தி

நாலுமூர்த்தி நன்மைசேர்,

போகமூர்த்தி புண்ணியத்தின்

மூர்த்தியெண்ணில் மூர்த்தியாய்

நாகமூர்த்தி சயனமாய்ந

லங்கடல்கி டந்து,மேல்

ஆகமூர்த்தி யாயவண்ண

மென்கொலாதி தேவனே! 17

பாம்பணைமேல் பள்ளிகொண்ட தன்மை என்னே!

769. விடத்தவாய ராயிரமி

ராயிரம்கண் வெந்தழல்,

விடத்துவீழ்வி லாதபோகம்

மிக்கசோதி தொக்கசீர்,

தொடுத்துமேல்வி தானமாய

பௌவநீர ராவணை

படுத்தபாயல் பள்ளிகொள்வ

தென்கொல்வேலை வண்ணனே! 18

பாம்பணையை c எப்படி விரும்பினாய்?

770. புள்ளதாகி வேதநான்கு

மோதினாய்அ தன்றியும்,

புள்ளின்வாய்பி ளந்துபுட்கொ

டிப்பிடித்த பின்னரும்,

புள்ளையூர்தி யாதலால

தென்கொல்மின்கொள் நேமியாய்,

புள்ளின்மெய்ப்ப கைக்கடல்கி

டத்தல்காத லித்ததே. 19

பாம்பணையில் படுத்த காரணம் சொல்

771. கூசமொன்று மின்றிமாசு

ணம்படுத்து வேலைநீர்,

பேசநின்ற தேவர்வந்து

பாடமுன்கி டந்ததும்,

பாசம்நின்ற நீரில்வாழு

மாமையான கேசவா,

ஏசவன்று நீகிடந்த

வாறுகூறு தேறவே. 20

c கடல் கடைந்தபோது அசுரர்கள் என் செய்தனர்?

772. அரங்கனே!த ரங்கநீர்க

லங்கவன்று குன்றுசூழ்,

மரங்கடேய மாநிலம்கு

லுங்கமாசு ணம்சுலாய்,

நெருங்கநீ கடைந்தபோது

நின்றசூர ரென்செய்தார்,

குரங்கையா ளுகந்தவெந்தை!

கூறுதேற வேறிதே. 21

ஆலிலைமேல் துயின்றாயே!

773. பண்டுமின்று மேலுமாயர்

பாலனாகி ஞாலமேழ்,

உண்டுமண்டி யாலிலைத்து

யின்றவாதி தேவனே,

வண்டுகிண்டு தண்டுழாய

லங்கலாய்!க லந்தசீர்ப்,

புண்டரீக பாவைசேரு

மார்ப!பூமி நாதனே! 22

நான்மறையோர் நின்னை வணங்குகின்றனர்

774. வானிறத்தொர் சீயமாய்வ

ளைந்தவாளெ யிற்றவன்,

ஊன்நிறத்து கிர்த்தலம

ழுத்தினாய்!உ லாயசீர்,

நால்நிறத்த வேதநாவர்

நல்லயோகி னால்வணங்கு,

பால்நிறக்க டல்கிடந்த

பற்பநாப னல்லையே? 23

பஞ்ச ஆயுதங்களை ஏந்தினாயே!

775. கங்கைநீர்ப யந்தபாத

பங்கயத்தெம் மண்ணலே,

அங்கையாழி சங்குதண்டு

வில்லும்வாளு மேந்தினாய்,

சிங்கமாய தேவதேவ!

தேனுலாவு மென்மலர்,

மங்கைமன்னி வாழுமார்ப!

ஆழிமேனி மாயனே! 24

கண்ணனே!உன் கருத்து யாருக்குத் தெரியும்?

776. வரத்தினில்சி ரத்தைமிக்க

வாளெயிற்று மற்றவன்

உரத்தினில்க ரத்தைவைத்து

கிர்த்தலத்தை யூன்றினாய்,

இரத்திநீயி தென்னபொய்யி

ரந்தமண்வ யிற்றுளே

கரத்தி,உன்க ருத்தையாவர்

காணவல்லர் கண்ணனே! 25

உன் மாயம்தான் என்னே?

777. ஆணினோடு பெண்ணுமாகி

யல்லவோடு நல்லவாய்,

ஊணொடோசை யூறுமாகி

யன்றலாத மாயையாய்,

பூணிபேணு மாயனாகிப்

பொய்யினோடு மெய்யுமாய்,

காணிபேணும் மாணியாய்க்க

ரந்துசென்ற கள்வனே! 26

உன்னை யாரால் மதிக்க முடியும்?

778. விண் கடந்த சோதியாய்வி

ளங்குஞான மூர்த்தியாய்,

பண்கடந்த தேசமேவு

பாவநாச நாதனே,

எண்கடந்த யோகினோடி

ரந்துசென்று மாணியாய்,

மணக்டந்த வண்ணம்நின்னை

யார்மதிக்க வல்லரே? 27

எதிர்த்தோரை யெல்லாம் அழித்த மாயன்

779. படைத்தபாரி டந்தளந்த

துண்டுமிழ்ந்து பௌவநீர்,

படைத்தடைத்த திற்கிடந்து

முன்கடைந்த பெற்றியோய்,

மிடைத்தமாலி மாலிமான்வி

லங்குகால னூர்புக,

படைக்கலம் விடுத்தபல்ப

டைத்தடக்கை மாயனே! 28

உன் தன்மையை யாராலும் சொல்ல முடியாது

780. பரத்திலும்ப ரத்தையாதி

பௌவநீர ணைக்கிடந்து,

உரத்திலும்மொ ருத்தின்னை

வைத்துகந்த தன்றியும்,

நரத்திலும்பி றத்திநாத

ஞானமூர்த்தி யாயினாய்,

ஒருத்தரும்நி னாதுதன்மை

யின்னதென்ன வல்லரே? 29

யாவற்றையும் உண்டு துயின்றாயே!

781. வானகம்மும் மண்ணகம்மும்

வெற்புமேழ்க டல்களும்,

போனகம்செய் தாலிலைத்து

யின்றபுண்ட ரீகனே,

தேனகஞ்செய் தண்ணறும்ம

லர்த்துழாய்நன் மாலையாய்,

கூனகம்பு கத்தெறித்த

கொற்றவில்லி யல்லையே? 30

பக்தர்க்கு முக்தி அளிக்கும் மூர்த்தி

782. காலநேமி காலனே!

கணக்கிலாத கீர்த்தியாய்,

ஞாலமேழு முண்டுபண்டோர்

பாலனாய பண்பனே,

வேலைவேவ வில்வளைத்த

வெல்சினத்த வீர,நின்

பாலராய பத்தர்சித்தம்

முத்திசெய்யும் மூர்த்தியே! 31

மாவலியினிடம் இரக்கமே காட்டவில்லையே!

783. குரக்கினப்ப டைகொடுகு

ரைகடலின் மீதுபோய்,

அரக்கரங்க ரங்கவெஞ்ச

ரந்துரந்த வாதிநீ,

இரக்கமண்கொ டுத்தவற்கி

ரக்கமொன்று மின்றியே,

பரக்கவைத்த ளந்துகொண்ட

பற்பபாத னல்லையே? 32

விபீடணனுக்கு அரசளித்தாயே!

784. மின்னிறத்தெ யிற்றரக்கன்

வீழவெஞ்ச ரம்துரந்து,

பின்னவற்க ருள்புரிந்த

ரசளித்த பெற்றியோய்,

நன்னிறத்தொ ரின்சொலேழை

பின்னைகேள்வ!மன்னுசீர்,

பொன்னிறத்த வண்ணனாய

புண்டரீக னல்லையே? 33

ஆயனாய மாயம் என்ன மாயமோ!

785. ஆதியாதி யாதிநீய

ரண்டமாதி யாதலால்,

சோதியாத சோதிநீஅ

துண்மையில்வி ளங்கினாய்,

வேதமாகி வேள்வியாகி

விண்ணினோடு மண்ணுமாய்

ஆதியாகி யாயனாய

மாயமென்ன மாயமே? 34

ஆயச்சியின் பிள்ளை ஆயினானே!

786. அம்புலாவு மீனுமாகி

யாமையாகி ஆழியார்,

தம்பிரானு மாகிமிக்க

தன்புமிக்க தன் றியும்

கொம்பராவு நுண்மருங்கு

லாயர்மாதர் பிள்ளையாய்

எம்பிரானு மாயவண்ண

மென்கொலோவெம் மீசனே! 35

கோபியருடன் குலாவியவன்

787. ஆடகத்த பூண்முலைய

சோதையாய்ச்சி பிள்ளையாய்

சாடுதைத்தோர் புள்ளதாவி

கள்ளதாய பேய்மகள்

வீடவைத்த வெய்யகொங்கை

ஐயபால முதுசெய்து,

ஆடகக்கை மாதர்வா

யமுதமுண்ட தென்கொலோ? 36

பேய்ச்சி பாலையும் உண்டாயே!

788. காய்த்தநீள்வி ளங்கனியு

திர்த்தெதிர்ந்த பூங்குருந்தம்

சாய்த்து,மாபி ளந்தகைத்த

லத்தகண்ண னென்பரால்,

ஆய்ச்சிபாலை யுண்டுமண்ணை

யுண்டுவெண்ணெ யுண்டு,பின்

பேய்ச்சிபாலை யுண்டுபண்டொ

ரேனமாய வாமனா! 37

காளிங்கன்மீது நடம் பயின்ற நாதன்

789. கடங்கலந்த வன்கரிம

ருப்பொசித்துஒர் பொய்கைவாய்,

விடங்கலந்த பாம்பின்மேல்ந

டம்பயின்ற நாதனே

குடங்கலந்த கூத்தனாய

கொண்ட ல்வண்ண!தண்டுழாய்,

வடங்கலந்த மாலைமார்ப!

காலநேமி காலனே! 38

வெற்பு எடுத்த மேகவண்ணன்

790. வெற்பெடுத்து வேலைநீர்க

லக்கினாய்அ தன்றியும்,

வெற்பெடுத்து வேலைநீர்வ

ரம்புகட்டி வேலைசூழ்,

வெற்பெடுத்த இஞ்சிசூழி

லங்கைகட்ட ழித்தநீ,

வெற்பெடுத்து மாரிகாத்த

மேகவண்ண னல்லையே? 39

ஆனை காத்து ஓரானை கொன்ற மாயம்

791. ஆனைகாத்தொ ரானைகொன்ற

தன்றியாயர் பிள்ளையாய்,

ஆனைமேய்த்தி யானெயுண்டி

அன்றுகுன்ற மொன்றினால்,

ஆனைகாத்து மையரிக்கண்

மாதரார்தி றத்து,முன்

ஆனையன்று சென்றடர்த்த

மாயமென்ன மாயமே? 40

c செய்தன யாவும் மாயம்!

792. ஆயனாகி யாயர்மங்கை

வேயதோள்வி ரும்பினாய்,

ஆய!நின்னை யாவர்வல்ல

ரம்பரத்தொ டிம்பராய்,

மாய!மாய மாயைகொல்அ

தன்றிநீவ குத்தலும்,

மாயமாய மாக்கினாயுன்

மாயமுற்று மாயமே. 41

ஏறு கொன்ற ஈசன்

793. வேறிசைந்த செக்கர்மேனி

நீரணிந்த புன்சடை,

கீறுதிங்கள் வைத்தவன்கை

வைத்தவன்க பால்மிசை,

ஊறுசெங்கு ருதியால்நி

றைத்தகார ணந்தனை

ஏறுசென்ற டர்த்தவீச!

பேசுகூச மின்றியே. 42

நீயே ஆதிதேவன்

794. வெஞ்சினத்த வேழவெண்ம

ருப்பொசித்து உருத்தமா,

கஞ்சனைக்க டிந்துமண்ண

ளந்துகொண்ட காலனே,

வஞ்சனத்து வந்தபேய்ச்சி

யாவிபாலுள் வாங்கினாய்,

அஞ்சனத்த வண்ணனாய

ஆதிதேவ னல்லையே? 43

நின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியவில்லையே!

795. பாலினீர்மை செம்பொனீர்மை

பாசியின்ப சும்புறம்,

போலுநீர்மை பொற்புடைத்த

டத்துவண்டு விண்டுலாம்,

நீலநீர்மை யென் றிவைநி

றைந்தகாலம் நான்குமாய்,

மாலினீர்மை வையகம்ம

றைத்ததென்ன நீர்மையே? 44

புனிதனே!நீ எங்கிருக்கிறாய்?

796. மண்ணுளாய்கொல் விண்ணுளாய்கொல்

மண்ணுளேம யங்கிநின்று,

எண்ணுமெண்ண கப்படாய்கொல்

என்னமாயை, நின்தமர்

கண்ணுளாய்கொல் சேயைகொல்அ-

னந்தனன்மேல்கி டந்தவெம்

புண்ணியா,பு னந்துழாய

லங்கலம்பு னிதனே! 45

என் இறப்பொடு பிறப்பறுக்கும் வழி என்ன?

797. தோடுபெற்ற தண்டுழாய

லங்கலாடு சென்னியாய்,

கோடுபற்றி ஆழியேந்தி

அஞ்சிறைப்புள் ளூர்தியால்,

நாடுபெற்ற நன்மைநண்ண

மில்லையேனும் நாயினேன்,

வீடுபெற்றி றப்பொடும்பி

றப்பறுக்கு மாசொலே. 46

உன்னைக் கண்டு வணங்கும் விதத்தைச் சொல்

798. காரொடொத்த மேனிநங்கள்

கண்ண!விண்ணின் நாதனே,

நீரிடத்த ராவணைக்கி

டத்தியென்பர் அன்றியும்,

ஓரிடத்தை யல்லையெல்லை

யில்லையென்ப ராதலால்,

சேர்விடத்தை நாயினேன்

தெரிந்திறைஞ்சு மாசொலே. 47

எல்லோரையும் படைத்தளித்தவன்

799. குன்றில்நின்று வானிருந்து

நீள்கடல்கி டந்து,மண்

ஒன்றுசென்ற தொன்றையுண்ட

தொன்றிடந்து பன்றியாய்,

நன்றுசென்ற நாளவற்றுள்

நல்லுயிர்ப டைத்தவர்க்கு,

அன்றுதேவ மைத்தளித்த

ஆதிதேவ னல்லையே? 48

நாதனின் ஊர் அரங்கம்

800. கொண்டைகொண்ட கோதைமீது

தேனுலாவு கூனிகூன்,

உண்டைகொண்ட ரங்கவோட்டி

யுள்மகிழ்ந்த நாதனூர்,

தண்டையுண்டு நாரைபேர

வாளைபாய நீலமே,

அண்டைகொண்டு கெண்டைமேயு

மந்தணீர ரங்கமே. 49

வில் வீரரின் ஊர் அரங்கம்

801. வெண்டிரைக்க ருங்கடல்சி

வந்துவேவ முன்னொர்நாள்,

திண்டிறல்சி லைக்கைவாளி

விட்டவீரர் சேருமூர்,

எண்டிசைக்க ணங்களுமி

றைஞ்சியாடு தீர்த்தநீர்,

வண்டிரைத்த சோலைவேலி

மன்னுசீர ரங்கமே. 50

பிரமன் பணிந்த கோயில் அரங்கம்

802. சரங்களைத்து ரந்துவில்வ

ளைத்துஇலங்கை மன்னவன்,

சிரங்கள்பத்த றுத்துதிர்த்த

செல்வர்மன்னு பொன்னிடம்,

பரந்துபொன்நி ரந்துநுந்தி

வந்தலைக்கும் வார்புனல்,

அரங்கமென்பர் நான்முகத்

தயன்பணிந்த கோயிலே. 51

பற்றற்றவர்கள் சூழ்ந்து வாழும் ஊர் அரங்கம்

803. பொற்றையுற்ற முற்றல்யானை

போரெதிர்ந்து வந்ததை,

பற்றியுற்று மற்றதன்

மருப்பொசித்த பாகனூர்,

சிற்றெயிற்று முற்றல்மூங்கில்

மூன்றுதண்ட ரொன்றினர்,

அற்றபற்றர் சுற்றிவாழு

மந்தணீர ரங்கமே. 52

வாணனைக் கொன்றவன் ஊர் அரங்கம்

804. மோடியோடி லச்சையாய

சாபமெய்தி முக்கணான்,

கூடுசேனை மக்களோடு

கொண்டுமண்டி வெஞ்சமத்

தோட,வாண னாயிரம்

கரங்கழித்த வாதிமால்,

பீடுகோயில் கூடுநீர

ரங்கமென்ற பேரதே. 53

இலங்கையை அழித்தவன் தங்கும் ஊர் அரங்கம்

805. இலைத்தலைச்ச சந்துரந்தி

லங்கைகட்ட ழித்தவன்,

மலைத்தலைப்பி றந்திழிந்து

வந்துநுந்து சந்தனம்,

குலைத்தலைத்தி றுத்தெறிந்த

குங்குமக்கு ழம்பினோடு,

அலைத்தொழுகு காவிரிய

ரங்கமேய வண்ணலே. 54

உன் பாதங்களை என் மனத்தில் தங்கவைத்தாயே!

806. மன்னுமாம லர்க்கிழத்தி

வையமங்கை மைந்தனாய்,

பின்னுமாயர் பின்னைதோள்ம

ணம்புணர்ந்த தன்றியும்,

உன்னபாத மென்னசிந்தை

மன்னவைத்து நல்கினாய்,

பொன்னிசூ ழரங்கமேய

புண்டரீக னல்லையே? 55

திருக்குடந்தைக் கிடந்த திருமால்

807. இலங்கைமன்ன னைந்தொடைந்து

பைந்தலைநி லத்துக,

கலங்கவன்று சென்றுகொன்று

வென்றிகொண்ட வீரனே,

விலங்குநூலர் வேதநாவர்

நீதியான கேள்வியார்,

வலங்கொளக்கு டந்தையுள்கி

டந்தமாலு மல்லையே? 56

திருக்குடந்தை ஆராவமுது

808. சங்குதங்கு முன்கைநங்கை

கொங்கைதங்க லுற்றவன்,

அங்கமங்க வன்றுசென்ற

டர்த்தெறிந்த வாழியான்,

கொங்குதங்கு வார்குழல்ம

டந்தைமார்கு டைந்தநீர்,

பொங்குதண்கு டந்தையுள்கி

டந்தபுண்ட ரீகனே! 57

மத்தயானை கொம்பொடித்தவன்

809. மரங்கெடந டந்தடர்த்து

மத்தயானை மத்தகத்து,

உரங்கெடப்பு டைத்தொர்கொம்பொ

சித்துகந்த வுத்தமா,

துரங்கம்வாய்பி ளந்துமண்ண

ளந்தபாத, வேதியர்

வரங்கொளக்குடந்தையுள்கி

டந்தமாலு மல்லையே? 58

திருக்குடந்தையுள் வாழும் கோவலன்

810. சாலிவேலி தண்வயல்த

டங்கிடங்கு பூம்பொழில்,

கோலமாட நீடுதண்கு

டந்தைமேய கோவலா,

காலநேமி வக்கரன்க

ரன்முரன்சி ரம்மவை,

காலனோடு கூடவில்கு

னித்தவிற்கை வீரனே! 59

உயர் வேங்கடத்தில் நின்றவன்

811. செழுங்கொழும்பெ ரும்பனிபொ

ழிந்திட,உ யர்ந்தவேய்

விழுந்துலர்ந்தெ ழுந்துவிண்பு

டைக்கும்வேங்க டத்துள்நின்று

எழுந்திருந்து தேன்பொருந்து

பூம்பொழில்த ழைக்கொழுஞ்

செழுந்தடங்கு டந்தையுள்கி

டந்தமாலு மல்லையே? 60

கேசனே!எழுந்திருந்து பேசு

812. நடந்தகால்கள் நொந்தவோ

நடுங்குஞால மேனமாய்,

இடந்தமெய்கு லுங்கவோவி

லங்குமால்வ ரைச்சுரம்,

கடந்தகால்ப ரந்தகாவி

ரிக்கரைக்கு டந்தையுள்,

கிடந்தவாறெ ழுந்திருந்து

பேசுவாழி கேசனே! 61

நரசிங்கன் தானே c!

813. கரண்டமாடு பொய்கையுள்க

ரும்பனைப்பெ ரும்பழம்,

புரண்டுவீழ வாளைபாய்கு

றுங்குடிநெ டுந்தகாய்,

திரண்டதோளி ரணியன்சி

னங்கொளாக மொன்றையும்,

இரண்டுகூறு செய்துகந்த

சிங்கமென்ப துன்னையே. 62

திருவெஃகாவில் கிடந்தது ஏன்?

814. நன்றிருந்து யோகநீதி

நண்ணுவார்கள் சிந்தையுள்,

சென்றிருந்து தீவினைகள்

தீர்த்ததேவ தேவனே,

குன்றிருந்த மாடநீடு

பாடகத்து மூரகத்தும்,

நின்றிருந்து வெஃகணைக்கி

டந்ததென்ன நீர்மையே? 63

என் மனத்தில்தான் c வாழ்கிறாய்

815. நின்றதெந்தை யூரகத்தி

ருந்ததெந்தை பாடகத்து,

அன்றுவெஃக ணைக்கிடந்த

தென்னிலாத முன்னெலாம்,

அன்றுநான்பி றந்திலேன்பி

றந்தபின்ம றந்திலேன்,

நின்றதும் மிருந்ததும்கி

டந்ததும்மென் நெஞ்சுளே. 64

c தங்குமிடம் என் உள்ளம் தான்

816. நிற்பதும்மொர் வெற்பகத்தி

ருப்பும்விண்கி டப்பதும்,

நற்பெருந்தி ரைக்கடலுள்

நானிலாத முன்னெலாம்,

அற்புதன னந்தசயன

னாதிபூதன் மாதவன்,

நிற்பதும்மி ருப்பதும்கி

டப்பதும்என் நெஞ்சுளே. 65

எல்லோரும் உன்னைத்தான் நினைக்க வேண்டும்

817. இன்றுசாதல் நின்றுசாத

லன்றியாரும் வையகத்து,

ஒன்றிநின்று வாழ்தலின்மை

கண்டுநீச ரென்கொலோ,

அன்றுபார ளந்தபாத

போதையுன்னி வானின்மேல்,

சென்றுசென்று தேவராயி

ருக்கிலாத வண்ணமே? 66

உறுவினை நீங்கி வாழுங்கள்

818. சண்டமண்ட லத்தினூடு

சென்றுவீடு பெற்றுமேல்

கண்டுவீடி லாதகாத

லின்பம்நாளு மெய்துவீர்,

புண்டரீக பாதபுண்ய

கீர்த்திநுஞ்செ விமடுத்து,

உண்டு,நும்மு றுவினைத்து

யருள்நீங்கி யுய்ம்மினோ. 67

திருமாலை வாழ்த்தி வாழ்மின்

819. முத்திறத்து வாணியத்தி

ரண்டிலொன்று நீசர்கள்,

மத்தராய்ம யங்குகின்ற

திட்டதிலி றந்துபோந்து,

எத்திறத்து முய்வதோரு

பாயமில்லை யுங்குறில்,

தொத்துறுத்த தண்டுழாய்நன்

மாலைவாழ்த்தி வார்மினோ. 68

பகவானை நினைத்து பிறவித்துயர் அகற்றுங்கள்

820. காணிலும்மு ருப்பொலார்செ

விக்கினாத கீர்த்தியார்,

பேணிலும்வ ரந்தரமி

டுக்கிலாத தேவரை,

ஆணமென்ற டைந்துவாழும்

ஆதர்காள்!எம் மாதிபால்,

பேணிநும்பி றப்பெனும்பி

ணக்கறுக்க கிற்றிரே. 69

வாணன் தோள்களை மட்டும் துணித்தாயே!

821. குந்தமோடு சூலம்வேல்கள்

தோமரங்கள் தண்டுவாள்,

பந்தமான தேவர்கள்ப

ரந்துவான கம்முற,

வந்தவாண னீரைஞ்ஞூறு

தோள்களைத்து ணித்தநாள்,

அந்தவந்த வாகுலம்

மரரேய றிவரே. 70

வாணனுக்கு இரங்கினாயே!

822. வண்டுலாவு கோதைமாதர்

காரணத்தி னால்வெகுண்டு,

இண்டவாண னீரைஞ்ஞூறு

தோள்களைத்து ணித்தநாள்,

முண்டனீறன் மக்கள்வெப்பு

மோடியங்கி யோடிடக்,

கண்டு,நாணி வாணனுக்கி

ரங்கினானென் மாயனே. 71

வேதநூல் ஓதுகின்றது உண்மை

823. போதில்மங்கை பூதலக்கி

ழத்திதேவி யன்றியும்,

போதுதங்கு நான்முகன்ம

கனவன்ம கன்சொலில்,

மாதுதங்கு கூறன்ஏற

தூர்தியென்று வேதநூல்,

ஓதுகின்ற துண்மையல்ல

தில்லைமற்று ரைக்கிலே. 72.

வாலி வீழ அம்பு எய்தவன்

824. மரம்பொதச் சரந்துரந்து

வாலிவீழ முன்னொர்நாள்,

உரம்பொதச்ச ரந்துரந்த

வும்பராளி யெம்பிரான்,

வரம்குறிப்பில் வைத்தவர்க்க

லாதுவான மாளிலும்,

நிரம்புநீடு போகமெத்தி

றத்தும்யார்க்கு மில்லையே. 73

அரங்கனை வாழ்த்தினால் தீவினைகள் நீங்கும்

825. அறிந்தறிந்து வாமணன

டியிணைவ ணங்கினால்,

செறிந்தெழுந்த ஞானமோடு

செல்வமும்சி றந்திடும்,

மறிந்தெழுந்த தெண்டிரையுள்

மன்னுமாலை வாழ்த்தினால்,

பறிந்தெழுந்து தீவினைகள்

பற்றறுதல் பான்மையே. 74

செங்கண்மாலைக் காணவல்லர் யாவர்?

826. ஒன்றிநின்று நல்தவம்செய்

தூழியூழி தோறெலாம்,

நின்றுநின்ற வன்குணங்க

ளுள்ளியுள்ளம் தூயராய்,

சென்றுசென்று தேவதேவ

ரும்பரும்ப ரும்பராய்,

அன்றியெங்கள் செங்கண்மாலை

யாவர்காண வல்லரே? 75

அன்பினாலேயே ஆழியானைக் காணமுடியும்

827. புன்புலவ ழியடைத்த

ரக்கிலச்சி னைசெய்து,

நன்புலவ ழிதிறந்து

ஞானநற்சு டர்கொளீஇ,

என்பிலெள்கி நெஞ்சுருகி

யுள்கனிந்தெ ழுந்ததோர்,

அன்பிலன்றி யாழியானை

யாவர்காண வல்லரே? 76

எட்டெழுத்து ஓதுவோரே தேவராவர்

828. எட்டுமெட்டு மெட்டுமாய

ரேழுமேழு மேழுமாய்,

எட்டுமூன்று மொன்றுமாகி

நின்றவாதி தேவனை,

எட்டினாய பேதமோடி

றைஞ்சிநின்ற வன்பெயர்,

எட்டெழுத்து மோதுவார்கள்

வல்லர்வான மாளவே. 77

அரங்கனின் அடிகளை ஆர்வமோடு இறைஞ்சு

829. சோர்விலாத காதலால்தொ

டக்கறாம னத்தராய்,

நீரராவ ணைக்கிடந்த

நின்மலன்ந லங்கழல்,

ஆர்வமோடி றைஞ்சிநின்ற

வன்பெயரெட் டெழுத்தும்,

வாரமாக வோதுவார்கள்

வல்லர்வான மாளவே. 78

பக்தியுள்ளவர்களுக்கே மோட்சம் கிட்டும்

830. பக்தினோடு பத்துமாய

ரேழினோடொ ரொன்பதாய்,

பத்தினால்தி சைக்கணின்ற

நாடுபெற்ற நன்மையாய்,

பத்தினாய தோற்றமோடொ

ராற்றல்மிக்க வாதிபால்,

பத்தராம வர்க்கலாது

முத்திமுற்ற லாகுமே? 79

நித்ய சூரிபோகம் கிடைப்பது உறுதி

831. வாசியாகி நேசமின்றி

வந்தெதிர்ந்த தேனுகன்,

நாசமாகி நாளுலப்ப

நன்மைசேர்ப னங்கனிக்கு,

வீசிமேல்நி மிர்ந்ததோளி

லில்லையாக்கி னாய்,கழற்கு

ஆசையாம வர்க்கலால

மரராக லாகுமே? 80

திருவேங்கடவன் திருவடிகளை அடையுங்கள்

832. கடைந்தபாற்க டல்கிடந்து

காலநேமி யைக்கடிந்து,

உடைந்தவாலி தன்பினுக்கு

தவவந்தி ராமனாய்,

மிடைந்தவேழ்ம ரங்களும

டங்கவெய்து,வேங்கடம்

அடைந்தமால பாதமே

யடைந்துநாளு முய்ம்மினோ. 81

பற்றற்ற பக்தர்களுக்கு எங்கும் இன்பம்

833. எத்திறத்து மொத்துநின்று

யர்ந்துயர்ந்த பெற்றியோய்,

முத்திறத்து மூரிநீர

ராவணைத்து யின்ற,நின்

பத்துறுத்த சிந்தையோடு

நின்றுபாசம் விட்டவர்க்கு,

எத்திறத்து மின்பமிங்கு

மங்குமெங்கு மாகுமே. 82

பகவானிடம் அன்பு கொள்வதற்கு ஈடேயில்லை

834. மட்டுலாவு தண்டுழாய

லங்கலாய்!பொ லன்கழல்,

விட்டுவீள்வி லாதபோகம்

விண்ணில்நண்ணி யேறினும்,

எட்டினோடி ரண்டெனும்க

யிற்றினால்ம னந்தனைக்

கட்டி,வீடி லாதுவைத்த

காதலின்ப மாகுமே. 83

என்திறத்தில் எம்பிரான் குறிப்பு யாதோ?

835. பின்பிறக்க வைத்தனன்கொ

லன்றிநின்று தன்கழற்கு,

அன்புறைக்க வைத்தநாள

றிந்தனன்கொ லாழியான்,

தன்திறத்தொ ரன்பிலாவ

றிவிலாத நாயினேன்,

என்திறத்தி லென்கொலெம்பி

ரான்குறிப்பில் வைத்ததே? 84

என்னைப் பாசங்களில் ஈடுபடுத்தி மயக்காதே

836. நச்சராவ ணைக்கிடந்த

நாத!பாத போதினில்,

வைத்தசிந்தை வாங்குவித்து

நீங்குவிக்க நீயினம்,

மெய்த்தன்வல்லை யாதலால

றிந்தன்நின் மாயமே,

உய்த்துநின்ம யக்கில்ம

யக்கலென்னை மாயனே! 85

பாம்பின்மீது நடம்பயின்ற நாதன்

837. சாடுசாடு பாதனே!ச

லங்கலந்த பொய்கைவாய்,

ஆடராவின் வன்பிடர்ந

டம்பயின்ற நாதனே,

கோடுநீடு கைய!செய்ய

பாதநாளு முன்னினால்,

வீடனாக மெய்செயாத

வண்ணமென்கொல்? கண்ணனே! 86

நின் பற்றன்றி மற்றோர் பற்றில்லை

838. நெற்றிபெற்ற கண்ணன்விண்ணி

னாதனோடு போதின்மேல்,

நற்றவத்து நாதனோடு

மற்றுமுள்ள வானவர்,

கற்றபெற்றி யால்வணங்கு

பாத!நாத!வேத,நின்

பற்றலாலொர் பற்றுமற்ற

துற்றிலேனு ரைக்கிலே. 87

வானவர்க்கு மருந்தளித்த வள்ளல்

839. வெள்ளைவேலை வெற்புநாட்டி

வெள்ளெயிற்ற ராவளாய்,

அள்ளலாக்க டைந்தவன்ற

ருவரைக்கொ ராமையாய்,

உள்ளநோய்கள் தீர்மருந்து

வானவர்க்க ளித்த,எம்

வள்ளலாரை யன்றிமற்றோர்

தெய்வம்நான்ம திப்பனே? 88

பாண்டவர்க்கு உதவிய தெய்வம்

840. பார்மிகுத்த பாரமுன்னொ

ழிச்சுவான ருச்சுனன்,

தேர்மிகுத்து மாயமாக்கி

நின்றுகொன்று வென்றிசேர்,

மாரதர்க்கு வான்கொடுத்து

வையமையர் பாலதாம்,

சீர்மிகுத்த நின்னலாலொர்

தெய்வம்நான்ம திப்பனே? 89

நின் பாதமன்றி மற்றோர் பற்றிலேன்

841. குலங்களாய வீரிரண்டி

லொன்றிலும்பி றந்திலேன்,

நலங்களாய நற்கலைகள்

நாவிலும்ந வின்றிலேன்,

புலன்களைந்தும் வென்றிலேன்பொ

றியிலேன்பு னித,நின்

இலங்குபாத மன்றிமற்றொர்

பற்றிலேனெம் மீசனே! 90

என்றும் என்னைவிட்டு நீங்காதே

842. பண்ணுலாவு மென்மொழிப்ப

டைத்தடங்க ணாள்பொருட்டு,

எண்ணிலாவ ரக்கரைநெ

ருப்பினால்நெ ருக்கினாய்,

கண்ணலாலொர் கண்ணிலேன்க

லந்தசுற்றம் மற்றிலேன்,

எண்ணிலாத மாய!நின்னை

யென்னுள்நீக்க லென்றுமே. 91

அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சாதே என்க

843. விடைக்குலங்க ளேழடர்த்து

வென்றிவேற்கண் மாதரார்,

கடிக்கலந்த தோள்புணர்ந்த

காலியாய!வேலைநீர்,

படைத்தடைத்த திற்கிடந்து

முன்கடைந்து நின்றனக்கு,

அடைக்கலம்பு குந்தவென்னை

யஞ்சலென்ன வேண்டுமே. 92

அம்பு எய்த வில்லிராமன்

844. சுரும்பரங்கு தண்டுழாய்து

தைந்தலர்ந்த பாதமே,

விரும்பிநின்றி றைஞ்சுவேற்கி

ரங்கரங்க வாணனே,

கரும்பிருந்த கட்டியே!க

டல்கிடந்த கண்ணனே,

இரும்பரங்க வெஞ்சரம்து

ரந்தவில்லி ராமனே! 93

எல்லாம் நீயே

845. ஊனின்மேய ஆவிநீஉ

றக்கமோடு ணர்ச்சிநீ,

ஆனில்மேய ஐந்தும்நீஅ

வற்றுள்நின்ற தூய்மைநீ,

வாளினோடு மண்ணும்நீவ

ளங்கடற்ப யனும்நீ,

யானும்நீய தன்றியெம்பி

ரானும்நீயி ராமனே! 94

கடல்கிடந்த நீயே என் தெய்வம்

846. அடக்கரும்பு லன்கள்ஐந்த

டக்கியாசை யாமவை,

தொடக்றுத்து வந்துநின்தொ

ழிற்கணின்ற வென்னைநீ,

விடக்கருதி மெய்செயாது

மிக்கொராசை யாக்கிலும்,

கடற்கிடந்த நின்னலாலொர்

கண்ணிலேனெம் மண்ணலே! 95

நின்கழல் பற்ற வரம்தா

847. வரம்பிலாத மாயைமாய!

வையமேழும் மெய்ம்மையே,

வரம்பிலூழி யேத்திலும்வ

ரம்பிலாத கீர்த்தியாய்,

வரம்பிலாத பல்பிறப்ப

றுத்துவந்து நின்கழல்,

பொருந்துமாதி ருந்தநீவ

ரஞ்செய்புண்ட ரீகனே! 96

நான் உய்யும் உபாயத்தை எனக்கு அளித்திடு

848. வெய்யவாழி சங்குதண்டு

வில்லும்வாளு மேந்துசீர்க்

கைய,செய்ய போதில்மாது

சேருமார்ப நாதனே,

ஐயிலாய வாக்கைநோய

றுத்துவந்து நின்னடைந்து,

உய்வதோரு பாயம்நீயெ

னக்குநல்க வேண்டுமே. 97

மறந்திடாது எனக்கு அருளவேண்டும்

849. மறம்துறந்து வஞ்சமாற்றி

யைம்புலன்க ளாசையும்

துறந்து,நின்க ணாசையேதொ

டர்ந்துநின்ற நாயினேன்,

பிறந்திறந்து பேரிடர்ச்சு

ழிக்ணின்று நீங்குமா,

மறந்திடாது மற்றெனக்கு

மாய!நல்க வேண்டுமே. 98

என்னை உன்னைவிட்டுப் பிரித்திடாதே

850. காட்டினான்செய் வல்வினைப்ப

யன்றனால்ம னந்தனை,

நாட்டிவைத்து நல்லவல்ல

செய்யவெண்ணி னாரென,

கேட்டதன்றி யென்னதாவி

பின்னைகேள்வ!நின்னொடும்,

பூட்டிவைத்த வென்னைநின்னுள்

நீக்கல்பூவை வண்ணனே! 99

பிறவிக்கடலைத் தாண்ட அருள்செய்

851. பிறப்பினோடு பேரிடர்ச்

சுழிக்கண்நின்றும் நீங்குமஃது,

இறப்பவைத்த ஞானநீச

ரைக்கரைக்கொ டேற்றுமா,

பெறற்கரிய நின்னபாத

பத்தியான பாசனம்,

பெறற்கரிய மாயனே!

எனக்குநல்க வேண்டுமே. 100

நின் பாததாமரையை நான் என்றும் நினைக்கவேண்டும்

852. இரந்துரைப்ப துண்டுவாழி

ஏமநீர்நி றத்தமா,

வரர்தரும்தி ருக்குறிப்பில்

வைத்ததாகில் மன்னுசீர்,

பரந்தசிந்தை யன்றிநின்று

நின்னபாத பங்கயம்,

நிரந்தரம்நி னைப்பதாக

நீநினைக்க வேண்டுமே. 101

உடல் நோய் தீர ஒருவழி சொல்வாய்

853. விள்விலாத காதலால்

விளங்குபாத போதில்வைத்து,

உள்ளுவேன தூனநோய

ழிக்குமாதெ ழிக்குநீர்,

பள்ளிமாய பன்றியாய

வென்றிவீர,குன்றினால்

துள்ளுநீர்வ ரம்புசெய்த

தோன்றலொன்று சொல்லிடே. 102

நின் பெயரையே நான் சொல்லவேண்டும்

854. திருக்கலந்து சேருமார்ப!

தேவதேவ தேவனே,

இருக்கலந்த வேதநீதி

யாகிநின்ற நின்மலா,

கருக்கலந்த காளமேக

மேனியாய நின்பெயர்,

உருக்கலந்தொ ழிவிலாது

ரைக்குமாறு ரைசெயே. 103

திருவடித் தொடர்பினை எனக்கு நல்குக

855. கடுங்கவந்தன் வக்கரன்க

ரன்முரன்சி ரம்மவை,

இடந்துகூறு செய்தபல்ப

டைத்தடக்கை மாயனே,

கிடந்திருந்து நின்றியங்கு

போதும்நின்ன பொற்கழல்,

தொடர்ந்துவிள்வி லாததோர்தொ

டர்ச்சிநல்க வேண்டுமே. 104

நின்னையே யான் எண்ணுவேன்

856. மண்ணையுண்டு மிழ்ந்துபின்னி

ரந்துகொண்ட ளந்து,மண்

எண்ணுளல்ல தில்லையென்று

வென்றகால மாயினாய்,

பண்ணைவென்ற வின்சொல்மங்கை

கொங்கைதங்கு பங்கயக்

கண்ண,நின்ன வண்ணமல்ல

தில்லையெண்ணும் வண்ணமே. 105

என் மனம் உன் புகழையே விரும்பும்

857. கறுத்தெரிர்ந்த காலநேமி

காலனோடு கூட,அன்

றறுத்தவாழி சங்குதண்டு

வில்லும்வாளு மேந்தினாய்,

தொறுக்கலந்த வூனமஃதொ

ழிக்கவன்று குன்றம்முன்,

பொறுத்தநின்பு கழ்க்கலலொர்

நேசமில்லை நெஞ்சமே! 106

உன் திருவடிகளையே நேசிப்பேன்

858. காய்சினத்த காசிமன்னன்

வக்கரன்ப வுண்டிரன்,

மாசினத்த மாலிமான்சு

மாலிகேசி தேனுகன்,

நாசமுற்று வீழநாள்க

வர்ந்தநின்க ழற்கலால்,

நேசபாச மெத்திறத்தும்

வைத்திடேனெம் மீசனே! 107

நின்னொடு கூடுமாசையே கொள்வேன்

859. கேடில்சீர்வ ரத்தனாய்க்கெ

டும்வரத்த யனரன்,

நாடினோடு நாட்டமாயி

ரத்தன்நாடு நண்ணிலும்,

வீடதான போகமெய்தி

வீற்றிருந்த போதிலும்,

கூடுமாசை யல்லதொன்று

கொள்வனோகு றிப்பிலே? 108

முனிவர்கள் உன்னையே தேவதேவன் என்பர்

860. சுருக்கவாரை யின்றியேசு

ருங்கினாய்சு ருங்கியும்,

பெருக்குவாரை யின்றியேபெ

ருக்கமெய்து பெற்றியோய்,

செருக்குவார்கள் தீக்குணங்கள்

தீர்த்ததேவ தேவனென்று,

இருக்குவாய்மு னிக்கணங்க

ளேத்தயானு மேத்தினேன். 109

பக்தர் சித்தம் மேவியவன்

861. தூயனாயு மன் றியும்சு

ரும்புலாவு தண்டுழாய்,

மாய!நின்னை நாயினேன்வ

ணங்கிவாழ்த்து மீதெலாம்

நீயுநின்கு றிப்பினிற்பொ

றுத்துநல்கு வேலைநீர்ப்,

பாயலோடு பத்தர்சித்தம்

மேயவேலை வண்ணனே! 110

செய்த குற்றம் நற்றமாகவே கொள்

862. வைதுநின்னை வல்லவாப

ழித்தவர்க்கும் மாறில்போர்

செய்துநின்னை செற்றதீயில்

வெந்தவர்க்கும் வந்துன்னை,

எய்தலாகு மென்பராத

லாலெம்மாய!நாயினேன்,

செய்தகுற்றம் நற்றமாக

வேகொள்ஞால நாதனே! 111

பேரின்பம் நல்கவேண்டும்

863. வாள்களாகி நாள்கள்செல்ல

நோய்மைகுன்றி மூப்பெய்தி,

மாளுநாள தாதலால்வ

ணங்கிவாழ்த்தென் நெஞ்சமே,

ஆளதாகு நன்மையென்று

நன்குணர்ந்த தன்றியும்,

மீள்விலாத போகம்நல்க

வேண்டும்மால பாதமே. 112

நெஞ்சே!நலன்கொள் மாலையே எண்ணு

864. சலங்கலந்த செஞ்சடைக்க

றுத்தகண்டன் வெண்டலைப்,

புலன்கலங்க வுண்டபாத

கத்தன்வன்து யர்கெட,

அலங்கல்மார்வில் வாசநீர்கொ

டுத்தவன்ன டுத்தசீர்,

நலங்கொள்மாலை நண்ணும்வண்ண

மெண்ணுவாழி நெஞ்சமே! 113

ஞானமாகி ஞாயிறாகி ஏனமாக பிரானை வாழ்த்து

865. ஈனமாய வெட்டுநீக்கி

யேதமின்றி மீதுபோய்,

வானமாள வல்லையேல்வ

ணங்கிவாழ்த்தென் நெஞ்சமே,

ஞானமாகி ஞாயிறாகி

ஞாலமுற்று மோரெயிற்று,

ஏனமாயி டந்தமூர்த்தி

யெந்தைபாத மெண்ணியே. 114

மனமே!என் இடர்க்கடலில் கிடக்கிறாய்?

866. அத்தனாகி யன்னையாகி

யாளுமெம்பி ரானுமாய்,

ஒத்தொவ்வாத பல்விறப்பொ

ழித்துநம்மை யாட்கொள்வான்,

முத்தனார்மு குந்தனார்பு

குந்துநம்முள் மேவினார்,

எத்தினாலி டர்க்கடல்கி

டத்தியேழை நெஞ்சமே! 115

அரக்கரைக் கொன்ற வீரனார் அருளே தேவை

867. மாறுசெய்த வாளரக்கன்

நாளுலப்ப, அன்றிலங்கை

நீறுசெய்து சென்றுகொன்று

வென்றிகொண்ட வீரனார்,

வேறுசெய்து தம்முளென்னை

வைத்திடாமை யால்,நமன்

கூறுசெய்து கொண்டிறந்த

குற்றமெண்ண வல்லனே. 116

அச்சுதன் ஆதியந்தமில்லாதவன்

868. அச்சம்நோயய டல்லல்பல் H

றப்புவாய மூப்பிவை,

வைத்தசிந்தை வைத்தவாக்கை

மாற்றிவானி லேற்றுவான்,

அச்சுதன நந்தகீர்த்தி

யாதியந்த மில்லவன்,

நச்சுநாக ணைக்கிடந்த

நாதன்வேத கீதனே. 117

திருமகள் கொழுநனையே நினைப்பேன்

869. சொல்லினும்தொ ழிற்கணும்தொ

டக்கறாத வன்பினும்,

அல்லுநன்ப கலினோடு

மானமாலை காலையும்,

அல்லிநாண்ம லர்க்கிழத்தி

நாத!பாத போதினை,

புல்லியுள்ளம் விள்விலாது

பூண்டுமீண்ட தில்லையே. 118

நின்னை நினைந்தால் வாட்டம் நீங்கும்

870. பொன்னிசூழ ரங்கமேய

பூவைவண்ண!மாய!கேள்,

என்னதாவி யென்னும்வல்வி

னையினுள்கொ ழுந்தெழுந்து,

உன்னபாத மென்னநின்ற

வொண்சுடர்க்கொ ழுமலர்,

மன்ன வந்து பூண்டுவாட்ட

மின்றியெங்கும் நின்றதே. 119

என் ஆவி இன்ப வீடு பெற்றது

871. இயக்கறாத பல்விறப்பி

லென்னைமாற்றி யின்றுவந்து,

உயக்கொள்மேக வண்ணன்நண்ணி

யென்னிலாய தன்னுளே,

மயக்கினான்றன் மன்னுசோதி

யாதலாலென் னுவிதான்,

இயக்கெலாம றுத்தறாத

வின்பவீடு பெற்றதே. 120

அடிவரவு:பூ ஆறு ஐந்து மூன்று நின்று நாகம் ஒன்று ஆதி தாது தன்னுள் சொல்- சொல் உலகு இன்னை தூய்மை அங்கம் தலை ஏக விடத்த புள் கூசம் அரங்கன் - அரங்கன் பண்டு வானிறத்து கங்கை வரத்தினில் ஆண் விண் படை பரத்தில் வான - கம் கால - கால குரக்கு மின் ஆதி அம்பு ஆடகத்த காய்த்த கடம்

வெற்பு ஆனை ஆயன் - ஆயன் வேறு வெஞ்சின பால் மண் தோடு கார் குன்று கொண்டை வெண்டிரை சரம் - சரம் பொற்றை மோடி இலை மன்னு இலங்கை சங்கு மரம் சாலி செழு நடந்த - நடந்த கரண்டம் நன்று நின்றது நிற்பது இன்று சண்ட முத்திறம் காணிலும் குந்தம் வண்டு - வண்டு போதில் மரம் அறிந்து ஒன்றி புன்பல எட்டு சோர்வு பத்தின் வாசி கடை - கடை எத்திறம் மட்டு பின் நச்சரா சாடு நெற்றி வெள்ளை பார் குலம் பண் - பண் விடை சுரும்பு ஊன் அடக்கு வரம்பு வெய்ய மறம் காட்டினான் பிறப்பு இரந்து - இரந்து விள் திரு கடும் மண்ணை கறுத்து காய் கேடு சுருக்கு தூயன் வைது - வைது வாள் சலம் ஈனம் அத்தன் மாறு அச்சம் சொல் பொன்னி இயக்கறாத - காவல்.

(14-வது பாசுரம் திருக்குடந்தை சக்கரபாணியையும், 15-வது பாசுரம் திருக்குடந்தை சாரங்கபாயிணையும், 56-61 பாசுரங்கள் திருக்குடந்தை ஆராவமுதனையும், 62-வது பாசுரம் திருக்குறுங்குடி நரசிம்மனையும், 63,64 பாசுரங்கள் காஞ்சீபுரத்திலுள்ள பாடகம், ஊரகம், யதோத்தகாரி எம்பெருமான்களையும், 89 - வது பாசுரம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதியையும், 103-வது பாசுரம் காஞ்சீபுரம் தேவப்பெருமானையும், 114-வது மாமல்லவுரம் ஞானப்பிரானையும், பல பாசுரங்கள் திருவரங்கனையும் கூறுகின்றன.

திருச்சந்த விருத்தத்தை அநுஸந்திப்பவர்கள் திருமழிசைப் பிரானைப்போல் பல்லாண்டுகள் பகவத் பக்தி பெற்று ஸ்ரீவைஷ்ணவராக உலகில் வாழலாம்.)

திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்














 





 









 





 


 


 



Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is திருச்சந்த விருத்தத் தனியன்கள்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  திருமலைத் தனியன்
Next