வேதக் கட்டளையாகவே சிரவணம் முதலியன : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஸந்நியாத்துடன் மஹாவாக்ய உபதேசம். அதைப் பெற்றுக் கொள்வதே ச்ரவணம். உபதேசத்தை உருப்போட்டு, அலசி, அலசி, ஆராய்ந்து உறுதிப்படுத்திக் கொள்வதான ‘மனனம்’ என்பதும், அப்புறம் அதைப் பிரத்யக்ஷ அநுபவமாக்கிக் கொள்வதற்காகச் செய்யும் த்யானமாகிய ‘நிதித்யாஸனம்’ என்பதும் ஸாதனையைக் ‘கம்ப்ளீட்’ பண்ணிவிடுகின்றன.

இந்த மூன்றும் [ச்ரவணம், மனனம், நிதித்யாஸனம்] வேதக் கட்டளையாகவே ஏற்பட்டவை. சமம், தமம், உபரதி, திதிக்ஷை, முதலியவற்றைச் சொல்லும் அதே உபநிஷத் வாயிலாகத்தான் இந்த மூன்றையும் வேதம் கட்டளையிட்டிருக்கிறது1. சமம், தமம் முதலியவற்றை நேரே கட்டளையாக, ‘ஆர்ட’ராகப் போடாமல் ஒரு ஞானி அந்த ஆத்ம ஸம்பத்துக்களை உடையவனாக — சாந்தனாக, தாந்தனாக, உபரதனாக எல்லாம் — இருப்பான் என்று சொல்வதன் மூலம் மறைமுக விதியாகத்தான் விதித்திருக்கிறது. ஆனால் இந்த மூன்றையோ ‘இன்ஜங்க்ஷன்’ என்கிறார்களே, அப்படி அதிகார பூர்வமான கட்டளையாகவே போட்டிருக்கிறது. “ச்ரோதவ்யோ, மந்தவ்யோ, நிதித்யாஸிதவ்யோ – ஆத்ம தத்வமே ச்ரவணம் செய்யப்பட வேண்டும். மனனம் செய்யப்பட வேண்டும். நிதித்யாஸனம் செய்யப்படவேண்டும்” என்று ரூலாகவே கொடுத்திருக்கிறது.



1
ப்ருஹதாரண்யகோபநிஷத் II. 4..5.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் தொடர் நாமங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  சிரவணமும் சிசுருஷையும்
Next