ஸ்வரூப வர்ணனை : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

க்வணத்-காஞ்சீ-தாமா கரி-களப-கும்ப-ஸ்தந-நதா

பரிக்ஷீணா மத்யே பரிணத-சரச்சந்த்ர-வதநா |

தநுர்-பாணாந் பாசம் ஸ்ருணிமபி ததாநா கரதலை:

புரஸ்தாத் ஆஸ்தாம் ந: புரமதிது-ராஹோபுருஷிகா | |

[ (க்வணத்) கிலுகிலுக்கும் (காஞ்சீதாமா) மணிச்சிலம்புகள் அமைந்த ஒட்டியாணச் சரட்டை அணிந்தவளும், (கரி-களப-கும்ப-ஸ்தந-நதா) யௌவனமான யானையின் கும்பத்தை [தலையிள்ள குடம் போன்ற புடைப்பை] நிகர்த்த நகிலால் வணங்கிய [உடலுள்ள]வளும், (மத்யே) இடைப்பிரதேசத்தில் (பரிக்ஷீணா) மிகவும் நுண்ணியவளும், (பரிணத-சரத்-சந்த்ர-வதநா) சரத் காலத்துப் பூர்ண சந்திரன் போன்ற முகத்தினளும், (தநுர் பாணான் பாசம் ஸ்ருணிம் அபி) வில், அம்பு இவற்றோடு பாச அங்குசங்களையும் (கரதலை:) கைத்தலங்களில் (ததாநா) பிடித்துக் கொண்டிருப்பவளும், (புரமதிது:) திரிபுரங்களை அழித்தவனின் [சிவபெருமானின்] (ஆஹோபுருஷிகா) அஹங்கார வடிவானவளுமானவள் [அதாவது அம்பிகை] (ந:) நமக்கு (புரஸ்தாத்) எதிரே (ஆஸ்தாம்) எழுந்தருளட்டும்.]

க்வணத் காஞ்சீ தாமா – ‘க்வணத்’ என்றால் சலங்கை கிணுகிணு என்று ஓசை பண்ணுவது. சப்தத்தை வைத்தே வஸ்துவுக்குப் பெயர் சொல்லும் ‘சப்தாநுகரண’ வார்த்தை, சலங்கை கட்டிய ஒட்டியாணத்திற்குக் ‘காஞ்சீ’ என்று பெயர். வெறும் ஒட்டியாணம் ‘மேகலை’. அதிலே சலங்கை கட்டியிருந்தால் ‘காஞ்சீ’. ஸஹஸ்ரநாமத்தில் “ரணத் கிங்கிணி மேகலா” என்று ”க்வணத் காஞ்சீ தாம”த்தையே தான் சொல்லியிருக்கிறது. சலங்கையை மணி என்றும் சொல்வதுண்டு. அதனால் காஞ்சியை மணிமேகலை என்றும் சொல்வது. தமிழில் பஞ்சகாவியத்தில் ‘மணிமேகலை’ ஒன்று. அதில் கதாநாயகியாக வரும் மணிமேகலை கடைசியில் காஞ்சீபுரத்திற்குத்தான் வந்து அங்கே பஞ்சத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்குத் தன்னிடமிருந்த அக்ஷய பாத்திரத்தினால் ஆஹாரம் போட்டாள் என்று சொல்லியிருக்கிறது. அது பௌத்த மதச் சார்பான காவியம். அதனால் மணிமேகலை காஞ்சீபுரத்தில் ஒரு பௌத்த குருவிடம் தீக்ஷை பெற்றே வாழ்க்கைப் பயனை அடைந்தாளென்று இருக்கிறது. ஆனால் அக்ஷய பாத்திரத்திலிருந்து அவள் அன்னம் போட்ட ஸமாசாரமோ நம்முடைய அம்பாள் காமாக்ஷி பண்ணிய லீலையைக் காப்பி பண்ணியதாக இருக்கிறது! ‘இரு நாழி நெல் கொண்டே எண்நான்கு அறம் இயற்றியவள்’ என்று காமாக்ஷியைப் பற்றிப் புராண வசனம் இருக்கிறது. நாழி என்றால் அரைப்படி. “உண்பது நாழி, உடுப்பது நாலு முழம்” என்று ஒளவை பாட்டில்கூட வருகிறது. அப்படிப்பட்ட இரு நாழி [ஒரு படி] அரிசி அக்ஷயமாக வளர அதைக்கொண்டே அம்பாள் அன்னதானம் மட்டுமில்லாமல் இன்னும் முப்பத்தோரு தர்மங்களும் பண்ணினாளாம். அறுபத்துநாலு தர்மம் என்று ஒரு கணக்கு. அதில் வராத தர்மமே இல்லை. அதைப் பாதியாகக் கண்டென்ஸ் பண்ணி முப்பத்திரண்டு என்பதுமுண்டு. அதைத்தான் ”எண் நான்கு அறம்” என்றது. மணிமேகலைக் கதையை வைத்துத்தான் காமாக்ஷி புராணம் எழுதிவிட்டார்களென்றுகூட இந்த நாளில் சொல்லலாம்! ஆனால் காமாக்ஷியின் பெயர் மணிமேகலை எழுதியதற்கு ரொம்ப முந்தி சங்க காலத்திலேயே இருந்திருக்கிறது. ‘காமக் கண்ணியார் நப்பசலையார்’ என்று சங்க காலப் பெண் புலவர் ஒருத்திக்குப் பேர். ‘காமக்கண்ணி’ என்பது ‘காமாக்ஷியே’ தான்! காமாக்ஷி வழிபாடு அப்போதே உண்டு என்றால் அந்தக் காமாக்ஷியின் கதையும் – அவள் அன்ன தானம் முதலானது பண்ணிய கதையும் – அப்போதே இருந்துதானிருக்க வேண்டும். ராமன் பேர் இருந்த காலமென்றால் அப்போது ராமாயணக் கதையும் இருந்துதானே இருக்கணும்? மணிமேகலை என்ற பேருடையவள் அதே அர்த்தம் கொண்ட ‘காஞ்சீ’ என்ற பேரைக் கொண்ட ஊருக்கு முடிவாக வந்து சேர்ந்த பொருத்தத்தைச் சொல்ல வந்தேன்……….

க்வணத் காஞ்சீ தாமா. ‘காஞ்சீ’ என்று சொன்னதிலேயே ஸ்தோத்ரத்தின் தேவதை லலிதாம்பாள் என்பதற்கு ‘ஹின்ட்’ இருக்கிறது. இந்தப் பெரிய தேசத்திலே தென் கோடிக் கன்யாகுமாரியிலிருந்து காஷ்மீரில் க்ஷீரபவானி வரையில் பகவதி, சாமுண்டேச்வரி, சாரதாம்பா, மீனாக்ஷி, அகிலாண்டேச்வரி, தர்மஸம்வர்த்தினி, கமலாம்பாள், பாலாம்பாள், சிவகாமஸுந்தரி, ஞானாம்பா, ப்ரமராம்பா, கனகதுர்கா, துளஜா பவாநி, அம்பாஜி, விந்த்யவாஸினி, அன்னபூர்ணேச்வரி, காளி, காமாக்யா வைஷ்ணவி 1 என்றிப்படி அம்பாள் மூர்த்தங்களிலிருந்தாலும் ஸ்ரீவித்யா தந்த்ரத்தில் சொல்லியிருக்கிறபடி லலிதா த்ரிபுரஸுந்தரிக்குரிய அங்க லக்ஷணங்களோடும் ஆயுதங்களோடும் உள்ள ஒரே மூர்த்தி காஞ்சீபுரத்தில் இருக்கும் காமாக்ஷிதான். அதனால்தான் ‘ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது’ என்று, இந்த ஸ்தோத்திரத்தில் எங்கேயுமே அவள் பேரைச் சொல்லாவிட்டாலும் ஊரையாவது சொன்ன மாதிரி இருக்கட்டுமென்று ”காஞ்சீதாமா” என்று போட்டார் போலிருக்கிறது!

லோகத்தையே ஒரு ஸ்திரீ தேவதையாக – பூமா தேவி என்றுதானே சொல்கிறோம்? அப்படி – ஒரு ரூபத்தில் பார்த்தால் அப்போது அதன் மத்தியாக, அவளுடைய நாபி ஸ்தானமாக உள்ள இடமே காஞ்சீபுரம். ஒட்டியாணத்தின் முகப்பு நாபிக்கு மேலேயே வருமாதலால் ‘காஞ்சி’ என்று அந்த க்ஷேத்திரற்குப் பெயர் ஏற்பட்டது.

காஞ்சீதாமா – ‘தாமம்’ என்றால் கயிறு மாதிரி இழைகளால் முறுக்கிய சரடு. யசோதை க்ருஷ்ணனின் உதரத்தைச் சுற்றிக் கயிற்றால் கட்டிப் போட்டதாலேயே ‘தாமோதரன்’ என்ற பெயர் வந்தது. சலங்கைகள் பூட்டிய மேகலாபரணமான காஞ்சியானது தங்க இழைகளை முறுக்கி அழகாகச் செய்யப்பட்டிருப்பதால் ‘காஞ்சீதாமா’ என்கிறார்.

அம்பாள் நடந்து வரும்போது பாதச் சிலம்பு மட்டுமில்லாமல் ஒட்டியாண மணிகளும் ஜல்ஜல் என்று சப்தம் பண்ணும்.

லோக மத்தியிலிருந்து ஆரம்பித்து ஒரு சுற்றுச் சுற்றி அதிலேயே முடிகிற ஒட்டியாணம் என்றால் அது ரொம்ப ரொம்பப் பெரிசாக இருக்க வேண்டும். அந்த நகைதான் அம்பாளுடைய இடுப்புப் பிரதேசத்தைச் சுற்றியிருப்பது என்றால் அந்த இடுப்பும் ரொம்ப விஸ்தாரமாயிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஆனால் வாஸ்தவத்தில் பார்த்தால் எப்படி இருக்கிறது?

பரிக்ஷீணா மத்யே

அந்த இடுப்பு ரொம்ப மெலிந்ததாக இருக்கிறது! ‘க்ஷீணம்’ – மெலிந்த. ‘பரி’ என்று முன்னாடி சேர்த்ததால் ‘ரொம்பவும் மெலிந்த’ என்று அர்த்தம். அப்படி இருப்பதுதான் உத்தம ஸ்த்ரீ லக்ஷணம். துடியிடை, கொடியிடை என்றெல்லாம் சொல்வார்கள். விசித்ரமெல்லாம் அவளிடம் ஒன்று சேர்கின்றன! அணுவுக்குள் மஹத் என்றபடி துடியிடைக்குள்ளே எல்லா லோகங்களும்!

இடுப்பழகு இருக்கட்டும். அவளுடைய முகம் எப்படி இருக்கிறது? அதல்லவா ஸர்வாங்கங்களிலும் முக்யம்? ‘முக்யம்’ என்பதே ‘முகம்’ என்ற வார்த்தையிலிருந்துதான் வந்திருக்கிறது! ‘எண் சாணுடம்புக்கு சிரஸே பிரதானம்’ என்கிறோம். அந்தப் ‘பிரதான’ந்தான் ‘முக்யம்’ என்பதன் அர்த்தமாகவுமிருக்கிறது! அம்பாளுடைய முகம் எப்படியிருக்கிறது?

பரிணத சரச் சந்த்ர வதநா

‘பரிக்ஷீணா’ என்பதில் ‘பரி’ என்று அந்த வரியின் முதல் பாதியை ஆரம்பித்தாற்போலவே இரண்டாம் பாதியையும் ‘பரி’ணத என்று ஆரம்பித்திருக்கிறார். இம்மாதிரி இயற்றுவது கவிதைக்கும் அழகு, ஞாபகம் வைத்துக் கொள்ளவும் வசதி. லலிதா ஸஹஸ்ரநாமத்தில் கூட இப்படி நிறைய வரும். ‘மோனை’ என்று இந்த அணிக்குப் பெயர்.

அம்பாள் முகத்தை வர்ணிக்கும்போது ‘பரிணத சரத் சந்த்ர வதநா‘ என்கிறார். சந்திரன் போன்ற வதனம். அதிலும் விசேஷமான தாவள்யத்தோடும் [வெண்மையோடும்] ஹித சீதளத்தோடும் இருக்கிற சரத்கால சந்திரன் போன்றது. ‘பரிணத’ என்றால் ‘முழு வளர்ச்சி அடைந்த’. அதாவது பூர்ணிமை சந்திரன். சரத்காலத்துப் பூர்ணிமை சந்திரனைப் போல அம்பாளின் முகம் சுப்ரமாக, ப்ரகாசமாக, அருள்நிலவை ஜில்லென்று பொழிவதை ‘ஹின்ட்’ பண்ணுகிறார். பிற்பாடு ”ஸ்மித ஜ்யோத்ஸ்நா ஜாலம் தவ வதந சந்த்ரஸ்ய பிபதாம்” என்ற ச்லோகத்திலும் இதே கருத்தை ரொம்பவும் ஸ்வாரஸ்யமாக விவரித்திருக்கிறார். 2

மேகலாபரணம், அதை அணிந்த இடுப்பு, முக்யமான முகம் ஆனவற்றைச் சொல்லியாயிற்று. ஹஸ்தங்களைச் சொல்ல வேண்டாமா? ஒவ்வொரு தேவதைக்கும் எத்தனை ஹஸ்தம், அதில் என்ன ஆயுதம் என்பதை வைத்துத்தான் அது குறிப்பாக இன்ன தேவதை என்று நிர்ணயம் பண்ணுவதே. அதைச் சொல்கிறார்.

தநுர்-பாணாந் பாசம் ஸ்ருணிமபி ததாநா கரதலை:

தநுஸையும் பாணத்தையும் பாசத்தையும் அங்குசத்தையும் (‘ஸ்ருணி’ என்றால் ‘அங்குசம்’) கரதலங்களில் தரித்துக் கொண்டிருக்கிறாள் என்கிறார். ஸ்ரீவித்யா தந்த்ரத்தின் அதிதேவதைக்கு இதுதான் முக்ய அடையாளம். லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி, காமேச்வரி என்பது அவள் பெயர். ரொம்ப ‘டெக்னிக’லாகப் பார்க்காவிட்டால் ராஜராஜேச்வரி என்பதும் அவள்தான். அம்பிகை இப்படி உள்ளபோது அவளுக்கு நாலு ஹஸ்தங்கள் — மேல் இரண்டில் பாசம், அங்குசம்; கீழ் இரண்டில் தநுஸு, பாணம். மன்மதனுடைய அதே கரும்பு வில்லும், புஷ்ப பாணமும்.

ராகம்-த்வேஷம் என்று இரண்டு. விருப்பு-வெறுப்பு என்பவை. ராகம்-விருப்பு, த்வேஷம்-வெறுப்பு. வேண்டும்-வேண்டாம், கொள்ளுவது-தள்ளுவது என்று செய்யச் செய்கிற இரண்டு உணர்ச்சிகள். நன்றாக ஆலோசித்துப் பார்த்தால் ராக-த்வேஷம் என்ற இரண்டுக்குள்ளேயே லோக வாழ்க்கை பூராவும் அடங்கிவிடுகிறது என்று தெரியும். ராக-த்வேஷம் என்பதையே காம-க்ரோதம் என்றும் சொல்வது. இரண்டையும் அடக்கிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இவையும் அம்பாளின் மாயா லீலையில் உண்டானவையே; அவளுடைய அநுக்ரஹ லீலையில் மறைந்து போகிறவையே — அந்த அநுக்ரஹத்தால்தான் மறைகிறவை — என்று ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தாலே அவற்றை அடக்கிக் கட்டிவிடலாம். ”ராக ஸ்வரூப பாசாட்யா” — ‘ஆசை வடிவான பாசத்தை உடையவள்’; ”க்ரோதாகாராங்கு சோஜ்ஜ்வலா” — ”க்ரோத ஆகார அங்குச உஜ்ஜ்வலா” – ‘கோபரூபமான அங்குசத்தால் பிரகாசிப்பவள்’ என்று ஸஹஸ்ரநாமத்தில் வருகிறது.

காம-க்ரோதங்களில் காமத்திற்கு ரூபகமாயிருப்பது அம்பாளுடைய பாசம். பாசம் என்றால் கயிறு. யமன் வீசுகிற கயிற்றை யம பாசம் என்கிறோமல்லவா? ‘ஆசை’ என்பதற்கும் ‘பாசம்’ என்கிறோம். தாய்ப்பாசம் என்கிறோம். ஆசைதான் காமம். கயிறு போட்டுக் காட்டுகிற மாதிரி ஆசை நம்மை பந்தப்படுத்துகிறது. க்ரோதத்திற்கு ரூபகம் அங்குசம். கோபம் என்பது அங்குசத்தால் போட்டுக் குத்துகிற மாதிரியானது.

பிறத்தியானை இல்லை! அவன் நம் கோபத்தை லக்ஷ்யமே பண்ணாமல்கூடப் போவான்! நம்மையேதான் நாமே நம்முடைய கோபத்தால் குத்திக்கொண்டு — அங்குசக் குத்தாகக் குத்திக்கொண்டு — புண்படுத்திக் கொள்கிறோம்! கோபத்தில் ஒருத்தன் எனெர்ஜி எவ்வளவு வேஸ்ட் ஆகிறது என்று நவீன ஸயன்ஸ்படிச் சொல்கிறார்கள். இதிலே வேடிக்கையாக, சாஸ்திரங்களுக்கும் ஒத்துப் போவதாக, இன்னும் என்ன சொல்கிறார்களென்றால் நமக்கு ஒன்றைப் பிடிக்காமல் புகைந்து கொண்டு கோபப்படுவது நம் சக்தியை வேஸ்ட் செய்கிறதென்றால், ரொம்பவும் பிடித்து ஸந்தோஷமாகக் காமத்தில் போகிற போதுதான் அதைவிடவும் ஜாஸ்தி சக்தி வேஸ்ட் ஆகிறது என்கிறார்கள். ‘ஹித சத்ரு’ என்பார்கள் — அப்படி நல்லது மாதிரி இருந்துகொண்டே குழியைப் பறிப்பது காமம்.

அங்குசம் என்றால் யானை ஞாபகம் உடனே வருகிறது. பாசமும் யானை ஸம்பந்தப்பட்டதுதான். யானையை எப்போதுமே கட்டுத் தறியில் சங்கிலி போட்டுக் கட்டித்தான் வைக்க வேண்டும். அந்தச் சங்கிலி பாசந்தான். காமமும் க்ரோதமும் யானையளவு பெரிய பரிமாணமுடையவை என்பதாலேயே பாசாங்குசத்தால் அவற்றை அடக்குவதாகக் காட்டுவது. காம க்ரோதங்களை அடக்குவது என்றால் என்ன? அவை முளைக்கிற மனஸை அடக்குவது என்றே அர்த்தம். அந்த மனஸை மதயானையாகவே ஆசார்யாள் ‘சிவாலந்தலஹரி’யில் சொல்லியிருக்கிறார்; ”ஹ்ருதய மதேபம்” என்று*. (* ச்லோ. 96) [‘மத இபம்’-மதயானை.]

அம்பாள் பாசாங்குசையாக இருப்பதற்கு ஒரு விளக்கம் — இவையுங்கூட அவள் லீலை, அவளுடைய மாயையின் பிரதான அங்கங்கள் என்று பார்க்க வேண்டும் என்பது. இன்னொரு விளக்கம் — அம்பாள் நம்மிடம் பாசம் வைத்து, தன் கையிலுள்ள பாசத்தால் நம்மைக் கட்டி நம்முடைய மற்ற பாசங்களிலிருந்து இழுத்து அவளை ஆசையுடன் ”அம்மா!” என்று கட்டிக் கொள்ளும்படிப் பண்ணுகிறாள்; ‘பற்றற்றான் பற்‘றைத் தருகிறாள்; அதேபோல, நம்முடைய கோபத்தின் மேல் அவள் கோபித்துக் கொண்டு, அந்தக் கோபத்திற்கு உருவமான அங்குசத்தால் அதைக் குத்தி அடக்கி சாந்தமாக்குகிறாள் என்பது.

இந்த இரண்டையும் சொல்லிவிட்டு அப்புறமே தநுர் பாணங்களைப் பற்றி ஸஹஸ்ரநாமத்தில் சொல்லியிருக்கிறது. பொதுவாகச் சொல்வது ‘தநுர்-பாண-பாசாங்குசம்’ என்றாலும், மாற்றி பாசாங்குசத்தை முதலிலும் அப்புறம் தநுர் பாணத்தையும் சொல்லியிருக்கிறது. இதுதான் யுக்தமாகவும் தெரிகிறது. முதலில் ‘தநுர் பாணம்’ என்றால் அந்த இரண்டும் மன்மதனுக்கே முக்யமாக நினைக்கப்படுபவையல்லவா? அதையே அம்பாளுக்கும் சொன்னால் அவளுடைய முக்யத்வம் தெரியாது. அது மாத்திரமில்லை. மன்மதனால் ஏற்படும் ஸ்ருஷ்டிக்கு, பந்தத்துக்கு அம்பாள்தான் நிஜமான காரணம் என்பதால் அந்த இரண்டு [ஆயுதங்கள்] இவள் கையிலிருந்தாலும், பந்த மோசனியும் அவள்தான் என்பதை மறக்கவிடக் கூடாது. மன்மதனின் தநுர்-பாணங்களேகூட அவள் கைக்கு இடம் மாறியபோது பந்தமோசனத்தைக் குறிப்பவைதானென்றாலும் — இந்த விஷயத்திற்கு அப்புறம் வருகிறேன் — அந்த இரண்டை முதலில் சொன்னால் மன்மதனுக்கு இவள் ஒரு காப்பிதான் என்ற மாதிரியான எண்ணமே ஏற்படும். அப்படி ஆகாமலிருக்கத்தான் அம்பாளுக்கென்றே புவநேச்வரி முதலான ரூபங்களில் உள்ள பாசாங்குசங்களை முதலில் சொன்னது. அநேக காமங்களில் ஒன்றான ச்ருங்கார காமத்திற்கு மாத்திரம் (அதுதான் ரொம்ப வலிமையாக ஒருத்தனைச் சறுக்கிவிழப் பண்ணுகிறது என்பதால்) இக்ஷுதநுஸ், புஷ்ப பாணங்கள் என்று தனியாக வைத்திருக்கிறதென்றால், அத்தனை விதமான காமத்திற்குமாகப் பாசத்தையும், அது மாத்திரமில்லாமல் அதற்கு எதிர்ச் சக்தியான கோபத்தைக் காட்டுவதாக அங்குசத்தையும் வைத்திருக்கிறது. அவற்றை முதலில் சொல்லிவிட்டால் அவளை நன்றாகத் தெரியப் பண்ணுவதாக — [சிரித்து] இன்ட்ரொட்யூஸ் பண்ணுவதாக — ஆகிறது.

காமத்தின் நிறைவேறாத ரூபந்தான் க்ரோதம். ஆசை நிறைவேறவில்லை, தோற்றுப் போச்சு என்றாலே கோபம் உண்டாகிறது.

அவளிடமே ஆசை, கோபத்திடம் கோபம் என்று அர்த்தம் பண்ணும்போது அந்த பாசாங்குசமே பந்த மோசனமும் ஆவதால் அம்பாள் தத்வத்தை முற்றிலும் சொன்னதாக ஆகிவிடுகிறது.

ராகத்திற்குப் பாசம், க்ரோதத்திற்கு அங்குசம் என்று சொன்னதற்கப்புறம் ஸஹஸ்ரநாமத்தில் ”மநோ-ரூபேக்க்ஷு கோதண்டா”, ”பஞ்ச தந்மாத்ர ஸாயகா” என்று இரண்டு பெயர்கள் தநுஸையும் பாணத்தையும் குறித்துச் சொல்லியிருக்கிறது. ”மனஸின் ரூபமான இக்ஷுகோதண்டம் (கரும்பு வில்)”, ”ஐந்து தன்மாத்ரைகளின் ரூபமான பாணங்கள்” — ”இவற்றை உடையவள்” என்று அர்த்தம். ‘தன்மாத்ரை’ என்றாலும் இங்கே தன்மாத்ரைகளை அநுபோகம் பண்ணும் பஞ்சேந்திரியம் என்றுதான் அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும்.

மன்மதனின் கையில் உள்ள இரண்டேதான். அவனைத் தன்னுடைய அதிகாரியாகக் கொண்டு லோகத்தில் சிற்றின்பக் காமத்தை உண்டுபண்ணுபவள் அகிலாண்ட சக்ரவர்த்தினியான அம்பாள்தான் என்று தெரியப்படுத்துவதற்காக அந்த இரண்டும் இவளிடமும் இருக்கின்றன. ஆனால் அது மட்டுமில்லை. பாசாங்குசங்கள் எப்படி பந்தம், மோக்ஷம் இரண்டையும் காட்டுவதாகச் சொன்னேனோ, அப்படியே இந்த இரண்டுங்கூட! மன்மதன் கையிலுள்ள போது சிற்றின்பக் காமத்தில் மநுஷ்யனின் மனஸை அந்த தநுஸும், பஞ்சேந்திரியங்களை அந்த பஞ்ச பாணங்களும் தள்ளுகின்றனவென்றால், அம்பாளுடைய ஹஸ்தத்திலுள்ளபோதோ அதே தநுஸ் பேரின்பமான மோக்ஷகாமத்தில் மனஸை இழுத்துச் சேர்க்கிறது. அந்த பாணங்களும் மோக்ஷகாமத்தில் அம்பாளுடைய ஸ்தோத்ர கீர்த்தனங்களையே கேட்க வேண்டும், அம்பாளுடைய சரணாரவிந்தங்களை ஸ்பர்சிக்க வேண்டும். அவளுடைய ரூபத்தை தர்சிக்க வேண்டும், அவளுடைய சரணதீர்த்தாம்ருதத்தை ருசிக்க வேண்டும், அவளுடைய நிர்மால்ய புஷ்பங்களை வாரிப் போட்டுக்கொண்டு திவ்ய ஸுகந்தத்தை அநுபவிக்க வேண்டும் என்பதாகப் பஞ்சேந்திரியங்களையும் திருப்பி விட்டுப் பரிசுத்தப்படுத்திவிடுகின்றன. மன்மதனிடம் இருந்தபோது எந்த தநுர்பாணங்கள் நம் மனஸையும் புலன்களையும் வெளிமுகப்படுத்தி அல்பமான விஷய ஸுகங்களில் கொண்டு தள்ளிற்றோ, அந்த தநுர் பாணங்களே அம்பாளிடம் இருக்கும்போது அந்த விஷயங்களுக்குக் காரணமாகவும், நித்ய ஸுகமாகவும் இருக்கும் அவளிடம் நம் மனஸை, இந்திரியங்களைத் திருப்பிவிடுகின்றன. அதே ஆயுதங்கள்; இடம் மாறினதால் பிரயோஜனமே மாறி விடுகிறது! நம்மை தீர்த்துக் கட்டி விட வேண்டுமென்று திருடன் கத்தியைக் காட்டுகிறான்; அதே கத்தி நம் கைக்கு வந்துவிட்டால்? அவன் ஓட்டம் பிடிக்க வேண்டியதுதானே?

மன்மதன் கையிலிருந்தபோது கருப்பஞ் சாறாகவும், புஷ்பங்களிலிருந்து தேனாகவும் காமரஸம் பொழிந்து லோகத்தை மயக்கிச் சிற்றின்பத்தில் சிக்க வைத்தது. அம்பாள் கையில் அதே இரண்டு ஆயுதங்கள் அவளுடைய கருணா ரஸத்தைப் பொழிகின்றன. ப்ரதியாக நமக்குத் தாயாரிடம் பக்திரஸம் பெருகுகிறது. அவளுடைய கருணையும் நம்முடைய பக்தியும் ஒன்று சேர்ந்து ஏற்படும் ஆனந்த ப்ரவாஹத்தில் தன்னை மறந்து பேரின்பத்தை அநுபவிக்கிறோம். தான் மயங்குவது மாயை — மஹா கெட்டது. தன்னை மறப்பது ஞானம் — நல்லதிலெல்லாம் நல்லது.

இப்படி அம்பாளிடம் ஒன்றை இடம் மாற்றினால் நிக்ருஷ்டமானதே [நீசமானதே] உத்க்ருஷ்டமாகிறது [உயர்ந்ததாகிறது] என்பதைப் பார்க்கும்போது நாம் பண்ணிக் கொள்ளும் அலங்காரத்தையெல்லாம் இடம் மாற்றி அவளுக்குப் பண்ணிவிட்டால் உயர்ந்த ப்ரயோஜனத்தை அடையலாம் என்று புரியும். நாமே அலங்காரம் பண்ணிக் கொண்டால் அது அஹங்காரத்தை கொடுக்கிறது; அந்த அலங்காரத்தை அவளுக்குப் பண்ணிப் பார்த்தாலோ அது அஹங்காரத்தைக் கெடுக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், இந்திரிய நிக்ரஹத்தை அம்பாள் கையிலுள்ள புஷ்ப பாணமும் மனோ நிக்ரஹத்தை இக்ஷுதநுஸும் அநுக்ரஹித்துவிடுகின்றன. இது ஏற்பட்டுவிட்டால் அப்புறம் ஞானந்தான், மோக்ஷந்தான். வேறே ஒன்றும் வேண்டாம்!

பஞ்சபாணம் சுத்தப்படுத்துகிற பஞ்சேந்திரியங்களையும், இக்ஷுதநுஸ் சுத்தப்படுத்துகிற மனஸையும் சேர்த்து ஆறு கரணங்கள் என்று சொல்வதுண்டு. வண்டுக்கு ஆறு கரணங்கள் இருப்பதுபோல ஒரு ஜீவனுக்கு இந்த ஆறு கரணங்கள். தம்முடைய ஜீவன் ஒரு ஆறு கரண-சரண வண்டு என்றும், அது, எப்படி ஒரு வண்டு தாமரைப் பூவுக்குள்ளே போய் அப்படியே புதைந்துவிடுமோ அப்படி அம்பாளின் பாத தாமரையில் புதைந்துவிட வேண்டும் என்றும் நம்முடைய ஸ்தோத்ரத்திலேயே ஆசார்யாள் கடைசியில் சொல்கிறார்: ”நிமஜ்ஜந் மஜ்ஜீவ: கரண சரண: ஷட்சரணதாம்” [ச்லோ. 90].

என்ன கவனிக்கணுமென்றால் அங்கே இந்திரியங்களும் மனஸும் அவள் ஹஸ்தத்திலுள்ள தநுர்பாணங்களால் அடங்கவேண்டுமென்று சொல்லவில்லை. அவளுடைய சரணத்தில் அடங்கவேண்டும் என்றே சொல்லியிருக்கிறது. ”நீ ஹஸ்தத்தால் அபய வரதம் தர வேண்டியதில்லை; உன் சரணமே அதைப் பண்ணி விடுகிறது” என்று முன்னாடி சொன்னார். இங்கே [”க்வணத் காஞ்சீ தாமா” ச்லோகத்தில்] வராபயங்களுக்குப் பதிலாக அந்த இரண்டு ஹஸ்தங்களிலிருக்கும் தநுர் பாணங்களைச் சொல்லியிருக்கிறார். இவை தருகிற மனோ நிக்ரஹ, இந்த்ரிய நிக்ரஹங்களை மட்டும் அவளுடைய சரணாரவிந்தம் கொடுக்காதா என்ன என்ற கேள்விக்குப் பதிலாகத் தான் பின்னாடி மனஸும் பஞ்சேந்திரியங்களும் ஒன்று சேர்ந்த ஜீவனான வண்டு அந்த அரவிந்தத்திலே புதைந்து போவதையும் சொல்லியிருக்கிறார். [மீதமிரு கரங்களிலுள்ள] பாச அங்குசங்கள் அடக்குகிற நம்முடைய காம, க்ரோதங்களும் அவள் பாதத்தைப் பிடித்தாலே அடங்கிவிடும்தான்!

பின்னே எதற்கு நாலு ஹஸ்தமென்றால், அப்படி ஒரு ரூபத்தைப் பார்க்கும்போது எத்தனை ஸெளந்தர்யமாக இருக்கிறது? அதற்காகத்தான். அவள் ஸெளந்தர்யவதி என்பதோடு சக்ரவர்த்தினி. அந்த காம்பீர்யமும் தெரியத்தான் ப்ரதானமாக தநுர்-பாணம் முன்னிரண்டு ஹஸ்தங்களில். ராஜா என்றால் தநுர் பாண தரனாகத்தான் சித்தரிப்பது. ராமர், அர்ஜுனன் என்றால் அப்படித்தான் போடுவது. எட்ட இருக்கிறவர்களையும் தாக்குவதற்கான ஆயுதம் அதுதான். அஸ்திர சாஸ்திரத்திற்கே தநுர்வேதம் என்றுதானே பேர் இருக்கிறது? அதனால் இந்த மஹா மஹா ராணிக்கு தநுர் பாணங்களை முக்யமாகக் கொடுத்தது.

அவள் ஞான ஸாம்ராஜ்ய ராணி, மோக்ஷத்தைத் தருகிறவள் என்பதைத் தெரிவிப்பதற்காக எந்த இரண்டு தொலைந்தால்தான் ஞானம் வருமோ அந்த ராக-த்வேஷங்களைத் தொலைக்கிற பாசாங்குசங்களை மற்ற இரண்டு ஹஸ்தங்களில் கொடுத்திருப்பது.

பாதத்திலே நாமாக ஸமர்ப்பிக்க வேண்டிய மனோ இந்திரியங்களை அவள் தானாக இழுத்துக்கொள்வதைக் காட்டவே ஹஸ்தத்திலே தநுர்பாணங்களாக வைத்துக் கொண்டிருக்கிறாள் — ”குழந்தை ஏன் காலில் விழணும்?” என்று தூக்கிக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிற மாதிரி!

எந்த தநுர்பாணங்களைக் கொண்டே அம்பாள் ஞானமயமாயிருக்கும் ஈச்வரனை லோகக்ஷேமார்த்தமாக லீலாநுக்ரஹமூர்த்தியாக்க வேண்டுமென்று காமத்தில் திருப்பிவிட்டு சிவகாமஸுந்தரியானாளோ, அதே தநுர் பாணங்களால் ஜீவ ஸமூஹத்தின் மனஸையும் பஞ்சேந்த்ரியங்களையும் தன் கைப்பிடிப்பில் அடக்கிக் கொண்டு ரக்ஷிப்பதை இங்கே தியான ச்லோகம் மாதிரிச் சொல்லி ஞாபகப்படுத்தியிருக்கிறார். கடைசியில் பார்த்தால் இந்த தநுர்பாணம் பண்ணும் கார்யத்தையும் அவளுடைய சரணமே பண்ணி விடுகிறது என்று முடித்திருக்கிறார்!

என்ன அர்த்தமென்றால் — ஒவ்வொரு ஆயுதத்திற்கு ஒவ்வொரு சக்தி என்றால் அந்த சக்தி எல்லாமும் எங்கேயிருந்து வந்தது? அம்பாள் கொடுத்துத்தான் வந்தது. நாமெல்லாம் நமக்கு பலமில்லாமல், ஆயுத பலத்தால் ஜயிக்கிறோம். அம்பாளிடமோ, பலம் முழுக்க அவளிடமேதான்! அந்த பலத்தையே அவள் கையிலுள்ள ஆயுதங்கள் அவள் எப்படி, என்ன ரூபத்தில், அளவில் கொடுக்கிறாளோ அப்படி வாங்கிக் கொண்டு அவளுடைய ஸங்கல்பத்தைக் கார்யத்தில் பண்ணுகின்றன! அவள் ஸங்கல்பித்தாலே போதும், கார்யம் நடந்துவிடும் என்றாலும் லீலானந்தத்திற்காக கருவி, கரணங்களைக் கொண்டு நடத்திக் காட்டுவதாக விளையாடுகிறாள்!

அவளுடைய சரணத்தைப் பிடித்துவிட்டால் போதும்! கருணா ஸங்கல்பம் பண்ணி அபயமா, வரமா, பஞ்சேந்திரிய நிக்ரஹமா, மனோ நிக்ரஹமா எதுவானாலும் அநுக்ரஹித்து விடுவாள். இருந்தாலும் லீலையில் ஒப்புக்கு இதற்கெல்லாம் ஆயுதம், முத்திரை முதலியனவும் காட்டுவாள்; காட்டாமலும் இருப்பாள்; மற்றவர்கள் கையிலிருந்தால் என்ன அர்த்தமோ அதற்கு மாறாகவும் [தன் கையிலுள்ளபோது] காட்டுவாள்!

பரமசிவன் ஞானியாய் உட்கார்ந்துவிட்டால் லோகம் நடக்காதே, லீலை நடக்காதே என்பதால் காமனும் தோற்றுப்போன இடத்தில் தானே காமேச்வரியாகி அந்த தநுர் பாணங்களை எடுத்துக்கொண்டு ஸ்வாமியை வசீகரித்து லீலையில் சேர்த்தாள். தான் எடுத்துக் கொண்டது மட்டுமில்லை, அந்த சிவனுங்கூட அதே ஆயுதங்களை எடுத்துக்கொண்டு காமேச்வரன் என்ற ச்ருங்கார மூர்த்தியாகும்படிப் பண்ணினாள். அப்புறம் காமனையும் உயிர்பித்து அவனுக்கே ஜீவ ஸமூஹத்திடம் காமத்தை உண்டாக்கும் அதிகாரத்தை மறுபடியும் தந்தாள். தந்துவிட்டும் அந்த ஆயுதங்களை விடாமல் தானும் வைத்துக் கொண்டாள்.

ஆனால் இப்போது அவற்றின் கார்யத்தை மாற்றி விட்டாள். இந்திரியங்களையும் மனஸையும் விஷயாநுபோகத்தில் இழுத்துவிட்ட அந்த ஆயுதங்களைக் கொண்டே இப்போது அவற்றைத் தன்னிடம் இழுத்துக் கொள்ள ஆரம்பித்தாள். கர்மாநுஸாரம் காமாதி அநுபோகங்களை ஜனங்கள் பெற வேண்டியதற்காக மன்மதனிடம் அந்த ஆயுதங்கள் ஒரு மாதிரி கார்யம் பண்ண வைத்தவள், அவர்கள் கர்மாவையே பெருக்கிக் கொண்டு போகாமல் தன்னிடம் திரும்ப வேண்டிய ஸமயத்தில் அப்படி திருப்புவதற்கு உபகரணமாகவே அவற்றைத் தன் ஹஸ்தங்களில் தரித்துக் கொண்டாள்.

ஆக அவள் மன்மதனின் அஸ்திரங்களை வைத்துக் கொண்டிருந்தாலும், அவள் மன்மதாரி [மன்மத சத்ருவான பரமசிவன்] ஒருத்தருக்குத்தான் காமம் உண்டாக்குகிறாள்; மற்றவர்களுக்குக் காமத்திலிருந்து விமோசனமே தருகிறாள். ஞான மூர்த்தியான ஸ்வாமி விஷயத்தில் மாத்திரம் அவள் சிவகாமஸுந்தரியாக இருந்துகொண்டு, பக்தர்களுக்கு ஞானாம்பாளாக இருக்கிறாள். மன்மதன் கதையைப் பார்த்தாலோ இதே ஆயுதங்களால் அவன் ஜீவ ஸமூஹத்தைக் காமத்தில் தள்ளுகிறான்; ஆனால் ஈச்வரன் ஒருத்தனிடம் மட்டும் ஜம்பம் சாயாமல் அவனே பஸ்மமாகப் போனான்.

அம்பாளுடைய சதுர்புஜங்களையும் ஒட்டியாணத்தையும் ஸூக்ஷ்மமான இடுப்பையும் சரச்சந்த்ர வதனத்தையும் வர்ணித்துவிட்டு — இது அவயவ ஸ்வரூபம், இதை வர்ணித்துவிட்டு — தத்வ ஸ்வரூபமாக அவள் என்ன என்று எஸென்ஸ் பிழிந்து கொடுக்கிறார், ”புரமதிது: ஆஹோ புருஷிகா” என்று. ”த்ரிபுர ஸம்ஹாரனுடைய தற்பெருமையின் ஆகாரம் [வடிவம்]” என்பது இதற்கு மேலெழுந்த வாரியான அர்த்தம். ஆழமாகப் பார்த்தால் அவனுக்கு ஏற்பட்ட ‘நான்’ என்ற உணர்ச்சியின் உருவமே அவள். காமனுடைய தநுர் பாணங்களை வைத்துக் கொண்டிருப்பவளானாலும் இவளே பரப்ரஹ்மத்தினுடைய ஸாக்ஷாத் சித்சக்தியாக இருக்கிற ஞானாம்பாள் என்று அர்த்தம். இந்த விஷயம் முந்தியே சொன்னேன். 3

புரஸ்தாத் ஆஸ்தாம். ”புரஸ்தாத்” — எதிரில்; ”ஆஸ்தாம்” — இருக்கட்டும், விளங்கட்டும். ”சப்திக்கிற காஞ்சீ தாமாவைப் பூட்டிக் கொண்டுள்ள ஒடிந்து போகிற மாதிரியுள்ள இடுப்பும், சரத்கால பூர்ண சந்திரன் மாதிரியான முகமும், தநுர்-பாண-பாசாங்குசங்களை தரித்த ஹஸ்தங்களும் கொண்ட அம்பாள் — பரமசிவனின் பராஹந்தா ஸ்வரூபிணி — நம் எதிரில் விளங்கட்டும்” என்கிறார். நமக்கெல்லாம் முன்னால் நின்று அவள் காட்சி கொடுக்கவேண்டுமென்று ப்ரார்த்திக்கிறார். தனக்கு மாத்திரமில்லாமல் நம் எல்லோருக்கும் சேர்த்து ப்ரார்த்திக்கிறார். ”புரஸ்தாத் ஆஸ்தாம் ந:” என்கிற இடத்தில் ”ந:” என்பதற்கு ”நமக்கு” என்று அர்த்தம். ”எனக்கு” இல்லை; ”நமக்கு”.

அப்படி அவளை மனக்கண்ணின் முன்னால் நிறுத்திப் பார்ப்பதற்குத்தான் இந்த ச்லோகத்தை அழகான ஸ்வரூப வர்ணனையாகப் பண்ணிக் கொடுத்திருக்கிறார்.

அவளுக்கு வேறே சில லக்ஷணங்களும் உண்டு – சிரஸில் சந்த்ரகலை, லலாட நேத்ரம் [நெற்றிக்கண்], பஞ்ச ப்ரஹ்மாஸனம்…. முக்யமானதை மறந்து விட்டேன், செக்கச் செவேல் என்று ஜோதிச் சிவப்பாக வர்ணம் – இப்படி லக்ஷணங்கள் உண்டு. பின் ச்லோகங்களில் அந்த விஷயங்கள் வருகின்றன. அந்த விஷயங்கள் இல்லாமலே இந்த ச்லோகம் நம்முடைய ஸ்தோத்ர மூர்த்தி இன்னார் என்று ஸ்பஷ்டமாக உறுதி செய்துவிடுகிறது.

அந்த லலிதாம்பாளின் வாஸ ஸ்தானத்தை அடுத்த ஸ்லோகத்தில் ஆசார்யாள் வர்ணிக்கிறார்.

அபிராமி அந்தாதியும் இதே லலிதாம்பாளைக் குறித்ததுதான். [திருக்கடவூர்] அபிராமியம்மனைப் பார்த்தால் தநுர் பாண பாசாங்குசங்களோடு இருக்கமாட்டாள். சோழ தேசக் கோவில்களின் வழக்கப்படி வராபயம், புண்டரீகம், அக்ஷமாலையோடுதான் இருப்பாள். ஆனாலும் [அபிராமி] பட்டருக்கு அவள் தர்சனம் தந்தது இப்படித்தான் [லலிதாம்பிகையாகத்தான்]. அந்தாதியின் இரண்டாவது பாட்டிலேயே அவர் தியான ச்லோகம் மாதிரி வர்ணித்து தநுர் பாண பாசாங்குச ஹஸ்தையாகத் தான் சொல்லியிருக்கிறார்; முடிக்கிற கடைசிப் பாட்டிலும் இந்த லலிதாம்பா லக்ஷணத்தையே சொல்லியிருக்கிறார்.


1 பகவதி-கேரளம்; சாமுண்டேச்வரியும், சாரதாம்பாளும்-கர்நாடகம்; ஞானாம்பாளும், ப்ரமராம்பாளும், கனகதுர்கையும்-ஆந்திரம்; துளஜா பவாநி-மஹாராஷ்டிரம்; அம்பாஜி-குஜராத்; விந்தியவாஸினியும், அன்னபூர்ணியும்-உத்தரப்பிரதேசம்; காளி-வங்காளம்; காமாக்யா-அஸ்ஸாம்; வைஷ்ணவி-ஜம்மு; ஏனைய மூர்த்தங்கள்-தமிழகம்.

2 63-வதாக வரும் இச்சுலோகம் உரிய இடத்தில் விளக்கப்படும்.

3சிவத்தின் ஸ்பந்தனம் (அசைவு)” என்ற பிரிவு பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is சிவ, சக்திகளாக இன்றி சிவசக்தி ஒன்றாகவே
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  அம்பிகையின் இருப்பிடம்
Next