ஞானியின் ‘வெள்ளரிப்பழ முக்தி’ : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

இந்திரஜாலமான இந்த த்வைத உலகம் அப்படியே வீழ்ச்சியடையும்படியான ப்ரௌட ப்ரௌடமான அநுபூதியில் இருக்கும் ஒரு மஹான், ‘ப்ரௌடம்’ என்றால் முற்றிக் கனிந்தது என்று அர்த்தம். ‘ப்ரௌட ப்ரௌடம்’ முற்றிக் கனிந்து காம்பையும் விட்டு விட்டது. ஆனாலும் இந்த இந்த்ர ஜால த்வைத லோகத்திலிருந்து ‘அவர் ‘இற்று விழுந்தார்’ என்று சொல்வதுகூட அவ்வளவு ஸரியில்லை. அவருக்கு ஞானம் முற்றிக் கனிந்தவுடன் அவர் என்னமோ இற்றுப் போகிறது, விழுகிறது என்றெல்லாம்கூடப் பண்ணாமல் அவர் பாட்டுக்குத் தன்னுடைய அநுபூதி நிலையில்தான் ஸஹஜமாக இருந்தார். ஆனாலும் தானாகவே த்வைத லோக மாஜிக் – இந்த்ர ஜாலம் – அவரை விட்டு அந்தண்டை ஓடிவிட்டது. அதுவாகவே வீழ்ச்சியடைந்து விட்டது. ப்ரௌட ப்ரௌட நிஜாநுபூதிகளித த்வைதேந்த்ரஜால.*1

மாயையை விட்டு ஞானி விலகுகிறானென்றில்லாமல், ஞானியை விட்டே மாயை விலகுகிறது என்ற இந்த விஷயம் த்ரயம்பக மந்திரத்திலும் சொல்லியிருக்கிறது. ‘பந்தத்திலிருந்து உர்வாருகம் மாதிரி விடுபடணும்’ என்று முக்கண்ணனான பரமேச்வரனைப் ப்ரார்த்திக்கும் மந்த்ரம் அது.*2 பந்தம் என்பது ஸம்ஸார மாயை; அதுதான் த்வைத இந்திர ஜாலம். உர்வாருகம் என்பது வெள்ளரி.

வெள்ளரிப் பழம் மாதிரி விடுபட வேண்டும் என்றால் என்ன? சொல்கிறேன். அந்தப் பழம் முற்றிக் கனிந்த பிற்பாடும் மற்றப் பழங்கள் மரத்திலிருந்து விழுகிறாற்போல் விழுவதில்லை. என்ன காரணமென்றால் அது பழுப்பது, காய்ப்பது எல்லாமே மரத்தில் இல்லை; கொடியில்தான். வெள்ளரி என்பது கொடியே தவிர செடியோ மரமோ இல்லை. அந்தக் கொடியையும் பந்தல் போட்டு படர விடும் வழக்கம் கிடையாது. முழுக்க பூஸ்பரிசம் இருந்தால்தான் அந்தக் கொடியின் வளர்ச்சிக்கு நல்லதென்பதால் நிலத்திலேயேதான் படர விடுவது. அதனால் என்னவாகுமென்றால் ஒரு வெள்ளரிக்காய் நன்றாகக் கனிவதும் நிலமட்டத்தில்தான்; உசரக்க ஒரு கிளையிலோ, பந்தலிலோ இல்லை. இப்படிப் பழம் முற்றி கனிந்தவுடன் காம்பு தானே இற்றுப் போய்விடும். ஆனாலும் பழம் இருந்த இடத்திலேயேதான் இருக்கும். ஏனென்றால் அதுதான் விழமுடியாமல் நில மட்டத்திலேயே இருக்கிறதே! கொடி பாட்டுக்கு படர்ந்து கொண்டே இருக்கும். அப்போது பழம் எந்த இலைப் பாகத்தோடும் காம்போடும் ஒட்டிக் கொண்டிருந்ததோ அவையும் அந்தண்டை நகர்ந்து போய்விடும். அதாவது காம்புதான் இதை விட்டு விலகிற்றே தவிர இது விலகுவது, விடுபடுவது என்ற கார்யத்தைக் கூடப் பண்ணுதில்லை!

இதே போலத்தான் – ஞானி ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபடுவதென்பது, அது ஒரு விருக்ஷம் மாதிரியும், இவன் அதில் முற்றிப் பழுத்து விழுவது மாதிரியும், இவன் அதில் முற்றிப் பழுத்து விழுவது மாதிரியும் இல்லை. ஞானத்தில் அவன் பழுத்த பழமான பின்னும் தான் பாட்டுக்கு இருந்தபடியேதான் இருப்பான். வெளியிலே கார்யம் பண்ணினாலும் உள்ளே அசலமாக, சலனமேயில்லாமல் தான் இருப்பான். ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு அப்புறம் மோக்ஷம் என்று எங்கேயோ ஒரு லோகத்திற்குப் போவது என்ற கார்யம் அவனுக்கில்லை. த்வைதிகள் தான் அப்படி எங்கேயோ உள்ள ஒரு மோக்ஷத்திற்கு போவது. அத்வைத ஞானி இங்கேயே, இந்த லோகத்திலேயே, சரீரத்திலே இருப்பதாகத் தெரியும் போதே ஆத்ம ஸாக்ஷாத்காரம் பெற்றவன். அதுதான் விடுபட்ட நிலையான மோக்ஷம் என்பது. ‘விடுபட்ட’ என்றாலும் இவன் ஒன்றும் விடுபடும் கார்யம் பண்ணவில்லை. இவன் பண்ணியது ஆத்மாவே குறியாக விசாரம் செய்ததுதான். அதனால் ஸாக்ஷாத்காரம் வந்து, தான் ஆத்மாவே என்று தெரிந்து கொண்டு அதுவாகவே இருப்பான். அப்போது பந்தம், ஸம்ஸார மாயை என்பது அதுவே கத்தரித்துப் போய்விடும். த்வைதம் நகர்ந்து ஓடிப்போய்விடும். வெள்ளரிப்பழம் பூமியிலே இருப்பது போல இவனும் லோகத்தில் முந்தி எங்கே இருந்தானோ அங்கேயே ஜீவன் முக்தன் என்ற பெயரில் தொடர்ந்தும் இருந்து கொண்டிருப்பதாகத் தெரியும். ஆனாலும் லோகத்தில் தனி ஜீவ மனஸின் வாழ்க்கை என்று வேரோடிப் படர்ந்திருந்த ஒரு கொடியோடு இவனுக்கு முந்தி இருந்த பிணைப்பு இப்போது கத்தரித்துப் போயிருக்கும். இவனாக விடுபடாமலே, இவனை விடுவித்துவிட்டு, அது ஓடிப் போயிருக்கும்!

இதுதான் வெள்ளரிப்பழ முக்தி!

இது வழக்கமாக நான் சொல்வது. இதைக் கேட்டு விட்டு [இதற்கு] மேலேயும் ஒரு வித்வான் ஒன்று சொன்னார். ஆனால் ‘மேலே’ என்று இதோடு சேர்த்துக் கொள்ளும்படியாக அவர் சொல்லவில்லை. நான் சொன்னமாதிரியே, ‘வெள்ளரிப்பழ முக்தி’ என்பதற்கே இன்னொரு வித எக்ஸ்ப்ளனேஷனாக அவர் நினைத்து வந்ததைத்தான் சொன்னார். [அது] என்னவென்றால் – பழுத்த பழமாக இருந்த இடத்திலேயே கிடக்கும் வெள்ளரி அப்புறம் ஒருநாள் படாலென்று வெடித்து, என்ன ஆச்சு எங்கே போச்சு என்றே தெரியாமல் போய்விடுகிறதல்லவா? மற்ற பழங்கள் மாதிரி அது அழுகி, துர்கந்தம் பிடித்து, புழுத்து அற்றுப் போவதில்லையோல்லியோ? இப்படித்தான் ஞானம் என்பது ஒரு flash-ல் வந்தவுடனேயே மாயை அப்படியே பட்டென்று வெடித்துப் போய்விடுகிறது – கொஞ்சம் கொஞ்சமாக அழுகி கிழுகி அவிந்து போகாமல் ஒரே போட்டில் போன இடம் தெரியாமல் போய்விடுகிறதென்று தாம் அந்த மந்த்ரத்தைப் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணி வந்தததாக அவர் சொன்னார்.

“இருந்த இடத்திலேயே முக்தி என்று இதை நீங்கள் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணியிருப்பதே இன்னம் பொருத்தம் என்று இப்போது தெரிகிறது. ‘பந்தத்திலிருந்து விடுதலை’ என்று மந்திரத்தில் வருவது ஸம்ஸாரக் கொடி பழத்தை விட்டு விலகி அதற்கு விடுதலை தருவதற்கே பொருத்தமாயிருக்கிறது. பழம் வெடிப்பதை ‘விடுபடுவது’ என்பது அவ்வளவு பொருத்தமாகத்தானில்லை” என்றார்.

அவர் அப்படிச் சொன்னாலும் எனக்கு அவர் நினைத்து வந்த விளக்கத்திலும் ‘பாயின்ட்’ இருப்பதாகப் பட்டது. சித்தே [சற்று] யோசித்துப் பார்த்து நான் சொன்னதை அப்படியே வைத்துக் கொண்டு, அதற்கு மேலே அவருடைய அடிப்படைப் பாயின்டை – வெள்ளரிப் பழம் வெடித்துப் போய்விடுவதை – வேறே மாதிரி அர்த்தம் பண்ணிச் சேர்த்து, நான் சொன்னது ஜீவன் முக்தி, அவர் சொன்னது அதற்கப்புறம் வரும் விதேஹ முக்தி என்று கம்ப்ளீட் பண்ணினேன்.

லோகத்தில் ஒருத்தன் இருக்கிற மாதிரித் தோன்றும் போதே ஞானம் வந்து மாயை விலகி, தனி மனஸின் வேலை அடங்கிப் போய் ஆத்மாநுபவத்திலிருந்து கொண்டிருப்பது தான் ஜீவன் முக்தி. லோக மாயை இவனிடமிருந்து அப்போது கத்தரித்துப் போய்விடுவதைத்தான் வெள்ளரிக்கொடி பழத்திலிருந்து கத்தரித்துக் கொண்டு ஓடுவதற்கு உவமித்தது – அதாவது என் எக்ஸ்ப்ளனெஷன். இப்படி லோக மாயை போனாலும் அந்த ஜீவன் முக்தனுக்கு சரீரம் இருக்கிறது. அவனுக்கு சரீர ப்ரக்ஞை இல்லாவிட்டாலும் நாம் பார்ப்பதற்கு சரீரம் என்று ஒன்று தெரியத்தானே செய்கிறது? ப்ராரப்த கர்மா தீர்கிறவரை அதன் பலனாகப் பலபேர் அவனைப் பூஷிப்பது, தூஷிப்பது, வியாதி வக்கைப் படுவது, நல்லாரோக்யம் காண்பது முதலானவற்றுக்கு ஆஸ்பதமாக அந்த சரீரமிருக்கிறது. மனஸிலே அவன் இவற்றுடைய நல்ல – கெட்ட பாதிப்பு எதையும் அநுபவிக்காவிட்டாலும், கர்ம தர்மத்திற்காக அந்த சரீரமாவது அவற்றுக்கு target -ஆக [இலக்காக] ப்ராரப்தம் தீர்ந்து முடியும்வரை இருந்து கொண்டுதானிருக்கும். (ஞானி-ப்ராரப்தம் பற்றி வேறு அபிப்ராயங்களிருந்தாலும் பொதுவான அபிப்ராயம் இதுதான். அதையே வைத்துக் கொண்டு சொல்கிறேன்.) கொடியிலிருந்து பிரிந்த பின்னும் வெள்ளரிப் பழம். தன்னுடைய ரூபம் இருக்கிறபடியே இருப்பதுபோல லோகபந்தம் போன அப்புறமும் ஜீவன் முக்தன் ஒரு சரீரத்தோடு இருந்து கொண்டிருக்கிறான். பிற்பாடு ஒருநாள் – அவனுடைய ப்ராரப்தம் முழுசாகத் தீர்ந்து போகும் நாள் – வரும்போது அவனுடைய சரீரம் மரணமடைகிறது. அதுதான் விதேஹ முக்தி தேஹத்திலிருந்து கொண்டே அவன் மாயை விலகி ஆத்மாவை அநுபவித்து வந்தது ஜீவன் முக்தி. அப்போது மனஸின் பந்தம் போனாற்போலவே இப்போது தேஹ பந்தமும் போய் மரணம் ஏற்படுவதால் இது வி-தேஹ முக்தி. ஞானியான அப்புறமும் அவனுக்கு இருந்த ப்ராரப்த கர்மா இப்போது அடியோடு இல்லாமல் வெடித்து விட்டது.

அந்த வித்வான் நினைத்த மாதிரி இல்லாமல் இதிலும் [வெடிப்பதிலும்] பந்த மோசனம் இருக்கிறது. பழத்தை அதன் ரூபம் பந்தப்படுத்தத்தானே செய்கிறது? ஞானிக்கு என்னதான் பந்த உணர்ச்சி இல்லாவிட்டாலும், தேஹம் என்று இருக்கும் வரையில் அதை வைத்துக் கொண்டு நடப்பது, அதற்கு ஓய்வு கொடுப்பது, ஆஹாரம் போடுவது, குளிப்பது, இயற்கைக் கடன் தீர்ப்பது என்றெல்லாம் பல செய்யும்படி இருப்பது நம்முடைய பார்வையிலாவது அவனுக்குமுள்ள பந்தமாகத்தானே தெரிகிறது? மரணம் என்று நமக்குத் தெரியும் அவனுடைய விதேஹ முக்தியிலேயே – இந்த தேஹ பந்தம் போகிறது. நமக்கெல்லாம் இந்த ஸ்தூல தேஹம் செத்த அப்புறமும் ஸூக்ஷ்ம தேஹம் இருக்கவே செய்யும். அதுதான் லோகாந்தரங்கள் போய் ஸ்வர்க – நரக – பித்ரு லோகாதிவாஸங்களை அநுபவிப்பது. அப்புறம் மறுபடி இன்னொரு ஜன்மாவில் இன்னொரு தேஹத்தில் புகுந்து கொள்வது. ஞானிக்கு இப்படி ஸூக்ஷ்ம சரீரமென்று ஒன்றில்லை; லோகாந்தர ப்ராப்தி, புனர் ஜன்மா ஆகியவை இல்லாமல், இந்த தேஹத்தின் மரணத்தோடேயே ஸகலமும் முடிந்து போகின்றன. நமக்கு அவை ஏற்படக் காரணம் கர்ம பந்தமே. கர்மாவினாலேயே அதற்கேற்றபடி ஸ்வர்க – நரகம் போவது, மறுபடி பிறப்பது என்று நமக்கு ஏற்படுகிறது. ஞானிக்கோ ப்ராரப்தம் தீர்ந்து தேஹம் செத்து விழுகிறபோது கர்மமும் முழுக்கத் தீர்ந்து விடுகிறது. அதாவது ஸ்தூல தேஹ பந்தம் என்ற ஒன்று விடுபடும்போதே, அதற்கப்புறமும் ஸூக்ஷ்ம தேஹ பந்தம் என்பதில்லாமல், அப்போதே ஸூக்ஷ்ம தேஹத்தையும் கூடச் சேர்த்துக் கொண்டு பட்டென்று சாவோடு அப்படியே போய் விடுகிறது; கர்ம பந்தம் துளிக்கூட பாக்கியில்லாமல் அப்படியே போய் விடுகிறது. இப்படி traceகூட இல்லாமல் அவை பட்டென்று போய்விடுவதற்கு வெள்ளரிப்பழம் பட்டென்று வெடித்து, என்னவாச்சு என்றே தெரியாமல் மறைந்துவிடுவது ஸரியான உபமானம்தானே?

மனஸின் பந்தம் போய் ஏற்படும் ஜீவன் முக்தி: கொடி கத்தரித்துப் போய் பழம் அப்படியே கிடக்கும் நிலை. ப்ராரப்த கர்ம பந்தமும் – அதிலேயே அடக்கமான தேஹ பந்தமும் – வெடித்துப் போய் ஏற்படும் விதேஹ முக்தி: கிடந்த பழம் வெடித்து இருந்த இடம் தெரியாமல் போய் விடுவது.

இன்னொருவித எக்ஸ்ப்ளனேஷன் கூடத் தோன்றிற்று! ஜீவன்முக்தர்களான ஞானிகளில் சில பேர் – நம்முடைய ஆசார்யாள், மாணிக்கவாசகர் போன்றவர்கள் – ஜீவனம் முடிந்து, அதாவது தேஹத்திற்கான ஆயுஸ் முடிந்து மரணமடைந்து, விதேஹமுக்தர்களாகும்போது அந்த தேஹம் ரோகத்தினால் அழுகி, துர்கந்தமெடுத்து புழுத்து இழுத்துக் காலமானதாக இல்லை. அவர்களுடைய தேஹம் ஜீர்ணமடைந்து சவமாக ஆவது என்றில்லாமல் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும்போதே என்னவாச்சு எங்கே போச்சு என்றே தெரியாமல் அகண்டாகாரத்தில் அப்படியே மறைந்து விட்டதாக இருக்கிறது.

வெள்ளரிப்பழம் வெடித்து இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடுவது இந்த மாதிரித்தான் – அல்லது, அந்த மாதிரி தான் இது – என்று வைத்துக் கொள்ளலாம். அந்த மந்த்ரத்தில் முக்தி தரும் த்ரயம்பகேச்வரனை ஸுகந்தமுள்ளவன் என்றும் புஷ்டியை விருத்தி செய்கிறவனென்றும் சொல்லியிருக்கிறது. வெள்ளரிப்பழம் ஜீர்ணித்துப் போகாமல் நல்ல புஷ்டியுடனும், துர்கந்தமெடுக்காமல் ஸுகந்தமாகவும் இருந்துகொண்டே பட்டென்று வெடித்து, இல்லாமல் போய்விடுவது போல மேலே சொன்ன ஞானிகளின் சரீரத்திற்கும் ஏற்படுவதாகச் சொல்லலாம். வெள்ளரி விஷயத்தில் அது வெடிப்பதால் சத்தம் எழும்பும். இந்த மஹான்கள் விஷயத்தில் சத்தமாகச் சொல்லாமல், ஜ்யோதியோடு ஜ்யோதி கலந்தது என்று சொல்கிறார்கள். அதாவது ஒலிக்குப் பதில் ஒளியைச் சொல்கிறார்கள். அப்படி ஜ்யோதியாகத் தெரிவதும் ஒரு க்ஷணந்தான். உபசாரத்துக்காக அப்படித் தெரிவது. அப்புறம் எங்கேயும் பரவிய அரூப நிலையான ப்ரம்மத்தின் அகண்டாகாரந்தான். அவுட் வாணம் விடும்போது வெடிச்சத்தம், ஜ்யோதிப்ரகாசம் இரண்டும் இருக்கிறதென்றால், வெள்ளரி ‘அவுட்’ ஆகிறபோது வெடிச்சத்தம் மட்டும் இருக்கிறது; மஹான்கள் ‘அவுட்’ ஆகும் போது ஜ்யோதி ப்ரகாசம் மட்டும் இருக்கிறது! ஞானத்தில் போய்தான் என்றில்லாமல் உசந்த பக்தியிலேயே போய் நந்தனார், மீராபாய் போன்றவர்களும் இப்படித்தான் உடம்பைச் சவமாக விட்டுப் போகாமலே, அப்படியே சரீரம் மறைந்து அகண்டாகாரமானதாக இருக்கிறது. இதையும் வெள்ளரிப்பழ முக்தியாக உவமிக்கலாம்.

“ஜீவன் முக்தி, விதேஹ முக்தி என்ற இரண்டு நிலை இருப்பதில் மாயா பந்தம் தெறித்து ஏற்படும் ஜீவன் முக்திக்கு என் எக்ஸ்ப்ளனேஷனை வைத்துக் கொள்ளலாம்; அதற்கு மேலே சில மஹா ஞானிகள், மஹா பக்தர்கள் விஷயத்தில் ஏற்பட்டுள்ள விதேஹ முக்திக்கு உங்கள் எக்ஸ்ப்ளெனேஷனை வைத்துக் கொள்ளலாம்” என்று அவரிடம் சொன்னேன். பந்தயத்தில் ‘ப்ரைஸ் ‘வைத்தால் சில ஸமயம் இரண்டு பேர் ஜயித்ததாகத் தீர்ப்பு பண்ணி இரண்டு பேருக்கும் அதைப் பிரித்துத் தருகிறார்களல்லவா? அப்படி எங்கள் இரண்டு பேருக்கும் ‘ப்ரைஸ்’ கொடுத்துக் கொண்டேன்!….


*1 ஆசார்யாளின் ‘ப்ரௌடாநுபூதி’த் தொடக்கம்.

*2 ரிக் வேதம், மண்டலம் vii. 59.12

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is அன்னை-தந்தையர் பெருமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  குருவின் பிரியமும் தியாகமும்
Next