உஷா பத்திரிகைக்கு அளித்த பேட்டி

உஷா பத்திரிக்கைக்கு சுவாமிகள் அளித்த பேட்டி

மதங் கொண்ட மனிதன்தான் மதத்தை உருவாக்குகிறான். மனிதனுக்கு

மாத்திரமே மதம். இறைவனுக்கு மதங்கள் இல்லை. அவன் ஒளிமயமானவன்

என்று கூறப்படுகிறதே..?

இறைவன் ஒளிமயமானவன்தான். ஆனால் அதே இறைவன்தான் ¢

மதங்களையும் தோற்றுவித்து இருக்கிறான். ஆனால் மதம் என்ற சொல்லுக்கு

இரண்டு பொருள் உண்டு. மதத்துக்கு முதல் அர்த்தம் - சம்மதம் என்பது தான்.

அது மனிதனுக்குத் தேவை. இறைவன் அதைத்தான் தோற்றுவித்தான்.

யானைக்குப் பிடிப்பது போன்ற மதம் இருக்கிறதே அதுதான் தவறானது. ஆகவே

மனிதனுக்கு மதம் இன்றியமையாதது. இறைவனுக்குச் சம்மதமானது.

அன்புகாட்டுதல், சேவை செய்தல், பக்தி செய்தல் இவை போன்ற நல்ல

செயல்களுக்குச் சமயம் உறுதுணையாக இருக்கிறது. சமுதாய, உணர்வோடு சமூக

நோக்கோடு வாழ்வதற்குச் சமயம் அவசியமானது. சமயத்தை அடிப்படையாகக்

கொண்டு உருவான மதம் தேவையானதுதான். ஆனால் மதம் பிடித்துத் திரியும்

மதம் தேவை இல்லாதது.

மதம் பிடிக்கும் மதத்தை இறைவன் உருவாக்கினானா?

சமயத்தை - நல்ல ஒழுக்கத்தை உருவாக்கக் கூடிய மதத்தை இறைவன்தான்

படைத்தான். தன் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்

இறைவன் படைத்தான்.

ஜனங்களுக்குள் அரிஜனங்களைப் பிரித்துப் பார்க்க மாட்டேன் என்று கூறிச்

சேரிக்குள் நடந்து செல்லும் சித்தாந்தவாதி தாங்கள் என்று சொல்லப்படுகிறது

அப்படி இருக்கும் தாங்கள் மதங்களைப் பிரித்துப் பார்ப்பீர்களா?

மனங்களைத்தான் பார்க்க வேண்டும். மதங்களைப் பார்க்க வேண்டாம் என்ற

கருத்தைப் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?

எங்கெல்லாம் மனிதர்கள் கஷ்டப்படுகிறார்களோ, எங்கெல்லாம்

தாழ்த்தப்படுகிறார்களோ, எங்கெல்லாம் தங்கள் உரிமைகளை இழந்து

விடுகிறார்களோ அங்கெல்லாம் அவர்களுக்குச் சேவை செய்வது எங்களைப்

போன்ற ஒழுக்கமுடையவர்களின் தலையாய கடமையாகும். அந்த வகையிலே

நம்முடைய இந்து சமயத்திலே, கஷ்டப்பட்டு, தாழ்த்தப்பட்டு வழிபாட்டிற்குக் கூட

வழியில்லாமல் இருக்கும் பல மனிதர்களுக்காக, உதவி செய்வதற்காத்தான்

ஜனகல்யாண் போன்ற எங்கள் ஸ்தாபனங்களை வைத்திருக்கிறோம். ஆனால்

மற்ற மதங்கள் எல்லாம் வேறு நோக்கத்தோடு செய்கின்றன. அவர்கள்

சாமியைத்தான் கும்பிட வேண்டும். அவர்களுடைய மதத்தில்தான் இணைய

வேண்டும். அப்போதுதான் உணவு, உடை, வேலை வாய்ப்பு இவைகளுக்கு உதவ

முடியும் என்று சொல்கின்றன. இதில்தான் பல பிரச்னைகள் உருவாகின்றன..

ஆனால் எங்கள் நிலையிலே நாங்கள் மதங்களைப் பார்க்கவில்லை. மாற்று

மதத்தவர்களும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

மூஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் எல்லோருக்கும் உதவுகின்றோம். எங்களுக்கு

மதவேற்றுமை இல்லை. மனித வேற்றுமை இல்லை. இதையே நாங்கள் நினைப்பது

போல் மாற்று மதத்தவர்களும் நினைப்பது நல்லது என்பதுதான் எங்கள் பரிபூரண

ஆசையாகும்.

மத சகிப்புத்தன்மை உடையது இந்துமதம் மாத்திரமே என்று கூறப்படுகிறது.

மற்றவர்கள் மன வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருப்பதற்குத் தாங்கள்

மேற்கொள்ளும் முயற்சி என்ன?

மத சகிப்புத் தன்மை என்பது ஒரளவுக்கு அவசியமானதுதான்.

இன்றியமையாததுதான். அனால் எந்த அளவுக்கு என்று ஒரு வரைமுறை

இருக்கிறது. அதுவரை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். அந்தக் காலத்திலே

திரேதாயுகம் போன்ற பல யுகங்களிலே மதச் சகிப்புத்ன்மை இருந்ததுதான்.

இறைவனே வந்து அதற்கு பல வழிகளை ஏற்படுத்தித்தந்தான். சூழ்நிலையும்

சரிக்கட்டித் தந்தது. இன்று எங்களைப் போன்றவர்களால் தான் சரிகட்ட வேண்டிய

சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

விஸ்வஹிந்து - பரிஷத், பாரதீய ஜனதா இவைகளின் போக்குக் குறித்து..?

மற்ற மதத்தலைவர்கள் பல சலுகைகளை ஏற்படுத்திக் கொண்டு பலன்களை

அடைகிறார்கள். நாடு சுதந்திரம் பெற்று 40 ஆண்டுகளுக்கு மேலாகியும். இன்னும்

அந்த சலுகைகளை பெற்றுக்கொண்டு அதன் மூலம் பல தவறான செயல்களையும்

செய்து வருகிறார்கள். அரசாங்கமும் அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

அதனால் இந்துக்களுக்கு ஒரு பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருக்கும்

ஸ்தாபனங்கள்தாம் அவைகள்.

இந்தியாவுக்கு மத ஆட்சி தேவை என்று நீங்கள் விரும்புகிறீர்களா?

எந்த நாடானாலும் சமயப் பற்று இல்லாமல் இருந்தால் அந்த நாடு சரியாக

இருக்காது என்பதற்கு தற்போதைய நிலை ஒரு எடுத்துக்காட்டு. சமயப்பற்று உள்ள

நாடுகள் அதிகம் பிரியாமல் ஒற்றுமையாக இருக்கின்றன. அமெரிக்கா, பிரான்சு,

ஜப்பான் போன்ற நாடுகள் இதற்கு உதாரணங்கள். சமயப்பற்று வேண்டாம் என்ற

சொன்ன ரஷ்யா, யூகோஸ்லோவியா போன்ற நாடுகள் பிரிந்து விட்டன. சீனா

போன்ற கம்யூனிஸ்ட் நாடுகள் கூட பிரிவுக்குத் தயாராக இருக்கின்றன. எனவே

சமயத்தால் தான் ஒற்றுமையாக நாடுகள் இருக்க முடியுமே தவிர, வெறும்

பொருளாதார கொள்கையால் மட்டுமே இருந்து விட முடியாது என்பதற்கு இன்று

உலக அளவில் பல ஆதாரங்கள் இருக்கின்றன.

சமய ஒற்றமையை வலியுறுத்தாத ரஷ்யா போன்ற நாடுகள் சிதறுண்டது போல

சமய ஒற்றுமை இல்லாவிடில் இந்தியாவும் சிதறண்டு போகும் என நீங்கள்

கருதுகிறீர்களா?

ஒரு நாளும் இந்தியா சிதறண்டு போனதாக வரலாறே கிடையாது.

சிதறுண்டும் போகாது. இன்றைக்குச் சமயத்தின் பேரால் சண்டைதான் நடக்கிறதே

தவிர சிதறுண்டு போகும் அளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை.

சிதறுண்டு போகக் கூடாது என்கிறீர்களா?

சிதறுண்டு போகவே போகாது.

மக்கள் உணர்ச்சிகளைத் தூண்டி அயோத்திப் பிரச்னையை விஸ்வரூபமாகக்

காட்டுவதும் பின்னர் சில அரசியல் காரணங்களுக்காக அதை ஆறப்போடுவதும்,

மீண்டும் தூண்டி ரத்தம் சிந்த மோத விடுவதும்தான் பாரதிய ஜனதா - விஸ்வ

ஹிந்து பரீஷத் இவைகளின் போக்காக இருக்கின்றன - என்ற குற்றச் சாட்டைப்

பற்றி தங்கள் கருத்து என்ன?

எந்தக் கட்சியானாலும் இன்றைக்கு அயோத்தி பிரச்னை ஓட்டுக்காகப்

பயன்படுத்துவதால் அதைப் பற்றி நாம் பேச வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

ராமர் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்பார்கள். அப்படி இருக்கையில்

ராமனுக்கு அயோத்தியில் சிலை வைக்க இடம் கேட்கலாமா? அசைய முடியாத

தேரொன்றை அசைக்க வடம் பிடிக்கலாமா?

சீதை காட்டுக்குப் போகும் போது சொன்ன வார்த்தை இது. காடானாலும்

ராமன் இருக்கும் இடம் அயோத்தி என்று கருதச் சொன்ன வாசகம் இது. ஆனால்

இன்றைக்கு அயோத்தி ராமர் பிறந்த இடம்தான். அதை யாரும் மறுக்க முடியாது.

சாமான்யமானவர்கள் இந்த இடத்திலேயே இன்றைக்கு நினைவுச் சின்னங்கள்

ஏற்படுத்துகிறோம். அரசியல் வாதிகள் ஆன்மீகவாதிகள் எல்லோருக்கும்

நினைவுச் சின்னங்கள் வைக்கிறோம். வள்ளலார் பிந்த இடம், இறந்த இடம்

எல்லாமே நினைவுச் சின்னங்களாகத் தானே இருக்கின்றன. இன்று போய் நாளை

வா - என்று சொன்ன சமாதானப்பிரியரான ராமனுக்கு நினைவுச் சின்னம் வைக்க

அந்த ராமனிடமே சண்டை போடும் அரசியல்வாதிகளைப் பற்றி நாம் என்ன

சொல்ல முடியும்? நாம் என்ன சமாதானம் செய்ய முடியும்?

அனுமாரின் இதயத்தைக் கிழித்தால் ராமர் இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

அப்படிப் பார்த்தால் பக்தகோடிகளின் இதயத்தில் எல்லாம் இருக்கும் ராமருக்கு

எல்லாமே அயோத்தி தானே?

எல்லா இடத்திலேயும் இருப்பார். அந்த இடத்தில மட்டும் இல்லாமலா

இருப்பார். அங்கேயும்தான் பார்ப்போமே...

எல்லாருக்கும் வனவாசம் போக வேண்டும் என்ற பிரச்னை வரவில்லை.

ராமருக்குத்தான் வந்தது. அதுமாதிரி எல்லாருடைய நினைவுச் சின்னத்திலும்

பிரச்னை இல்லை. ராமருடைய நினைவுச் சினன்த்திலேதான் பிரச்னை வருகிறது.

ஆகவே மேலும் மேலும் இதில் பிரச்னை தேவைதானா?

இது பிரச்னையே இல்லை. அரசியல்காரர்கள் எல்லோரும் இன்றைக்கு

விலகிவிட்டால் அயோத்தியில் பிரச்னையே இல்லாமல் முடிந்து விடும்.

ஆன்மீகவாதிகள் சமாதானமாகப் போகக்கூடிய சூழ்நிலை இன்றைக்கும்

இருக்கிறது.

அரசியல்வாதிகள் மாத்திரமே இடையூறாக இருந்து இந்தப் பிரச்னைகைளை

வளர்க்கிறார்கள் என்று கூறகிறீர்கள்?

ஆமாம். குந்தகமாக இருக்கிறார்கள்.

அதாவது ஒட்டு வாங்குவதற்கு அரசியல்வாதிகள் அயோத்தியை ஒரு

எந்திரமாகப் பயன்படுத்துகிறார்கள்?

எல்லாக் கட்சிக்காரர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஒரு

கட்சிக்காரர்கள் மாத்திரம் இல்லை.

விஸ்வ ஹிந்து பரீஷத்..?

நாம்தான் எல்லாக் கட்சிகளையும் வைக்கிறோமே..

மனிதனை மனிதனாக நீங்கள் மதிப்பது மாதிரி மற்றவர்களும் மதிக்க வழி என்ன?

அதுக்கு நிறைய ஜன கல்யாண் மூலம் செய்கிறோம்..

வருணாசிரமத்தை ஒழிக்க என்ன வழி?

வருணாசிரமத்தை ஒழிப்பது கஷ்டம். சமுதாயத்தில் மாறுதல் வந்தால்தான்

அது நடக்கும்.

அந்த சமுதாயமாற்றத்தை நோக்கி சமுதாயம் போய்க் கொண்டு இருக்கிறதா?

போய்க் கொண்டுதான் இருக்கிறது.. இருபது வருஷத்துக்கு முன்னாடி எங்க

மடத்துக்கு அந்தணர்கள் மட்டும் அதிகம் வரவார்கள். இன்றைக்கு எல்லாருடைய

வரவும் அதிகரித்து இருக்கிறது. அவர்கள் வரவும் குறையவில்லை. இது சமுதாய

மாற்றம். இதைப் போலத்தான் எல்லா கிராமங்களிலும் சமுதாய மாற்றம்

இருக்கிறது.

கத்தியைத் தூக்கி வெட்ட வரும் முரடர்கள் கூட உங்கள் மாதிரி சாதுக்களைக்

கண்டால் அவர்கள் சாதுவாகி விடுவார்கள் என்பார்களே..?

அதுவெல்லாம் அந்தக் காலம். இப்போது சாதுக்களே வெட்டிக் கொண்டு

இருக்கிறார்கள்.

பம்பாயில் சாதாரண ஒரு சேரிக்குள் போய் கோயிலில் தீபாராதனை

பண்ணுகிறீர்கள். அப்படி இருக்கையில் ஒரு மசூதிக்குப் போய் நீங்கள்

ஆராதனை ஏன் பண்ணக் கூடாது.

அவர்கள் ஏற்கமாட்டார்கள். எனவே நாமும் போக முடியாது. அவர்கள்

ஏற்றுக் கொண்டால் நாம் ஆசிர்வதிக்கலாம். அப்படி இல்லை என்றால் அது ஒரு

வீணான முயற்சியாகத்தான் இருக்கும்.

அரசியலில் ஒரு தூய்மையும் ஒரு ஒழுக்கமும் வரவே வராதா?

என்றைக்கு மக்கள் தேர்தலின் போது விழித்துக் கொள்கிறார்களோ

அன்றைக்குத்தான் நல்லாட்சி மலரும். மற்றவர் சொல்லுவதால் எல்லாம் நல்லாட்சி

வந்துவிடாது.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is புதிய பார்வை பத்திரிகைக்கு அளித்த பேட்டி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  குமுதம் ஸ்பெஷல் பத்திரிகைக்கு அளித்த பேட்டி
Next