மதங்களின் ஒற்றுமை : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

எல்லா சமயங்களும் கடவுளை வழிபட ஏற்பட்டனவே ஆகும். எல்லா சமயங்களும் கடவுள் ஒருவர் என்றே சொல்கின்றன. ஒருவரேயான அந்தக் கடவுள் எந்த சமயத்தின் மூலம் வழிபட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார். எனவே, எவருமே தாங்கள் பிறந்த மதத்தைவிட்டு இன்னோரு மதத்தைத் தழுவ வேண்டியதில்லை.

கோயில், சர்ச், மசூதி, விஹாரம் முதலிய கட்டடங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படலாம். உள்ளே இருக்கிற மூர்த்தி அல்லது சின்னம் மாறுபடலாம். ஒவ்வொன்றிலும் சடங்குகளும் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் அநுக்ரஹம் செய்கிற பரமாத்மா மாறவில்லை. ஒவ்வொரு தேச ஆசாரத்தையும், ஒவ்வொரு ஜனக்கூட்டத்தின் மனப்பான்மையும் பொறுத்துப் பல்வேறு சமயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் ஒரே பரமாத்மாவை அவரவர் மனோபாவப்படி பக்தி செய்து, அவரோடு சேருவதற்கு வழி செய்பவையே. எனவே எவரும், தங்கள் மதத்தை விட்டுவிட்டு இன்னொன்றுக்கு மாறவேண்டியதில்லை. இப்படி மதம் மாறுகிறவர்கள் தாங்கள் பிறந்த மதத்தைக் குறைவு படுத்துவது மட்டுமின்றி, தாங்கள் சேருகிற மதத்தையும் குறைவு படுத்துகிறார்கள்; கடவுளையும் குறைவு படுத்துகிறார்கள்.

‘தங்களது பிறந்த மதத்தில் குறை தோன்றியதால்தான் ஒருவர் அதை விடுகிறார். ஆனால் புதிதாக சேருகிற மதத்தையும் அவர் குறைவுபடுத்துகிறார் என்று ஏன் ஸ்வாமிகள் சொல்கிறார்?’ என்று உங்களுக்குத் தோன்றலாம். சொல்கிறேன்; கடவுள் எல்லா மதங்களுக்கும் பொதுவானவர் என்ற எண்ணம் இல்லாமல் அவரைக் குறுக்குவதால்தானே ஒரு மதத்தைவிட்டு இன்னொன்றில் சேருகிறார்கள்? தங்கள் மதத்துக் கடவுள் பிரயோஜனமில்லாதவர் என்று நினைத்து இன்னோரு மதத்துக்குத் தாவுகிறார்கள். மாறுகிற புதுமதக் கடவுளாவது எல்லோரையும் தழுவுவதாக நினைக்கிறார்களா? இல்லை. அப்படி நினைத்தால் மாறவே வேண்டாம். இவர்கள் தாங்கள் பிறந்த மதத்திலேயே இருந்து வழிபட்டாலும், இப்போது இவர்கள் மாறுகிற மதத்தின் கடவுள் இவர்களுக்கு அநுக்கிரகம் செய்வார் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இல்லாததால்தானே மதமாற்றத்துக்கே அவசியம் ஏற்பட்டது. அதாவது தாங்கள் மாறுகிற புது மதத்துக்கும், அதன் கடவுளுக்கும்கூட இவர்கள் குறுகலான எல்லை கட்டி விடுகின்றனர். ஒரு மதத்திடம் கௌரவ புத்தி இருப்பதாக நினைத்து அதற்கு மாறுகிறபோதே அதை வாஸ்தவத்தில் அகௌரவப்படுத்தி விடுகிறார்கள்.

மற்ற மதங்களும் ஹிந்து மதத்துக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம், நம்முடைய ஹிந்து மதம் ஒன்று தான். “இது ஒன்றே மோட்ச மார்க்கம்” என்று சொல்லாமலிருக்கிறது. நம்முடைய வைதீக மதம்தான் பிறரைத் தன் மதத்துக்கு மாற்றுவது என்பதே கிடையாது. ஏனென்றால் ஒரே பரமாத்மாவை அடைவதற்கான பல மார்க்கங்களே பல மதங்களும் என்று நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். ஹிந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் இந்த விசால மனப்பான்மையைக் குறித்து பெருமைப்பட வேண்டும். வேதம் ‘ஒரே ஸத்தியத்தைத்தான் ஞானிகள் பல பெயர்களில் சொல்கிறார்கள்’ என்கிறது. கீதையில் பகவான், ‘எவன் எந்த விதத்தில், எந்த ரூபத்தில் வழிபட்டாலும் அவனுடைய சிரத்தையை நானே விருத்தியாக்கி அவனை அதே வழிபாட்டில் நிலைப்படுத்துகிறேன்’ என்கிறார். ஆழ்வார் ‘அவரவர் தமதம தறிவறி வகைவகை அவரவர் இறையவர்’ என்கிறார். இதனால்தான் மற்ற மதங்களில் செய்வதுபோல் மதமாற்றம் செய்வது (proselytisation) , அதற்காகத் தண்டிப்பது (Persecution, Crusade, Jehad) முதலான போர்களில் படையெடுத்துச் சென்று நிர்பந்தமாகத் தங்கள் மதத்துக்கு மற்றவரைத் திருப்புவது முதலான காரியங்களில் ஹிந்துக்கள் என்றுமே இறங்கியதில்லை. நம்முடைய நீண்ட கால சரித்திரமே இதற்குச் சான்று. சகல சரித்திர ஆராய்ச்சிகாரர்களும் ஒப்புக் கொள்கிற விஷயம் இது. தூரக்கிழக்கு (Far East) முதலான தேசங்களில் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம் முதலிய ஹிந்து ராஜ்யங்கள் ஏற்பட்ட போதுகூட நிர்பந்த மத மாற்றமே இல்லை (Forced Conversion) என்றும் நம் கலாச்சாரத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டு அந்நியர்களே நம் மதத்தைத் தாங்களாக எடுத்துக் கொண்டார்கள் என்றும் சரித்திரக்காரர்கள் சொல்கிறார்கள். அநேக சமயங்களில் வியாபாரம் முலமே நம் மத அம்சங்கள் பிற தேசங்களில் புகுந்தது என்றும், வாள் மூலம் அல்ல என்றும் சொல்கிறார்கள்.

என் அபிப்பிராயப்படி ரொம்பவும் ஆதி காலத்தில் லோகம் முழுவதிலும் வேத மதம்தான் இருந்தது. பிற்பாடு ஆங்காங்கே வெவ்வேறு மதங்கள் உண்டானாலும் நம் மதத்தின் அம்சம் குறைந்தபட்சம் இடிபாடுகளாக (Ruins) பழைய ஞாபகச் சின்னங்களாக (Relics) வாவது அங்கெல்லாம் இன்னும் காணப்படுகின்றன. இப்படி நான் சொல்வதை ஒப்புக் கொள்ளாத ஆராய்ச்சிகாரர்களும் நம் பரத நாகரிகத்தை மற்ற நாடுகளில் தாங்களாகவே விரும்பி ஏற்றும் கொண்டார்களேயன்றி பலவந்தத்தின் மீதல்ல என்று ஒப்புக் கொள்கிறார்கள்.

ஒருத்தனைப் புது மதத்துக்கு மாற்றுவது என்றால் அதற்கென ஒரு சடங்கு (Ritual) இருக்க வேண்டும். இப்போது ‘கன்வெர்ட்’ செய்கிற மதங்களில் எல்லாம் அப்படி ஒன்று—ஞானஸ்நானம் (Baptism) என்கிற மாதிரி ஏதாவது ஒன்று—இருக்கிறது. மற்ற எந்த மதத்தையும்விட மிக அதிகமான சடங்குகளை சொல்கிற ஹிந்து சாஸ்திரங்களைப் பார்த்தால், இப்படி நம் மதத்துக்கு மற்ற மதஸ்தன் ஒருத்தனை மாற்ற ஒரு சடங்கும் இருக்கக் காணோம். இதுவே நாம் மதமாற்றத்தை விரும்புகிறவர்கள் அல்ல என்பதற்கு அத்தாட்சி.

ரயிலடியில் பிரயாணிகள் வந்திறங்கியதும் ஜட்காக்காரன், ரிக்ஷாக்காரன், டாக்ஸிக்காரன் என்று பல பேர் வந்து சூழ்ந்து கொள்கிறார்கள். எவனுடைய வண்டியில் ஏறிக் கொண்டாலும் போகவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரலாம். வண்டிக்காரர்கள் கிராக்கி பிடிப்பதற்காகப் போட்டி போடுவதைப் தவறு என்று சொல்வதற்கில்லை. அது அவர்கள் பிழைப்பு. ஆனால் கடவுள் என்கிற ஒரே லக்ஷியத்துக்கு அழைத்துச் செல்வதற்காக வெவ்வேறு மதஸ்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு மதமாற்றத்தில் முனைவது அர்த்தமற்ற காரியம்.

நதியின் மேல் பாலம் போட்டிருக்கிறது. அதில் பல வளைவுகள் இருக்கின்றன. எல்லா வளைவுகளும் ஒரே அளவாகக் கட்டப்பட்டவைதாம். ஆனால் ஒவ்வொரு வளைவுக்கும் கிட்டத்தில் இருப்பவனுக்கு அந்தந்த வளைவே பெரிதாகவும், மற்றவை சின்னதாகவும் இருக்கும். இப்படியே அந்தந்த மதஸ்தர்களுக்கும் தங்கள் மதமே பெரிதாகத் தெரிவதால், பிறரை அதற்கு அழைக்கிறார்கள். ஆனால் எல்லா வளைவுகளும் ஒரே அளவுதான். யாரும் தாங்கள் பிறந்த மதத்தைவிட்டு விலகவேண்டியதில்லை.

மதங்களுக்கிடையே கோட்பாடுகளிலும், அநுஷ்டானங்களிலும் சில வித்தியாசங்கள் இருப்பதில் தவறில்லை. எல்லா மதங்களையும் ஒரே போல் ஆக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே மாதிரி ஆக்காமலே, எல்லா மதஸ்தர்களும் மனத்தில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம்; ‘யூனிஃபார்மிடி’ அவசியமில்லை. ‘யூனிடி’ இருப்பதே அவசியம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is சகல மதங்களுக்கும் பொதுவான பக்தி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  மதபோதகரின் யோக்கியதாம்சங்கள்
Next