மத போதகரின் யோக்கியதாம்சங்கள் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

இப்போது உலக நாடுகள் எல்லாவற்றிலும் உள்ள ஏராளமான தத்துவ ஆராய்ச்சிகாரர்களும் ஆத்ம சாதகர்களும் அத்வைதத்தையே பரம தத்துவமாக அங்கீகரிக்கிறார்கள். என்னை அத்வைத மதகுரு என்று சொல்கிறீர்கள். ஆனபடியால் அத்வைத சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வளவு பேர் இருப்பதற்குக் காரணம் அதன் சித்தாந்தத்தில் உள்ள சிறப்புதான் என்று நான் சொல்வேன் என்று எதிர்பார்ப்பீர்கள்.

ஆனால், எனக்கு நானே யோசித்துப் பார்க்கிறேன். அத்வைத சித்தாந்தம் ஒன்றை மட்டும் தான் சகல ஜனங்களும் பின்பற்றுகிறார்களா? உலகில் எத்தனையோ சித்தாந்தங்களை, எத்தனையோ மதங்களை மக்கள் அநுசரிக்கிறார்கள். ஒரு தேசத்து மக்களே ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்துக்கு மாறவும் செய்கிறார்கள். புத்தரின் காலத்தில் வைதிக மதஸ்தர்கள் பௌத்தத்தில் சேர்ந்தார்கள். பிற்காலத்திலும் எத்தனையோ ஹிந்துக்கள் கிறிஸ்துவ மதத்திலும் முகம்மதிய மதத்திலும் சேர்ந்திருக்கிறார்கள். ஜைனர்கள் வைஷ்ணவர்களாக மாறி “புஷ்டி மார்க்கிகள்” என்று பெயர் பெற்றிருக்கிறார்கள். ஸ்ரீராமாநுஜர் காலத்தில் பலர் விஷிஷ்டாத்வைதிகளானார்கள். ஸ்ரீ மத்வரின் காலத்தில் பலர் மத்வ சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஸ்ரீ ஆதி சங்கரரின் காலத்தில் அவைதிக மதங்களான பௌத்தம், ஜைனம் முதலியவற்றுக்கு நலிவு ஏற்பட்டது. வைதிக மதத்தில் ஒரு பாகமாகிய கர்ம மார்க்கத்தை மட்டும் அநுசரித்து வந்தவர்கள் அவரது காலத்தில் பூரண வைதிகமான அத்வைதத்துக்குத் திரும்பினார்கள். ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த மதங்கள் பிற்பாடு ஏன் தவிடு பொடியாக வேண்டும்? இப்படியாக ஒரு சமயத்தை, சித்தாந்தத்தை ஏற்கிற சகல ஜனங்களும் அதன் தத்துவங்களை ஆராய்ந்து பார்த்து அதனால்தான் அதில் சேருகிறார்களா? அறிவாளிகள் வேண்டுமானால் சித்தாந்தங்களை எடை போட்டு அதில் சேரலாம். ஆனால், ஒரு மதத்திலுள்ள ஏராளமான பொது ஜனங்களைப்பற்றி இப்படிச் சொல்லலாமா? நான் அப்படிச் சொல்ல மாட்டேன்.

பொது ஜனங்கள் தத்துவத்துக்காகவே ஒரு மதத்தை ஏற்கிறார்கள் என்றால், அவர்களிடம் ‘உங்கள் மத சித்தாந்தங்களைச் சொல்லுங்கள்’ என்று கேட்கும்போது அவர்களுக்குச் சொல்லத் தெரியவேண்டும். மற்ற சித்தாந்தங்களை விட இவை சிரேஷ்டமானவை என்பதற்கு அவர்களுக்குக் காரணம் சொல்லத் தெரிய வேண்டும். ஆனால், வாஸ்தவத்தில் எந்த மதத்திலும் இருக்கிற ஏராளமான பொது ஜனங்களுக்கு அந்தந்த மதத்தைப் பற்றிய கொள்கைகள் இப்படி விவாதிக்கிற அளவுக்கு நுணுக்கமாகத் தெரியாது. நம்முடைய ஹிந்து மதத்தில் உள்ளவர்களுக்கோ அடியோடு தெரியவே தெரியாது.

எனவே, எந்த மதமும் அதில் உள்ள தத்துவத்தினால் மட்டும் வளருவதில்லை என்பதுதான் என் அபிப்ராயம். சாமான்ய ஜனங்களுக்குத் தத்துவத்தைப் பற்றிக் கவலை இல்லை. நல்ல குணம், நல்ல பழக்கம் உள்ளவராக, கருணையும் சாந்தமும் உள்ளவராக ஒரு மகான் வந்தால் அவரைப் பார்த்த மாத்திரத்தில் ஜனங்களுக்கு நம்பிக்கை உண்டாகிறது. அவர் எந்த தத்துவத்தைச் சொன்னாலும் அது நல்லதாகத்தான் இருக்கும் என்ற திடமான நம்பிக்கையுடன் அவரது மதத்தில் ஜனங்கள் சேருகிறார்கள். மாறாக, ஒரு மதக்கோட்பாடுகள் எத்தனைத்தான் பரம தத்துவங்களை விளக்கினாலும், அந்த மதப் பிரதிநிதியாக இருக்கிறவர்களிடத்தில் ஒழுங்கு தப்பிவிட்டால் உடனே அந்த மதம் அழியத் தொடங்கி விடுகிறது. ஒன்றுக்கொன்று நேர் விரோதமான தத்துவங்களைக் கொண்ட மதங்களுக்கு ஏன் மக்கள் கூட்டம் கூட்டமாகப் போகிறார்கள் என்றால், இதற்கு நேராக (Direct) காரணம் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ‘இதுவே விசேஷமானது’ என்று ஜனங்கள் தலைக்கு மேலே தூக்கி வைத்துக் கூத்தாடிக் கொண்டிருந்த மதங்கள் எப்படி மங்கி அழிந்தன என்று பார்த்தால், அதற்குக் காரணம் தெரிகிறது. இதிலிருந்தே அவை எப்படி ஜனங்களை முதலில் கவர்ந்தன என்பதற்கும் பதில் கிடைக்கிறது. அதாவது, ஒரு மதம் எப்படி அழிகிறது என்று பார்த்தாலே அது எப்படி வாழ்கிறது, வளர்கிறது என்பதும் புரிகிறது.

எந்த தேசத்திலும் எந்த ஒரு மதமும் எப்படி அழிந்தது என்று பார்த்தால், அந்த மதத்தை வளர்க்கிற ஸ்தாபனங்களிலும், அதன் முக்கியஸ்தர்களிடமும் ஒழுங்கீனம் உண்டானபோதே இந்த அழிவு ஏற்பட்டிருக்கிறது.

புத்தர் வந்தார். அவரது சரித்திரத்தைக் கேட்கக் கேட்க பால் வடிகிற அவரது விக்கிரகங்களைப் பார்க்க பார்க்க நமக்கே சாந்தமும், கருணையும், ஆனந்தமும், அவரிடம் ஒரு மரியாதையும் உண்டாகின்றன. அந்த காலத்துத் ஜனங்களுக்கும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் பௌத்த விஹாரங்களில் எத்தனை ஒழுக்கக் கேடு ஏற்பட்டது என்பதை மகேந்திர பல்லவன் எழுதிய ‘மத்தவிலாஸப் பிரஹஸனம்’ என்கிற ஹாஸ்ய நாடகத்திலிருந்து தெரிந்து கொள்கிறோம். இதே காலத்தில்தான் புத்த மதம் மங்கிப் போகத் தொடங்கியது. அதாவது சமயப் பிரதிநிதிகள் தன்மையைப் பொறுத்தே சமய வளர்ச்சியும் நலிவும் ஏற்படுகின்றன.

புத்தருக்குப் பிறகு ஆதிசங்கரர் பரம உத்தமமான மனிதராக வந்தார் என்றால் ஜனங்கள் அவரிடம் திரும்புகிறார்கள். அப்புறம் ராமாநுஜர், மத்வர் என்று இப்படித் தங்கள் சொந்த வாழ்க்கையில் உயர்ந்தவர்களாக விளங்கியவர்கள் வந்தபோது, அந்தத் தனி மனிதரிடம் ஜனங்களுக்கு உண்டான பிடிப்புக் காரணமாக, அவரது சித்தாந்தம் பரவியது. சமீபத்தில் சாந்தத்தோடும் தன்னலமில்லாத தியாகத்தோடும் ஒரு காந்தி வந்தார். உடனே அவர் சொன்னதையே ‘காந்தீயம், காந்தீயம்’ என்று ஒரு மதமாக கோடாநு கோடி ஜனங்கள் ஏற்றுக் கொண்டார்கள். தத்துவச் சிறப்பால்தான் ஒரு சித்தாந்தம் வளருகிறது என்றால் இன்றைக்கும் அந்தக் காந்தீயம் உச்சத்தில் இருக்க வேண்டும். ஆனால், நடைமுறை எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.

பலாத்காரத்தினாலோ, பணத்தைக் காட்டியோ பொது ஜனங்களை இழுக்கிற மதங்களைப் பற்றி இங்கே கேள்வியில்லை. பலவிதமான சமூக சேவைகளை, ஒத்தாசைகளை செய்துவிட்டு, உடனே ஞானஸ்நானம் பண்ணி வைக்கிறேன் என்று ஒரு மதம் இழுத்தால், பாமர ஜனங்கள் அதில் வசியப் பட்டுத்தான் போவார்கள். முக்கியமாகப் பஞ்ச காலத்தில் கிறித்துவ மதம் வளர்ந்தது என்று இதனால்தான் சொல்வதுண்டு. இப்படியே அடிபிடிக் கட்டாயமாக இஸ்லாத்தைப் பரப்பியபோது தன்னிச்சையில்லாமலும் கூட்டம் கூட்டமாகப் பலர் அதில் சேர்ந்ததாகச் சொல்வதுண்டு. இங்கேயும்கூட தத்துவத்திற்காகப் பொது மக்கள் ஒரு மதத்தில் சேர்ந்து விடவில்லை என்ற மட்டில் நிரூபணமாகிறது. இன்னொன்றைக் கவனிக்க வேண்டும். முக்கியமாகத் சேரி மக்களைத்தான் பாதிரிமார்கள் மதம் மாற்ற முற்பட்டார்கள். ‘உங்களை எல்லாம் உங்கள் மதத்தில் தாழ்த்தி வைத்திருக்கிறார்கள்; எங்களிடம் வந்தால் உயர்த்தி விடுகிறோம்; படிப்பு, வைத்தியம் எல்லாம் இலவசமாகத் தருகிறோம்’ என்று செல்வாக்கோடு ராஜாங்கத்தின் ஆதரவோடு பிரகடனம் செய்தார்கள். அப்படியும் சேரி ஜனங்கள் எல்லோரும் அதில் போய்ச் சேரக் காணோமே! ஏராளமான அந்த மக்கள் தங்கள் பிறந்த மதத்தில் எத்தனை தாழ்த்தி வைக்கப்பட்டதாகத் தோன்றினாலும் பரவாயில்லை என்று நினைத்து, தங்களுக்கு இன்னொரு மதத்தால் கிடைக்கிற வசதிகளையெல்லாம் துச்சமாக நினைத்து, அதற்குப் போகாமல்தானே இருந்திருக்கிறார்கள். இப்படி இருந்ததற்கு அவர்களுடைய நல்ல பண்பு ஒரு காரணம் என்பது இருக்கட்டும். இன்னொரு காரணம். நம் மதத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் பரம உத்தமமான மகான்கள் தோன்றிக்கொண்டு வந்திருப்பதுதான். ‘இந்த மகான் இருக்கிற மதத்திலேயே நாமும் இருப்போம்’ என்று அதிலேயே சேரி ஜனங்கள் உள்பட எல்லோரும் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மதமாற்றம் செய்கிறவர்களை நாம் கரிக்க வேண்டியதில்லை. துவேஷிக்க வேண்டியதில்லை. அவர்கள் கட்டாயப்படுத்தியாவது அல்லது ஆசை காட்டி வசியப்படுத்தியாவது மற்றவர்களைத் தங்கள் மதத்தில் சேர்க்க நினைப்பதற்குக் காரணம் அவர்களுக்குத் தங்கள் மதமே பரம சத்தியம் என்கிறதில் இருக்கிற நம்பிக்கைதானே? இதை ஏற்றால்தான் மற்றவர்களுக்கும் கதி மோக்ஷம் உண்டு; இப்படி அவர்களுக்கு ஒரு பெரிய க்ஷேமத்தை செய்வதற்கான பலவந்தம், வசியம் இவற்றைக் காட்டினால்கூடத் தப்பில்லை என்ற நல்லெண்ணத்திலேயே அவர்கள் மதமாற்றம் செய்கிறார்கள் என்றே வைத்துக் கொள்ளலாம்.

பலாத்காரம் அல்லது பணபலம் இவற்றைக் கைக்கொள்ளாத எல்லா மதங்களும் அவற்றின் குருமார்கள், போதகர்கள், பிரசாரகர்கள் ஆகியோரது குணத்தைக் கொண்டுதான் வளர்ந்திருக்கின்றன. ஒரு மதத்தின் பிரதிநிதியிடத்தில் வெளி வேஷம் மட்டும் இருந்தால் போதாது; எந்தத் தத்துவத்தைச் சேர்ந்தவராயினும் அவருக்குத் தன்னல எண்ணமே இருக்கக் கூடாது; துவேஷம் கூடாது; நல்லொழுக்கம் இருக்க வேண்டும்; நல்ல தபஸ் இருக்க வேண்டும்; சாந்தமும் கருணையும் நிரம்பியிருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களுடைய குண விசேஷத்தாலேயே அவர்களைத் தேடி வருகிறவர்களின் தோஷங்களும் போய்விட வேண்டும்.

இப்படிப் பட்டவர்களை உண்டு பண்ணுவதே இப்போதும் நம் மதம் தழைக்க வழி. எதிர்பிரச்சாரம் எதுவுமே வேண்டாம். மதநெறிகளை உயிரோடு வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிற பிரதிநிதிகள்தான் வேண்டும். இவர்களால்தான் இதுவரை யுகயுகாந்தரமாக நம் மதம் உயிரோடிருந்து வந்திருக்கிறது. இனிமேலும் இப்படிப்பட்டவர்களால்தான் அது உயிர் வாழ முடியும்.

ஒருவன் சண்டை போட்டு மதம் மாறுகிறேன் என்றால் எதிர்த்துப் படை திரட்டிச் சண்டைபோட என்னால் ஆகாது. அல்லது கோடி கோடியாய் செலவழித்து ஆஸ்பத்திரி, ஸ்கூல் வைத்து ஒருவன் மதமாற்றம் செய்கிறான் என்றால், அதைப் போலப் கோடிக் கணக்கில் செலவழிக்க எனக்கு ஐவேஜியில்லை. இது இரண்டும் இருப்பதாகவே வைத்துக் கொண்டாலுங்கூட, இதனால் செய்யும் மாறுதல் உண்மையானதும் (genuine) இல்லை; அது நிலைத்தும் நிற்காது. ஏனென்றால், நம்மை விடவும் பலிஷ்டர்களாகவோ, நம்மைவிடவும் ரொம்பப் பணவசதி உள்ளவர்களாகவோ இன்னொரு கூட்டம் வந்தால், அது நம் பலத்தாலும் பணத்தாலும் செய்ததை எல்லாம் அழித்துவிட்டு, தானே ஜயித்துவிடும்! ஆனபடியால் இந்த வெளிச் சக்திகளை நம்பிக் கொண்டிராமல், நம் ஆத்ம சக்தியை நம்பி உள்ளுக்குள்ளே நம்மை உயர்த்திக் கொள்வதே நாம் செய்ய வேண்டியது. அப்போது எந்தப் பிரசாரமும், சண்டையும், வசியமும் இல்லாமலே நம் மதம் தழைத்து வாழும். இப்போது இதர தேசங்களில் புத்திமான்கள் ஏராளமாக, ‘அத்வைதம், அத்வைதம்’ என்று அதைத் தலைக்குமேல் வைத்துக் கொண்டிருப்பதற்கு அதன் சித்தாந்தச் சிறப்பு காரணமாக இருக்கலாம். அவர்கள் ஆராய்ச்சி பண்ணி, ஆத்ம விசாரம் பண்ணி நம் வேதாந்தத்துக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், இது பொது ஜனங்கள் எல்லாருக்கும் பொருந்தாத விஷயம். அவர்கள் பிடித்துக் கொள்ள ஓர் உத்தம ஜீவன்தான் வேண்டும்.

இப்படி ஒருத்தன் சாந்தமும், கருணையும், ஞானமும், தியாகமும் நிரம்பியவனாக நம்மிடையில் வரவேண்டும் என்பதற்காகவே இத்தனை உபன்யாசங்களும் பண்ணுகிறேன். உங்களிலேயே ஒருவர் அப்படித் தோன்றிவிட்டால் அதைவிடப் பெரிய பயன் எதுவும் இல்லை.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is மதங்களின் ஒற்றுமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  பெயரில்லாத மதம்
Next