கருவிலிக்கொட்டிட்டை

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

கருவிலிக்கொட்டிட்டை

கருவேலி

மக்கள் கருவேலி என்று வழங்குகின்றனர். பூந்தோட்டத்திலிருந்து நாச்சியார் கோயில் செல்லும் பேருந்துச் சாலையில் கூந்தலூரையடைந்து அரிசிலாற்றுப் பாலத்தைக் கடந்து சென்றால் தலத்தை யடையலாம். கும்பகோணத்திலிருந்து 20 A.e. தொலைவில் பூந்தோட்டம் செல்லும் சாலையில் உள்ளது. கூந்தலூரில் பேருந்து நிற்குமிடத்தில் கருவிலி வழி காட்டிப் பலகை உள்ளது. கோனேரி ராஜபுரத் (திருநல்லம்) திற்குப் பக்கத்தில் உள்ள தலம். கோயில் - கொட்டிட்டை. ஊர், கருவிலி.

இந்திரன், உருத்திரகணத்தர் வழிபட்டது சோழர்களின் திருப்பணி பெற்ற தலம். பழமையான கோயில்.

இறைவன் - சற்குண நாதேஸ்வரர்.

இறைவி - சர்வாங்க நாயகி.

தீர்த்தம் - எமதீர்த்தம் (எதிரில் உள்ளது)


அப்பர் பாடல் பெற்றது.

கிழக்கு நோக்கிய சந்நிதி. அம்பாள் கோயில் தனிக்கோயிலாக இடப்பால் உள்ளது. அம்பிகைத் திருமேனி பெரியது. அழகானது. பிராகாரத்தில் கணபதி பாலசுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலில் உள்ள நர்த்தன விநாயகர், அர்த்த நாரீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, பைரவர் உருவங்கள் பழைமையும் கலைச்சிறப்பும் வாய்ந்தவை.

இத்தலத்தின் பக்கத்தில் திருநல்லம், வன்னியூர், திருவீழிமிழலை முதலிய தலங்கள் உள்ளன. கல்வெட்டில் இத்தலம் "உய்யக் கொண்டான் வளநாட்டு வெண்ணாட்டுக் குலோத்துங்க சோழ நல்லுராகிய கருவிலிக் கொட்டிட்டை" என்று குறிக்கப்படுகிறது.

27.3.97ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. நித்திய வழிபாட்டு டிரஸ்ட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

"வாடிநீர் வருந்தாதே மனிதர்காள்

வேடனாய் விசயற்கு அருள் செய்த வெண்

காடனார் உறைகின்ற கருவிலிக்

கோடு நீள் பொழில் கொட்டிட்டை சேர்மினே" (அப்பர்)


-"இந்நிமிடஞ்

சிந்துங் கருவிலியின் திண்மை யென்று தேர்ந்தவர்கள்

முந்துங் கருவிலி வாழ் முக்கண்ணா." (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. சற்குண நாதேஸ்வரர் திருக்கோயில்

கருவேலி. கூந்தலூர் அஞ்சல் - எரவாஞ்சேரி - S.O.

கும்பகோணம் R.M.S.

தஞ்சை மாவட்டம் 605 501.




































 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருவீழிமிழலை
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  பேணுபெருந்துறை
Next