திருநணா

திருமுறைத்தலங்கள்

கொங்கு நாட்டுத் தலம்

திருநணா

பவானி

தற்பொழுது பவானி என்று வழங்கப்படுகிறது.

சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் முதலிய நகரங்களிலிருந்து பேருந்தில் செல்லலாம். (ஈரோட்டிலிருந்து 12 A.e.)

பவானி ஆறு காவிரியில் கூடும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. பழைமையான பெரிய கோயில், பவானி, பவானிகூடல், பவானிமுக்கூடல், வதரிசகாசிரமம் முதலிய அனைத்தும் ஒன்றே. குபேரன், விசுவாமித்திரர், பராசரமுனிவர் முதலியோர் வழிபட்ட தலம்.


இறைவன் - சங்கமுகநாதேஸ்வரர், சங்கமேஸ்வரர்.


இறைவி - வேதாம்பிகை.


தீர்த்தம் - பவானி காவிரி சங்கமம்.


தலமரம் - இலந்தை.


சம்பந்தர் பாடல் பெற்றது.

கோயிலின் நுழைவு வாயிலில் கோட்டை விநாயகர் உள்ளார். உட்புறத்தில் ஒருபுறம் ராஜகணபதி சந்நிதியும், மறுபுறம் முத்துக்குமாரசுவாமி சந்நிதியும் காட்சி தருகின்றன. கோயிலுள் நுழைந்ததும் வலப்பக்கம் அழகான மண்டபம் உள்ளது. இங்கு ஆதிகேசவப் பெருமாள் சௌந்தரநாயகி யோகநரசிம்மர் சந்நிதிகள் உள்ளன.

உள் பிராகாரத்தில் அறுபத்துமூவர் சந்நிதிகளும், பஞ்சபூத லிங்கங்களும், சனிபகவான் சந்நிதியும் உள்ளன. கோஷ்ட மூர்த்தமாகத் பெரிய தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். காசிவிசுவநாதர், ஆறுமுக சுவாமி சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. ஆடிப்பெருக்கன்று இத்தலத்தில் நீராடல் விசேஷம். அன்று இலட்சக்கணக்கானோர் இத்தலத்திற்கு வந்து சங்கமத்தில் நீராடி, இறைவனை வழிபடுகின்றனர். சித்திரை பௌர்ணமியில் பெருவிழா நடைபெறுகிறது.

இத்திருக்கோயிலின் பெருமையை விளக்குவதான செவி வழிச்செய்தி -யன்று இப்பகுதியில் சொல்லப்படுகிறது. 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது கோவை மாவட்டத்தில் திரு. காரோ என்னும் வெள்ளையதுரை மாவட்ட ஆட்சியாளராக இருந்தார். அவர் ஆட்சிப் பொறுப்புக் காரணமாகப் பவானி வந்து ஆய்வாளர் மாளிகையில் தங்கினார். இரவு படுத்து உறங்கும்போது மின்னலுடன் இடிஇடித்துக் கொண்டிருந்தது. ஒரு சிறிய குழந்தை வந்து உறங்குகின்ற துரையைக் கையைப் பிடித்து வெளியே வெகுவேகமாக இழுத்து வந்தது. மறுநிமிடம் பேரிரைச்சலுடன் அக்கட்டிடத்தின் கூரை கீழே விழுந்து நொறுங்கியது. நடந்தது அறிந்த துரை திரும்பிப் பார்த்தார். தன்னை எழுப்பிய குழந்தை நடந்து சென்று கொண்டிருப்பதைக் கண்டார். கூப்பிட்டார், கேட்கவில்லைபோலும், குழந்தை திரும்பாமல் சென்று கொண்டிருந்தது. துரைபின்தொடர்ந்து வேகமாகச் சென்றார். அவர் அக்குழந்தையைச் சென்றடையும் முன் அக்குழந்தை கோயிலுள் புகுந்து மறைந்துவிட்டது. அன்னை வேதாம்பிகை - வேதநாயகியே குழந்தை வடிவில் வந்து தன்னைக் காப்பாற்றியதை உணர்ந்து திகைப்பும் சொல்லொணா மகிழ்வும் கொண்டார். அம்பிகையைத் தரிசிக்க எண்ணினார். பிற மதத்தினர் ஆலயத்துள் புக அனுமதிக்கப்படுவதில்லை யாதலால் அந்நெறியை மீற மணமின்றி, அம்பாள் சந்நிதிக்கு நேரே வெளிமதிலில் துவாரம் செய்வித்து அதன் வழியே அம்பாளைக் கண்குளிரத் தரிசித்தார். அர்த்த ராத்திரியில் வெளியே வந்து தன் உயிர் காத்த அம்பிகைக்கு துரை தன் நன்றிக்கடனாகப் பள்ளியறையில் வைப்பதற்குத் தந்தத்தாலான ஊஞ்சல்

ஒன்றைப்பரிசாக அளித்தான்" இவ்வரலாறு "கொங்கு நாட்டுக் கோயில்கள்" பற்றி அன்பர் திரு. சிவகளை மு. சுப்பையா அவர்கள் எழுதியுள்ள நூலில் இடம் பெற்றுள்ளது.


"பந்தார் விரல் மடவாள் பகாமா நாகம் பூண்டு ஏறதேறி

அந்தார் அரவணிந்த அம்மானிடம் போலும் அந்தண் சாரல்

வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டு பாடச்

செந்தேன் தெளியளிரத் தேமாக்கனி யுதிர்க்குந் திருநணாவே" (சம்பந்தர்)


திருப்புகழ்

கலைமேவு ஞானப் பிரகாசக் -கடலாடி ஆசைக் கடலேறி

பலமாய வாதிற் பிறழாதே - பதிஞான வாழ்வைத் தருவாயே

மலைமேவு மாயக் குறமாதின் - மனமேவு வாலக்குமரேசா

சிலைவேட சேவற்கொடியோனே - திருவாணிகூடற் பெருமாளே


-"துஞ்சலெனும்

இன்னலகற்ற இலங்கு பவானிக்கூடல்

என்னு நணாவின் இடை இன்னிசையே". (அருட்பா)


அஞ்சல் முகவரி-

அருள்மிகு. சங்கமேஸ்வரர் தேவஸ்தானம்.

பவானி - 638 301 - ஈரோடு மாவட்டம்.


 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருமுருகன்பூண்டி
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  கொடிமாடச் செங்குன்றூர்
Next