திருஅதிகை (திருவதிகை)

திருமுறைத்தலங்கள்
நடுநாட்டுத் தலம்

திருஅதிகை (திருவதிகை)

கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டியிலிருந்து 2 A.e. தொலைவில் உள்ளது. சென்னை, கடலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், சிதம்பரம் முதலிய ஊர்களிலிருந்து பண்ருட்டிக்குப் பேருந்து வசதி உள்ளது.

பண்ருட்டி பேருந்து நிலையத்திலிருந்து கடலூர் பாதையில் சென்றால் திருவதிகையை அடையலாம். கோயில்வரை வாகனங்கள் செல்லும். பண்ருட்டி இருப்புப்பாதை நிலையம்.

அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. திரிபுரத்தை எரித்த வீரச் செயல் நிகழ்ந்தது. ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம். அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த தலம். சூலை நோயின் துன்பம் தாளப்பெறாத அப்பர் பெருமான், யாருமறியாமல் பாடலிபுத்திரத்தை (திருப்பாதிரிப்புலியூரை) விட்டு நீங்கி, இங்கு வந்து, தமக்கையாரைக் கண்டு, தொழுது, திருவாளன் திருநீறு தரப் பெருவாழ்வு வந்ததென்று பணிந்து ஏற்று, உருவார அணிந்து, அவர்பின் சென்று, அதிகைப் பிரான் அடிமலர் வீழ்ந்து வணங்கி, "ஆற்றேன் அடியேன்" என்று "கூற்றாயினவாறு"பதிகம் பாடிச் சூலை நீங்கப்பெற்ற அற்புதத்தலம். சுருங்கச் சொல்லின், சைவத்துக்குத், திருத்தொண்டுக்கு உறைப்பான திருநாவுக்கரசரை வழங்கியருளிய பெருமைமிகு தலமிதுவே.

சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான 'உண்மை விளக்கம்' நூலை அருளிய 'மனவாசகங்கடந்தாரின்' அவதாரத் தலம் இதுவே. இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிந்த சித்தவடமடத்தில் தங்கியதும் - திருவடி தீட்சை பெற்றதும், பல்லவனான மகேந்திர வர்மனின் மனத்தை மாற்றிச் சமண் பள்ளிகளை இடித்துக் குணபரவீச்சரம் எழுப்பச் செய்ததும், இத்தலத்தின் பெருமையைப் பறைசாற்றும் நிகழ்ச்சிகளாம். அதிரைய மங்கல்ம், அதிராஜமங்கலியாபுரம் என்னும் பெயர்கள் இத்தலத்திற்குரியனவாகக் கல்வெட்டுக்களிற் காணப்படுகின்றன.

மணவிற் கூத்தனான காலிங்கராயன் என்பவன் இக்கோயிலுக்குப் பொன்வேய்ந்து நூற்றுக்கால் மண்டபம், மடைப்பள்ளி, யாகசாலை ஆகியவற்றை அமைத்து, அம்பாள் கோயிலையும் கட்டுவித்தான் என்பது கல்வெட்டுச் செய்தி. தென்கங்கை எனப்படும் கெடிலநதி பக்கத்தில் ஓடுகின்றது.

இறைவன் - வீரட்டேஸ்வரர், வீரட்டநாதர், அதிகைநாதர்.

இறைவி - திரிபுரசுந்திரி.

தலமரம் - சரக்கொன்றை.

தீர்த்தம் - கெடிலநதி.

மூவர் பாடல் பெற்றது.

மிகப்பெரிய கோயில், சுவாமி கர்ப்பக்கிருகம் தேர்போலப் பதுமைகளால் அலங்கரிக்கப்பட்டு, நிழல் பூமியில் சாயாதபடிக் கட்டப்பட்டுள்ளது. கோயிலுக்கு

முன்னால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. இதைத் திருநீற்று மண்டபம் என்றழைக்கிறார்கள். இம்மண்டபத் தூண்களில் ரிஷபாரூடர், அப்பர், மயில் வாகனன் முதலிய சிற்பங்களும், இக்கோயிலைத் திருப்பணி செய்வித்த செட்டியார் சிற்பங்களும் உள்ளன. கோயிலுக்கு எதிரில் கருங்கல் தூண்கள் மொட்டையாக நின்று கொண்டிருக்கும் நிலையில் திலகவதியார் மடம் காட்சியளிக்கிறது. பதினாறுகால் மண்டபத்தின் பக்கத்தில் அப்பர் சுவாமிமடம் - திருவாவடுதுறை ஆதீனத்திற்குரியது உள்ளது.

உயர்ந்த ராஜகோபுரம் - ஏழநிலைகளையுடையது. கோபுர வாயிலில் இருபுறங்களிலும் அளவற்ற சிற்பங்கள் உள்ளன. வலப் பக்கத்தில் சற்று உயரத்தில் திரிபுரமெரித்த கோலம் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் கஜசம்ஹாரகோலம்.

வாயிலின் இருபுறங்களிலும் நடனக்கலைச் சிற்பங்கள் (பரத சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள 108 கரணங்களை விளக்கும் சிற்பங்கள்) அளவிறந்துள்ளன. மிதித்தேறும் படியின் இருபுறத்திலும் அழகான நடன மாதரின் உருவங்கள். அப்பப்பா வைத்த கண்களை வாங்காமல் பார்த்தாலும் வேட்கை தணியவில்லை.

உட்புறத்தில் மற்றொரு பதினாறுகால் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் இடப்பால் 'சக்கரதீர்த்தம்' எனப்படும் திருக்குளம் உள்ளது. இம்மண்டபத்தில் புகும்போது முதலில் உள்ள இரு தூண்களில் ஒன்றில் சுப்பிரமணியத் தம்பிரான்

(அமர்ந்த நிலை) சிற்பமும், இதற்கு நேர் எதிர்த்தூணில் சிவஞானத் தம்பிரான் (நின்று கை கூப்பிய நிலை) சிற்பமும் உள்ளன. சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர்தான் இக்கோயிலைத் திருத்திச் செப்பம் செய்தவர் என்கின்றனர். இவர் சீடரான சிவஞானத் தம்பிரான்தான் முதன் முதலில் இத்திருக்கோயிலில் அப்பர் பெருமானுக்குப் பத்து நாள்கள் விழா எடுத்துச் சிறப்பாக நடத்தினார் என்பர்.

உள்கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. கவசமிட்ட கொடிமரம். கொடிமரத்து விநாயகர் தரிசனம், முன்னால் நந்தி. வலப்பால் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இதைத் தேவசபை என்கின்றனர். நடராச அபிஷேகம் இம்மண்டபத்தில் நடைபெறும். உள்கோபுரம் தாண்டினால், உயரமான நந்தி உள்ளது. ஒருபுறம் முருகப் பெருமானும், மறுபுறம் கணபதியும் காட்சியளிக்கின்றனர். வலமாக வரும்போது அப்பர் சந்நிதி (உற்சவமூர்த்தி) உள்ளது. சேக்கிழார் முதலாக அறுபத்துமூவர் மூலத் திருமேனிகள் உள்ளன. அடுத்துத் தலமரம் சரக்கொன்றை உள்ளது. பக்கத்தில் திலகவதியார் சந்நிதி. அடுத்து சனீஸ்வரர், அம்பாள் திருமேனிகள் உள. முன்னால் பெரிய சிவலிங்கம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அடுத்து அப்பர் சந்நிதி. மூலமூர்த்தம் உள்ளது. அமர்ந்த திருக்கோலம் - சிரித்த முகம் - தலைமாலை கையில் உழவாரப்படை தாங்கிய பேரழகு. அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. முன் மண்டபம், எதிரில் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன.

பிராகாரத்தில் அடுத்து விநாயகர் சந்நிதியும் பக்கத்தில் பஞ்சமுக சிவலிங்கமும் (பசுபதிநாதர்) உள்ளன. வரிசையாகப் பல சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன. யாகசாலை, நவக்கிரக சந்நிதிகளையடுத்து, நடராச சபை உள்ளது. பக்க வாயிற்படிகள் வழியே சென்று, முன் மண்டபத்தையடைந்து, துவாரபாலகரை வணங்குகிறோம். திரிபுராந்தகர் உற்சவ சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. உள் மண்டபத்தை அடைந்ததும் நேரே மூலவர் சந்நிதி. மூலவர் - சிவலிங்கத் திருமேனி, கிழக்கு நோக்கியது. பெரிய திருமேனி - பெரிய ஆவுடையார். சிவலிங்கத் திருமேனி பதினாறு பட்டைகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. பின்னால் சுவாமி அம்பாள் உருவங்கள் சோமாஸ்கந்த வடிவில் புடைமூர்த்தமாகச் சுதையில் அமைக்கப்பட்டுள்ளன - கல்யாண திருக்கோலம். தெவிட்டாத தரிசனம். அதிகைக் கெடிலநாதன் அருளைப் பருகப் பருகப் பசி ஆறவே ஆறாது. எத்தனை நேரம் நின்று தரிசித்தாலும் பிரிய மனம் வரவில்லை.

இருபுறமும் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. பிட்சாடனர், சந்திரசேகரர், விநாயகர், பள்ளியறை மூர்த்தி, அஸ்திரதேவர், திலகவதியார், நால்வர், சண்டேசுவரர் முதலிய உற்சவத் திருமேனிகள் தரிசிக்கத் தக்கவை.

சுவாமி கருவறை, பூமியில் நிழல் சாயாதபடி கட்டப்பட்டுள்ள தேர்போன்ற அமைப்பு, (காஞ்சி கயிலாய நாதர் கோயில் அமைப்பை நினைவூட்டுகிறது) கருவறை சுதையாலான பணி. இதன் முன் பகுதி வளர்த்தூக கற்றளியாகக் கட்டப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றிலும் குடவரைச்சிற்பங்கள் - சற்று வளர்த்திச் செய்யப்பட்டு உள்ளன. இச்சிற்பங்களுள் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், துர்க்கை சண்டேஸ்வரர், சரபமூர்த்தி, கல்யாணசுந்தரர், ஏகபாதர் முதலியன பேரழகு வாய்ந்தவை.

அதிகை - விரட்டானம் அரிய சிற்பங்களைக்கொண்ட, கலைப்பெட்டகமாகத் திகழ்கின்றது.

அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதி வலப்பால் தனிக்கோயிலாகவுள்ளது. அழகிய திருமேனி - நின்ற திருக்கோலம் - அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள் - எதிரில் நந்தியுள்ளது. நிறைவான தரிசனம். வைகாசி விசாகத்தில் பத்து நாள்களுக்குப் பெரு விழாவும், சித்திரைச் சதயத்தில் பத்து நாள்களுக்கு அப்பர் சுவாமி திருவிழாவும் நடைபெறுகின்றன.

நாடொறும் ஆறுகால பூஜைகள் முறையாக நடக்கின்றன. கோயிலில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் கட்டளையாக 'சிவ சிவ ஒலி மண்டபம்' 1962 -ல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்தலத்தில் உள்ள பழைய போலீஸ் ஸ்டேஷனைத் தாண்டி, 1.A.e. தொலைவு சென்றால் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இதுவே சித்த வட மடம் ஆகும். இப்பகுதி புதுப்பேட்டை என்று வழங்குகிறது. (சித்தவடமடத்தைப் பிற்காலத்தில் சித்தாண்டிமடம். சித்தாத்த மடம் என்றெல்லாம் வழங்கினர். இப்பகுதி இப்போது கோடம்பாக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குணபரவீச்சரம் - "ஆதிமூலகுணபரேச்சுரன் கோயில்" என்றழைக்கப்படுகிறது. இது கோயிலுக்குப் பக்கத்தில் மேற்கே பெரிய ரோடுக் கரையில் உள்ளது. சிறு கட்டிடமாக இடிந்த நிலையில், உடைந்துபோன படிமங்களுடன் காட்சி தருகின்றது. தற்போதுள்ள கோயில் பிற்காலத்தில் பாண்டியர்களால் எழுப்பப்பட்டது. இக்கோயில் மராட்டிய ஆங்கிலேயர் காலத்தில் போர்க்கோட்டையாகவும் மாறி மாறிப் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்றில் அறிகிறோம்.

"எண்ணார் எழில்எண்தான் இறைவன் அனல் ஏந்தி

மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப்

பண்ணார் மறை பாடப் பரமன் அதிகையுள்

விண்ணோர் பரவ நின்றாடும் வீரட்டானத்தே."

(சம்பந்தர்)

"நீதியால் வாழமாட்டேன் நித்தலும் தூயோனல்லன்

ஓதியும் உணரமாட்டேன் உன்னையுள் வைக்கமாட்டேன்

சோதியே சுடரே உன்தன் தூமலர்ப் பாதங்காண்பான்

ஆதியே அலந்து போனேன் அதிகை வீரட்டனீரே."

(அப்பர்)

"தம்மானை யறியாத சாதியார் உளரே, சடைமேற்கொள்

பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்

கைம்மாவின் உரியானைக்கரி காட்டிலாட, லுடையானை

விடையானைக் கறைகொண்ட கண்டத்

தெம்மான்தன் அடிக்கொண்டு என்முடிமேல் வைத்திடுமென்னும்,

ஆசையால் வாழ்கின்ற அறிவிலாநாயேன்

எம்மானை எறிகெடில வடவீரட்டானத்து- உறைவானை

இறைபோதும் இகழ்வன் போலியானே."

(சுந்தரர்)

-'வார்கெடிலச்

சென்னதிகை யோங்கித் திலகவதியார் பரவு

மன்னதிகை வீரட்ட மாதவமே.'

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அ.மி. வீரட்டேஸ்வரர் திருக்கோயில்

திருவதிகை - பண்ருட்டி அஞ்சல்

கடலூர் மாவட்டம் - 607 106.

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருச்சோபுரம் (தியாகவல்லி)
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருநாவலூர்
Next