திருநெல்வாயில் (சிவபுரி)

திருமுறைத்தலங்கள்

சோழ நாட்டு (வடகரை) த் தலம்

கோயில்

திருநெல்வாயில் ( சிவபுரி)

தற்போது மக்கள் வழக்கில் சிவபுரி என்று வழங்குகிறது. திருவேட்களத்திற்குப் பக்கத்தில் உள்ளது.

சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை நகர் சாலையில் வந்து, பல்கலைக் கழகத்திற்குள் நுழையாமல் வலப்புறமாகத் திரும்பி கவரப்பட்டு சாலையில் சென்று, அது மெயின் ரோடில் சேருமிடத்தில் (கவரப்பட்டு சாலை இடப்புறமாகத் திரும்பிவிட) நாம் நேரே எதிர்ச்சாலையில் - பேராம்பட்டுச் சாலையில் சென்றால் சிவபுரியை அடையலாம். கோயில் வரை வண்டியில் செல்லலாம்.

இறைவன் - உச்சி நாதேஸ்வரர், உச்சிநாத சுவாமி.

இறைவி - கனகாம்பிகை.

தலமரம் - நெல்லி.

தீர்த்தம் - கோயிலின் எதிரில் உள்ளது.

கண்வ மகரிஷி வழிபட்ட தலம். சம்பந்தர் பாடல் பெற்றது.

கிழக்கு நோக்கிய கோயில். எதிரில் நீராழி மண்டபத்துடன் குளம் உள்ளது. ஐந்து நிலைகளுடன் காட்சி தரும் ராஜகோபுரத்தைக் கடந்து உட்சென்றால் பிராகாரத்தில் விநாயகர் சந்நிதி. அடுத்து சுப்பிரமணியர், பைரவர், பஞ்சலிங்கங்கள், சனிபகவான், சந்திரன் முதலிய சந்நிதிகள் உள்ளன. வலம் முடித்து முன்மண்டபம் சென்றால் வலப்பால் நவக்கிரக சந்நிதியும் பள்ளியறையும் உள்ளன.

துவாரபாலகரைத் தொழுது வாயிலைக் கடந்தால் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். நடராசசபையில் சிவகாமியுடன் தரிசனம்.

நேரே சுவாமி - மூலவர் தரிசனம். இலிங்கத் திருமேனி உயரமும் பருமனும் குறைந்த அமைப்புடையது. சதுரபீடம் சுற்றளவில் சிறியது. முன்மண்டபத்தில் நந்தியைச் சுற்றியுள்ள முன், பின் இருதூண்களில் நால்வர் சிற்பங்கள் உள்ளன. இக்கோயிலுக்கு கோட்டையூர் அழ.சித.அழகப்பச் செட்டியார் பரம்பரை அறங்காவலராவார் பக்கத்தில் உள்ள தலங்கள் திருவேட்களம், திருக்கழிப்பாலை. நாடொறும் ஐந்து காலவழிபாடுகள். வைகாசி விசாகத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு உண்டு.

'விருத்தனாகி வெண்ணீறு பூசிய

கருத்தனார் கனலாட்டு உகந்தவர்

நிருத்தனார் நெல்வாயில் மேவிய

ஒருத்தனார் எமது உச்சியாரே'.

(சம்பந்தர்)

"-வாழ்க்கைமனை

நல்வாயலெங்கு நவமணிக்குன்றோங்கு திரு

நெல்வாயில் நின்றொளிரும் நீளளியே."

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. உச்சிநாதசுவாமி திருக்கோயில்

சிவபுரி - அஞ்சல் அண்ணாமலை நகர் (வழி) - சிதம்பரம்.

சிதம்பரம் வட்டம். கடலூர் மாவட்டம் 608 002.





 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருவேட்களம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருக்கழிப்பாலை
Next