கீழைத்திருக்காட்டுப் பள்ளி (ஆரண்யேசுரர் கோயில்)

திருமுறைத்தலங்கள்

சோழ நாட்டு (வடகரை) த் தலம்

கோயில்

கீழைத்திருக்காட்டுப் பள்ளி ( ஆரண்யேசுரர் கோயில்)

ஊர் - கீழைத்திருக்காட்டுப்பள்ளி. கோயில் - ஆரண்யேசுரர் கோயில். மக்கள் வழக்கில் ஊர்ப்பெயர் 'கீழைத்திருக்காட்டுப்பள்ளி' என்றே வழங்குகிறது. இத்தலம் திருவெண்காட்டிற்கும், இலைய முதுகுளபுரத்திற்கும் இடையில் உள்ளது.

1) திருவெண்காட்டிலிருந்து இலையமுதுகுளபுரம் செல்லும் சாலையில் 11/2 கி.மீ.ல் இத்தலம் உள்ளது.

2) சீர்காழி - தரங்கம்பாடி சாலையில் அல்லி விளாகம் என்னுமிடத்தில் திருவெண்காட்டிற்குப் பிரியும் சாலையில் வந்து இலையமுதுகுளபுரம் தாண்டி, கீழைத்திருக்காட்டுப்பள்ளியை அடையலாம்.

ஊரில் சாலையின் வலப்பால் சற்றுத் தள்ளி உட்புறமாகக் கோயில் உள்ளது. பழமையான சிறிய கோயில். விருத்திராசுரனைக் கொன்ற பழிநீங்க இந்திரன் வழிபட்ட தலம். நண்டு பூசித்த பதி.

இறைவன் - ஆரண்யசுந்தரேஸ்வரர்.

இறைவி - அகிலாண்டநாயகி.

தீர்த்தம் - அமிர்த் தீர்த்தம்.

சம்பந்தர் பாடல் பெற்றது.

கோயிலுள் நுழைந்ததும் இடப்பால் பிரம்மேசர், முனியீசர் என்ற பெயரில் இரு சிவலிங்கங்கள் உள்ளன. அடுத்து, சுப்பிரமணியர், பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கருவறைச் சுவரில் வெளிப்புறத்தில் ஓரிடத்தில் மன்னன் ஒருவன் சிவலிங்கத்தை வழிபடுவது போன்ற சிற்பமுள்ளது. விநாயகர் சந்நிதி நண்டு வழிபட்ட பெருமையுடையது.

வலம் முடித்து வாயில் நுழைந்தால் மண்டபத்தின் தலப்பதிகக் கல்வெட்டுக்கள் உள. மேற்கு நோக்கிய சுவாமி சந்நிதியும் இடப்பால் அம்பாள் சந்நிதியும் ஒரு சேரத் தரிசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன.

மூலவர் ஆரண்யேஸ்வரர் சதுரபீட ஆவுடையாரில் காட்சி தருகிறார். அகிலாண்டேஸ்வரி அழகிய சிறிய திருமேனி சிறப்பு விழாக்கள் ஏதும் நடைபெறவில்லை. நித்தியப்படி மட்டுமே விடாது நடந்து வருகின்றது.

"பிறையுடையான் பெரியோர்கள் பெம்மான்

பெய்கழல் நாடொறும் பேணிஏத்த

மறையுடையான் மழுவாள் உடையான்

வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட

கறையுடையான் கனலாடு கண்ணாற்

காமமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்

குறையுடையான் குறட் பூதச்செல்வன்

குரைகழலே கைகள் கூப்பினோமே."

(சம்பந்தர்)

-தண்காட்டிக்

கார்காட்டித் தையலர்தங் கண்காட்டிச் சோலைகள்சூழ்

சீர்காட்டுப் பள்ளிச் சிவக்கொழுந்தே.

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. ஆரண்யசுந்தரேஸ்வரர் திருக்கோயில் கீழைத்திருக்காட்டுப்பள்ளி - திருவெண்காடு அஞ்சல்

சீர்காழி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம். 609 114.













 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருவெண்காடு
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருக்குருகாவூர் (திருக்கடாவூர்)
Next