கல்வியும் பணிவும் உணர்ச்சி

கல்வியும் பணிவும்

உணர்ச்சி வேகங்களின் பிரவாஹம் வியாதியாகப் பிடித்துக் கொண்டிருக்கிற போது கல்விதான் அதற்கு மருந்து. மூளை வளர்ச்சி மட்டுமின்றி முழு மநுஷ்ய வளர்ச்சிக்கான கல்வியாக அது இருக்க வேண்டும்.

மருந்து சாப்பிடும்போது பத்தியம் வைக்காமலிருக்க மாட்டார்கள். மருந்தைவிடக் கூடப் பத்தியமே வியாதி தீர்ப்பதில் அதிக உபகாரம் செய்வதும் உண்டு.

அப்படி, ‘வித்யை’ என்கிற கல்வி மருந்தோடு சேரும் பத்தியமாக ‘விநயம்’ என்ற கட்டுப்பாடு, எளிமையை ஆன்றோர் வைத்திருக்கிறார்கள். வித்யையும், விநயமும் யுவப் பிராயத்தினருக்கு இரண்டு கண்கள் மாதிரி.

இப்போது விநயத்தில் அடங்கி, தாழ்ந்து இருந்தால் பிற்பாடு உச்ச நிலைக்கு உயரலாம். கால்தூசியை உதாரணம் காட்டுவார்கள். அது நம்முடைய காலுக்கு அடியில் பொடியூண்டாக எழும்புகிறது. ஆனால் சட்டென்று காற்றிலே அந்த பொடி உயர்ந்து நம் தலைக்கு மேல் போய்விடுகிறதல்லவா? அப்படி, கல்வி கற்கும் நாளில் அடிநிலையில் அடங்கியிருந்தால் பிற்பாடு வாழ்க்கைக்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளும் நாளில் உயர்ந்த ஸ்தானம் பெறலாம்.

இந்த உண்மை நம்முடைய மஹத்தான நாகரிகத்துக்கும் கலாசாரத்துக்கும் வார்ஸாக உள்ள யுவர்களின் உள்ளத்தில் பதிய வேண்டும். பகவான் அதற்கு க்ருபை பண்ண வேண்டும்.