தீரர்: மீண்டும் காயத்ரி “தீராய”: தீரன் என்றால் நாம் அஞ்சா நெஞ்சம், பலம் இவற்றைத்தான் நினைக்கிறோம் அதுவும் ஸரிதான் ஆனால் தீர சப்தம

தீரர்: மீண்டும் காயத்ரி

தீராய”:

தீரன் என்றால் நாம் அஞ்சா நெஞ்சம், பலம் இவற்றைத்தான் நினைக்கிறோம். அதுவும் ஸரிதான். ஆனால் தீர சப்தம் தீக்ஷண்யமான புத்தியையும் குறிக்கும்.

மறுபடியும் காயத்ரி! காயத்ரியிலும் இந்த ‘தீ’ சப்தம் வருகிறது. நம் புத்தியைப் பரமாத்ம தேஜஸ் தூண்டணும் என்கிறபோது புத்தியை ‘தீ’ சப்தத்தாலேயே சொல்லியிருக்கிறது.

‘காயத்ரி’க்கு ‘ரூட் மீனிங்’ என்னவென்றால், “எது கானம் செய்யப்படுவதால் (கானம் செய்கிறவனை) ரக்ஷிக்கிறதோ, அது” என்பதே. வேத ஸ்வரங்களை உரியபடி ஏற்றியிறக்கிச் சொல்வதே ஒரு உசந்த கானம்தான். “ஸாமகானம்’ என்கிறோம். அந்த அர்த்தத்தில்தான் காயத்ரி தன்னை கானம் செய்பவரை ரக்ஷிப்பதாகச் சொன்னது. வேத ஸ்வரங்களுக்குப் பதில் ஸங்கீத ஸப்த ஸ்வரங்களைக் கொண்டு ஸகல ஜனங்களும் கானம் செய்யும் காயத்ரியாக தீக்ஷிதர்வாள் இந்த க்ருதியைப் பண்ணியிருக்கிறாரென்று சொல்லும்படி இதில் அந்த மஹா மந்த்ர விசேஷங்களை வைத்திருக்கிறார்.

ஸப்தஸ்வரத்தில் ஆரம்ப ஸ்வரம். ஆதார ஸ்வரம் என்ன? ஷட்ஜம்; ‘ஸ’ என்பது. அது மயூர சப்தம் – மயிலின் குரல் எழுப்பும் ஸ்வரம் – என்று சொல்கிறார்கள். மயூரம் என்றால் ஸுப்ரஹ்மண்யர்தான் முன்னே நிற்கிறார். “மரகத மயூரப் பெருமாள் காண்!” என்று அருணகிரிநாதர் சொல்கிறார். ஆதார ச்ருதியாக இருக்கப்பட்ட ஸ்வரத்திற்கே அதிதேவதை என்றால் அவர் ஸங்கீத மூர்த்திதானே? அவருக்கு ஒரு ஸங்கீத காயத்ரி இருக்கத்தானே வேண்டும்? தம்முடைய அநுக்ரஹத்தில், அம்சத்தில் அவரே ஒரு தீக்ஷிதரை உண்டாக்கி, அப்புறம் அவருக்குத் தாமே குருவாகக் கல்கண்டை வாயில் போட்டுக் கல்கண்டாகப் பாடவைத்து அப்படி ஒரு க்ருதி செய்து கொண்டிருக்கிறார்!