நமஸ்காரத்திற்கு உரியவர்கள்: வயது வரம்ப

நமஸ்காரத்திற்கு உரியவர்கள்: வயது வரம்பு விஷயம்

அதில் ஒரு வயஸு வரம்பு சொல்வதுமுண்டு. மூன்று வயஸாவது பெரியவனாக இருப்பவனுக்குத்தான் பூமியில் விழுந்து நமஸ்காரம், மற்றவர்களுக்கு வேறே தினுஸில் ‘விஷ்’ பண்ணுவது என்பார்கள். முன்னேயே சொன்னாற்போல, விநயம் ரொம்பக் குறைந்து வருகிற இந்நாளில் நமஸ்காரப் பழக்கத்தை எவ்வளவு வ்ருத்தி செய்து கொடுத்தாலும் நல்லதுதான் என்பதால் குறைந்த பக்ஷம் மூன்று வயஸு ஜாஸ்தி இருக்கணும் என்பதைப் பார்க்கலாம். நம்மைவிடப் பெரியவர்களாக உள்ள எல்லாருக்குமே நமஸ்காரம் பண்ணிவிடலாமென்று தோன்றுகிறது.

கண்டிப்பான சாஸ்த்ர விதிப்படியேகூட நம்மைவிட வயஸில் சின்னவர்களாகவுள்ள சில பேருக்கும் நமஸ்காரம் பண்ண வேண்டுமென்று இருக்கிறது. உதாரணமாக, மன்னி வயஸில் சின்னவளாகவே இருந்தாலுங்கூட ஸ்தானத்தால் தாயார் மாதிரி என்பதால் நமஸ்காரம் பண்ணவேண்டும். அதே மாதிரிதான் குரு பத்னியும் ஒருவேளை நம்மைவிட வயஸுக் குறைவானாலும் நமஸ்கரிக்கணும். பொதுவாகவேகூட, நம்மைவிட வயஸில் பெரிய எவருடைய பத்னியும் அவரில் பாதி என்பதாலும், தம்பதி ஸமேதர்களாக நம்ஸ்கரிப்பது விசேஷம் என்பதாலும் அந்த ஸ்த்ரீகளுடைய வயஸைப் பார்க்காமல் விழுந்து நமஸ்கரிக்கணும். வித்யையில் பெரியவர், குணத்தில் பெரியவர், அநுபூதிமானாக இருப்பவர், பக்த ச்ரேஷ்டர்கள், ஞானிகள், ஸந்நியாஸிகள், ஆத்ம ஸம்பந்தமான தர்ம ஸம்பந்தமான ஸ்தாபனங்களில் ஆசார்ய ஸ்தானத்திலுள்ளவர்கள் – அதாவது பணம், பதவி, அந்தஸ்துகளால் இல்லாமல் வேறே விதங்களில் பெரியவர்களாக உள்ள எல்லோருக்குமே இந்த மூன்று வருஷ வித்யாஸம் கிடையாது. நம்மைவிட வயஸில் சின்னவர்களானாலும் நமஸ்கரிக்கணும். குரு புத்ரனையும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளணும்.

‘தம்பதி ஸமேதராக’ என்று நமஸ்கரிக்கப்படுபவர் விஷயமாகச் சொன்னேன். நமஸ்காரம் செய்பவர்களுக்கும் அது பொருந்தும். பத்னியோடு போய் ஒருவருக்கு நமஸ்காரம் பண்ணினால் இரண்டு பேரும் சேர்ந்தே நமஸ்கரிக்கணும். வயிற்றில் பிறந்ததுகளும் கூட இருந்தால் குடும்பம் மொத்தமுமே சேர்ந்து ஒன்றாக நமஸ்காரம் செய்யணும். குடும்ப ஐக்யத்தை இப்படியெல்லாம் வளர்த்துக் கொடுத்திருக்கிறார்கள்.

நிறையப் பேரின் காலில் போய் விழ விழ அஹங்காரம் குறைந்துகொண்டே வரும் என்பதுதான் பொதுக் கொள்கை.