உணவே மருந்து நாம் ஒரு திருமண வைபவத்திற்கு செல்கிறோம் காலையில் 6 45 முதல் 7 30 மணி வரை சுப முஹ¨ர்த்தம் காலை உணவாகிய Break Fast என்ற பெயரில் பொங்கல், வடை இட்லி தோசை என்றெல்லாம் ச

உணவே மருந்து

நாம் ஒரு திருமண வைபவத்திற்கு செல்கிறோம். காலையில் 6.45 முதல் 7.30 மணி வரை சுப முஹ¨ர்த்தம். காலை உணவாகிய Break Fast என்ற பெயரில் பொங்கல், வடை இட்லி தோசை என்றெல்லாம் சாப்பிட்டுவிட்டு அசையாமல் ஒரிடத்திலிருந்து திருமணம் முடியும்வரை பார்த்துவிட்டு 'அடடா!ஆபீஸுக்கு நேரமாகி விட்டதே'என்று கூறிக் கொண்டு முதல் பந்தியிலேயே அமர்ந்து மூச்சுமுட்ட சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் ஒடுகிறோம். இன்றைய யுக தர்மம் பணம் சம்பாதிப்பது முதலிடத்திலும், உணவு என்பது இரண்டாமிடத்திலும் உள்ளது.

இரண்டு தலைமுறைக்கு முன்னால் இவ்விஷயம் நேர் எதிராக இருந்தது. முன்னோர்களுக்கு LIC Policy தேவைப்படவில்லை. காரணம் சீரான உணவு முறையினால் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தனர். இன்று பணம் உள்ளது. ஆரோக்கியமில்லை. LIC Policy தேவை. 40 வயது வருவதற்குள் நோய்களனைத்தும் அண்டி விடுகின்றன. படிக்கட்டுகள் ஏறி வீட்டிற்குள் வந்து ஆயாசத்துடன் இன்று பலர் இறந்தே விடுகின்றனர். இதற்கு என்ன காரணம்?தாய் தந்தையர்கள் நமக்கு நல்ல உணவைத்தான் தந்துள்ளனர். ஆனால் நாம்தான் அதை சரி வர பாதுகாப்பதில்லை. மனதில் அமைதியுடனும் நல்ல உணவை நாம் உண்ணவும் பழக வேண்டும். ஆயுர் வேதம் கீழ்காணும் விதமாக உணவை உட்கொண்டால் நீண்ட காலம் உயிர் வாழ முடியும் என்று கூறுகிறது.

1. குறிப்பிட்ட நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும். நாம் முன்பு சாப்பிட்ட உணவு நன்கு ஜீர்ணமாகி விட்டது என்பதை அறிய சில அறிகுறிகள் உடலில் தென்படும். ஏப்பம் விட்டால் முன் உண்ட உணவின் மணம் வராது. உடல் சுறுசுறுப்பு, மல மூத்திரங்கள் தடை ஏதுமில்லாமல் நன்கு வெளியேறிவிடும். உடலே லேசானது போல இருக்கும். பசியும் தண்ணீர் தாஹமும் நன்கு தோன்றும். இவை ஜீரண ஆஹாரத்தின் அறிகுறிகளாகும். இவை தோன்றிவிட்டால் உணவு உண்ணுவதற்கு ஏற்ற காலமாகும்.

2. நமக்கு நன்கு பழக்கப்பட்ட உணவையே எப்போதும் உண்ண வேண்டும். நண்பர் சோலாப்பூரி ஒசியில் வாங்கித் தருகிறாரே என்றெண்ணி அதை சாப்பிட்டால் அதனால் பின் விளைவுகள் ஏராளம்.. ஒட்டல் உணவை பிராணபயம் ஏற்பட்டாலின்றி எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். வீட்டில் உணவை தாயாரும், மனைவியும் அன்புடன் நமக்காக சமைக்கின்றார். அப்படியிருக்க நமக்கெதற்கு வியாபார நோக்குடன் மட்டுமே செய்யப்படும் ஹோட்டல் உணவு?

3. உண்ணும் உணவு சுத்தமாக இருக்கவேண்டும். புல், கல், முடி போன்றவவை உணவில் தென்பட்டால் அதை சாப்பிடக்கூடாது.

4. வறண்ட உணவைத் தவிர்த்து நெய்ப்பசையுடன் கூடியதும், சூடானதும், லேசான உணவு அதாவது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவை மட்டுமே எப்போதும் உண்ண வேண்டும்.

5. சாப்பிடும்போது ஜி.க்ஷி.பார்ப்பது, அருகிலிருப்பவர்களிடம் பேசுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி உணவின் குணம், மணம், ருசி அறிந்து சாப்பிட பழகிக் கொண்டால் நன்கு ஜீரணமாகி உடல் பலம், நிறம், ஆயுஸ் ஆகியவை கிட்டும். பகவத் கீதையில் கிருஷ்ணர் நானே சர்வ ஜீவராசிகளின் வயிற்றில் நெருப்பாக இருந்து நான்கு விதமான உணவு வகைகளான நசுக்கிச் சாப்பிடுதல், கடித்துச் சாப்பிடுதல், குடிக்கக்கூடிய தண்ணீர் முதலியன மற்றும் வாயிலிட்டு நன்கு அரைத்துச் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்கிறேன் என்று கூறுகிறார். அப்படிப்பட்ட பகவான் ஸ்ரீ க்ருஷணருக்கு நாம் சுத்தமான உணவைச் சாப்பிடுவதன் மூலம் பெரிய நிவேதனமாகிவிடும். சுவாமி படத்திற்கு மணி அடித்து பால் பழம் வெத்தலை எல்லாம் நைவேத்தியம் செய்கிறோம். ஆனால் அறிந்து கொள்ளுங்கள் சுவாமி நம்முள்ளே நெருப்பாகவும் உள்ளார் என்பதை!

6. அறு சுவைகளான இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம், மற்றும் துவர்ப்பு ஆகியவைகளை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவைகளிலும் இனிப்பு அதிகம் சேர்ப்பதன் மூலம் நல்ல பலம் கிடைக்கும். (சர்க்கரை நோயாளிகள் தவிர்த்து) .

7. பரபரப்பில்லாமல் அதற்காக மிக மெதுவாகவும் சாப்பிடக்கூடாது. நிதானமாகவும் அமைதியுடனும் உண்ணும் உணவு நோய் வராமல் காக்கும் மருந்தேயாகும்.

8. குளித்த பிறகுதான் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு குளித்தால் உடல்சூடு வெளியேறாமல் உள்ளே சென்று உணவை காந்தச் செய்து பித்த அஜீரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சாப்பிட்ட பிறகு நூறு அடி நடந்து சிறிது நேரம் அரசனைப்போல் நிமிர்ந்து அமர்ந்து இடது பக்கம் சரிந்து படுத்துறங்கினால் (இரவில்) உணவு மறுநாள் காலைக்குள் நன்கு செரிந்துவிடும்.

9. ஸ்வாமிக்கு நைவேத்தியம், வீட்டுக்கு வந்துள்ள உறவினர் மற்றும் நண்பர்கள், குழந்தைகள், ஆசிரியர், வீட்டில் வளரும் பிராணிகள், வேலைக்காரர்கள் இவர்களுக்கு உணவு கொடுத்து அவர்கள் சாப்பிட்ட பிறகேதான் சாப்பிடுவது என்ற ஒரு சிறந்த வைராக்கியத்தை நம்முன்னோர்கள் கொண்டிருந்தார்கள்.

10. இந்த உணவு என் உடல் நிலைக்கு நன்கு சேரும், இந்த உணவு எனக்கு ஒவ்வாது என்று எப்போதும் ஒரு விசாரனையை செய்த பிறகுதான் சாப்பிட வேண்டும். உணவை ஒருபொழுதும் குறை கூறலாகாது. உணவை நன்கு சமைத்தவர்களை பாராட்ட வேண்டும். அதனால் அவர்கள் மனம் குளிர்ந்து நமக்கு மேலும் ருசியான உணவை சமைப்பார்கள்.

11. நீர்ப்பொருளான உணவை சற்று அதிகமாகச் சாப்பிடுவது எளிதில் ஜீரணமாக வழிவகுக்கும். ஆனால் தண்ணீரை உணவிற்கு முன்பு குடித்துவிட்டுச் சாப்பிட்டால் உடல் இளைத்துவிடும். நடுவில் தண்ணீர் குடித்தால் உடல் சீரான கட்டுடன் விளங்கும். உணவின் கடைசீயில் தண்ணீர் குடித்தால் உடல் பெருகிவிடும். அதனால் அளவுடன் தண்ணீர் குடிப்பதே நலம்.

12. நம்முடைய மனதிற்கு இனிமையான சொற்களின் மூலம் மகிழ்ச்சியைத் தருபவர் மேலும் ஆசார சீலமுள்ளவர்களுடன் சேர்ந்து உண்பது நிறைவைத் தரும். இப்படியாக உணவில் கட்டுப்பாட்டுடன் சிரத்தையுடன் சாப்பிடும் உணவு உடலை பேணிக்காத்து புருஷார்த்தங்களாகிய தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோக்ஷத்தை அடைய மருந்தாக நமக்கு பயனளிக்கிறது.

மேலும் விபரங்களுக்கு, தொடர்பு கொள்க:
- ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை, நசரத்பேட்டை-602 103. Tel : (044) 26272162, 26491823, Email: sjcac@vsnl.net