திரு உத்தரகோசமங்கை

திருவாசகத்தலங்கள்

திரு உத்தரகோசமங்கை

பாண்டிய நாட்டில் உள்ள தலம். திருவாசகத்தில் பலவிடங்களிலும் (38 இடங்களில்) புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. இரயில் நிலையம்.

மதுரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில், பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, (இராமநாதபுரத்திற்கு 10 A.e. முன்பாகவே) வலப்புறமாகப் பிரிந்து செல்லும் உத்தரகோசமங்கை ரயில்வே வெலல் கிராஸிங்கைத் தாண்டி, 7 A.e சென்றால் இத்தலத்தையடையலாம். சாலை பிரியுமிடத்தில் கோயில் பெயர்ப் பலகையுள்ளது. ஊருக்கு அருகாமையில் செல்லும்போதே கோபுரம் உயர்ந்து தெரிகிறது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்.

இராமநாதபுரம் சமஸ்தானத் தேவஸ்தானத்திற்குரிய திருக்கோயில். சேதுபதி மகாராஜா குடும்பத்தினரே பரம்பரை அறங்காவலராவர், தற்போதுள்ள சேதுபதி மகாராணி திருமதி. இந்திராதேவி நாச்சியார் அவர்கள் பரம்பரை அறங்காவலராக இருந்து வருகிறார்கள். சமஸ்தான திவான் நிர்வாகச் செயலராக இருந்து, கோயில் நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார். பழமையான திருக்கோயில் - தோற்றத்திலும் அவ்வாறே காட்சியளிக்கிறது.


இறைவன் - மங்களேசுவரர், மங்களநாதர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர்.


இறைவி - மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி.


நடராஜர் - இரத்தின சபாபதி, ஆதிசிதம்பரேசர்.


தலமரம் - இலந்தை.


தீர்த்தம் - அக்கினி தீர்த்தம். கோயிலுள்ள உள்ளது. இது தவிர, கோயிலுக்கு வெளியில் பிரம்ம தீர்த்தமும், சற்றுத் தள்ளி 'மொய்யார் தடம் பொய்கை'த் தீர்த்தமும், வியாச தீர்த்தமும் சீதள தீர்த்தம் முதுலியனவும் உள்ளன. கோயிலுள் மங்கள தீர்த்தமும் உள்ளது.

உத்தரம் - உபதேசம், கோசம் - ரகசியம், மங்கை - பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய இத்தலத்தில் வேதவியாசர், காகபுஜண்டரிஷி, மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர் முதலியோர் வழிபட்டப் பேறு பெற்றுளனர். அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்றபதி. தட்சிணகயிலாயம், பத்ரிகாரண்யம் (இலந்தைவனம்) , வியாக்ரபுரம், ஆதி சிதம்பரம், பிரமபுரம், சதுர்வேதபுரி, மங்களபுரி முதலியன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.

இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.

சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்து கொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப் பொருளை உபதேசம் செய்து, இங்கிருந்த அடியார் சிவயோகிகள் முதலிய பல்லாயிரவர்க்கும் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இக்கருத்தை, திருவிளையாடற்புராண, வலைவீசின படலத்துள் உள்ள பின்வரும் பாடல்கள் நமக்குணர்த்துகின்றன-

1) ......தருமமால் விடைமேல் தோன்றி

வீண்ணிடை நின்றான் சென்றான் வேத்திரப் படையானோடும்

உண்ணிறை அன்பரோடும் உத்தரகோச மங்கை.


2) அங்கிருந்து அநாதிமூர்த்தி ஆதி நான்மறைகள் எத்துங்

கொங்கிருங்கமலச் செல்விக் குரைகழல் வணங்கிக் கேட்பப்

பங்கு இருந்தவட்கு வேதப் பயனெலாந்திரட்டி முந்நீர்ப்

பொங்கிருஞ்சுதை போல் அட்டிப் புகட்டினான் செவிகளார.


3) அவ்வேலை அன்புடையார் அறுபதினாயிரவர்க்கும் அளித்துப் பாச

வெவ்வேலை கடப்பித்து வீடாத பரானந்த வீடு நல்கி

மைவேலை அனைய MN அங்கயற்கண் நங்கையடு மதுரை சார்ந்தான்

இவ்வேலை நிலம்புரக்க முடிகவித்துப் பாண்டியன் என்றிருந்த மூர்த்தி."


இத்தலத்தின் பழமையை உணர்த்துவதாக "மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது" என்னும் பழமொழி இப்பகுதியில் வழங்குகிறது. இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மதிலே உள்ள கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை புலனாகிறது.

மேலும் சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் "இலவந்திகைப் பள்ளி" என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்பாரும் உளர். மேற்குறித்த கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.

மணிவாசகர் தம் திருவாசகத்துள் இத்தலத்தையும் பெருமானையும் -

"அணி பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே," "வெறிவாய் அறுகால் உழுகின்ற பூம் பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே," "பக்தரெலாம் பார் மேல் சிவபுரம் போல் கொண்டாடும் உத்தரகோச மங்கையுர்," எனப்பலவாறு புகழ்ந்துபாடுகிறார்.

நீத்தல் விண்ணப்பம் என்னும் திருவாசகப் பகதி இத்தலததில் அருளப்பெற்றது. கீர்த்தித் திருவகவல், திருப்பொன்னூசல், திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி முதலிய பகுதிகளிலும் இத்தலம் குறிக்கப்பட்டுள்ளது.

கீர்த்தித் திருவகவலில் "உத்தரகோச மங்கையுள் இருந்து, வித்தக வேடம் காட்டிய இயல்பும்" என்று வருந்தொடர், இத்தலபுராணத்தில் 8ஆம் சருக்கத்தில் சொல்லப்படும் - ஆயிரம் முனிவர்கட்கும் இறைவன் தன் வடிவம் காட்டிக் காட்சி தந்த வரலாற்றைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதுபற்றியே இத்தலத்துப் பெருமானுக்கு "காட்சி கொடுத்த நாயகன்" என்ற பெயரும் வழங்குகிறது. (இவ்வரலாறு இத்தலக் குறிப்பில் சஹஸ்ரலிங்கக் கோயிலைப் பற்றி வருமிடத்தில் எழுதப்பட்டுள்ளது) இது தவிர, 'மகேந்திரம்' என்பது உத்தரகோசமங்கையைக் குறிக்கும் என்று கொண்டு, இறைவன் அம்பிகைக்கு உபதேசித்ததையே "மகேந்திரம் அதனில், சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்" என்ற தொடர் குறிப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். அதற்கு அதாரமாக உ.வே.சா. நூல்நிலைய வெளியிடாகிய திருவாசக உரையை

இவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்.

இங்குள்ள நடராஜமூர்த்தி ஆதிசிதம்பரேசர் என்றழைக்கப்படுகிறார். இங்குள்ள சபை இரத்தினசபை எனப்படுகிறது.

8மங்களேசுவரி பிள்ளைத்தமிழ்' என்னும் நூல் திரு.வ.த. சுப்பிரமணியப்பிள்ளையவர்களால் 1901லும் மறுபதிப்பாக 1956லும் வெளியிடப்பட்டுள்ளது. 'உத்தரகோசமங்கைத் தலபுராணம்' அச்சிடப்பட்டுக் கோயிலில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

இராமேஸ்வரம், உத்தரகோசமங்கை அகிய இருகோயில்களும் முதலில் இலங்கையில் இருந்த கண்டி மகாராஜாவால் கட்டப்பட்டு, பின்பு பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு - ஆதிசைவர்கள் வசமிருந்து பின்னரே இராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டதாம். அதுமுதல் இன்றுவரை இராமநாதபுர சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்து வருகிறது.

பழமையான திருக்கோயில். முகப்பில் இரு கோபுரங்கள் உள்ள.ன வலப்பால் கோபுரம் உரிய அமைப்பில் உள்ளது. இடப்பால் உள்ளது மொட்டையாகக் காட்சி தருகின்றது. வலப்பால் கோபுரமும் மிகப்பழமை - செங்கல் கட்டமைப்பு - கலசங்கள் இல்லை - ஏழு நிலைகள்.

இரு வெளிக் கோபுரங்கட்கும் உள்கோபுரங்கள் உள்ளன. வலப்பால் உள்கோபுரம் ஐந்து நிலைகள். இடப்பால் உள்கோபுரம் மூன்று நிலைகள். வலப்பால் உள்ள கோபுரத்தின் முன்னால் நர்த்தன விநாயகர் சுப்பிரமணியர் தரிசனம், உட்புறம் வலப்பால் குளம். உள்கோபுரம் கண்டு தொழுது உட்செல்கிறோம். இடப்பால் பிராகாரத்தில் வாகனங்கள். வாயிலைத்தாண்டி இடப்பால் திரும்பினால் தட்சிணாமூர்த்தி தனியே கால் மேல் கால் மடித்துப்போட்டு, அபயவரத முத்திரைகளுடன் ஒர கையையுயர்த்தி ஒரு கையைத் தாழ்த்தி அமர்ந்து காட்சி தருகின்றார் - சீடர்கள் நால்வருமில்லை. சிவலிங்க பாணமும் நாகப் பிரதிஷ்டையும் பக்கத்தில் உள்ளன.

விநாயகரைத் தொழுது பலிபீடம் கொடிமரம் நந்தி இவற்றை வணங்கியவாறே உள்வாயிலைத் தாண்டி பெரிய மண்டபத்தை அடைகிறோம். முதல் தூணில் குவித்த கைகளுடன் சேதுபதி காட்சி தருகிறார். மற்றத் தூண்களில் பாஸ்கர சேதுபதி, ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி, ராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி முதலியோர் கற்சிலைகளாகக் காட்சியளிக்கின்றனர்.

இங்கிருந்து பார்த்தால் நேரே மூலவர் தரிசனம்.

பிரகாரச் சுவரில் திருவாசகப் பகுதிகளான பொன்னூசல், நீத்தல் விண்ணப்பம் முதலியவை கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டு உள்ளன. தொடர்வது அறுபத்துமூவர் மூலத்திருமேனிகளின் தரிசனம் - சப்த மாதாக்கள் - முடிவில் விநாயகரும் ரிஷபாரூடரும் காட்சி தருகின்றனர். வலம் முடித்து துவாபாலகர்களைத் தொழுது, உட்சென்றால் மூலவரின் அருமையான தரிசனம். எதரில் நந்தி தேவர் - நீர் கட்டும் அமைப்பில். அனுக்ஞை விநாயகரைக் கும்பிட்டு உட்புறமாகப் பார்த்தால் மங்களேசுவரர் மங்கலமாகக் காட்சியளிக்கிறார். சதுர ஆவுடையார்.

மாணிக்கவாசகரை மனத்தில் நிறுத்தி அந்நினைவோடு வணங்குகிறோம். மதுவளர் பொழில் திருவுத்தரகோசமங்கையுள்ளாய் - எது எமைப்பணிகொளும் ஆறு? என்று வாயாரப்பாடி, நெஞ்சார நினைத்து, கண்ணீர் மல்கக் கசிந்து கை கூப்புகிறோம்.

மனநிறைவான உணர்வு, (சிவபெருமானுக்குத் தாழம்பு ஆகாதது, ஆனால் இங்கு அதற்கும் சாப நிவர்த்தி ஏற்பட்டதால் மங்களேசுவரருக்குத் தாழம்பு சார்த்தப்படுகிறது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.) வெளியே வருகிறோம். அடுத்த தரிசனம் மங்களாம்பிகை. நான்கு கரங்களுடன் - அபயம் ஒருகரம்,

ஒருகரம் தொடையில் நிறுத்தி, இருகரங்களில் தாமரையும், ருத்ராட்சமும் ஏந்தித் தரிசனம் தருகின்றாள். இத்தலத்தல் சுவாமியை அம்பாள் பூஜிப்பதாக ஐதீகம். நடராஜாவுக்குரிய ஆறு அபிஷேகக் காலங்களிலும் இச்சந்நிதியில் இறைவன் தாண்டவ மாடிக் காட்சி தரும் ஐதிகம் நடைபெறுகிறது.

பிராகார அழகு இராமேஸ்வரத்தை நினைவூட்டுகிறது. தூண்களில் பிட்சாடனர், ஊர்த்துவர் சிற்பங்கள் உள்ளன. உலா வருவதற்குரிய நடராஜத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. வெளிச்சுற்றில் வல்லபை விநாயகரைத் தரிசிக்கலாம்.

ஆதிசிதம்பரம் எனப்படும் அற்புதத் தனிக்கோயிலை அடுத்துக் காணலாம். நடராஜப் பெரமானுக்குத் தனிக்கோயில், கோயிலுக்கு உள்ளேயே குளத்தின் எதிரில் உள்ளது. பலிபீடம், கொடி மரம், நந்தி தொழுது முன்மண்டபம் சென்றால், சேதுபதிகள் வண்ணங்களில் சுதையில் தூண்களில் காட்சியளிக்கின்றனர். சுற்றிலும் அகழி அமைப்பு. எனவே சந்நிதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு நோக்கிய சந்நிதி. அக்கினி மத்தியில் நடராஜப் பெருமான் ஆடுவதாகச் சொல்லப்படுகிறது. அம்பிகைகாண இங்கு அறையில் ஆடிய நடனத்தைத்தான் அம்பலவாணர், தில்லையில் அம்பலத்தில் ஆடினார் என்கிறார் ஆலய சிவாசாரியார்.

இங்குள்ள கூத்தபிரான் - நடராஜர் அதி அற்புதமானவர். ஐந்தரை அடி உயரம் - முழுவதும் மரகதத்திருமேனி. விலை மதிப்பிட முடியாத இப்பெருமான் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே அடியவர்க்குக் காட்சியளிக்கிறார்.

இப்பெருமான் வெளியே உலாவருவதில்லை. பெருமான் திருமேனியை உள்வைத்தே சந்நிதி கட்டப்படுள்ளதால் திருமேனியை வெளிக் கொணரவும் இயலாது. (உலாவருவதற்கான மூர்த்தம் தனியே உள்ளது.)

மார்கழித் திருவாதிரையில் இப்பெரமானுக்கு மிகப்பெரிய அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. இதைச் செய்பவர்கள் திருப்புத்தூர் வள்ளல் ஆறுமுகம் பிள்ளையவர்களின் குடும்பத்தினர். அன்று ஒரு நாள் மட்டுமே சந்தனகாப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிஷேகங்கள் கண்கொள்ளாக் காட்சியாக - அற்புதமாக நடைபெறுகின்றன. வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்நாளில் கட்டாயமாகச் சென்று தரிசிக்க வேண்டும்.

அபிஷேக ஆராதனைகள் முடிந்த பிறகு மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அக்காப்பிலேயே அடுத்த மார்கழித் திருவாதிரை வரை பெருமான் காட்சித்தருவார். மார்கழித் திருவாதிரை நாளில் வாய்ப்பும் திருவருள் கூட்டுவிப்பும் உடையோர் அவசியம், சென்று ஆடல்வல்லானைத் தரிசித்து ஆனந்தம் பெறவேண்டும். நாடொறும் உச்சிக் காலத்தில் நடைபெறும் ஸ்படிகலிங்க, மரகதலிங்க, அன்னாபிஷேகம் காணக் கொடுத்து வைக்க வேண்டும்.

உலகெலாம் மலர் சிலம்படியை, ஒப்பற்ற மரகதச் செல்வரை உள்ளத்திருத்தித் தொழுது பிரிய மனமின்றிப் பிரிந்து முன் மண்டபம் அடைகின்றோம். அங்குள்ள சிறிய மேடையில்தான் உச்சிக்காலத்தில் ஸ்படிக, மரகதலிங்கங்களை வைத்து அபிஷேகம் செய்கின்றனர். அதைத் தரிசிக்கும் போதே வலப்பக்கச் சாளரத்தின் வழியே கைகூப்பிய நிலையில் உள்ள மாணிக்கவாசகரையும், இடப்பால் திருட்மபி உமா மகேசுவரரையும் ஒரு சேரத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு எண்ணி

இன்புறத்தக்கது. உமாமகேசுவரர் சந்நிதிக்குப் படிகளேறிச் சென்று தரிசித்துவிட்டு மறுபுறமுள்ள படிகள் வழியே இறங்கிப் பிராகார வலமாக வந்தால் திருப்பதிகங்கள் எழுதப்பட்டுள்ளவையும், குருந்தமர உபதேசக் காட்சி சந்நிதியும் கண்டு இன்புறலாம். கல்லில் குருந்தமரம் செதுக்கப்பட்டு கீழே அமர்ந்து இறைவன் (குரூமூர்த்தமாக) உபதேசிக்க எதிரில் மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சி அற்புதமாகவுள்ளது.

மாணிக்கவாசகர் சந்நிதி கண்டு தொழுகிறோம். கோஷ்டமூர்த்தம் 'ஏகபாத திரிமூர்த்தி' அருமையானது.

நடராஜர் கோயிலுக்குப் பக்கத்தில் தனியே சஹஸ்ரலிங்க சந்நிதி உள்ள தனிக்கோயில் உள்ளது. மூலத்திருமேனியில் நெடுக்குக்கீற்றுகள் உள்ளன. சஹஸ்ர எண்ணிக்கையில் - உட்புறத்தில் தலமரத்தின் வேருள்ளது. வியாசரும் காகபுஜண்டரும் இங்குத்தவம் செய்வதாக ஐதிகம். இதன் பக்கத்தில்தான் தலமரமான இலந்தைமரம் உள்ளது.

இந்த சஹஸ்ரலிங்கக்கோயில் எழுந்ததற்கான வரலாறு, நடராஜர் கோயிலில் முன் மண்டபத்தின் மேற்புறத்தில் வண்ண ஓவியமாக எழுதப்பட்டுள்ளது.

இது தொடர்பான வரலாறு வருமாறு-

ஆர்கலிசூழ் தென்இலங்கை அழகமர் மண்டோதரிக்கு, அவளுடைய தவத்தை ஏற்றுக் காட்சி தந்தருளப் பெருமான் உள்ளங் கொண்டார். தன்பாலிருந்து ஐம்புலனும் அடக்கி அருந்தவம் புரிந்து வந்த ஆயிரம் மனிவர்களைப் பார்த்து "மண்டோதரிக்கு (வண்டோதரி) அருள் செய்ய யாம் இலங்கை மூதூர் செல்கின்றோம். நீவில் அனைவரும் இத்தலத்தை விட்டு அகலாது இருப்பீராக!எம்மால் ஒப்படைக்கப்படும் இவ்வேதமாகச் சுவடிகளை கைவிடாது காத்து வருவீராக!இலங்கையரசன் இராவணனால் எப்போது எம்திருமேனி தீண்டப்படுகிறதோ, அப்போது அதற்கு அடையாளமாக, இத்திருக்குளத்தின் நடுவே அக்கினிப்பிழம்பு தோன்றும்" என்று வானொலியாக அருள்செய்தார்.

மாதர்குலத்திலகமா விளங்கிய மாதரசி மண்டோதரி தன் உள்ளத்தில் எவ்வடிவில் இறைவனை நினைத்துத் தவமிருந்தாளோ அவ்வடிவத்தையே ஏற்று, அழகிய திருவுருக் கொண்டு இறைவன் சென்று அவளுக்குக் காட்சி தந்தார். தரிசனம் பெற்ற மாதரசி, தன்னை மறந்து, பரவசமாகி, கண்களாரக் கண்டு கைகளாரத் தொழுது பிரமித்துப் போய் அசையாது நின்றாள். அப்போது வெளியே சென்றிருந்த இராவணன் உள்ளே வந்தான். இறைவனும் அழகான குழந்தையாக மாறிக் காட்சித்தர, அவன் அக்குழந்தையைக் கண்டு அதன் அழகில் மயங்கி 'யார் பெற்றதோ இது' என்று வினவினான். வண்டோதரி, 'யாரோ ஒரு தவமகள் வந்து இக்குழந்தையைத் தந்து சென்றாள்" என்றாள். குழந்தையின் உடம்பில் மாறிமாறித் தோன்றிய வண்ணத்தைக் கண்டு உள்ளம் வியப்புற்ற இராவணன் அக்குழந்தையைக் கையாலெடுத்துத் தழுவி மகிழ்ந்தான். அவ்வளவில் - இறைவன்

திருமேனியை இராவணன் தீண்டியதால் - குளத்தில் அக்கினிப் பிழம்பு தோன்றியது. அதுகண்ட முனிவர்கள் செய்வதறியாது திகைத்து, அதில் வீழ்ந்து மறைந்தனர். அவர்களுள் ஒருவர் மட்டும் தம் அறிவால் உணர்ந்து, இறைபணியில் நிற்றலே கடமையென்று முடிவு செய்து, அத்தீர்த்தத்தின் கரையிலேயே அமர்ந்திருந்தார்.

மூதாட்டி ஒருத்தி வந்து மண்டோதரியிடமிருந்து குழந்தையைப் பெற்றுச் சென்றாள். இறைவன் திரும்ப வந்து குளக்கரையில் இருந்தவர் மூலவமாகச் செய்தியறிந்தார். மூழ்கிய 999 பேர்களுக்கும், மூழ்காதிருந்தவருக்குமாக ஆயிரவர்க்கும் இறைவன் உமையோடு விடைமீதமர்ந்து காட்சி தந்து தம் சந்நிதியில் தம்முடன் அவர்களை இருத்திக் கொண்டார். இதனால் பெருமானுக்குக் "காட்சி கொடுத்த நாயகன்" என்ற பெயரும் வழங்கலாயிற்று. ஆயிரவர்களும் ஒவ்வொரு இலிங்கவடிவில் இறைவனோடு ஒன்றினர் - அதுவே சஹஸ்ரலிங்கமாகத் தரிசனம் தருகின்றது. இக்கோயிலை வலம் வந்து வழிபடுவோர் எல்லாச் சித்திகளையும் அடைவர் என்பது தலவரலாறு.

சித்திரை பௌர்ணமி, மார்கழித் திருவாதிரை நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

மணிவாசகர் திருவடி தோய்ந்த இடத்தைத் தொட்டுக் கும்பிட்டு மனநிறைவோடு திரும்புகிறோம்.


திருவாசகம்

கீர்த்தித் திருவகவல்

1) "உத்தரகோச மங்கையுள் இருந்த

வித்தக வேடம் காட்டிய இயல்பும்"

2) "பாண்டிய நாடே பழம் பதியாகவும்

பத்திசெய் அடியரைப் பரம்பரத் துய்ப்பவன்

உத்தரகோச மங்கை யூராகவும்"


3) நீத்தல் விண்ணப்பம்

"கடையவனேனைக் கருணையினாற் கலந்தாண்டு கொண்ட

விடையவனே விட்டிடுதிகண்டாய் விறல் வேங்கையின்தோல்

உடையவனே மன்னும் உத்தரகோச மங்கைக்குஅரசே

சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னைத் தாங்கிக் கொள்ளே"


4) திருப்பொன்னூசல்

"மாதாடு பாகத்தன் உத்தரகோச மங்கைத்

தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்

கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு என் தொல்பிறவித்

தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்

காதோடு குண்டலங்கள் பாடிக்கசிந்து அன்பால்

போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ"


5) திருத்தசாங்கம்

"தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்

மாதடும் பாகத்தன் வாழ்பதியென் - கோதாட்டிப்

பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம் போற்கொண்டாடும்

உத்தர கோச மங்கையூர்."


திருவுத்தரகோசமங்கைத்

தலபுராணப் பாடல்கள்

6) ஆதிசிதம்பர சபா நடேசர்

பூமேவுமடற்கமலப் பொகுட்டுறையும் மந்தணனும் பொலிவினோங்கித்

தேமேவுபசுந்துவளத் திருமாலுங்காண்பரிய செல்வரேனும்

பாமேவுபதஞ்சலியும் புலிப்பதனுங்கண்டுதினம் பணிந்துபோற்ற

மாமேவுமணிமன்று ணடம்புரிபொற்பதமிறைஞ்சி வழுத்தல் செய்வாம்.


7) சிவகாமசுந்தரி

உலகமுழுதும் பயந்துங் கன்னிமைநீங்கா திறைபாலு வந்துவைகி

யலகிலுயிர்க்கருள்சுரந்து பேரறமெண்ணான் கியற்றி யனைத்துங்காக்குந்

திலகநுதற் செங்கனிவாய் சிவகாமசுந்தரியாந் தேனைச்செம் பொன்

மலையரையன் குலவிள்கை யிருள் தீரவெமதகத்துள் வைத்துவாழ்வாம்


8) மங்களநாதர்

ஒருபொருளாய் பலவுருவா யளியாகி யானந்தவுண்மை யாகிக்

கருதரிதாய்த் தெளிரவரிதாய்க் காரணகாரியங்கடந்த கருணை யாகிக்

பொருளின் மறைக்கொபந்தாகி யுபநிடதப்பொருளாகிப் புவனிபோற்ற

வருதிருவுத்தரகோசமங்கையர னடிக்கமலம் வணங்கல் செய்வாம்.


9) மங்களநாயகி

காரேறு கருங்குழலுந் திருநுதலுஞ்சடரிலைவேற் கண்ணுங் கஞ்சத்

தாரேறுதிருமா புங் கரும்புருவந்தடந்தோளுங் கருணைகாட்டி

நீரேறுசடாமவுலிப் பெருமான்றனொருபாக நீங்காதோங்கு

வாரேறுபூண்முலையாண் மலர்ப்பதமுமெந்நாளும் வழுத்தல் செய்வாம்.


10) திருப்புகழ்

வெற்பன வேயெழுந்து செப்பன வேதிரண்டு

மெத்தென மோடிகொண்ட தனமாதர்

மெய்ப்படு கோலமுங்கண் மைப்படு சாலமுஞ்செய்

வித்தையு மேநினைந்த மயலாகி

அற்பக லாவலைந்து கற்பதெலாமுலைந்து

ளற்பமு மானமின்றி அழிவேனோ !

அக்கினி ரூபமைந்த கிர்த்திகை மாதர்தந்த

அற்புத பாலையுண்ட குமரேசா !

பொற்பதி காவலிந்தி ரற்குற வேலெறிந்து

பொய்ப்படு சூர்பிளந்த அதிதீரா !

புட்பதி யேறுகொண்டல் அச்சுத னார்மகிழ்ந்த

புத்தமிர் தானசெஞ்சொல் மருகோனே !

உற்பல மோகொடுங்க ணைக்கினை யோவெனுங்கண்

உத்தம தேவதந்தி புணர்மார்பா !

உத்தம மாவளங்கொள் உத்தரகோசமங்கை

உற்றினி தாவிருந்த பெருமாளே !


அஞ்சல் முகவரி-

அருள்மிகு. மங்களேசுவரர் திருக்கோயில்

உத்தரகோசமங்கை - அஞ்சல்

இராமநாதபுரம் வட்டம் - மாவட்டம் - 623533.


Previous page in  கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is தில்லை (சிதம்பரம்)
Previous
Next page in கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is  திருவண்ணாமலை
Next