மாம்பழம் - Ayurveda Articles | Sri Kanchi Kamakoti Peetham
  1. Home
  2. Articles
  3. Ayurveda Index
  4. மாம்பழம்
ஆயுர்வேதக் கட்டுரைகள்

மாம்பழம்

Sri Kanchi Kamakoti Peetham
மாம்பழம்

பல வகை மாம்பழங்களில் பங்கன பள்ளி, ருமானி போன்றவைதான் அதிகம் கிடைக்கின்றது. அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய பழம் என்பதால் மாம்பழ விற்பனை எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கின்றது. மாம்பழத்தில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. காடுகளில் இயற்கையாக வளர்வது, தோட்டங்களிலும் மற்ற இடங்களிலும் நாமே விதை நட்டு வளர்ப்பது என மாமரங்கள் இருவகை. இரண்டாவது பிரிவான நாட்டு ஜாதி மரங்களில் உண்டான கனிகள், புஷ்பங்கள் மேன்மையானவை. அவைகளிலும் பாதிரி, நீலம், ருமாணி, ஒட்டுமா, மல்கோவா என்று பல பிரிவுகளும் இருக்கின்றன.

சுவையில் இனிப்பு, விந்துவை அதிகரிப்பது, சுகத்தைக் கொடுப்பது, கப ரக்த நோய்களை கண்டிப்பது, உடலுக்கு புஷ்டியும் நல்ல நிறத்தையும் கொடுப்பது, வாயுவை கண்டிப்பது, குளிர்ச்சி ஆகியவை பொது குணங்கள்.

இனிப்பும் துவர்ப்பும் சேர்ந்துள்ள மாம்பழத்தை உட்கொண்டால் ஜீரண சக்தியும், கபமும் சுக்லமும் அதிகரிக்கும். மாம்பழ ஜூஸ் பலம் அதிகம் கொடுக்கும். வாயுவை கண்டிக்கும் கபத்தை உண்டு பண்ணும். மலத்தை இறுகச் செய்யும். மாம்பழத்தை துண்டுகளாகச் செய்து உட்கொண்டால் ருசியாக இருக்கும். ஆனால் ஜீரணம் ஆவது மிகவும் கடினம். குளிர்ச்சி, பலம், புஷ்டி தரும். வாயுவை கண்டிக்கும்.

மாம்பழத்தின் உபயோகத்தால் வெளியிலிருந்து விஷப்பூச்சி அணுக்கள் நம் தரத்தில் கலந்து கெடுதல் செய்யாமலும் தோல் சம்பந்தப்பட்ட சில நோய்கள் வராமலும் தடுக்கப்படுகின்றன.

மாம்பழத்தை சாப்பிடும் சமயம் மாம்பழம் காய்ச்சிய பசும்பால் இரண்டைத் தவிர மற்ற எந்த ஆகாரத்தையும் உட்கொள்ளக்கூடாது.

க்ஷய நோய் எனப்படும் டி.பி. நோயில் வெள்ளாட்டு பாலுடன் சேர்த்து மாம்பழத்தை சாப்பிட வேண்டும். நல்ல பழுத்த மாம்பழத்தைத்தான் சாப்பிட வேண்டும். உயர்நத் ஜாதி மாம்பழங்களாகிய மல்கோவா, கிரேப், பங்கனபள்ளி போன்ற பழங்கள்தான் சாப்பிட வேண்டும். இவைகளையும் மாறி மாறி உட்கொள்ளாமல் ஏதாவது ஒரே ஜாதியின் மாம்பழத்தையே தொடர்ந்து உபயோகித்தால்தான் அவைகளின் நல்ல குணங்களை நாம் அடைய முடியும்.

முதலில் காய்ச்சி பசும்பாலை அருந்திவிட்டு, பிறகு மாம்பழத்தின் காம்பை நறுக்கி எடுத்து அவ்விடத்தில் வெளிக்கிளம்பும் பாலுடன் கூடிய ரசத்தை பிழிந்துவிட்டு பிறகு ரசத்தை உறிஞ்சி உட்கொள்ள வேண்டும். எக்காரணத்தை மூன்னிட்டும் மாம்பழம் சாப்பிட்டபிறகு பால் குடிப்பது கூடாது. ஆரோக்யத்துக்கு உகந்தது அல்ல. 1 மாதம் அல்லது 2 மாதம் எவ்வாறு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர ஜீரண சக்தி அதிகரித்தல், மலச்சிக்கல், டி.பி, இளைப்பு, இதய நோய்கள் யாவும் மறைந்து ரத்த விருத்தி, உற்சாகம், புதுத்தெம்பு ஆகியவை உண்டாகும்.

புளிப்பு மாம்பழங்களை அளவில் அதிகமாக முறைத்தவறி உட்கொண்டால் ஜீரண சக்தி குறைவு, மலச்சிக்கல், கண் பார்வை மங்குதல் ஆகியவை ஏற்படக்

கூடும்.. மாவடு புளிப்பும் துவர்ப்பும் உள்ளதால் ருசியைக் கொடுக்கும். ஆனால் வாயவையும், பித்தத்தையும் உண்டு பண்ணும்.

மாங்காய் சுவையில் புளிப்பு, வறட்சி வாயு பித்தம் கபம் ரத்த தோஷங்களை உண்டு பண்ணும். மாங்காயையே துண்டங்களாக நறுக்கி வெயிலில் காய வைத்து உட்கொண்டால் மலத்தை இளக்கச் செய்து- கபம் வாயுவைக் கண்டிக்கும்.

மாங்கொட்டைப் பருப்பு சுவையில் துவர்ப்பு, வாந்தி, பேதி, நெஞ்செரிச்சலைக் கண்டிக்கும். பேதியில் மாம்பருப்பு, கருவேப்பிலை சிறிது மிளகு வகைளை அரைத்து மோரில் கலக்கித் தாளித்து சிறிது உப்பு சேர்த்து சாதத்துடன் கலந்து சாப்பிடுதல் நல்லது.

மாம்பு குளிர்ச்சி, வாயுவை உண்டு பண்ணும். பேதி, ருசியின்மை, ரத்த தோஷங்கள், கபம், பித்தம் நீரழிவு இவைகளை கண்டிக்கும். மலத்தைக் கட்டும் குணம் இதற்கு அதிகம் உண்டு.