ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் - VIII - Ayurveda Articles | Sri Kanchi Kamakoti Peetham
  1. Home
  2. Articles
  3. Ayurveda Index
  4. ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் - VIII
ஆயுர்வேதக் கட்டுரைகள்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் - VIII

Sri Kanchi Kamakoti Peetham

கொலஸ்ட்ராலை குறைக்க என்ன வழி?

சொகுசான வாழ்க்கை முறை. தயிர் அதிக அளவில் சேர்ப்பது, ஆடு, கோழி முதலியவற்றின் மாமிசம் கலந்த உணவு அளவில் அதிகமாதல், பகல் தூக்கம், சோம்பல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

அறுவடையாகி நாளாகாத புதுத் தானியங்களாலான உணவு, சர்க்கரை, கற்கண்டு, வெல்லப்பாகு இவை அதிகம் சேர்ந்த உணவுகளும் கொழுப்படைப்பிற்குக் காரணமாகலாம்.

பாகலிலை, பாகற்காய், வேப்பிலை, வேப்பம்பூ, வெந்தயக்கீரை, நாவலிலை, கோவைக்காய் முதலிய கசப்பும் துவர்ப்பும் மிக்க இலைகளும் காய்களும் தொடர்ந்து உபயோகித்தவை. இலைகளைத் துவையலாகவும் கசக்கிப் பிழிந்தெடுத்த சாறாகவும் பயன்படுத்தலாம். காய்களை வதக்கிச் சாப்பிடலாம்.

பச்சைப் பயறு, கொள்ளு ஆகியவற்றைத் தண்ணீரில் கொதிக்கவிட்டுக் கஞ்சியாக்கி, ஆறிய பிறகு சிறிது தேன் கலந்து காலை உணவாகக் கொள்ளலாம்.

நடைப்பயிற்சி மிக அவசியமானது. காலையில் மலம், சிறுநீர் கழித்த பிறகு வெறும் வயிற்றில் 1 மணி நேரம் வரை வேகநடை நடப்பது நலம் தரும். மருந்துகளில் வரணாதி கஷாயம்+புனர்நவாதி கஷாயம் + காஞ்சனாரகுக்குலு நல்ல பலனைத் தரும். ஒன்றரை ஸ்பூன் வீதம் கஷாயம் + 12 ஸ்பூன் வெந்நீர் + ஒரு மாத்திரை காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

லோத்ராஸவம் 30 I.L. (6 ஸ்பூன்) அளவு காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிடவும். அல்சர் நோயாளிகள் இம்மருந்துகளைச் சாப்பிட வேண்டாம். மேற்கூறிய உணவு வகைகள் மற்றும் நடைப்பயிற்சி மட்டும் கடைப்பிடிக்கவும்.

அதிக வெயில் காரணமாக ஏற்படும் தலைசுற்றல், தொண்டை வறட்சி ஆகியவற்றைத் தவிர்ப்பது எப்படி?

கோடையில் ஏற்படும் இயற்கையான உடல் மாறுதல்களில் உடலில் நீர் வற்றுவதும் ஒன்று. இவ்வறட்சியைப் போக்க இயற்கை அளிக்கம் அருமருந்து இளநீர், பனை நுங்கு, முலாம்பழம், வெள்ளரிப் பழம், வெள்ளரிப் பிஞ்சு, கக்கரி முதலியவை. நாமே செயற்கையாகச் செய்துகொள்ளும் உபாயங்கள் MCP, குளிர்பதனம், விளாமிச்சை, வெட்டிவேர் போட்ட பானை நீர், நனைந்த விளாமிச்சைத் தட்டியாலான மறைப்பு முதலியவை.

இளநீர், பனை நுங்கு, முலாம்பழம் போனற்வற்றைப் பகல் உணவுக்குப் பின் ஓரிரு மணி நேரம் கழித்துச் சாப்பிடுவது நல்லது. காலை வேளையிலும் நல்ல பசி வேளையிலும் இரைப்பை உணவை எதிர்பார்த்துக் கதகதப்புடன் இருக்கும். அப்போது குளிர்ச்சி நிறைந்த இள நீர் முதலியவை நேரிடையாகச் சேரும்போது பித்தமும் குளிர்ச்சியும் கலப்பதன் காரணமாகப் பசி மந்தம், புளித்த ஏப்பம்,

வயிற்றில் வேக்காளம், பேதி, தலைச்சுற்றல் முதலியவை ஏற்படக் கூடும். பழுக்கச் காய்ச்சிய இரும்புச் சட்டியில் தெளித்த குளிர்ந்த நீர் சட்டி உடையைக் காரணமாவது போல, வயிற்றிலுள்ள அழற்சி நீங்க உதவக் கூடியவைகூட கதகதப்பாயுள்ள குடலில் சேரும் போது வேக்காளத்தைத் தருகின்றன. வெயிலில் அலைந்து திரும்பியவுடன் வியர்வையும் தாகமும் அடங்கச் சிறிது நேரம் ஓய்வெடுத்து, கைகால்கள் அலம்பி, வாய் கொப்பளித்துப் பின் இவற்றை அளவு மீறாமல் சாப்பிடுவதே சரியான முறை.

தலைச்சுற்றல், தொண்டை வறட்சி நீங்க இளநீரை எடுத்தவுடன் சாப்பிட வேண்டும். தாமதிக்கக்கூடாது. இளம் பனை நுங்குதான் நல்லது. முற்றியது ஜீரணமாகாது. வயிற்று வலி, தலைச்சுற்றல், வாந்தி ஏற்படுத்தும். இந்நிலையில் இஞ்சியும், உப்பும் சேர்த்துச் சுவைத்து மேல் மோர் சாப்பிட, பித்த வேதனை குறையும். வெள்ளரிப் பிஞ்சுடன் மிளகும் உப்பும் சேர்த்தால் அதன் குளிர்ச்சி குடலைப் பாதிக்காது. வெயிலிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் வியர்வை அடங்காமல் குளிர்ந்த நீரில் குளித்தால் சளி பிடிக்கும். உடல் கனக்கும். உடல் சூடு குறைந்து குளிக்கும் போது இளம் பனைநுங்கை மேல் தோல் நீக்கி உடலின் மேல் தேய்த்துக் குளிக்க, தோல் எரிச்சல், கடைக்கட்டி, அரிப்பு, வியர்க்குரு முதலியவை மறையும். தோல் வழவழப்பும் மென்மையும் பெறும்.

கோடைக்காலத்தில் மலச்சிக்கல் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். விடியற்காலை வேளையில் நீராகாரத்தை (இரவில் சாதம் ஊறிய தண்ணீர்) உப்பும் சீரகத் தூளும் சேர்த்துச் சாப்பிடுவதால் மலச் சிக்கல் இல்லாதிருக்கும். கோடைக்காலத்தில் நாவறட்சிக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் போதாது. வயிறு உப்புமே தவிர நாவறட்சி அடங்காது. விளாமிச்சை வேர் போட்டு ஊறியபானைத் தண்ணீரைச் சிறிது சிறிதாக ருசித்துப் பருகுவதும், அடிக்கடி வாயில் தண்ணீர் விட்டுக் கொப்பளிப்பதும், கை, கால், முகம் தண்ணீர் விட்டு அலம்பிக் கொள்வதும் நல்லது.

நாவறட்சியை ஏற்படுத்தும் மாப்பண்டம், எண்ணெயில் பொரித்தவை, காரம், புளிப்பு, உப்புச்சுவை, மசாலா, கேழ்வரகு, கொள்ளு, தயிர், காரசாரமான மாமிசம் போன்றவை தவிர்த்து இனிப்புச்சுவை, உளுந்து, பயறு, கோதுமை, அரிசி, கிழங்குகள், காய்கள், கீரைகள், பழங்களில் மா, பலா, திராட்சை, வாழைப்பழம் நல்லது. கரும்பு, தயிரில் வெல்லமும் நெல்லிக்காயும் சேர்த்தல், எருமைப்பால், பாலாடை, திரட்டிப்பால் ஆகியவை நல்லது. ஐஸ் கலந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

இள வயதிலேயே வெள்ளை முடி அதிகமாக வளருவதை தடுப்பதற்கு என்ன வழி?

மயிர்க்கால்களுக்கு ஆதாரமாக உள்ள தோலின் பாதுகாப்பு குறைவதால் நரை ஏற்படுகிறது. தோலின் அருகே சூடு அதிகமாவதால் மயிர்க்கால்களில் அழற்சி ஏற்பட்டு முடி நரைக்கிறது. உடலின் சூடு அதிகரிக்கக் காரணம் கோபம், சோகம், பயம், தாபம், கவலை போன்ற மன உணர்ச்சிகள் முடியின் வேர்ப்பகுதிகளில் சூட்டை அதிகப்படுத்தி முடி வெளுக்கிறது. மனதின் அமைதிக்கான நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். உடல் சூட்டைக் குறைக்க எண்ணெய் தேய்த்துக் குளித்தல், இரு மாதங்களுக்கு ஒருமுறை வயிற்றைச் சுத்தமாக்கப் பேதிக்குச் சாப்பிடுதல், இரவு படுக்குமுன் உள்ளங்கால்களுக்கு எண்ணெய் தடவிக் கொள்ளுதல் போன்றவை உதவுகின்றன. cL பிருங்காதித் தைலம் அல்லது பிருங்காமலகத் தைலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் கேசம் வறண்டு சிக்குப் பிடிக்காமலும் அழுக்கடையாமலும் பழுப்பு, செம்பட்டை அடையாமலும் இருக்கத் தலை முடியில் தடவவும். இதில் கவனிக்க வேண்டியது - ஈரமுள்ள தலையில் எண்ணெய் தடவக் கூடாது. தலையில் ஈரம் உலர்ந்த பின்புதான் எண்ணெய் தடவ வேண்டும். எண்ணெயை லேசாகவாவது தலைக்குத் தடவிக் கொண்ட பின்னர்தான் தலைக்குக் குளிக்க வேண்டும். கரிசலாங்கண்ணி இலை, நெல்லிமுள்ளி, அதிமதுரத்தையும் பாலில் அரைத்து, பாலில் தளரக் குழப்பி, சிறிது சுடவைத்துத் தலைக்கு எண்ணெய் தடவி, இதையும் ஊறவைத்து குளிக்கவும். குடலினுள்ளே தங்கும் மலப்பொருள்கள் உடல் சூட்டை அதிகமாக்குகின்றன. அவற்றை நீக்க அடிக்கடி நீராகப் பேதியாகும்படி திராட்டை கடுக்காய்க் கஷாயம் அல்லது சூரத்தாவாரை விதையை ஊற வைத்த தண்ணீர் இரு மாதங்களுக்கு ஒருமுறை சாப்பிட வேண்டும். மலம் தினமும் சரியாக எளிதில் வெளியேறும் பழக்கமுள்ளவர்கள் கூட பேதிக்குச் சாப்பிடுவது அவசியம். மலப் பாதையைத் தேய்த்து அலம்புவது போன்று இது பயன்படுகிறது.

உள்ளங்கால்களில் படும் சூடு ஒருவகையில் கண்களையும் கேசத்தையும் பாதிக்கக் கூடியதே. தற்போது சிமெண்டும் தாருமாகச் சூட்டை மிகைப்படுத்தும் பாதைகளில் நடப்பவர்களுக்கு இந்தச் சூடு மிக அதிகமாகப் பாதிக்கும். காலணியின்றி ரோட்டில் நடக்கக் கூடாது. இரவு படுக்குமுன் கால்களை நன்கு அலம்பித் துடைத்துவிட்டுப் பிறகு சிறிது நல்லெண்ணெயை உள்ளங்கால்களில் தடவித் தேய்த்துவிட்டுப் படுப்பதால் நல்ல தூக்கம் வரும். கால்களின் அயர்வு நீங்கும். கண்களில் எரிவும் உடற்சூடும் குறையும்.

நரைக்கு மற்றொரு காரணம் உடலின் போஷணைக் குறைவும் துவர்ப்பு, கசப்பு மிக்க பொருள்களை உணவில் குறைப்பதும்தான். திரிபலா சூர்ணம் 5 கிராம் வீதம் எடுத்து நெய், தேனுடன் கலந்து இரவில் படுக்குமுன் சாப்பிடவும். சியவனப்பிராசம் 1 ஸ்பூன் அளவு (5 கிராம்) காலை, மாலை வெறும் வயிற்றிலும், நாரசிம்ஹ ரஸாயனம் 5 கிராம் காலை, இரவு உணவுக்குப் பிறகும் சாப்பிடவும். இவை உடல் போஷாக்கை ஏற்படுத்தி மயிர்க்கால்களுக்குப் பலமளித்து முடியைக் கறுக்கச் செய்யும்.