மாலுக்கு

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஆறாம் பத்து

மாலுக்கு

பராங்குசநாயகிக்குப் பகவானிடம் அன்பு மிகுதியாகிறது. இவர் நினைத்தவாறு பகவானோடு சேர்க்கை கிடைக்கவில்லை. அவன் அவதாரங்களையும், அவற்றில் செய்த செயல்களையும், அவன் குணங்கையும் நினைக்கிறார். உடல் மெலிந்தது. ஆவி உருகுகின்றது. பராங்குசநாயகியின் மெலிவை நினைந்து தாய் இரங்குதல்போல் இப்பகுதி அமைந்துள்ளது.

தலைவியைக் குறித்துத் தாய் இரங்கல்

கலி விருத்தம்

உடல் மெலிவால் தலைவியின் கைவளை சுழன்றது

3282. மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு,

நீலக் குருநிற மேக நியாயற்கு,

கோலச்செந் தாமரைக் கண்ணற்கு,என் கொங்கலர்

ஏலக் குழலி யிழந்தது சங்கே. 1

மெலிவால் தலைவியின் பொன்னிறம் மாறியது

3283. சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு,

செங்கனி வாய்ச்செய்ய தாமரைக் கண்ணற்கு,

கொங்கலர் தண்ணந் துழாய்முடி யானுக்கு,என்

மங்கை யிழந்தது மாமை நிறமே. 2

என் மகள் பெருமையை இழந்தாள்

3284. நிறங்கரி யானுக்கு நீடுல குண்ட,

திறம்கிளர் வாய்ச்சிறுக் கள்ள னவற்கு,

கறங்கிய சக்கரக் கையவ னுக்கு,என்

பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே. 3

மெலிவால் தலைவி தன் பண்பை இழந்தாள்

3285. பீடுடை நான்முக னைப்படைத் தானுக்கு,

மாடுடை வையம் அளந்த மணாளற்கு,

நாடுடை,மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு,என்

பாடுடை அல்குல் இழந்தது பண்பே. 4

பிரானது நினைவால் என் மகள் நிறையிழந்தாள்

3286. பண்புடை வேதம் பயந்த பரனுக்கு,

மண்புரை வையம் இடந்த வராகற்கு,

தெண்புனல் பள்ளியெந் தேவப் பிரானுக்கு,என்

கண்புனை கோதை இழந்தது கற்பே. 5

பிரானால் என் மகள் உடல் மெலிந்தாள்

3287. கற்பகக் காவன நற்பல தோளற்கு,

பொற்சுடர்க் குன்றன்ன பூந்தண் முடியற்கு,

நற்பல தாமரை நாண்மலர்க் கையற்கு,என்

விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே. 6

கண்ணபிரானால் என் மகள் தன் ஒளியை இழந்தாள்

3288. மெய்யமர் பல்கலன நன்கணிந் தானுக்கு,

பையர வினணைப் பள்ளியி னானுக்கு,

கையடு கால்செய்ய கண்ணபி ரானுக்கு,என்

தையல் இழந்தது தன்னுடையச் சாயே. 7

கண்ணன் பொருட்டால் என் மகள் தன் மாண்பை இழந்தாள்

3289. சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு,

மாயச் சகடம் உதைத்த மணாளற்கு,

பேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்கு,என்

வாசக் குழலி இழந்தது மாண்பே. 8

நம்பியின் நினைவால் தலைவி தன் அழகையிழந்தாள்

3290. மாண்பமை கோலத்தெம் மாயக் குறளற்கு,

சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு,

காண்பெருந் தோற்றத்தெங் காகுத்த நம்பிக்கு,என்

பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே. 9

கண்ணனால் என் மகள் காவலை இழந்தாள்

3291. பொற்பமை நீண்முடிப் பூந்தண் டுழாயற்கு,

மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு,

நிற்பன பல்லுரு வாய்நிற்கு மாயற்கு, என்

கற்புடை யாட்டி யிழந்தது கட்டே. 10

இவற்றைப் படித்தோர் தேவ போகம் அடைவர்

3292. கட்டெழில் சோலைநல் வேங்கட வாணனை,

கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்,

கட்டெழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,

கட்டெழில் வானவர் போகமுண் பாரே. 11

நேரிசை வெண்பா

மனமே!மாறன் பெருமையையே நினை

மாலுடனே தான்கலந்து வாழப் பெறாமையால்,

சாலநைந்து தன்னுடைமை தானடையக் - கோலியே,

தானிதழ வேண்டாமற் றன்னைவிடல் சொல்மாறன்,

ஊனமறு சீர்நெஞ்சே!உண். (56)

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is துவனில்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  உண்ணுஞ்சோறு
Next