வேதம், கீதை இவற்றின் கருத்து : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

வேதத்திலேயே பிறப்பால் ஜாதி என்பதில்லை என்கிற வாதத்தை முதலில் பார்த்து விடலாம். மூலம் வேதமாச்சே! அதனால் இவ்விஷயத்தை முதலில் தெளிவாக்கிக் கொண்டுவிட வேண்டும். இப்படி வாதம் பண்ணுவது, ப்ரெள‌டா விவாஹந்தான் [பெண்கள் வயதுக்கு வந்த பிறகு விவாஹம் செய்வதுதான்] வேத ஸம்மதமானது என்று வாதத்தைப் பற்றி சொன்னேனே, அதே மாதிரியானது. அதாவது, Context – ம் Continuity- ம் [சந்தர்ப்பத்தையும், தொடர்ச்சியையும்] பார்க்காமல் ஏதோ ஒரு பாகத்தை மட்டும் பார்த்து, அதுவே பொது விதி என்று விபரீதமாக அர்த்தம் பண்ணிக் கொள்வதைச் சேர்ந்ததுதான் இது.

பிறப்பைக் குறித்தே ஜாதி, குணத்தைக் குறித்தல்ல என்பதற்கு அழுத்தமாக ஒரு Proof (நிரூபணம்) சொல்கிறேன். மூன்று வயசில் செய்கிற செள‌ளம் (குடுமி வைத்தல்) , ஐந்து அல்லது ஏழாம் வயதில் பண்ணுகின்ற உபநயனம் முதலானதுகளே ஜாதியைப் பார்த்து அதன்படி பண்ணுகிற ஸம்ஸ்காரங்கள்தான். இப்படி அதி பால்யத்திலேயே வெவ்வேறு ஜாதிகளுக்கான ஸம்ஸ்காரங்களில் வித்தியாசமிருப்பதால், குணத்தைப் பார்த்தே ஒருத்தனின் தொழில் நிர்ணயிக்கப்படுவதுதான் மூலசாஸ்திரங்களின் நோக்கம் என்பது அடியோடு அடிபட்டுப் போகிறது. அத்தனை சின்ன வயசுக்குள் ஒருத்தனின் குணத்தை நிர்ணயம் பண்ண முடியுமா?

கீதை விஷயத்தைப் பார்க்கலாம். “ஸமதர்சனம்” (எல்லாவற்றையும் சமமாகப் பார்ப்பது) என்று கீதையில் (V.18) சொல்லியிருப்பது வாஸ்தவம். இதனால் ஜாதி வித்யாசமில்லை என்று அர்த்தம் பண்ணுவது அனர்த்தம்தான். கிருஷ்ண பரமாத்மா எந்த நிலையில் இந்த ஸமத்துவம் வருகிறது என்கிறார்? அந்த Context ஐப் பார்க்கவேண்டும். ஸகல கார்யங்களும், லோக ஸ்ருஷ்டியும், ஈஸ்வரன் ஸ்ருஷ்டிகர்த்தா என்பதுங்கூட அடிபட்டுப் போய் ஆத்ம நிஷ்டனாக இருக்கிற ஞானியின் நிலையே அது என்கிறார். கர்மாவைவிட்டு ஸந்நியாசியாகி ஒருவன் முடிவான நிலைக்குப் போகிறபோது அவனுக்கு எல்லாம் சமமாகி விடுகிறது என்றார். வேத உபநிஷதங்களும் இதையே சொல்கிறது. உச்சியான அந்த நிலையில்தான் ஸமம். காரிய லோகத்தில் இல்லை. காரியம் பண்ணுகிற நமக்கும் அல்ல. ஸம தர்சனம், ஸம சித்தம், ஸம புத்தி என்றிப்படி யோகியின் பார்வையில்தான் பகவான் சமத்துவத்தை சொன்னாரேயன்றி, அவனால் பார்க்கப்படுகின்ற இந்த லோகத்தில் ஸம காரியத்வம் என்று அவர் தப்பித் தவறிக்கூடச் சொன்னதில்லை.

“ஜாதி வித்யாஸமே இல்லை என்று பகவான் சொல்லவில்லை. ஆனால் பிறப்பின்படி இன்றி, குணத்தின்படி கர்மாவைப் பிரித்துத் தரும் சதுர்வர்ணத்தைத் தாம் ஸ்ருஷ்டித்ததாகத்தான் சொல்கிறார். ‘சாதுர்வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச‌:’ என்றே சொல்லியிருக்கிறார்”* என்கிறார்கள்.

சரி, ஆனால் எத்தனை வயசுக்கு மேல் இப்படி குணத்தை அறிந்து அதை அநுசரித்து அதற்கான வித்யையைப் பயின்று அதற்கப்புறம் தொழிலை அப்பியாசம் பண்ணுவது? முக்கியமாக பிராம்மணனின் தொழிலை எடுத்துக் கொண்டால், இவன் ஏழெட்டு வயஸுக்குள் குருகுலத்தில் சேர்ந்தால்தானே அப்புறம் பன்னிரண்டு வருஷங்களில் தன் தொழிலுக்கான‌வற்றைப் படித்துவிட்டுப் பிறகு அவற்றில் தானே அநுஷ்டானம் பண்ண வேண்டியதைப் பண்ணவும், பிறருக்குப் போதிக்கவேண்டியதை போதிக்கவும் முடியும்? குணம் form ஆன பிறகு (ஓர் அமைப்பில் உருவான பிறகு) தான் தொழிலை நிர்ணயிப்பது என்றால், கற்க வேண்டிய இள வயசு முழுதும் பலபேர் தொழிலை தெரிந்து கொள்ளாமல் வீணாவதாகவும், அப்புறம் சோம்பேறியாக ஒரு தொழிலுக்குப் போகப் பிடிக்காமல் இருப்பதாகவுமே ஆகும். அப்படியே கற்றுக் கொண்டு தொழிலுக்குப் போகும் போதும் ஸமூகத்திற்கு அவனால் கிடைக்கிற பிரயோஜனத்தில் வெகுவான காலம் நஷ்டமாயிருக்கும். க்ஷணகாலம் கூட வீணாக்காமல் ஒழுங்காக, விதிப்படி கர்மா பண்ணிக்கொண்டே இருக்க வேண்டும் என்று திருப்பி திருப்பிச் சொல்லும் பகவான் இதை ஆதரித்துப் பேசியிருப்பாரா?

“அப்படியானால் அவர் ‘தியரி’யில் [கொள்கையளவில்] குணப்படித் தொழில் என்றாலும், ‘ப்ராக்டிஸில்’ [நடைமுறையில்] பிறப்பால் தொழில் என்பதைத்தான் ஆதரித்தாரா?” என்றால், பாலிடீஷியன்கள் [அரசியல்வாதிகள்] போல பகவான் கொள்கை ஒன்று, காரியம் இன்னொன்று என்று இருப்பவர் அல்ல.

சரி, அவருடைய வாழ்க்கையில் நாம் என்ன பார்க்கிறோம். “நான் யுத்தம் பண்ண மாட்டேன். பந்து மித்ரர்களின் ரத்தத்தைத் சிந்தி ஸாம்ராஜ்யாபிஷேகம் பண்ணிக் கொள்வதைவிட, ஆண்டிப் பரதேசியாக பிக்ஷை எடுத்துச் சாப்பிடுவது எத்தனையோ மேல்” என்று சொல்லிக்கொண்டு தேர்த்தட்டில் உட்கார்ந்து ஸத்யாக்ரஹம் பண்ணி விட்ட அர்ஜுனனிடம் அவர் சொன்னார் “நீ க்ஷத்ரிய ஜாதியில் பிறந்தவன். யுத்தம் பண்ணுவதுதான் உன் ஸ்வதர்மம். எடு வில்லை போடு சண்டையை” என்றுதான் அவனை விடப் பிடிவாதம் பிடித்து அவனை யுத்தம் பண்ண வைத்தார்.

இங்கேயாவது ஒரு மாதிரி ஸமாதானம் சொல்லலாம். “அர்ஜுன‌ன் மஹாரதன், மஹாவீரன். ஆனதால் அவனுக்கு பந்து மித்திரர்களைக் கொல்ல‌ வேண்டியிருக்கிறதே என்ற பாசத்தால் Momentary -ஆக [தற்காலிகமாக] த்தான் யுத்தத்தில் வெறுப்பு உண்டாயிற்று. உள்ளூர அவனுடைய குணம், மனோபாவம், தன்னுடைய வீரத்தைக் காட்டுவதில்தான் இருந்தது. அதனால்தான் பகவான் யுத்தத்திலேயே தூண்டிவிட்டார். ஆனபடியால் அவர் ஸ்வதர்மம் என்று சொன்னது ஜாதி தர்மம் என்று ஆகாது. அவனுடைய சொந்த குணத்தை, இயற்கையான மனோபாவத்தைத்தான் ஸ்வதர்மம் என்று சொல்லி, அவனுக்கு எடுத்துக் காட்டினார்” — என்று சுற்றி வளைத்து அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.

அப்படியானால் தர்மபுத்ரர் விஷயம் என்ன? சண்டையே கூடாது. ஸமாதானமாகவே போய்விட வேண்டும் என்றுதானே அவர் ஆரம்ப காலத்திலிருந்து இருந்து வந்திருக்கிறார்? தங்கள் ஐந்து பேருக்கும் ஐந்து வீடு கொடுத்து விட்டால் கூடப் போதும், ராஜ்ஜியத்தில் பாதி தர வேண்டும் என்று இல்லை என்கிற அளவுக்கு ஒரேயடியாக இறங்கிவந்து விட்டார் அல்லவா அவர்? அவரையும் அவருக்காக தூது போன பகவானே யுத்தத்தில்தானே இழுத்து விட்டார்? இதற்கு முந்தியும் தர்மபுத்திரரை எல்லா சிற்றரசர்களையும் வென்று, ஸார்வபெள‌மராகும்படி பண்ணி, அவருடைய ராஜஸூய யாகத்தை பகவான்தானே முன் நின்று நடத்தி வைத்தார்? தர்மபுத்ரர் இதற்கெல்லாமா ஆசைப்பட்டவர்? அவருடைய குணம், மனோபாவம் ஆகியன கொஞ்சங்கூட இந்த யுத்தம், ஸார்வபெள‌மப் பதவி இவற்றுக்கு ஆசைப்படாததுதானே? அவரையும் பரமாத்மா க்ஷத்ரிய தர்மத்தைத்தான் அநுஷ்டிக்கப் பண்ணினார் என்றால், அவர் ஸ்வதர்மம் என்கிற போது அவரவர் ஜாதி தர்மத்தைத்தான் சொன்னார் என்று அர்த்தமாகும். பிராம்ம‌ணராகப் பிறந்ததும் க்ஷத்ரிய தர்மப்படி யுத்தத்தில் இறங்கிய த்ரோணாச்சாரியார் மாதிரியானவர்கள் பெரியவர்கள் என்பதால் பகவானாக அவர்களை நிந்திக்க மாட்டாராயினும், பீமஸேனன் போன்றவர்கள் அவர்களை ஜாதி தர்மம் விட்டதற்காகப் குத்திக் காட்டிப் பேசிய போதெல்லாம் பகவான் ஆக்ஷேபித்ததில்லை. அதனால் பிறப்பால் ஏற்படுகின்ற ஜாதி தர்மமே அவர் சொன்ன ஸ்வதர்மம் என்று உறுதியாகிறது. “அப்படியானால் ஏன் குண கர்ம விபாகச: என்றார்?” என்றால்–


* கீதை IV.13

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is நவீனர்களின் கருத்து
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  பிறப்பாலேயே குணமும் தொழிலும்
Next