சிறுவர்களுக்கு – 1 மூட்டை தூக்க

சிறுவர்களுக்கு – 1

மூட்டை தூக்கி

உங்கள் வீடு ஒரு குடும்பம். இதற்கு அப்பாவும் அம்மாவும் தலைவர்கள். இப்படியே இந்த உலகம் முழுவதும் ஒரு பெரிய குடும்பம். இதற்கு ஈசுவரனும் அம்பிகையும் அப்பாவும் அம்மாவுமாக இருக்கிறார்கள். உங்களுக்கு உங்கள் தாய் தந்தையிடம் பக்தி இருக்க வேண்டும். அப்படியே பெரிய உலகக் குடும்பத்தின் பெரிய அப்பாவும், பெரிய அம்மாவுமான ஈசுவரனிடமும் அம்பாளிடமும் பக்தி இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்துக்கும் உலகக் குடும்பத்துக்கும் நடுவில் பள்ளிக்கூடம் என்கிற ஒரு குடும்பம் இருக்கிறது. உங்களுடன் படிக்கிறவர்களெல்லாம் உங்கள் குடும்பத்தில் உடன் வாழ்கிற சகோதரர்கள் மாதிரி. இந்தப் பள்ளிக் குடும்பத்தின் தலைவர் உபாத்தியாயர் – ‘வாத்தியார்’ என்கிற ஆசிரியர். அவரையும் ஓர் அப்பா – அம்மாவாக நீங்கள் மதித்து வணங்க வேண்டும்.

பள்ளிக் காலத்தில் உங்கள் கடமை படிப்பது ஒன்றுதான். உங்களுடைய கவனம் முழுவதும் படிப்பதிலேயே இருக்க வேண்டும். மற்ற விஷயங்களிலெல்லாம் நீங்கள் ஈடுபட இது சமயம் அல்ல. வேறு எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தாலும்கூட அவற்றையும் நீங்கள் படிப்பு முடிந்த பின் தான் கவனித்து ஈடுபடலாம். ‘இப்போதே எனக்கு அவற்றில் ஈடுபடச் சிறிது சக்தியும், புத்தியும் இருக்கிறதே; எனவே உலகத்துக்கு நல்லது செய்கிற அந்தச் சமாசாரங்களில் இப்போதே பிரவேசிப்பேன்’ என்று போகக் கூடாது.

ஒரு மூட்டைதூக்கி இருக்கிறான். அவனுக்கு இடுப்பைப் பிடித்துக் கொள்கிற மாதிரி இருக்கும்போது என்ன செய்வான்? மூட்டை தூக்க அப்போதும் கூட அவனுக்குக் கொஞ்சம் சக்தி இருந்தாலும், தூக்கமாட்டான். உடம்பு சரியில்லாததால் முதலில் அதை சொஸ்தம் செய்து கொள்வான். பூரணமாகக் குணம் ஆன பிறகுதான் மூட்டை தூக்குவான்.

உலகத்துக்கு நல்லது செய்வதும் மூட்டை தூக்குகிற மாதிரிதான். அதைச் செய்யச் சக்தி வேண்டும். சக்தியை நன்றாக வளர்த்துக் கொள்ளாமல் இந்த மூட்டையைத் தூக்குகிறேன் என்று ஆரம்பித்தால் இடுப்பைப் பிடித்துக் கொள்ளும். உடம்புக்குப் பிடிப்பு வியாதி உண்டாகிற மாதிரி உள்ளத்துக்கும் வியாதி ஏற்படும். சின்ன வயசில் உங்கள் உள்ளத்துக்குப் போதிய சக்தி ஏற்படுகிற முன்பே, படிப்பு தவிர மற்ற விஷயங்களை மேற்கொண்டால், உள்ளத்துக்கு வியாதிதான் உண்டாகும்.

ஏற்கனவே நம் உள்ளத்தில் ஆசை, கோபம் முதலிய பல வியாதிகள் இருக்கின்றன. முன்பு நாம் எல்லோரும் ஒரு விதத்தில் மூட்டைதூக்கிகளாக இருந்ததால்தான் இந்த வியாதிகள் வந்திருக்கின்றன. நாம் செய்கிற ஒவ்வொரு தப்புக் காரியமுமாகச் சேர்ந்து மூட்டையாகி விடுகிறது. இந்தப் பிறப்புக்கு முன்னால் இன்னொரு பிறப்பில் தப்புக்கள் செய்தோம். அதனால்தான் இப்போது இந்த உடம்பு என்கிற மூட்டை வந்திருக்கிறது. இதில் பழைய தப்புக்களின் வாசனையும் இருக்கிறது. அதனால்தான் ஆசை, கோபம் எல்லாம் நமக்கு இருக்கின்றன. அது போவதற்காகத்தான் குழந்தையாக இருக்கும்போது பள்ளிக்கூடத்துக்குப் போகிறோம். அறியாமை என்கிற வியாதி, படிப்பு என்கிற மருந்தினால் போகிறது. அதோடு நம் கெட்ட குணங்களும் போக வேண்டும். இதற்குப் படிப்பு மட்டும் போதாது. பணிவு வேண்டும். பணிந்து கிடந்தால் கெட்ட குணங்கள் ஓடிப் போகும். தாய், தந்தை, ஆசிரியர், தெய்வம்  ஆகியவர்களிடம் பக்தியோடு, படிப்பில் கவனம் செலுத்தி வந்தால் அறிவும் வரும், குணமும் வளரும்.

பணிவு இல்லாமல் படிப்பில் மட்டும் தேர்ச்சி பெற்றால் எவரும் முழு மனிதனாக ஆக முடியாது. ‘நமக்கு எல்லாம் தெரியும், நாம் புத்திசாலி’ என்ற அகம்பாவம்தான் வெறும் படிப்பினால் உண்டாகும். இப்படிப்பட்டவர்களுக்குப் பகவான் துணை புரியமாட்டார். பகவானின் அநுக்கிரகம் இல்லாமல் எத்தனை புத்திசாலியாலும் வாழ்க்கையில் சந்தோஷம் பெறமுடியாது.

பழைய தப்பு மூட்டை என்கிற வியாதிக்கு மருந்து படிப்பு. இந்த மருந்தைக் கவனமாகச் சாப்பிட்டு அந்த மூட்டையை இலேசாக்கிக் கொண்ட பிறகுதான், உலகத்துக்கு நல்லது செய்வதற்காக வேறு மூட்டையைத் தூக்கலாம். டாக்டர் நோயாளிக்கு மருந்து கொடுப்பதோடு நிற்கமாட்டார். “இன்னின்ன ஆகாரம் சாப்பிடு, இன்னின்ன சாப்பிடாதே’ என்று பத்தியமும் வைப்பார். இந்தப் பத்தியம் இல்லாமல் மருந்து மட்டும் பலன் தராது. உங்களுக்கெல்லாம் படிப்பு தான் மருந்து என்றால், அதோடு சேர்த்துக் கொள்ள வேண்டிய பத்தியம் பணிவு என்பதே. பணிவுடன் தெய்வபக்தி, குரு பக்தி, அப்பா – அம்மாவிடம் பக்தியுடன் இருந்து வாருங்கள். படிப்பிலேயே கவனம் செலுத்துங்கள். ஸ்வாமி காப்பாற்றுவார்.