பசு இன்றேல் வேள்வி இல்லை அபிஷேகம் பக்தி வழிபாட்டில் வருவது அதற்கு முக்யமாக ஆகமங்களும் புராணங்களும் ப்ரமாணம் அவற்றை விடவும் நம்முடைய மதத்துக்கு

பசு இன்றேல் வேள்வி இல்லை

அபிஷேகம் பக்தி வழிபாட்டில் வருவது. அதற்கு முக்யமாக ஆகமங்களும் புராணங்களும் ப்ரமாணம். அவற்றை விடவும் நம்முடைய மதத்துக்கு மூல ப்ரமாணமாயிருப்பது வேதமே. அதன் அடிப்படையில்லாமல் ஆகம, புராணங்களுக்கு ப்ராமாண்யம் (ப்ரமாணமாகும் தன்மை) இல்லை.
வேதம் ஏதோ நம்முடைய தேசத்துக்கு மட்டுமேயானது என்று நினைத்தால் அதைவிடப் பெரிய தப்பில்லை. நம்முடைய தேசத்தில் மட்டும்தான் வேதத்துக்கு ப்ரயோகம், கர்ம பூமியான இந்த பரத கண்டத்தில் மட்டும்தான் வேத கர்மாக்கள் செய்தால் பலன் உண்டு என்றாலும் அந்தப் பலன் இந்த தேசத்துக்கானது மட்டுமில்லை. ஸகல லோகத்துக்கும் பலனை உத்தேசித்துத்தான் இங்கே நம் தேசத்தில் வைதிக கர்மா செய்வது. ஹ்ருதயத்திலிருந்து ரத்தம் சரீரம் பூராவுக்கும் பாய்கிற மாதிரி இங்கே செய்யும் வைதிக அநுஷ்டானங்கள் லோகம் முழுதற்கும் க்ஷேமங்களைப் பாய்ச்சிவிடும். அதாவது வேதம் இருந்தால்தான் லோகமே நன்றாக இருக்கும்; லோக க்ஷேமமே இங்கே நம்முடைய தேசத்தில் செய்கிற வைதிகமான யஜ்ஞ கர்மானுஷ்டானாதிகளில்தான் இருக்கிறது. அதைப் பற்றிக் கொஞ்சங்கூட ஸந்தேஹப்பட வேண்டாம். அப்படி லோகத்தையே வாழ்விப்பது யஜ்ஞம்; வேள்வி என்பது. அதற்கு இரண்டு அவசியமானவை. ஒன்று யஜ்ஞம் பண்ணுகிற கர்த்தாவான ‘யஜமானன்’. இன்னொன்று யஜ்ஞத்தில் உபயோகமாகிற அதி முக்யமான த்ரவ்யங்களைத் தருகிற கோதான்.
யஜ்ஞத்தில் முக்யமாக ஆஹுதி கொடுக்கப்படும் த்ரவ்யம் பசுவிடமிருந்து பெறுகிற நெய்யே. ஆஜ்யம் என்று  அதைச் சொல்வது. ‘ஹவிஸ்’ – தமிழில் அதுவே ‘அவி’ என்று வரும்; அந்த ஹவிஸ் – என்பதே யஜ்ஞத்தில் ஆஹுதி கொடுக்கப்படும் பலவிதமான த்ரவியங்களுக்கும் பொதுப் பெயராயினும், குறிப்பாக ஹவிஸ் என்றால் பசும் நெய்தான். மற்ற ஆஹுதி த்ரவியங்களையும் நெய்யால் தடவி சுத்தம் செய்துதான் ஹோமம் செய்ய வேண்டும்.
அக்னிஹோத்ரம் முதலான பல யஜ்ஞங்களில் கோக்ஷீரம் ஹோமம் செய்யப்படுகிறது. ததி என்கிற தயிரும் ஹோம த்ரவ்யமாக ப்ரயோஜனமாகிறது. ஸத்துமா என்கிற ஸக்துவும் தயிரும் கலந்து ததி ஸக்து ஹோமம் என்று செய்வார்கள்.
நெய், பால், தயிர் அக்னியில் ஹோமமாகின்றனவென்றால், அந்த அக்னியை வளர்த்துக் கொடுப்பதே எது? கோமயத்தைப் போட்டுத் தட்டிய வரட்டிதானே?
ஆகையினால் கோ இல்லாவிட்டால் யஜ்ஞம், வேள்வி என்பதே இல்லை.