இடங்களின் பெயர்களில் ராகங்கள் ஸ்வாமிகள், “(கிருதியின் ராகம்) காம்போதி-ன்னு சொல்றோம் புஸ்தகப் பேரு காம்போஜிதானே?”  என்று கேட்கிறார்கள் அரியக

இடங்களின் பெயர்களில் ராகங்கள்

ஸ்வாமிகள், “(கிருதியின் ராகம்) காம்போதி-ன்னு சொல்றோம். புஸ்தகப் பேரு காம்போஜிதானே?”  என்று கேட்கிறார்கள்.

அரியக்குடி ஆமாம் என்றவுடன் ஸ்வாமிகள் கூறாலானார். “காம்போஜம் என்கிறது கம்போடியான்னு பல பேருக்குத் தெரிஞ்சிருக்கும். அங்கே பாரத கலாசாரம் ரொம்ப ஆழமாப் பரவியிருக்கிறதும் தெரிஞ்சிருக்கலாம். ஒரு வேளை அந்தத் தேசத்திலேருந்து இறக்குமதி பண்ணிண்ட ராகம்தான் காம்போஜியோன்னா, அப்படியில்லைன்னு ஸாம்பமூர்த்தி* மாதிரியான ரிஸர்ச்காரா சொல்றா. நம்ம கிட்டேயிருந்துதான் அவா அநேக ஸமாசாரம் கடன் வாங்கிண்டாளே தவிர, நாம அந்தக் காலத்திலே நாகரிகத்திலே ரொம்பப் பின்தங்கியிருந்த அவாகிட்டேயிருந்து எதுவும் எடுத்துக்கலை; நிச்சயமா, ஸங்கீதத்திலே ரொம்ப முன்னேறியிருந்த நாம ஏதோ folk music தான் இருந்த கிழக்காசிய தேசங்களிலிருந்து எதுவும் கடன் வாங்கலைன்னு சொல்றா. பின்னே ஏன் காம்போஜின்னு பேருன்னா இன்னொண்ணு தோணறது.

*காலஞ்சென்ற பேராசிரியர் பி.ஸாம்பமூர்த்தி

கம்போடியாவை மாத்திரம் காம்போஜம்னு சொல்லலை. இந்தியாவோட வடக்கத்தி எல்லையை ஒட்டினாப்பல இருக்கிற ஒரு ப்ரதேசத்தையும் காம்போஜம்னே சொல்லியிருக்கா-ன்னு தெரியறது. காளிதாஸன் ரொம்ப விஷயம் தெரிஞ்சவர். ‘மேக ஸந்தேச’த்துல ‘இந்தந்த வழியா போ’ன்னு மேகத்துங்கிட்ட யக்‌ஷன் சொல்லிண்டு போறதை வெச்சே கரெக்டா map போட்டுடலாம்! அவ்வளவு ஸரியா சொல்லியிருப்பார். அவர் ‘ரகுவம்ச’த்துல ரகு தேசம் தேசமாப் படை எடுத்துண்டு போய் ஜயிச்சதை வரிசையாச் சொல்லிண்டு போறச்சே, ஸிந்து நதியைத் தாண்டி வடக்கே இமயமலையை ஒட்டினாப்போலேயே காம்போஜத்தைச் சொல்லியிருக்கார். இதிலேருந்து அகண்ட பாரதம்னும் விசால இந்தியான்னும் சொல்ற தேசத்துக்குள்ளேயே ஹிண்டுகுஷ் பிராந்தியத்திலே ஒரு காம்போஜம் இருந்திருக்கிறதாத் தெரியறது. அங்கே விசேஷமாயிருந்த ஒரு ராகத்திலேயிருந்து காம்போஜி உண்டாச்சு போலேயிருக்கு.

“அநேக ராகங்கள் ஒவ்வொரு சீமையிலேருந்து வந்ததாலேயோ என்னமோ, அந்தச் சீமையின் பேரை வெச்சுண்டிருக்கோல்லியோ? ‘ஸௌராஷ்டிரம்’, ‘நவரஸ கன்னட’ – ‘கன்னட’ன்னேகூட ஒரு ராகம் – ‘ஸிந்து பைரவி’, ‘யமுனா கல்யாணி’, இப்படியெல்லாம் இருக்கோல்லியோ? அந்த மாதிரி, காம்போஜப் பிரதேச ஸம்பந்தமா காம்போஜி ராகம்னு இருக்கலாம்.

“ரிஸர்ச் பண்றவா என்ன சொல்றா-ன்னா காம்போதி, மோஹனம் மாதிரி சில ராகங்கள் தேசம் பூராவுமே ரொம்ப ஆதி காலத்திலேருந்து இருந்திருக்குங்கிறா. அப்பறம் அதுக்கு நன்னா மெருகேத்தினவா எந்தச் சீமைக்காராளோ அதன் பேரு ராகத்துக்கு வந்திருக்கலாங்கிறா…”

“கேதாரம்கிறது இமயமலையில இருக்கிற க்ஷேத்ரம். ‘கேதார்நாத்’ என்கிறது. ‘கௌள’ என்கிறது கௌட தேசம்; பெங்கால். கேதாரம்னு ராகம் இருக்கு. கௌளைன்னு ராகம் இருக்கு. ரெண்டையும் சேர்த்துக் கேதார கௌளைன்னும் இருக்கு. இந்த மூணு ராகமும் ப்ராசீனமா தக்ஷிணத்திலே இருந்திருக்குங்கிறா. அப்படியிருக்கச்சே வடகோடி இமயமலை, கீழ்க்கோடி பெங்கால் பேர்கள் சேர்ந்திருக்குன்னா இதுகளை ஸ்பெஷலைஸ் பண்ணினவா – ஒருத்தரோ, பல பேரோ – அந்தச் சீமைகளிலே இருந்திருக்கலாம்னுதானே தோணறது? மநுஷாளை, குறிப்பா ஸங்கீத வித்வான்களை அவாளோட ஊர்ப் பேரிலேயே சொல்ற வழக்கம் ஒன்னையே ‘அரியக்குடி’ங்கிறதுலேந்து தெரியறது. இப்படி ஓரொரு ராகத்தைப் பிரஸித்தி பண்ணின வித்வானோட சீமைப் பேரிலயே கன்னட, கௌளை, கேதாரம், காம்போஜி-ங்கிற மாதிரிப் பேர்கள் வந்திருக்கலாம்.