தெய்வங்களிடம் முரண்பாடுகளும் ஒன்றுசேர்தல் ஸர்ப்ப ஸ்வரூபம் என்று சொல்லும்போது ஸர்ப்பங்களில் தலைவர்களாக உள்ள வாஸுகி, தக்ஷகன் ஆகியவர்களை தீக்ஷிதர் க

தெய்வங்களிடம் முரண்பாடுகளும் ஒன்றுசேர்தல்

ஸர்ப்ப ஸ்வரூபம் என்று சொல்லும்போது ஸர்ப்பங்களில் தலைவர்களாக உள்ள வாஸுகி, தக்ஷகன் ஆகியவர்களை தீக்ஷிதர் குறிப்பிட்டு ‘அந்த ரூபங்களை எடுத்துக் கொண்டவனே!” என்கிறார். ஸர்ப்ப ஜாதியில் முக்யமான ஏழு ஸர்ப்பங்களின் படம் போட்டு அதற்கே ஷஷ்டி பூஜை பண்ணுகிறதுண்டு. வாஸுகிதான் நாகலோகத்தில் நாகராஜாவாக இருப்பது. மந்த்ர மலையை இந்த வாஸுகியால் கட்டித்தான் அம்ருத மதனத்தின் போது க்ஷீராப்தியைக் கடைந்தது. விசித்ரமாயிருக்கிறது – அம்ருதத்தை உண்டாக்க விஷப் பாம்பு உபகரணமாகிறது! விரோதமாயிருக்கிறவையெல்லாமும் ஸத்கார்யத்தில் ஒன்று சேர்ந்துவிடுவதே இதற்குத் தாத்பர்யம்!

ஸுப்ரஹ்மண்யர் ஸர்ப்ப ஸ்வரூபர் என்பதைப் பார்த்தாலே (இந்த ஒன்று சேர்தல்) தெரியும். அவர் வாஹனம் என்ன? மயில். அது ஸர்ப்பத்தின் பரம வைரி. ஒரு ஸர்ப்பத்தை அது நசுக்கிக் கொண்டிருக்கிற மாதிரியே சித்திரித்திருக்கும். ‘நாகபந்த மயூரா’ என்று திருப்புகழில்கூட இருக்கிறது. ஸர்ப்பத்தை நசுக்கிக் கொண்டு அதன் மேலே உட்கார்ந்து கொண்டிருக்கிற மயிலின் மேலே உட்கார்ந்து கொண்டிருப்பவரே ஸர்ப்ப ஸ்வரூபர்!

‘ஸிம்ஹ ஸொப்பனம்’ என்பதாக ஸொப்பனத்தில் சிங்கத்தைப் பார்த்தால்கூட யானைக்கு பயத்தில் ப்ராணன் போய்விடும். ஆனால் சிங்கத்தின் மேலேயே ஒரு யானை உட்கார்ந்திருக்கிறது. விக்நேச்வரரின் அநேக மூர்த்தங்களில் ‘ஹேரம்பர்’ என்று ஒன்று கேள்விப்பட்டிருக்கலாம். அந்த ஹேரம்ப கணபதிக்கு ஸிம்மம்தான் வாஹனம்.

பாம்பு – மயில் மாதிரிதான் பாம்பும் கருடனும். மஹா விஷ்ணுவுக்கு ஒன்று படுக்கை, மற்றது வாஹனம்.

மயிலும் கருடனும் பாம்பைத் தின்று விடுமென்றால் பாம்பு சந்திரனைத் தின்று விடும்! அப்படித்தானே க்ரஹணத்திற்குக் கதை சொல்லுகிறோம்? பரமசிவன் சிரஸிலோ பாம்பும் இருக்கிறது, சந்திரனும் இருக்கிறது.

பார்வதி பரமேச்வராளைத் தம்பதியாகப் பார்க்கும் போதும் இப்படியே விசித்ரமாயிருக்கிறது. மாட்டைப் பார்த்தால் சிங்கம் விடுமா? ஒரே அடியில் அடித்துப் போட்டுத் தின்று விடும். ஆனால் பரமசிவன் ரிஷப வாஹனத்தில் உட்கார்ந்திருக்க, அம்பாளோ ஸிம்ஹ வாஹினியாக இருக்கிறாள்.

தாத்பர்யம், பரமாத்மாவின் ஸந்நிதியில் எதிரெதிராக இருப்பதெல்லாங்கூட த்வேஷ பாவம் போய் ஒற்றுமையாய்ச் சேர்ந்து விடுகின்றன என்பதுதான்…..

‘வாஸுகி தக்ஷகாதி’யில் இருந்தோம். வாஸுகிதான் அம்ருதம் எடுக்கக் கடைகயிறு என்று சொன்னேன்.